Wednesday, December 31, 2008

இந்த ஆம்பிளைங்களே இப்படித் தான் !

"இந்த ஆம்பிளைங்களே இப்படித் தான் ..." என்றவாறு இழுத்தாள் ரமா.

"என்னடி சொல்றே" என்று கேட்டுக் கொண்டே காலணிகளை கழட்டி விட்டு, ரமாவின் வீட்டுக்குள் நுழைந்தாள் அவளது தோழி ரமணி.

"எதை எல்லாம் செய்யாதீங்க என்று சொல்றோமோ, கரெக்டா அதைத் தான் செய்யறாரு, சொன்னா கேட்கறதே இல்லை !!! ரொம்ப கஷ்டமா இருக்கு".

"தண்ணி, தம் எல்லாம் இல்லனு சொல்லுவியே !, இப்ப என்ன ??"

"பாரு ரமணி, புதுவருசமும் அதுவுமா காலைல சீக்கிரமே எழுந்து, குளிச்சு, ஸ்வீட் எல்லாம் செஞ்சு, இட்லி, வடை, சாம்பார்னு ஒன்னுவிடாம பண்ணி, பத்தாதற்கு குழந்தைகளையும் பார்த்து ... என்னை ஒரு வேலை செய்ய விடறதில்லை ..."

"நீ சொல்றது கரெக்ட் தான் ரமா. இந்த (காலத்து) ஆம்பிளைங்களே இப்படித் தான் !!!!" என்று ரமாவுடன் சேர்ந்து கொண்டாள் ர‌ம‌ணி.

-----

ராஜ‌ ந‌ட‌ராஜ‌ன் வ‌ந்து 'நிஜ‌மா க‌தையா ?' என்றும், நாகு வ‌ந்து 'என்னையா வீட்டுல‌ இப்ப‌டித் தானா ?' என்றும், இல்ல தங்க்ஸே வந்து, 'ஏங்க‌ ஒரு வேலை வீட்டில் பார்ப்பது இல்லை, நல்லா கதை விடறீங்களே' என்றும் யாராவ‌து வ‌ந்து கொடி பிடித்து, மைக் பிடிக்க‌ற‌து முன்னாடி எஸ்கேப்ப்ப்ப் ... அடுத்த‌ வ‌ருஷ‌ம் ச‌ந்திப்போம் ந‌ண்ப‌ர்க‌ளே.

வ‌ழ‌க்க‌ம் போல‌ வித்தியாச‌மான ஆண்டாக, வரும் 2009 ஆண்டும் அமைய, அனைவருக்கும் புத்தாண்டு ந‌ல்வாழ்த்துக்க‌ள் !!!

Saturday, December 27, 2008

இசை இல்லாத மார்கழியா .....

ஜாதி, மதம், இனம், மொழி ... இப்படி எந்த ஒரு கட்டுக்குள்ளும் அடங்காத ஒன்றை இசை என்று சொல்லலாமா ?

சின்னப் புள்ளையா இருந்த காலத்தில் இருந்து, இந்த தாளங்களை நம்மை அறியாமலேயே கேட்டு வளர்ந்து வந்திருக்கிறோம். ஒரு குழந்தைக்கு பாடும் தாலாட்டில் இருந்து, கோவில் விசேடங்கள், கல்யாண வைபவங்கள், என எல்லாம் கடந்து கடைசி மூச்சுக்கு அப்புறமும் இசையை நாம் அனைவருமே சுவாசிக்கிறோம்.

சின்ன வயதில் யாராவது ச,ரி,க,ம ... என்று சாதகம் பண்ணினாலோ, அல்லது ஊரில் பக்கத்து தெருவில் குடியிருந்த மேளகாரர், டம்மு, டும்முனு அடித்து (தவிலை தான் :))) ப்ராக்டிஸ் செய்வதைப் பார்த்தாலோ ரொம்ப பாவமா இருக்கும். ஏன் இவ்வளவு கஷ்டப்படுறாங்க என்று :))) வயதாக ஆக, நமக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையவில்லையே என்று நினைத்து உண்டு, இன்று வரை.

அதுக்காக நம்ம புள்ளையவாவது இசை மேதையா ஆக்கலாம்னு பியானோ க்ளாஸ் சேர்த்தோம் .... கத்துக்க முடியலையேனு நாம அழுதால், "எங்களை ஏன் கஷ்டப்படுத்தறீங்க"னு புள்ளைங்க அழுகுதுங்க :((( ஃப்ரீயா விட்டாச்சு அவங்களை.

சென்னை சபாக்கள் நிறம்பி வழிவதால், இங்க ஒரு கச்சேரி பண்ணலாம், யூ டியூபின் துணையுடன் :))

ஒரு கல்யாண வீட்டுக்குள்ள நுழையும் போது, டக்கடக்க ... என்று விரல் உருள எழும் ஒலியில், நம் மனம் கரைவது நிச்சயம். இல்லையா ?!! இங்க ஒரு வெளிநாட்டுக்காரர், நம்ம ஊருக்கு எப்படி தேடி வந்து, தவில் மேல் காதல் கொண்டு (இப்படி தான் சொல்லணும் அவரின் வாசிப்பு லயிப்பைப் பார்த்து), முறைப்படி கற்றுக் கொண்டு ... நீங்களே பார்த்து மகிழுங்கள்.



பன்னாட்டுக் கலைஞர்கள் ஒரு ட்ரூப்பா சேர்ந்து, பாடும் பாடலும், இசையும் அருமை.



நம்ம ஊரு ஆட்கள் இல்லாமல் கச்சேரியா ? :))) டூயட் படம் பார்த்ததிலிருந்து, கத்ரி கோபால்நாத் அவர்களின் பல்லாயிரக்கான ரசிகர்களுள் நானும் ஒருவனானேன். இதோ அவருடைய இசைக் காட்சி

Saturday, December 20, 2008

துளித் துளியாய்: 4 - சிலந்தியும் வலையும்


Photo: sheltoweetrace.com

முட்டி மோதி
விட்டம் ஏறி
மூலைகள் இணைத்து
வலைகள் பின்னி

அசையாப் பொருளாய்க்
காத்திருந்து
வலையில் விழும் இரை
உண்டு வளர்வாய்.

***

பென்டுலம் போலே
நூலில் ஆடி

வாலாய் நூலை
வளைத்து நெளித்து

குறுக்கும் நெடுக்கும்
குறும்புதிர் போலே

ஏற்ற இற‌க்க‌மில்லா(ம‌ல்)
இடைவெளி விட்டு

வ‌லையைப் பின்ன‌
எங்கு க‌ற்றாய் ?!

***

துளித் துளியாய் இழை விட்டு
தூண்டில் நீள் நூலாய்

தூரிகை ஓவிய‌மாய்
துயிலும் தூளியாய்

துள்ளித் துள்ளி
வ‌லை பின்ன‌ ...

க‌ண்ணாடி நூலிழையில்
காண்போர் க‌ண்ப‌டும்

க‌லை ஒத்த‌ க‌ட்டுமான‌ம்
நிலையாகும் உன் வாழ்வு அதில் !!!

***

ஓட்டுக் கூரையிலும்
வீட்டுத் தோட்ட‌த்திலும்

வ‌லை பின்னும்
க‌லை அறிய‌

உனைத் தொட‌ர்ந்தேன்
ப‌ல‌ முறை

எங்கு ஆர‌ம்பித்து
எப்ப‌டி முடித்தாய் என‌

க‌ண்ட‌தில்லை ஒரு முறையும்
இன்று வ‌ரை விய‌ப்பே !!!

***

ஊரு உல‌கெலாம்
தெரியுது வ‌லை - அதில்,
விஞ்ஞான மருத்துவங்கள்
விவாதக் கட்டுரைகள்,

அற்புத‌ங்க‌ள் ப‌ல‌கொண்ட‌
ஏராள‌ச் செய்திக‌ள்,
அன்றாட வாழ்வின்
அங்க‌மாய் ஆன‌துவே.

இது தான் இன்றைய நிலை
இப்ப‌டி ...
நாங்களும் பின்னூவோம் வலை !

***

Friday, December 19, 2008

வானின் நிறம் நீலம் - 14 - நிறைவுப் பகுதி !


Photo: concierge.com

ஃபுல்ல‌ர்ட‌ன் ஹோட்ட‌லில் கீழ்த‌ள‌த்தில், "ஹேய்ய்ய்ய்ய்...." என்று ஆட்ட‌ம் பாட்ட‌த்துட‌ன் க‌ளை க‌ட்டிய‌து அந்த‌ ஆண்டு, அலுவ‌ல‌க‌ ஆண்டு விழாக் கொண்டாட்ட‌ம்.

ம‌கேஷ், அப்ப‌ தான் அங்கு சேர்ந்த‌ புதிது. என்னோட‌ பி.எம்.க்கு சொந்த‌ம்னு நினைக்கிறேன். அவ‌ங்க‌ ரெண்டு பேருமே வெளியில் அதைக் காட்டிக்கிட்ட‌து இல்லை.

பேரு தான் பி.எம். முழுக்க‌ முழுக்க‌ எங்க‌ க‌ண்ட்ரோல் தான் ப்ராஜ‌க்ட் எல்லாம். அவ‌ரும் ரொம்ப‌ ஃப்ரென்ட்லி. நேர‌த்துக்கு வேலை முடிச்சிட்டோம்னா, மீதி நேரம் ஜாலி தான், அர‌ட்டை தான்.

எங்க‌ டீமே அப்ப‌டி இருக்க‌த‌ பார்த்து ம‌த்த‌வ‌ங்க‌ளுக்கு எல்லாம் பொறாமையா இருக்கும். வெளிப்ப‌டையாவே சில‌ர், உங்க‌ளுக்கு என்ன‌ப்பா கொறைச்ச‌ல் என்று ஆத‌ங்க‌ப்ப‌ட‌வும் செய்வார்க‌ள்.

ம‌கேஷ் ந‌ல்லா ஸ்பான்டேனிய‌சா பேசுவான். அவ‌ன் வ‌ந்தாலே க‌ளை க‌ட்டும். ந‌ம்ம‌ கிட்ட பேசிக்கிட்டு இருக்க‌வ‌ங்க‌ கூட‌, அவ‌ன் கூட‌ பேச‌ ஆர‌ம்பிச்சிருவாங்க‌. நாள் போக‌, போக‌ என‌க்கு ஒரு பொஸ‌சிவ்நெஸ் வ‌ந்திருச்சு.

ஆண்டுவிழா அர‌ங்கில், கேம் ஷோவில் ப‌ல‌ பெண்க‌ளும் அவ‌னுட‌ன் சேர்ந்து ந‌ட‌ன‌மாட‌ பிரிய‌ப்ப‌ட‌, என‌க்கு ஒரு வேக‌ம் வ‌ந்து, அவ‌னைப் பிடிச்சு த‌ர‌ த‌ர‌னு இழுத்து வெளியே வ‌ந்து, ச‌த்த‌மின்றி (நீண்ட) முத்த‌மிட்டேன்.

அன்று நிலை குலைந்த‌வ‌ன், எதுவென்றாலும் என்னிட‌ம் கேட்டு தான் செய்வான்.

ம‌கேஷ் ப‌ற்றி அண்ண‌னிட‌ம் சொல்ல‌. அவ‌ருக்கும், அண்ணிக்கும் ரொம்ப‌வே ச‌ந்தோச‌ம். தொலைபேசியில் ஜாடையாக சொல்லிய போது, அப்பா, அம்மாவிற்கு துளியும் விருப்ப‌மில்லை. அத‌னால் கொஞ்ச‌ நாட்க‌ள் போக‌ட்டும் என்றார் அண்ண‌ன்.

நாள் செல்ல‌ச் செல்ல‌ இர‌ண்டு வீட்டாரும், அவர்கள் இஷ்டத்துக்கு அலையன்ஸ் பார்த்து ஃபோர்ஸ் ப‌ண்ண‌, இங்கேயே ரெஜிஸ்ட‌ர் மேரேஜ் ப‌ண்ணிக் கொண்டோம். இதில் அண்ண‌னுக்கும், அண்ணிக்கும் துளியும் விருப்ப‌மில்லை.

அடிக்கடி என்னைப் பார்க்க வருகிறேன் என்று, நான் இல்லாத நேரங்களில் கூட வந்து, அண்ணியை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கியிருக்கிறான். ஏதாவது சண்டையில் அண்ணி இதை சொல்லும் போதெல்லாம் அவங்க ஏதோ காரணத்துக்காக இப்படி சொல்றாங்களே என்று, மகேஷ் மேல் துளியும் சந்தேகம் இல்லை.

உறவில் கொஞ்ச‌ம் விரிச‌ல் விழ, நேரம் பார்த்து, "ந‌ம‌க்கென்று ஒரு வீடு இருந்தால் ந‌ல்லா இருக்குமே" என்றான் மகேஷ். 'பாசிர் ரிஸ்'ஸில் ஒரு வீடும் வாங்கினோம்.

அங்கு குடிபோன சில‌ மாத‌ங்க‌ளில், என் வ‌யிற்றில் ரோஷினியும், ம‌கேஷ் ம‌ன‌தில் ம‌ரிய‌மும் வ‌ள‌ர்வ‌தை உண‌ர்ந்தேன்.

இவ‌னுக்கு எங்க அலுவலகத்திலேயே இருக்கும், ம‌ரிய‌ம் கூட‌ முன்னரே தொட‌ர்பு இருந்திருக்குனும் தெரிஞ்ச‌து. ஒரு நாள், செமினாருக்கு போறவன், தற்செயலா என்னோட‌ தொலைபேசிய‌ மாத்தி எடுத்திட்டுப் போக‌, இவ‌னோட‌த நான் எடுத்துப் போக‌ வேண்டிய‌தாப் போச்சு.

என் வாய் சொல்ல‌க் கூசுது. அப்ப‌டி அசிங்க‌ அசிங்க‌மா டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்ப‌றா ம‌ரிய‌ம். நான் கூட‌ முத‌லில் த‌வ‌றுதலா அனுப்பி இருப்பானு பார்த்தால், ம‌கேஷ், ம‌கேஷ்னு ஒரே உருக‌ல்.

கொஞ்ச‌ நேர‌த்தில் ம‌கேஷ் கிட்ட‌ இருந்த என் போனில் இருந்து ஃபோன், "நிமி எங்க‌ இருக்க‌, போன‌ மாத்தி எடுத்து வ‌ந்திட்டேன்.... செக‌ன்ட் ஃப்ளோர்ல‌ இருக்கியா, அங்கேயே இரு, நான் வரேன்".

"ப‌ரவாயில்லை, எனக்கு ஒன்னும் ப்ரச்சனை இல்லை, நான் மேனேஜ் பண்ணிக்கறேன்" என்றேன். "ஹிம்ம்ம் ... இல்ல இல்ல, இப்பவே வ‌ரேன்" என்று பரபரத்தான்.

எல்லாம் தெளிவாகி, என் ம‌ன‌ வானில் மேக‌ங்க‌ள் சூழ்ந்து கொண்ட‌து.

முத‌லில் ம‌றுத்த‌வ‌ன், "இவ‌ளுக்கு தெரிஞ்சு போச்சு, இனி ம‌றுத்து இவ‌ள் என்ன‌ செய்து விட‌ப் போகிறாள்" என்று தைரிய‌மாய் என்னை எதிர்கொண்டான்.

ந‌ட‌க்கும் யாவையும் அண்ண‌னுக்கோ, அண்ணிக்கோ சொல்லாம‌லே இருந்தேன். இது மேலும் விரிச‌லை தான் ஏற்ப‌டுத்திய‌தே த‌விர‌ வேறெத‌ற்கும் உத‌வ‌வில்லை.

ச‌ண்டையும், ச‌ச்ச‌ர‌வுமாய் நாட்க‌ள் க‌ழிய, ரோஷிணியும் பிற‌ந்தாள். ச‌ரி இனியாவ‌து ம‌கேஷ் ச‌ரியாகிவிடுவான் என‌ப் பார்த்தால், வீட்டிற்கே ம‌ரிய‌த்தை கூட்டி வ‌ர‌ ஆர‌ம்பித்தான்.

எல்லை மீறி எல்லாம் செல்கையில், "இனி அவ‌ளா, நானா ? என்று முடிவு ப‌ண்ணிக்க‌. அப்ப‌டி அவ‌ தான்னா, இந்த‌ வீட்ட‌ விட்டு வெளிய‌ போயிடு" என்றேன்.

அங்க‌ ஆர‌ம்பித்த‌து அடுத்த‌ எரிம‌லை. "இந்த‌ வீட வாங்கும்போது நானும் காசு போட்டிருக்கேன். நீ வெளியே போ" என்றான்

அவ‌ன் ப‌ங்கு சொற்ப‌ ஆயிர‌ங்க‌ள். அதைத் த‌ந்துவிடுகிறேன், வெளியே போ என்ற‌த‌ற்கு அவ‌ன் ஒத்துழைக்க‌வில்லை.

உன்னால‌ முடியாது என்றால், என்னால‌யும் முடியாது என்று சொல்லி, ஒரு முடிவுக்கு வ‌ரும் வ‌ரை யாரு இங்க தங்க கூடாது என்று ஆளுக்கு ஒரு பூட்டை போட்டு, நான் என் அண்ண‌ன் வீட்டிலும், என் ம‌க‌ள் காப்ப‌க‌த்திலும் இருக்க‌லானோம்.

ச‌ந்த‌ர்ப‌ம் கிடைக்கும்போதெல்லாம் ம‌கேஷ் தொல்லை த‌ர‌வே, வேலையை ராஜினாமா செய்தேன். அப்ப‌டியும் வெளியில் எங்காவ‌து பார்த்து இம்சித்துவிடுவான்.

இன்னிக்கு தான் அவ‌ன் கேட்ட‌ விவாக‌ரத்துப் பத்திரத்திலும், வீட்டுப் ப‌த்திர‌த்திலும் கையெழுத்துப் போட்டு விட்டு நிம்ம‌தியாய் இருக்கிறேன். இதை முன்னாடியே செய்திருந்தால் கொஞ்ச‌ம் என‌ர்ஜியாவ‌து இருந்திருக்கும்."

எல்லாம் சொல்லிக் களைத்து, தண்ணி தண்ணி என்று மீண்டும் ச‌ரிந்து செல்வாவின் தோளில் சாய்ந்தாள்.

சாயத் தோள் தந்த செல்வா, நீர் த‌ந்து, நிர்ம‌லாவிற்கு நல்ல வாழ்வும் த‌ந்தான்.


!!! முற்றும் !!!

Thursday, December 18, 2008

வானின் நிறம் நீலம் - 13


Photo: museums.com.sg

"குழந்தை இப்ப‌ ஒரு காப்ப‌க‌த்தில் வ‌ள‌ருது. யூ வோன் பிலிவ் ஐம் எ மாம் நௌ", என்று நிறுத்தினாள். உங்களை சந்தித்தது "டூ லேட் செல்வா" என்று அதிச‌யித்தாள் !!

"மேக‌ மூட்ட‌மா, கொஞ்ச‌ம் புரிஞ்சும், கொஞ்ச‌ம் புரியாம‌லும் மாதிரி இருக்கு. அப்போ, அன்னிக்கு ர‌யிலில் உங்க‌கூட‌ வாக்குவாத‌ம் ப‌ண்ணின‌வ‌ர் உங்க‌ க‌ண‌வ‌ர் ! ச‌ரியா ?"

"அவ‌ர் இவ‌ர்னு, ஏன் ம‌ரியாதை எல்லாம் கொடுக்க‌றீங்க‌. ஆமா, அவ‌னே தான் !!!"

சாட்டைய‌டி போன்ற‌ தொனியில் நிர்ம‌லாவின் குர‌ல், அவ‌ளின் வேத‌னையை பிர‌திப‌லித்த‌து.

"நிர்ம‌லா, உங்க‌ளுக்கு ஒன்னும் பிர‌ச்ச‌னை இல்லையே. அப்படி ஏதாவது பிரச்சனை இருந்தா என்கிட்ட‌ சொல்லுங்க‌. என்னால் முடிந்த உதவி செய்றேன்"

'இவ‌ன் என்ன‌ உத‌வி செய்றேன், உத‌வி செய்றேன் என்று சொல்லிகிட்டே இருக்கான். ந‌ம்ப‌லாமா ?'

"என்னை ந‌ம்ப‌லாம்ங்க‌ற‌துக்கு நான் என்ன‌ உத்திர‌வாத‌ம் த‌ர‌ணும், சொல்லுங்க‌" என்றான்.

'ம‌ன‌தைப் ப‌டிக்கிறானே ? எல்லா ஆம்பிளைங்க‌ளும் இப்ப‌டித்தானே ந‌ம் ம‌ன‌தைக் க‌ரைத்துவிடுகின்ற‌ன‌ர்'

"ஒன்னும் பிர‌ச்ச‌னை இல்லை செல்வா. எல்லாம் முடிஞ்சு போச்சு." என்றாள்.

செல்வா விடுவ‌தாய் இல்லை. "இல்லைங்க‌, உங்க‌ முக‌ம் சொல்லுது ப‌ல‌ க‌தைக‌ள்" என்றான். "ச‌ரி, உங்க‌ளுக்கு இஷ்ட‌ம் இல்லை எனில் நான் தொல்லை ப‌ண்ண‌ விரும்ப‌வில்லை" என்று நிறுத்திக் கொண்டான்.

'பேச‌ணும் என்றும் இருக்கு. ஆனா இவ‌னை எப்ப‌டி ந‌ம்ப‌ற‌துனும் இருக்கு. என்ன‌ இது புதுக் குழ‌ப்பம்' என்ற‌ யோச‌னையில், யார் தோளிலாவ‌து சாய்ந்து அழ‌ வேண்டும் போல் இருந்தது.

முழுக்க‌ அலைந்து, மனமும் தளர்ந்து, உட‌ல் சோர்வுற்று, முறையாக‌ உண்ணாம‌ல், நேர‌ம் த‌வ‌றி அருந்திய‌ காஃபி, வ‌யிற்றை க‌ல‌க்கிய‌து நிர்ம‌லாவிற்கு. நெற்றியில் நீர் திர‌ள‌, க‌ண்க‌ள் இருட்டி ம‌ய‌ங்கி விழாத‌ குறை. சில‌ நொடிக‌ள் என்ன‌ ந‌ட‌க்கிதென்றே புரிய‌வில்லை அவ‌ளுக்கு.

"செல்வா, என‌க்கு என்ன‌வோ போல‌ இருக்கு, ப்ளீஸ், ஒரு டாக்ஸி பிடிங்க‌, என்ன‌ வீட்டில‌ ட்ராப் ப‌ண்ணிடுங்க‌, ஐ வான் டு டேக் ச‌ம் ரெஸ்ட்" என்று ச‌ரிந்து விழுந்தாள்.

ப‌ட்டென்று எழுந்த‌ செல்வா, கைத் தாங்க‌லாய் நிர்ம‌லாவைப் பிடித்துக் கொண்டான். பேர‌ர் பெண்ம‌ணியிட‌ம், த‌ண்ணீர் கொண்டு வ‌ர‌ச் சொன்னான். ச‌ரிந்த‌வ‌ளை ச‌ற்று நிமிர்த்தி விசிறி விட்டான். எல்லோரும் வேடிக்கை பார்த்த‌ன‌ரே அன்றி, யாரும் எதுவும் உத‌வி வேண்டுமா என‌க் கேட்க‌வில்லை.

"நிர்ம‌லா, கொஞ்ச‌ம் எழுந்திரிங்க‌ ... மெதுவா ந‌ட‌ந்து வாங்க‌ ... இன்னும் கொஞ்ச‌ தூர‌ம் தான், இதோ டாக்ஸி ஸ்டான்ட் வ‌ந்திடும்" கைத்தாங்க‌லாய் அணைத்துச் சென்று, டாக்ஸியிலும் ஏ(ற்)றினான்.

"கொஞ்ச‌ம் பின் க‌ண்ணாடி க‌த‌வை திற‌ந்துக்க‌ட்டுமா, ஷீ நீட் ச‌ம் ஃப்ரெஷ் ஏர்" என்றான் ஓட்டுன‌ரிட‌ம்.

"லில் பிட் ஹான் ..." என்று எந்த‌ வித‌ உண‌ர்ச்சியும் இல்லாம‌ல் ஓட்டுன‌ர் சொன்னார்.

ச‌ட‌ச‌ட‌வென‌ காற்ற‌டிக்க‌, மெல்ல‌க் க‌ண்க‌ள் திற‌ந்தாள் நிர்ம‌லா.

வெளியே வான‌ம் ப‌ளிச்சென்று இருந்த‌து.

"செல்வா, தேங்க்ஸ் எ லாட் அன்ட் ஸாரி ஃபார் த‌ ட்ர‌பில்"

"என்ன‌ங்க‌ பெரிய‌ வார்த்தை எல்லாம் சொல்லிகிட்டு. இனி ஒரு வாட்டி ஸாரி சொன்னீங்க‌ன்னா, அப்புற‌ம், இப்ப‌டியே இற‌ங்கிப் போயிடுவேன்" என்று ப‌ய‌ம் காட்டுவ‌தாய் பாவ‌லா காட்டினான்.

"உள்ளூர‌ ர‌சித்தாள். உட‌னே அழுதாள்"

கட்டிடங்களும், மரங்களும், மனிதர்களும் பின்னோக்கிச் செல்ல, நிர்மலாவின் நினைவுகளும் பின்னோக்கி பயணித்தது.

"ரொம்ப‌ நாளா ம‌ன‌சுக்குள்ளே வ‌ச்சு ஆர‌ப்போட்டுகிட்டு இருந்தேன். முடிய‌ல‌. யாருகிட்ட‌யாவ‌து சொல்லி அழ‌லாம் என்றால் அண்ண‌ன் தான். இப்ப‌ அவ‌னும் அண்ணி பின்னால‌."

"நீங்க‌ தைரியமா என் கிட்ட‌ ப‌கிர்ந்துக்க‌லாம் நிர்ம‌லா. மேல‌ சொல்ல‌லாம் என்றால் சொல்லுங்க‌ என்றான்"


தொட‌ரும் .....

Wednesday, December 17, 2008

வானின் நிறம் நீலம் - 12


Photo: farm4.static.flickr.com

"சில‌ நொடிக‌ளில், ச‌ரிங்க‌ உங்க‌ இஷ்ட‌ம்" என்றான்

'ச‌ரி ரொம்ப‌த் தொல்லை ப‌ண்ண‌ வேண்டாம் இவ‌னை' என்று, "எதுக்குங்க‌ உங்க‌ளுக்கு வீண் சிர‌ம‌ம், நானே அங்க‌ வ‌ர்றேன். 'டோம்ஸ் காஃபியில்' மீட் ப‌ண்ண‌லாம்"

முத‌ன் முறையாய் ஜிவ்வென்று (நீல) வானில் ப‌ற‌ப்ப‌தாய் உண‌ர்ந்தான் செல்வா.

"ம்...வ‌ந்து...ஐ ஹேவ் டு கோ டூ ராபிள்ஸ் திஸ் டைம். திஸ் இஸ் ஃபைன‌ல் ஃபார் ஸ்யூர்" என்று குழைவாய் விண்ண‌ப்பித்தாள்.

க்ரீச்ச்ச்ச் என்ற ப்ரேக்கில், சில‌ அடிக‌ள் இழுத்து நின்ற‌து டாக்ஸி. திரும்பி எல்லாம் பார்க்க‌வில்லை ஓட்டுன‌ர். "நாட் எனி மோ. பே மீ செவ‌ன் டால‌, தேட்டி சென்" க‌டுக‌டுத்த‌ குர‌லில் ஓட்டுன‌ர்.

'இது என்ன‌ இட‌ம். இத்த‌னை வ‌ருட‌ங்க‌ளில் இங்க‌ல்லாம் வ‌ந்த‌தே இல்லியே. சிங்க‌ப்பூர் குட்டியூண்டு தான், இருந்தாலும், முழுதும் பார்க்க‌ இய‌ல‌வில்லையே'. ஆனா ஒன்னு, அதே ஆரஞ்சுக் கலர் பஸ் ஸ்டாப்கள், ஹாக்கர் சென்டர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள். ஒன்றும் புரிய‌வில்லை நிர்ம‌லாவுக்கு. எதிர் திசையில் சென்று ம‌ற்றொரு டாக்ஸி பிடித்தாள்.

டோம்ஸில் அவ்வ‌ள‌வாக‌க் கூட்ட‌மில்லை. இருவ‌ர் அம‌ரும் மேசையை தேர்வு செய்து அம‌ர்ந்து கொண்டாள். ஆர்ட‌ர் கேட்ட‌ இள‌ம்பெண்ணிற்கு, "ஐம் வெய்டிங் ஃபார் எ ஃப்ரெண்ட், ஐ வில் கால் யூ, தாங்க்ஸ்" என்று அனுப்பி வைத்தாள்.

தொலைபேசியில் "செல்வா நான் டோம்ஸ் வ‌ந்திட்டேன், நீங்க‌ வேலை முடிச்சு வாங்க‌, ஒன்னும் அவ‌ச‌ர‌மில்லை, பை"

கைக‌ள் ப‌ர‌ப‌ர‌க்க‌, கால்க‌ள் குறுகுறுக்க‌ அடுத்த‌ ப‌த்தாவ‌து நிமிட‌ம், நிர்ம‌லாவின் எதிரில் செல்வா.

"ஹேய் என்ன‌து. ஆபீஸா இல்ல வீடா ?!! நென‌ச்ச‌ நேர‌ம் போறீங்க‌, வ‌ர்றீங்க‌."

"ரொம்ப‌ முக்கிய‌மா இப்ப‌ அதெல்லாம். ச‌ரி என்ன‌ சொல்ல‌ணும் ?"

"நான் இன்னும் ஒன்னும் சொல்ல‌லை, உங்க‌ளுக்கு தான் வெய்டிங்"

"அதான் வ‌ந்திட்டேன்ல‌ சொல்லுங்க‌"

கைய‌சைத்து வெய்ட்ர‌ஸ்ஸை அழைத்தாள் நிர்ம‌லா.

"இப்ப‌ சொல்றேன்" என்றாள்.

கிர்ர்ர்ர் என்று முறைத்தான் செல்வா

எஸ்ப்ர‌ஸோ, காப்புசீனோ, லாட்டே ...

"ம்...எது...சீக்கிர‌ம் சொல்லுங்க‌, பாவ‌ம் பொண்ணு நிக்குது பாருங்க‌" என்று உசுப்பேத்தினாள்.

"இர‌ண்டு லாட்டே, எக்ஸ்ட்ரா ஹாட் சொன்னார்க‌ள்."

"ந‌ல்ல‌ வேளை ம‌கேஷ் தொல்லை ஒழிஞ்ச‌து இன்னிக்கோட‌. என்கிட்ட‌ ஒன்னும் இல்ல‌ இல்லியா, இனி வ‌ர‌மாட்டான். ஆனா அண்ணி பழைய மாதிரி பேசுவாங்களா தெரியலையே ?!!" என்று நிறுத்தினாள்.

'அப்பாடா, லைன் க்ளிய‌ர்' என்று ம‌ன‌ம் குட்டிக் க‌ர‌ண‌ம் அடித்த‌து.

"என்ன‌வோ தெரிய‌ல‌ செல்வா, ம‌ன‌சுக்கு ரொம்ப‌ க‌ஷ்ட‌மா இருக்கு. யாருகிட்ட‌யாவ‌து பேசினா ரிலாக்ஸ்டா ஃபீல் ப‌ண்றேன். அண்ணன் கூட நான் சொல்வதை காதில் போட்டுக்க மாட்டார். இப்ப‌ யாருமே இல்லை, அதான் உங்க‌ கிட்ட‌ ... த‌ப்பா எடுத்துக்காதீங்க‌."

"ஓ.மை.காட். இன் ஃபாக்ட் சொல்ல‌ப் போனா, உங்க‌ள‌ முத‌ன்முத‌லில் பார்த்த‌ப் இருந்தே என‌க்கு பிடித்துவிட்ட‌து. அக‌ அழ‌கு ம‌ட்டும‌ல்லாது, உங்க‌ள‌து செய்ல‌க‌ளும் சேர்த்து. " "அத‌னால‌ ..."

"அத‌னால‌ ..."

"ஐ ல‌வ் யூ நிர்ம‌லா" என்று அவ‌ள் க‌ண்க‌ளை நோக்கினான்.

சோக‌த்தை எல்லாம் ம‌ற‌ந்து, வான் நோக்கி, கண்கள் பணித்து, குற்றால‌ அருவியாய் ச‌ட‌ ச‌ட‌வென‌ சிரிக்க‌லானாள் ....

"என‌க்கு ...ஏற்க‌ன‌வே ....க‌ல்யாண‌ம் ...ஆகிடுச்சுங்க ....செல்வா" என்று சிரிப்பினூடே விட்டு விட்டு சொன்னாள்.

சற்று அமைதியாகி, "ஒரு குழ‌ந்தை வேறு இருக்கு".... என்றாள்


தொடரும் ....

வானின் நிறம் நீலம் - 11


Photo: image14.webshots.com

முத‌ன் முறையாய் செல்வாவின் அக்க‌றை, பிடிப்ப‌தாய் (தேவைப்படுவதாய்) உண‌ர்ந்தாள்.

சில நொடிகளில்,

'ஐயோ, இந்த‌ ஆண்க‌ளின் ச‌க‌வாச‌ம் வேண்ட‌வே வேண்டாம். ஒரு எல்லையில் நிறுத்துவ‌து தான் ந‌ல்ல‌து. ம‌கேஷிட‌ம் ப‌ட்ட‌தே போதும்'.

"சாரி, 'ராஃபில்ஸ்' வேண்டாம் 'புக்கிட் பாத்தோக்' போங்க". என்றாள் ஓட்டுனரிடம்.

திரும்பி முறைப்ப‌து போல் பார்த்தார் ஓட்டுன‌ர். கொஞ்ச‌ நேர‌ம் க‌ழித்து வேற‌ எங்காவ‌து சொல்லுவாளோ என்று அவ‌ர் முக‌த்தில் கிலி அப்பிய‌து.

"புக்கி பாத்தோக் ஆ, லேட்ட டோன் சேஞ் டூ ச‌ம் அத‌ ப்ளேஸ் ஓ.கே ஹான்..." என்று க‌ட்ட‌ளை இட்டார் ஓட்டுன‌ர்.

'போயா போயா' என்று ம‌ன‌துள் சொல்லி "யா ஸ்யூர்" என்றாள் திட‌மாய்.

க‌ண்ணாடி வ‌ழி வெளியே சிறிது நேர‌ம் வேடிக்கை பார்த்து வ‌ந்தாள். சில‌ ப‌ல‌ சிந்த‌னைகள், பின் செல்லும் பொருட்க‌ளோடு போட்டி போட்டு பிம்பங்களாய்ச் சென்ற‌ன‌. என்ன‌து இவ்ளோ நேர‌ம் ஆகியும் ஒரு ஃபோன் கூட‌வா வரலை என்று யோசித்து, பையிலிருந்து செல்லை எடுத்துப் பிரித்தாள். சைலன்ட் மோடில் இருந்தது செல்.

"1 மிஸ்ட் கால்" காட்டிய‌து திரை. என்ன‌து புது ந‌ம்ப‌ரா இருக்கு. திரும்ப‌ கால் ப‌ண்ண‌லாமா, வேண்டாமா என்று யோசித்தாள். வேண்டாம் என்று சிவ‌ப்பு பொத்தானை அழுத்த‌, "1 வாய்ஸ் மெய்ல்" என்ற‌து செல்திரை. அழுத்திக் கேட்டாள். செல்வாவின் குர‌ல் ... "நிர்ம‌லா, உங்க‌ பெர்ச‌ன‌ல் விச‌ய‌த்தில‌ குறுக்கே வ‌ர்றேனு நினைக்காதீங்க‌. ஒரு ஆளுட‌ன் நீங்க‌ வாக்குவ‌தும் ப‌ண்ற‌ மாதிரியும் தெரிந்த‌து. அதே ச‌ம‌ய‌ம் அவ‌ர் உங்க‌ளுக்கு ந‌ன்கு ப‌ரிச்ச‌ய‌மான‌வ‌ர் என்றும் புரிந்த‌து. ச‌ரினு விட்டுட‌ முடிய‌ல‌. கார‌ண‌ம், உங்க‌ முக‌த்தில் ஒரு வாட்ட‌மும், கோபமும் இருந்த‌து. அதான், உங்க‌ளுக்கு ஏதாவ‌து உத‌வினா, த‌ய‌ங்காம‌ என்கிட்ட‌ கேளுங்க‌, இதான் என் நம்ப‌ர், டேக் கேர்"

'அட‌ப் பாவிங்க‌ளா ... ஏன்டா ஒரு பொண்ணோட‌ ம‌ன‌ச‌ இப்ப‌டி நோக‌டிக்க‌றீங்க‌' என்று நொந்து கொண்டாள்.

'உண்மையாவே இவ‌ன் அக்க‌றை காட்டுகிறானா என்று ஏன் யோசிக்க‌ மாட்டேன்க‌ற‌' என்ற‌து ம‌ன‌ம்.

'இல்லை வேண்ட‌வே வேண்டாம். எல்லாம் போதும்'

'என்ன‌ போதும். எல்லோருமே ம‌கேஷ் மாதிரி இருப்பாங்க‌ன்ற‌து என்ன‌ நிச்ச‌ய‌ம்'

சில‌ நொடிக‌ள் யோசித்தாள். செல்லில் ...

"செல்வா நான் உங்க கிட்ட ஒன்னு கேட்கணும். உங்க‌ கிட்ட‌ சொல்ல‌லாமா, வேண்டாமா என்று தெரிய‌வில்லை. ஆனா ம‌ன‌சு கெட‌ந்து அடிச்சிக்குது"

'நானே உன் கிட்ட‌ ஒன்னு சொல்ல‌ணும் என்று யோசிச்சிகிட்டு இருக்கேன். நீ என்ன‌டானா.' "ச‌ரி, எப்போ எங்கே பேச‌லாம் ?"

ம‌ணி பார்த்தாள், திருப்பி போட்ட ஏழாய், மணி ரெண்ட‌ரை காட்டியது.

"நீங்க‌ செர‌ங்கூன்ல‌ தான‌ இருக்கீங்க‌. அங்கேயே இருங்க‌, ஆபீஸ் முடிச்சு அஞ்சு அஞ்சரைக்கா நான் வ‌ர்றேன். அங்க‌ எங்காவ‌து மீட் ப‌ண்ண‌லாம். அதுவ‌ரைக்கும் முஸ்தாபா, ஹ‌னிஃபானு ஷாப்பிங்க்ல‌ இருங்க‌". என்றான்

"இல்ல‌ வேண்டாம். எங்காவ‌து லைப்ர‌ரில‌ மீட் ப‌ண்ண‌லாம்".

"ச‌ரி எந்த‌ லைப்ர‌ரி சொல்லுங்க‌ ?"

'எல்லாத்துக்கும் ச‌ரி என்கிறானே. உண்மையா ? ந‌டிக்கிறானா ??'

"இன்னிக்கு வேணாம். நாள‌ நாள‌ன்னைக்கு பார்க்க‌லாம்".

எதிரில் மௌனம்

தொடரும் ....

Tuesday, December 16, 2008

வானின் நிறம் நீலம் - 10

நாளைக்கு ஒன்று (அல்லது ஓரிரு நாட்களுக்கு ஒன்று) என்று விரிந்து சென்ற 'வானின் நிறம் நீலம்' தொடர் சில காரணங்களால் தொடர முடியாமல் போனதற்கு முதற்கண் மன்னிக்கணும்.

அதை மறக்காம ஞாபகம் வைத்து அக்கறையுடன், யோசனையும் சொன்ன ராமலஷ்மி அவர்களுக்கு உளமார்ந்த நன்றி. முடிந்த வரையில் அவர்கள் யோசனையை (முழுத்தொடரையும் தட்டச்சிட்டு பாகங்களாகப் பதிவது) இனி வரும் தொடர்களிலும் நடைமுறை படுத்தப் பார்க்கிறேன். நேரம் தான் ஒத்துழைக்கணும் :))

இந்தத் தொடர் முழுதும் தட்டச்சிட்டு ரெடி. பாகங்கள் பிரித்து, இன்னும் மூன்று அல்லது நான்கு பாகங்களில் முடியும்.

recap
-----
நிர்மலா, அண்ணன் வீட்டில் தங்கிக் கொண்டு சிங்கையில் வேலை பார்க்கும் சென்னைப் பெண். நண்பர்களுடன் தங்கி சிங்கையில் வேலை பார்க்கும் செல்வா. சில காரணங்களால், அண்ணி வெறுக்க, மன வேதனையில் உழலும் நிர்மலா. பார்த்த வேலையை விட்டு, வேறு வேலை தேடி, செல்வாவின் அலுவலகத்திலேயே நிர்மலா சேர, செல்வா அவளின் அழகில் மயங்கி, அவளைப் பின் தொடர, ஏற்கனவே மகேஷ்ஷுடன் தொடர்பிருப்பதை பார்த்து அதிர்ந்து ...

பொறுத்த நெஞ்சங்கள் பலவற்றிக்கும் நன்றிகள் பல. மேல படிங்க, கருத்து சொல்லுங்க.

முழு கதையையும் வாசிக்க இங்கு க்ளிக் பண்ணுங்க‌

---

வானின் நிறம் நீலம் - Part 10


Photo: panoramio.com


"சரி ஃபார்ம கொடு"

"ஹ‌ன்ன்ன் ... ரோட்டுலயா ... வேண்டாம். எங்காவ‌து உட்கார்ந்து பேச‌லாம்"

"சொன்ன‌தையே திருப்பி திருப்பி சொல்ற‌, என‌க்குப் பிடிக்கலை"

"என‌க்குப் பிடிச்சிருக்கே. அந்த‌ வீடு பிடிச்சிருக்கு, ம‌ரிய‌த்தை பிடிச்சிருக்கு. நீ கையெழுத்துப் போட்டா தான் எல்லாமே ந‌ட‌க்கும் க‌ண்ணு."

வ‌ரும் ஆத்திர‌த்தில் அப்ப‌டியே ரோட்டில் அவ‌னைப் பிடித்து த‌ள்ளிட‌லாமா என்று கூட‌ யோசித்தாள் நிர்ம‌லா. சே, அந்த‌ பாவ‌ம் ந‌ம‌க்கெத‌ற்கு என்று ம‌ன‌ம் பின்வாங்கிய‌து.

வீர‌மாகாளி அம்ம‌ன் கோவில் அருகில் இருந்தன‌ர்.

எங்கேயாவ‌து உட்கார‌ணும், அவ்ளோ தானே. இங்கே உட்கார‌லாம் என்று அவனை (எதிர்)பாராது, கால‌ணிக‌ளை க‌ழ‌ட்டி, பாத‌ங்க‌ளை சுத்த‌ம் செய்து கொண்டு கோவிலுக்குள் நுழைந்தாள்.

உச்சிகால‌ பூசை முடிந்து, உச்சி வெய்யிலுக்கு உள்ளே சில‌ர் குளிர்காய்ந்து கொண்டிருந்த‌ன‌ர். ஆள் அதிக‌ம‌ற்ற‌ ராம‌ர் ச‌ன்னிதியின் பின், கொட்டகையில் நிர்ம‌லாவும், ம‌கேஷும் அம‌ர்ந்த‌ன‌ர்.

"கொண்டா பேப்பரை" என்றாள்.

பேக் பேக்கிலிருந்து சில‌ தாள்க‌ளை உருவினான் ம‌கேஷ்

'செத்துத் தொல‌ ச‌னிய‌னே' என்று திட்டி "இந்தா பிடி, இனி ஒரு முறை கூட‌ என் எதிரில் வ‌ந்திடாத" என்று இரு கர‌ம் கூப்பி த‌லை குனிந்தாள்.

இவ்வ‌ள‌வு எளிதில் காரிய‌ம் முடியும் என்று ம‌கேஷ் எண்ண‌வில்லை.

நீ எப்ப‌வுமே ஸ்மார்ட் நிமி. இந்த‌ ம‌ரிய‌ம் ம‌ட்டும் குறுக்கே வ‌ல்லேன்னா இப்ப‌டி ஆயிருக்காது...

'இந்த‌ மாதிரி எத்த‌னை பேரு கிட்ட‌ சொன்னியோ, சொல்ல‌ப் போறியோ. ந‌ல்ல‌ வேளை என்னை விட்டியே அதுவே நான் செய்த‌ பாக்கிய‌ம்' என்று க‌ண்க‌ள் மூடி யோசித்தாள்.

இனி எதுவும் பேச‌ மாட்டாள் என, வெற்றி க‌ளிப்புடன் அங்கிருந்து ந‌க‌ர்ந்தான் ம‌கேஷ்.

வாய்க்கும், வ‌யிற்றுக்கும் இடையில் என்ன‌வோ செய்த‌து. இன‌ம் புரியாத‌ ஒரு சோக‌ம் அப்பிக் கொண்ட‌து. ச‌ன்ன‌தியில் சாய்ந்து க‌ண்மூடினாள். உல‌க‌மே சூறாவ‌ளியில் சுழ‌ல்வ‌து போல‌ இருந்த‌து. காற்றின் ச‌ட‌ச‌ட‌ப்பில் எல்லாம் பிய்த்துக் கொண்டு ப‌றந்த‌து. வீட்டுக் கூரைக‌ள், மர‌ங்க‌ள், வாக‌ன‌ங்க‌ள், மனிதர்கள் எனப் பாகுபாடு இல்லாம‌ல் எல்லாம் காற்றின் ஆதிக்க‌த்தில் சுழ‌ன்ற‌து. இடி இடித்து வானம், அழ‌த் தொட‌ங்கிய‌து. சொட் சொட் என்று கொட்ட‌கையில் இருந்து வ‌டிந்த‌ நீர், நிர்ம‌லாவின் மேல் விழ‌, ப‌ட்டென்று க‌ண்விழித்தாள். த‌ன‌க்காக‌ வான‌ம் அழுகிறதோ என‌ சிறிது ம‌கிழ்ந்தாள்.

துப்ப‌ட்டாவை த‌லைக்கு போர்த்திக் கொண்டு கோவிலை விட்டு வெளியில் வ‌ந்து டாக்ஸி பிடித்தாள். 'புக்கிட் பாத்தோக்' என்று சொல்ல‌ வ‌ந்த‌வ‌ள், 'ராஃபில்ஸ் ப்ளேஸ்' என்றாள் டாக்சி ஓட்டுன‌ரிட‌ம் ...


தொடரும் .....

Monday, December 15, 2008

[வர|குறை]தட்சணை !


Photo: weblivecasting.com

பொண்ணு, கட்டின பொடவையோட (?!!) வந்தா போதும். வேறெதுவும் எனக்கு வேண்டாம். சும்மா அது வேணும், இது வேணும் என்று கேட்டு பொண்ணு வீட்டுக்காரங்கள தொந்தரவு பண்ணாதீங்க." தீர்க்கமாய் சொன்னான் அருண் (எ) அருணாசலம்.

அம்மா சொன்னாள். "அட‌ புரியாத‌வ‌னே, இந்த‌ கால‌த்தில‌யும் இப்ப‌டி ஒரு புள்ளையானு யாரும் அதிச‌யிக்க‌ மாட்டாங்க‌. மாறாக‌, உன் கிட்டயோ, அல்ல‌து நம்ம‌ வீட்டுல‌யோ ஏதோ கொறை இருக்குனு தான் நெனைப்பாங்க‌டா" என்று !!!

தொலைக்காட்சியில் ச‌ங்கீத‌ நிக‌ழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்த‌ அப்பா, த‌லையை ஆட்டி ர‌சித்துக் கொண்டிருந்தார். வ‌ழ‌க்க‌ம் போல‌ அம்மாவின் சொல்லுக்குமாய் இருந்த‌து அது.

'இவ‌ங்க‌ திருந்த‌வே மாட்டாங்க‌' என்று பொது ஜ‌ன‌த்தையும் சேர்த்து திட்டினான். "என‌க்கு இதில் உட‌ன்பாடு இல்லை. நீங்க‌ இப்ப‌டித் தான் செய்ய‌ணும் என்றால், என‌க்குக் க‌ல்யாண‌மே வேண்டாம்."

இதுவ‌ரையில் அருண் சொல்லாத‌ வார்த்தையைக் கேட்ட‌ அம்மா, நிலைகுத்தின‌ தேர் போல‌ ஆடாது உறைந்தாள்.

"என்ன‌ க‌ம‌ல‌ம், உன் புள்ள‌ யாரையாவ‌து ல‌வ், கிவ் ப‌ண்றானோ ? இவ்ளோ ஸ்டராங்கா இருக்கான்" என்று ச‌ப்த‌மின்றி ம‌னைவியின் காதுக‌ளில் கிசுகிசுத்தார் லஷ்மணன்.

"இன்னும் மெதுவா பேசுங்க‌. அப்ப‌ தான் என் காதுக‌ளில் விழாது. ல‌வ் பண்ணா, உங்க‌ கிட்ட‌ சொல்ல‌ என‌க்கு என்ன த‌ய‌க்க‌ம். ந‌ம்ப‌வே மாட்டீங்களே, அம்மா நீயாவ‌து சொல்லேன் அப்பாவுக்கு" என்று சிடுசிடுத்தான் அருண்.

"அவ‌ என்ன‌த்த‌ சொல்ற‌து. அதான் முன்னரே சொல்லிட்டாளே. உனக்கு, ஃப்ரெண்ட்ஸ் தான் சரியில்லை. ஒவ்வொருத்தனையும் பாரு, ஏதோ பார்பர் ஷாப்ல பாதில அனுப்பிச்ச மாதிரி ஒரு ஹேர் ஸ்டைல். தெருவப் பெருக்கற மாதிரி கால்சட்டை. தலைமுதல், கால் வரை ஏதாவது வித்தியாசம் பண்றேனு வெவஸ்த கெட்டு திரியாறனுங்க. ஹீம்ம்ம்... நீயும் வித்தியாசம் பண்றேனு, அதை உன் கல்யாணத்தில் காண்பிக்க விரும்பற. அப்புற‌ம் உன் இஷ்ட‌ம்." என்று, இசைக் க‌ச்சேரியில் மெய்ம‌ற‌ந்தார் ல‌ஷ்ம‌ண‌ன்.

"அருண், உன‌க்குப் புரியாத‌ வ‌ய‌சில்லை. எங்க‌ கால‌த்தில் எல்லாம், பெத்த‌வ‌ங்க எதிரில் நிற்க‌ கூட‌ ப‌ய‌ப்ப‌டுவோம். அப்படி இருக்க‌, அவ‌ங்க‌ சொல்ற‌து தான் வேத‌ வாக்கு. இப்ப‌ கால‌ம் அப்ப‌டியா இருக்கு. பாரு, நாங்க‌ளே உன்னை எவ்வ‌ள‌வு சுத‌ந்திர‌மா வ‌ள‌ர்திருக்கோம். நாங்க‌ சொல்ற‌து இது தான். இப்ப இருக்கற நிலைமைல கொஞ்ச‌மாவ‌து டிமான்ட் ப‌ண்ணினா தான் ம‌திப்பு இருக்கும். கால‌ம் இதே போல‌வா இருக்க‌ப் போகுது. உன் கால‌த்தில், நீ என்ன‌ செய்ய‌ நினைக்க‌றியோ, அதைச் செய்" என்று முடித்தார் க‌ம‌ல‌ம்.

லீவு நாளும் அதுவுமா கொஞ்ச‌ நேர‌ம் வீட்டில‌ நிம்ம‌தியா இருக்க‌ விட‌மாட்டீங்க‌ளே. ச‌ரி ஏதோ ப‌ண்ணுங்க‌. ஆனா ஒன்னு. அவ‌ங்க‌ளா எதெது த‌ர்றேனு சொல்றாங்க‌ளோ அது போதும். அதை விட்டு டிமான்ட் ப‌ண்ணினீங்க‌ என்றால், அப்புற‌ம் அது தான் க‌டைசி பெண் பார்க்கும் ப‌ட‌ல‌மா இருக்கும்" என‌ எச்ச‌ரித்தான்.

த‌லைகுனிந்தே வ‌ந்தாள். முக‌ம் ச‌ரியாகத் தெரியவில்லை அருணுக்கு. குனிந்தே காஃபி ப‌ரிமாறினாள். குனிந்த‌ த‌லை நிமிராம‌ல் அடுக்க‌ளைக்குள் புகுந்தாள்.

"வாம்மா மின்ன‌ல்" ஜோக் ஏனோ ஞாப‌க‌ம் வந்தது, மெல்ல‌ச் சிரித்துக் கொண்டான். 'மின்ன‌லை விட‌ வேக‌மாக‌ அல்ல‌வா வ‌ந்து சென்றுவிட்டாள்.'

"பைய‌னோட‌ மேனிமொழி பார்த்தா புடிச்ச‌ மாதிரி தான் இருக்கு. அப்புற‌ம் என்ன‌, ம‌த்த‌தெல்லாம் பேசி முடிச்சிட‌லாமா ?" என்று வெண் மீசையை வ‌ருடி ஒரு பெரிசு ஆர‌ம்பித்து வைத்தார்.

"ஒரு நிமிஷ‌ம், நான் பொண்ணோட‌ கொஞ்ச‌ம் த‌னியா பேச‌ணும்" என்றான் அருண்.

ச‌ட‌ச‌ட‌க்கும் ச‌ருகுக‌ளாய் ச‌ள‌ச‌ள‌த்த‌து பெண் வீடு.

நாலைந்து குட்டிப் ப‌ச‌ங்க‌ள் பாதுக்காப்புட‌ன் ந‌ந்தினியின் அறை நுழைந்தான் அருண்.

"டேய் ப‌ச‌ங்க‌ளா, இங்கேயே இருங்க‌, நான் ஒன்னும் ந‌ந்தினிய‌ பிச்சுத் தின்னுட‌ மாட்டேன், ஓ.கே. ச‌ம‌த்தா இருந்தீங்க‌னா, ஆளுக்கு ஒரு சாக்லேட்" என்ற‌வுட‌ன், எல்லாம் அல‌ர்ட் ஆகி வாச‌ல் அருகிலேயே அம‌ர்ந்து கொண்ட‌ன‌ர்.

"ந‌ந்தினி குனிந்த‌ த‌லை நிமிர‌வேயில்லை"

அவ‌ள் அருகில் சென்று, ஜ‌ன்ன‌ல் ஓர‌ம் க‌த‌வுக‌ளில் லேசாய் த‌ட்ட‌, ம்ம்ம்... என்று நிமிர்ந்து நோக்கினாள்.

அல்ட்ரா மாடர்ன் என்றும் சொல்லமுடியாத, அடக்க ஒடுக்கம் என்று சொல்ல முடியாத ஒருவித அழகில் தெரிந்தாள் நந்தினி.

"க‌‌ட்டினால் உன்னை தான் க‌ட்டுவேன். க‌ட்டின‌ புட‌வையுட‌ன் நீ வ‌ந்தால் போதும்" என்று உண‌ர்ச்சிப் பிழ‌ம்பானான்.

வெளியில் வந்து, "பெண்ணை எனக்குப் பிடித்திருக்கிறது. க‌ட்டின‌ புட‌வையுட‌ன் அனுப்புங்க, அது போதும் !" என்று பெற்றோருக்குக் காத்திராம‌ல் சொல்லியும் வைத்தான்.

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர் பெண் வீட்டார். சிறிது நேர அமைதிக்குப் பின் "நான் ஒன்னு கேட்டா த‌ப்பா நெனைக்க‌ மாட்டீங்க‌ளே ?" என்றார் பெரிசு.

"சொல்லுங்க‌" என்றார் ல‌ஷ்ம‌ண‌ன்.

"பையனுக்கு கை, காலு எதும் குறை இல்லையே ? ம‌த்த‌ ச‌க‌வாச‌ம் ?!! உங்க‌ வீட்டுல‌ யாருக்காவ‌து மெடிக்க‌ல் ப்ராப்ள‌ம் ?"

ஒன்னு என்று சொல்லி ஒன்ப‌துக்கும் மேல் கேள்விக‌ளை அடுக்கிக் கொண்டே போனார் பெரிசு.

"இந்த‌க் கால‌த்துப் ப‌ச‌ங்க‌ளுக்கு எல்லாம் இன்ஸ்ட‌ன்டா ந‌ட‌க்க‌ணும். அதான் சொல்லித் தானே கூட்டி வ‌ந்தோம். நீ என்ன‌ அவ‌ச‌ர‌க்குடுக்கை மாதிரி, வித்தியாச‌ம் ப‌ண்ணுகிறேன் பேர்வ‌ழி என்று... இப்ப‌ பாரு, வீராப்பா எழுந்து வ‌ந்தாச்சு" என‌ வ‌ழிமுழுக்க‌ தாயும், த‌ந்தையும் ம‌ன‌ம் குமுறின‌ர்.

"ச‌ரி உங்க‌ இஷ்ட‌ம் போல‌ ஒரு பொண்ணை பாருங்க‌" என்று யோச‌னையில் ஆழ்ந்தான் அருண்.

Friday, December 12, 2008

மின்னல் கவிதைகள்: 2 - மாடு மேய்க்கப் போகையிலே


Photo: wikimedia.org

மாடு மேய்க்கப் போகையில‌
மந்தகாசக் குரலினிலே
பாட்டெடுத்து நீர்பாட‌
பாரெலாம் கேக்குதையா !

ஓடோடி வ‌ரும் என்னை
உயிராய் எதிர் பார்ப்பீரு
உத‌ட்டோர‌ம் சின்ன‌தாய்
புன்முறுவ‌ல் உதிர்ப்பீரு.

க‌ட்டிக்க‌லாம் என்றீரு
மேற்படிப்ப பார்க்க‌ என்றேன்.
தொட்டுக்க‌லாம் என்ற‌த‌ற்கோ
தேர்வை முடிக்க‌ சொன்னேன்.

ப‌டிப்பும் முடிச்சீரு
ப‌ய‌ண‌ம் ப‌ற‌ந்தீரு
ப‌ட்டிக்காட்டுப் பெண் ம‌ன‌தை
க‌ட்டிப்போட்டுச் சென்றீரு.

காடு மேடெல்லாம்
காவ‌ல் காத்து நானிருந்தேன்
க‌ட்டிக்க‌ என்றாவ‌து ...
கறுத்த‌ ம‌ச்சான் வ‌ருவாருன்னு !!

வ‌ருஷ‌ம் ப‌ல‌ ஆகிப் போச்சு ...
காடும் இல்லை, மேடும் இல்லை
கான‌கத்தில் ம‌ர‌மும் இல்லை
கானக்குரல் ஒலியும் இல்லை.

எங்கே இருக்கீரு ?
இன்று வ‌ரை சேதியில்லை - உம‌க்கு,
புள்ளை குட்டி இருக்க‌ற‌தா
புளுகுறாக ஊருக்குள்ளே.

பாத‌க‌த்தி நான் இங்கே
ப‌ரித‌விச்சு நிக்க‌ற‌னே !
பாடும் என் பாட்டை
பாரே (தான்) கேட்டிடுமா ?!

Thursday, December 11, 2008

உத்தரவின்றி உள்ளே வா !


Photo: inmagine.com

"ரொம்பத் தான் வித்தியாசமான ஆளுடா நீ ! இன்னைக்கு தான் பார்கறேன் என்று சொல்றே. பூனைக் கண்கள் என்கிற ஒரே காரணத்துக்காக அவளைக் காதலிக்கறேன் என்றும் சொல்றே. இதெல்லாம் நல்லதுக்கில்ல ... ஆமா ... சொல்லிட்டேன்"

கல்லூரி வாசலில் அவள் கடக்கையில், 'மியாவ்' என்று கத்தணும் போல் இருந்தது.

கேசம் புறம் தள்ளி, பூனைக் கண்களில் நோக்கி, புன்னகை பூத்து சென்றாள்.

'ம்... இவளென்ன சிரித்துச் செல்கிறாள்'. நினைவுகளோடு வகுப்புக்குச் சென்றான்.

"டேய் ... உன்னைத் தான் ... பகல் கனவு பரந்தாமா, பாடத்தை கூட நீ இப்படி கவனித்த‌தில்லையே ராசா ..." என்ற விக்கியின் பரிகாசத்தில், சரிந்து யோசனையில் இருந்த‌ ஜீவா சற்று நிமிர்ந்து அமர்ந்தான்.

ரயில் கிளம்பும் முன் இருக்கும் பரபரப்பில் இருந்தது வகுப்பறை. சள சள வென ஒரே பேச்சுக் குரல்கள். இங்கும் அங்கும் சிலர் நடந்தோடிக் கொண்டு இருந்தனர்.

முதல் நாள் கல்லூரி. முதுகலை கணிப்பொறி இரண்டாம் ஆண்டு. முதலில் ஹெச்.ஓ.டி. வந்து, பொதுவாக‌ சில செய்திகள் சொல்லி விட்டுச் சென்றார். பலர், பலருக்கும் ஏற்கனவே அறிமுகம் ஆகியிருந்தாலும், பல புதுமுகங்களும் ஆங்காங்கே தென்பட்டனர்.

"ஃபர்ஸ்ட் இயர் என்று நினைக்கறேன்" என்றான் ஜீவா.

"டேய் நாம இப்ப செகண்ட் இயர்" என்றான் விக்கி.

"அத சொல்லலடா, அவள சொல்றேன்"

"எங்களுக்கும் புரியாம‌ இல்ல‌ ... விள‌க்க‌ம் வேற‌ சொல்ல‌ வ‌ந்திட்டான்டா .. டேய் .. டேய் .. எல்லாம் இங்க‌ வாங்க‌" என்று விக்கி கூவ‌, குவிந்த‌ தாம‌ரை மொட்டாய் வ‌ட்ட‌மிட்ட‌ன‌ர் ந‌ண்ப‌ர்க‌ள்.

என்ன ??? என்ன ??? என்று எல்லோர் க‌ண்க‌ளிலும் குறுகுறுவென‌ ஒரு ஆவ‌ல்.

"சொல்றா விக்கி ... மேட்டர் என்னா ?" என்றாள் ராக‌வி.

"என்ன‌ மாமே, 'இன்னிக்கு குளிச்சிட்டு வ‌ந்திட்டேன்' என்று சொன்னே ... ம‌வ‌னே ர‌த்த‌த்தில‌ குளிப்பாட்டிருவேன்" மிர‌ட்ட‌லாய் மோபினின் குர‌ல்.

"ப்ளீஸ், இன்னிக்காவ‌து நான் சொல்ற‌த‌ ந‌ம்புங்க‌டா" கெஞ்சும் குர‌லில் விக்கி. "ந‌ம்ப‌ ஹீரோ, அதான் க‌ல‌ர்ப‌ட‌க் க‌தாநாய‌க‌ன், இது நாள் வரைக்கும் இல்லாம, ந‌ம்ம‌ ஜீவா, இப்ப ஜில்பான்ஸ்ல‌ இற‌ங்கிட்டான். பொண்ணு யாருனா ..."

ச‌ட‌ன் ப்ரேக் போட்ட‌ ர‌யில் வ‌ண்டியாய் இழுத்து நிறுத்தினான்.

"வாத்தி யாராவ‌து வ‌ருமுன், சீன‌ முடி ராசா ... நேர‌ம் ஆவுதில்ல‌ ..." அனைவ‌ரின் ம‌ன‌திலும் இவ்வ‌ரிக‌ள்.

"யாருனா ... யாருனா .. யா..." என்று சுருதி குறைத்தான் விக்கி. மார்போடு அனைத்த‌ புத்த‌க‌ங்க‌ளுட‌ன், வெளிர் ப‌ச்சைப் புட‌வையில், (க‌ண்க‌ளுக்கு மேட்சிங்காக‌ இருக்கும்) உள்ளே நுழைந்தாள் ஸ்ருதி.

'அட‌ ந‌ம்ம‌ க்ளாஸ் தானா ?!' என்று யோசிக்கும்போதே, ஆசிரியருக்கான மேசையில் புத்தகங்களை வைத்து விட்டு, திரும்பி அனைவரையும் பார்த்து, "குட் மார்னிங், ஐ ஆம் ஸ்ருதி ..." என்று அறிமுகப்படுத்திக் கொள்ள, விக்கியும், ஜீவாவும் உறைந்து தான் போனார்க‌ள்.

"இங்க திருச்சில, செயின்ட் ஜோச‌ப்பில் முதுக‌லை க‌ணிப்பொறி. பின் சென்னையில் சில‌ மாத‌ங்க‌ள் வேலை. ஆசிரிய‌த் தொழிலின் மீது ஆரம்பத்தில் இருந்தே ப‌ற்று. அத‌னால் வேலையைத் துறந்து இங்கு வ‌ந்துவிட்டேன்" என்று சுருதி பிஸ‌காம‌ல் ஸ்ருதி சொல்லிக் கொண்டே போக‌, இவை எதும் ஜீவாவின் காதுக‌ளில் விழுந்த‌ன‌வாக‌த் தெரியவில்லை.

"ம‌ச்சான், சும்மா சொல்ல‌க் கூடாது ... உன் லெவ‌லே த‌னி தான். அவங்க டீச்ச..ரா..மா ... சும்மாவே மார்க் நல்லா வாங்குவோம், இதில இவங்கள வேற பகச்சிகிட்டோம் அவ்ளோ தான். இந்த‌ விளையாட்டுக்கு நான் வ‌ர‌லபா." என்று ச‌ற்று த‌ள்ளி அம‌ர்ந்தான் விக்கி.

"இருக்கட்டுமே ... நம்மை விட‌ ஒரு வ‌ய‌சு ... மிஞ்சிப் போனா ரெண்டு வ‌ய‌சு தான் கூட‌ இருக்கும் ... இதெல்லாம் ஒரு பிர‌ச்ச‌னையா. இன்னிக்கு சாய‌ந்திர‌ம் க‌ல்லூரி விட்டுப் போகும் போது, அவ‌சிய‌ம் இவ‌ கிட்ட‌ பேச‌ப் போறேன் பாரு. கூட‌ நீ வர்ரே" என்று ஆணி அடித்தாற் போல் சொல்லிமுடித்தான் ஜீவா.

"டேய் நான் மார்க்க‌ ப‌த்தி பேசிட்டு இருக்கேன். நீ என்ன‌டானா வ‌ய‌ச‌ப் ப‌த்தி பேசற. உன் புரியாத விளையாட்டுக்கு என்னை ஏன் பலிகடா ஆக்கறே" என்று விழி பிதுங்கினான் விக்கி.

'பூனைக் கண் கண்டேன்
புவியீர்ப்பில் விழுந்தேன்

காந்த‌க் கண் கண்டேன்
க(ல்)வி மறந்து நின்றேன்.

சாந்த‌ முகம் கொண்ட‌‌
செம் மேனிப் பெண்ண‌ழகி

காந்தமாய் எனை ஈர்த்த‌
பூனைக் க‌ண்ண‌ழ‌கி.'

என்று மெதுவே விக்கியின் காதுகளில் பாடினான் ஜீவா.

"ச‌ரியாப் போச்சு ... நீ திருந்த‌ மாட்ட‌டா, போ க‌ன‌வுல‌க‌ க‌ன்டினியூ ப‌ண்ணு, நான் பாட‌த்தை க‌வ‌னிக்க‌றேன்." என்றான் விக்கி

"குட் மார்னிங்க், குட் மார்னிங்க் ... ப‌ச‌ங்க‌ளா எப்ப‌டி இருக்கீங்க‌ ... மன்னிக்கணும், கொஞ்சம் லேட்டாயிடுச்சு. விடுமுறை எல்லாம் எப்ப‌டி இருந்துச்சு" என்ற‌வாறு உள்ளே வ‌ந்தார் க‌ணித‌ ஆசான் ச‌பார‌த்தின‌ம்.

அடித்து பிடித்து, முட்டி மோதி கிடைத்த‌ இட‌த்தில், ஜீவாவின் அருகில் அம‌ர்ந்தாள் ஸ்ருதி.

சிறு பரபரப்புக்குப் பின், ர‌யில் சென்ற‌வுட‌ன் ஏற்ப‌டும் நிச‌ப்த‌ம் நில‌விய‌து அங்கே.

ஆசானை முகம் பார்த்தாலும், 'என்ன நடக்குது இங்கே' என மனம் பக்கத்தில் இருந்த ஸ்ருதியைப் பார்த்தது. 'விக்கியை நோக்கி என்னடா, என்ன வச்சி காமெடி கீமெடி பண்ணலையே' என்றும் முறைத்தது.

ஆட்காட்டி விரலை உயர்த்தி, ஒரு கண்ணைச் சிமிட்டினாள் ஸ்ருதி விக்கியைப் பார்த்து.

"டேய் என்னடா" என்று முறைத்தான் ஜீவா.

"ஃபர்ஸ்ட் இயர் சென்னையில முடிச்சிருக்கா, அப்பா ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு, சொந்த ஊருக்கே எல்லோரும் வந்துட்டாங்களாம். இவள ஹாஸ்டல்ல இருக்க சொல்லிருக்காங்க. முடியாதுனு அப்பா பின்னாடியே வந்துட்டாளாம்.

எங்க தெரு தான். இந்த லீவு முழுக்க இங்க தான் இருந்தா. இவ கிட்ட‌ பேசப் பேச, உன்னைப் மாதிரி ஒருத்தன தான் தேடிட்டு இருக்கானு தோணுச்சு. முதலில் எனக்கும் காதல் எண்ணம் இருந்தது. என் கிட்ட என்ன பழகினாலும், ஒரு டிஸ்ட‌ன்ஸ் மெய்ன்டெய்ன் ப‌ண்ற‌தை நானும் உண‌ராம‌ல் இல்லை. அத‌னால் ஒதுங்கிட்டேன்.

ஃப்ரெண்ட்ஸ் ப‌த்தி பேசும் போதெல்லாம், உன்னைப் ப‌த்தி சொல்ல‌ச் சொல்ல‌ .. அப்ப‌டியா ... இந்த‌ வ‌ய‌சு வ‌ரைக்கும் யாரையும் காத‌லிக்க‌லையா ?? த‌ம், த‌ண்ணி எதுவும் கிடையாதா ?? ரொம்ப‌ ஜோவிய‌லான‌ டைப்போ ?? என்றெல்லாம் ஆர்வ‌மா கேட்டுட்டிருப்பா.

உன‌க்கு ஞாப‌க‌ம் இருக்கா, லீவில் ஒரு நாள் ம‌லைக் கோட்டைக்கு போனோமே. நானும், நீயும் ம‌ட்டும் இல்லை. ஸ்ருதியும் வ‌ந்திருந்தா. உன்னைப் பார்க்க‌ணும் என்றாள், அதான். தப்பித்தவறி கூட பக்கத்தில வந்திராத என்று உத்தரவாதம் வாங்கித் தான் வரச் சொன்னேன்.

இது போல பட இடங்கள், பல சந்தர்ப்பங்களில் உன்னை தொடர்ந்து, உன்னை பிடிச்சும் போச்சு அவளுக்கு. முத‌ன் முத‌ல் உன்னை நேரில் ச‌ந்திக்குபோது ஒரு ஷாக் கொடுக்க‌ணும் என்று சொன்னா. அதான் இந்த 'டீச்ச‌ர்' நாட‌க‌ம்.

நேரம் இருந்தா உன்னை எழுந்திருக்க‌ சொல்லி கேள்வி எல்லாம் கேட்க‌லாம் என்று திட்ட‌ம். அதுக்கு கொடுப்பினை இல்லாமப் போச்சு. இருந்தாலும் ஆப‌ரேஷ‌ன் ச‌க்ஸ‌ஸ்" என்று சொல்லி முடித்தான் விக்கி.

விக்கித்து ல‌யித்திருந்தான் ஜீவா.


மார்ச் 3, 2009 யூத்ஃபுல் விகடனில்

Wednesday, December 10, 2008

மின்னல் கவிதைக‌ள்: 1 - கழுத்துக் கறுப்பேறி


Photo: static.panoramio.com

கழுத்துக் கறுப்பேறி
மங்கின‌ தங்க நகை,

வளைந்து காதிலாடும்
நெளிந்த பொன் தோடு.

பாலில் விழும் வண்டோ ?
படபடக்கும் கருவிழிகள்,

வேல் கொண்டோ ? தேய்த்த
பளிச்சிடும் வெண்பற்கள்.

சேதி ஒன்று சொல்வேன்
சிணுங்காமல் கேட்பாயா ?

வெண்க‌ல‌க் குர‌லெடுத்து
வீண்வ‌ம்பு செய்யாது,

தேளெனக் கொட்டாமல்
தேன்போல் இனித்திடடி.

கன்றுகள் துள்ளியாடும்
காடு களனி நமக்கிருக்க‌,

உன்னையும் காத்திடுவேன்
உன் இதயம் த‌ருவாயா ?

மாராப்பு ரவிக்கைக்குள்ளே
மச்சான‌ வச்சிக்கடி,

ம‌திம‌ய‌ங்கிக் கிறங்கையிலே
மொத்த‌மா வளைச்சுக்க‌டி !!!

Monday, December 8, 2008

நான் சிரித்தால் தீபாவளி

சென்ற சனிக்கிழமை எங்க கிராமத்தில் ஒரு கிறிஸ்துமஸ் பரேட். முதியோர் முதல் குழந்தைகள் வரை அனைவரின் முகத்திலும் ஒரு உற்சாகம். தனி மனிதராகவோ, பர்சனல் டீமாகவோ, பள்ளிக் குழந்தைகள் குழுவாகவோ, அல்லது நிறுவனங்களின் குழுவாகவோ ... அணிவகுப்பில் கலந்து கொண்டனர். வண்ண வண்ண ஆடைகள், அலங்கார வண்டிகள், ஆடிப்பாடும் சிறுவர்கள், மிட்டாய்கள் தூவிச் செல்லும் பெரியவர்கள்.

இந்தியாவிலும், சிங்கையிலும் இருந்த வரையில், கிறுஸ்டியானிட்டி என்றால், எங்கே நம்மையும் மதம் மாத்திடுவாங்களோ என்ற நினைப்பு கூடவே இருக்கும், அது சார்ந்த மனிதர்களுடன் பழகும்போது. கறுப்பு வெள்ளை உடுப்பில் அந்நிய தேசத்தார் நம் பக்கம் வந்து பேச்சுக் கொடுப்பர். பொது நல விசாரணைக்குப் பின், மெதுவே மதம் சார்ந்து பேச்சு செல்லும், முடிந்த வரையில் இங்கு பை சொல்லிவிடுவேன்.

வேடிக்கையாக என் நண்பன் ஒருவனின் செயல் இன்று நினைத்தாலும் ஆச்சரியம் தரும். இவனிடமும் இருவர் ரயிலில் பேச்சுக் கொடுத்து வந்து, இந்த வார இறுதியில், இந்த சர்ச்சில், இந்த நிகழ்ச்சி இருக்கு, வந்து தான் பாருங்களேன் என்றிருக்கின்றனர். அவனோ, ஒரு கோவில் முகவரி சொல்லி, இங்கு, இத்தனை மணிக்கு ஒரு நிகழ்ச்சி, நீங்க வந்து பாருங்க என்றிருக்கிறான். அவர்கள் இருவரும் இவ‌னுக்கு பை சொல்லிக் கிள‌ம்பிவிட்ட‌ன‌ராம்.

அமெரிக்கா வரும் முன் வரை, இங்கும் மதம் சார்ந்து தான் கிறிஸ்டியானிட்டி இருக்கும் என நினைத்தேன். ஆனால் அந்த அளவுக்கு இல்லை. மதத்திற்கும் அப்பாற்பட்டு, ஒரு கலாச்சர உணர்வு தான் கிடைக்கிறது. ஊர்வலம் கூட ஒரு மதம் சார்ந்த ஊர்வலம் போல் அல்லாது, கலாச்சார ஊர்வலமாகவே தோன்றியது. அத்தனை வண்டிகள், குழுக்களிலும் கூட மதம் சார்ந்த படங்கள் ஒன்று கூட இல்லை.

வித விதமாய் குழுக்கள் ஊர்திகளில் வந்தாலும், எங்களைக் கவர்ந்த சில ...

கை படப் பெட்டியில் படம் பிடித்துக் கொண்டே இருந்த போது, சட்டெனக் கவர்ந்தது ஒரு ஊர்தியில் எழுதியிருந்த வாசகம். "மிஸ் நார்த் வெஸ்ட் ஆர்க்க‌ன்ஸா". அவர் கையில் இருந்த குட்டி நாய்க்குட்டியும் கூட அழகாய் இருந்தது :)) அட‌ அழ‌கிக‌ள் கூட‌ க‌ல‌ந்துக்குவாங்க‌ளா என‌ அதிச‌யிக்க‌, தொட‌ர்ந்து, "மிஸ் பென்ட‌ல்வில்", "மிஸ் பென்ட‌ன் கௌன்ட்டி", "மிஸ் ..." எனத் தெருவாரியாக (கொஞ்சம் மிகைப் படுத்தியிருக்கிறேன் :)) வ‌ரிசையாய் அழ‌கிக‌ள் ஊர்திக‌ளில்.

நாய்(க்குட்டி)கள் பிடித்த படி ஒரு தொண்டு நிறுவனக் குழு உறுப்பினர்கள். ம்ம்ம். இதுவும் வித்தியாசமா இருக்கே எனப் பார்த்தால், அவற்றின் சட்டை (போன்ற உடை)யில் "அடாப்ட் மீ" என வாசகம்.

எங்கள் மூத்த மகன் பள்ளியிலிருந்து "ஸ்வாம்ப் பேன்ட்" என்ற இசைக் குழு. நாற்பதுக்கும் மேல் குழந்தைகள். ரெகார்டர் எனும் (புல்லாங்குழல் போன்றது) வாத்தியத்தில் ஐந்தாறு கிறிஸ்துமஸ் பாடல்கள் ஊர்வ‌ல‌த்தில் இசைக்க‌.

ஒன்ப‌த‌ரைக்கெல்லாம் மைதான‌த்துக்கு வ‌ந்துவிடுங்க‌ள் என‌ப் ப‌ள்ளியில் இருந்து அறிவிப்பு வ‌ந்திருந்த‌து. பைய‌னுக்காக‌ ச‌னிக்கிழ‌மை காலைத் துயிலைப் புற‌க்க‌ணித்து சீக்கிர‌ம் எழுந்து தயாரானோம். குளிர் என்றால் அப்படி ஒரு நடுக்கம். கோட் எல்லாம் போட்டு நமக்கே நடுக்கம் தாங்கலை. பையன் நாலைந்து உடை அடுக்குகள் தாண்டி, பேன்ட் டிஷ‌ர்ட் போட்டு வந்தான். டிஷ‌ர்ட் வெளிய‌ தெரிய‌ணுமாம்.

அவ‌ங்க‌ இசை ஆசிரியையிட‌ம், செக்-இன் ப‌ண்ணி, பையனை அவன் டீமில் விட்டு, அங்கு கொஞ்ச‌ நேர‌ம் மைதான‌த்தை நோட்ட‌ம் விட்டோம். அப்பப்பா என்ன‌ ஒரு கூட்ட‌ம். எல்லா டீமும் தயார‌கிக் கொண்டிருக்கின்ற‌ன‌ர் ஊர்வ‌ல‌த்திற்கு. அதைப் பார்த்து என் ம‌க‌ளுக்கு ஒரே வ‌ருத்த‌ம். நானும் அண்ணா கூட‌ப் போறேன் என‌ப் பிடிவாத‌ம் :((

இவர்களைப் பொறுத்தவரை இது ஒரு பண்டிகை நாள். ஆங்காங்கே பிரிந்து வாழும் குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து, ஆடிப் பாடி மகிழும் பண்டிகை. குழந்தைகளின் மனதில் ஒரு எதிர்பார்ப்பு, என்ன பரிசு நம்ம வீட்டில் நமக்குக் காத்திருக்கிறது என. சாண்ட்டா எங்கே அதை ஒளிச்சு வ‌ச்சிருப்பாரு என‌. இங்கே வ‌ள‌ர்வ‌தால் என்ன‌வோ ந‌ம் குழ‌ந்தைக‌ளுக்கு ம‌ன‌தில் ஒரு ஏமாற்றம், கேள்விக‌ள். "ஏன் நாம‌ கிறிஸ்தும‌ஸ் கொண்டாடுவ‌து இல்லை, எதாச்சும் கிஃப்ட் வாங்கி குடுப்பீங்க‌ளா ?, என் ஃப்ரென்ட்ஸ் எல்லாம் அங்க போறாங்க, இங்க போறாங்க (தாத்தா பாட்டி வீடுகள்). நாம் ஏன் எங்கேயும் போவதில்லை" என்றெல்லாம்.

ஊர்வலம் முடிவில் "ஓல்ட் ஹை" பள்ளியில் வந்து பையனை பிக்கப் செய்து கொண்டோம்.

மெர்ரி கிறிஸ்மஸ் என்று பலரும் பலருக்கும் சொல்லிய வண்ணம், ஊர்வ‌ல‌ம் முழுதும், ஏராளமான கிறிஸ்தும‌ஸ் பாட‌ல்க‌ள். எல்லோரும் பாடுகிறார்க‌ள்.

இங்கே, மனதில் சில கேள்விக் கணைகள் !!! ந‌ம் ஊரில் இல்லாத பண்டிகைகளா ? அதற்கு விடாத விடுமுறைகளா ? தீபாவ‌ளிக்கோ, பொங்க‌லுக்கோ சிற‌ப்புப் பாட‌ல்க‌ள் ஏதாவ‌து இருக்கிற‌தா ? இருந்தால் அநேகருக்குத் தெரியாமல் போனது ஏன் ? இங்கே "ஜிங்கில் பெல்ஸ் ..." என்று ஆர‌ம்பித்தால் பிஞ்சுக்க‌ள் முத‌ல் பெரியவ‌ர் வ‌ரை த‌லையாட்டிப் பாட‌ முடிவ‌து எப்ப‌டி ?

என‌க்குத் தெரிந்து "நான் சிரித்தால் தீபாவ‌ளி" என்று நாய‌க‌ன் ப‌ட‌த்தில் வரும் பாட‌ல் தான் நினைவுக்கு வ‌ருகிற‌து !!!

சிவாவும் பள்ளிக் குழுவினரும், பாடல் ஒத்திகை பார்க்கும் காட்சி:

Friday, December 5, 2008

சிலந்திக்கும் இருக்கு வாலு (குழந்தைகள் கவிதை)


Photo: medicalimages.allrefer.com

குட்டிச் சிலந்திக்கு
எட்டுக் காலு.

கொழு கொழு சிலந்திக்கும்
எட்டுக் காலு.

சிலந்திக்கும் இருக்குது
நீள வாலு.

வலை பின்ன உதவும்
நூல் வாலு.

தத்தியும் தாவியும்
நடக்கும் பாரு.

பிறர் தொட்டால் பயந்து
ஏறிடும் சுவரு.

Thursday, November 27, 2008

அடிச்சா.....ச்சு நூறு !



மில்லி இல்லீங்கோ :))

சின்னச் சின்னத் துளிகள்
எல்லாம் சேர்த்து வைத்தேனே
நாள் செல்லச் செல்ல‌
பதிவுகளாய்ப் பதிந்தும் வந்தேனே
எண்ணிக்கையில் ... நூறைத் தொட‌ ...
எகிறி குதித்தேன் வானம் இடிந்தது !!!

ஆயிரக்கணக்கில் பதிவுகள் போட்டு, அமைதியா பதிவர்கள் இருக்கும்போது, இது கொஞ்சம் ஓவரா இருக்குல்ல. என்ன செய்றது. ரத்னபாலா, பாலமித்ராக்களுக்கு, மாஞ்சு மாஞ்சு, சோறு தண்ணியில்லாம வரைஞ்சு அனுப்பி. அப்புறம் தேவுடு காத்து, ஒன்னுமே வரமா நொந்து நூலானது மனது. பிற்பாடு குமுதம், விகடனுக்கும் படைப்புக்கள் அனுப்பி, காத்திருந்தது தான் மிச்சம். இந்த கால கட்டத்தில் இப்படி நெனச்சவுடன் பதிந்து, நண்பர்கள் வந்து வாசித்து திட்டியோ, பாராட்டியோ ... எல்லாம் சில நொடிகளில் எனும்போது சந்தோசம் பெறுகத் தான் செய்கிறது.

துளித் துளியாய் ஆரம்பித்து, முதலில் கொஞ்சம் பதிவுகள் போட்ட பிறகு, சிறு இடைவெளி. எல்லோரும் நினைப்பது போலவே, 'நமக்கும் சரக்கு தீர்ந்து போச்சா' என்ற எண்ணம் அடிக்கடி வந்து தொல்லை தந்தது. 'வாழ நினைத்தால் வாழலாம்' என்ற கவியரசரின் பாடல் வரிகள் தரும் ஊக்கம், 'பதிய நினைத்தால் பதியலாம்' என்று மாற்றி யோசிக்க வைத்தது. என்ன, நேரம் ஒத்துழைக்கணும் !!

நமக்கு இந்த அரசியல், ஆன்மிகம் ரெண்டுமே ரொம்ம்ம்ம்ம்ப தூரம். முக்கியமா சென்ஸிடிவ் சண்டைகள் இந்த இரண்டிலுமே அதிகம். மதம், ஜாதி எல்லாம் வேறு சேர்ந்து ஆட்டி படைக்கும் களங்கள். அப்படியே ஒரு பை, ரெண்டுக்கும் சேர்த்து தான் :)) பிற‌கு எதைத் தான் எழுத‌லாம் என்று யோசிக்கையில், சாதார‌ண‌ ம‌னித(ர்களின்) அன்றாட வாழ்வைப் ப‌ற்றி எழுத‌லாமே என‌ ... இன்றுவ‌ரை தொட‌ர்வதாய் நினைத்துக் கொண்டிருக்கிறேன் :))

கொஞ்சம் கதை, நிறைய கவிதைகள் என எழுதி வந்த போது, ஒரு பெரீய்ய்ய்ய எழுத்தாளருக்கு என் படைப்புக்களை வாசிக்குமாறு மடல் அனுப்பினேன். எங்கே வாசிக்கப் போறார் எனப் பார்த்தால், ஓரிரு நாட்கள் கழித்து அவரிடம் இருந்து பதில் மடல்.

சாட்டையில் அடித்த‌து போல‌ இருந்த‌து, எனது க‌விதைக‌ளைப் ப‌ற்றி அவ‌ர் எழுதியிருந்த‌து. ப‌ள்ளிச் சிறுவ‌ர்க‌ள் தேவ‌லை என்று சொல்லாம‌ல் சொல்லிவிட்டார் :(( ஒரு புறம் வருத்தம். அதே அவ‌ர், க‌தைக‌ளை சிலாகித்துப் புக‌ழ்ந்திருந்தார். குறிப்பிட்ட‌ க‌தைக‌ள், சொல்லிய‌ வித‌ம், பாத்திரங்கள், காட்சி விவ‌ரிப்பு என‌ நுணுக்க‌மாய் அவ‌ர் எழுதிய‌து க‌ண்டு ம‌றுபுற‌ம் ம‌கிழ்ச்சி.

நல்லா இருக்கோ, இல்லையோ ... என்ன‌ தான் எழுதினாலும், ஒருவ‌ர் வ‌ந்து, லேசா பாராட்டினா போதும், உச்சி முத‌ல் உள்ள‌ங்கால் வ‌ரை குளிர்ந்து போகும். இந்த‌ ம‌னித‌ இய‌ல்புக்கு யாவரும் உட்பட்டவர்கள் தான் இல்லையா ?!

திரும‌ண‌மாகி ப‌த்தாண்டுக‌ள், இருப‌து, முப்ப‌து ... எத்த‌னை ஆண்டுக‌ள் ஆனாலும், சாப்பிடும்போது க‌ண‌வ‌ர் ம‌னைவியிட‌ம் "இன்னிக்கு சாம்பார் அற்புத‌ம்" என்று ஓரிரு வார்த்தைக‌ள் சொன்னால் போதும். ச‌ந்தோஷ‌ப்ப‌டாத‌ ம‌னைவிமார்க‌ள் உண்டா ?!!! வைஸ் வெர்ஸா, கணவன்மார்கள் தான் உண்டா ?!!! :))

ஆங் ம‌ற‌க்க‌ற‌துக்கு முன்னால் ... என்னுடைய‌ தொல்லைக‌ளைப் பொறுத்துக் கொண்டு, வீட்டு வேலையைப் பார்த்து, குழ‌ந்தைக‌ளை க‌வ‌னித்து, ப‌திவுகளையும் ப‌டித்து க‌ருத்துக்க‌ள் கூறும் என‌து ம‌றுபாதி த‌ங்க‌ஸுக்கு முத‌ல் ந‌ன்றி.

எழுத்தாளர் கதை சொன்னேனே, அங்கு விழுந்த‌து க‌விதைக்கு ஆப்பு, இல்லை இல்லை கேப்பு. "ந‌ல்லா இருக்கு, இல்லை எனப் பிறர் சொல்வ‌தெல்லாம் அப்ப‌டியே எடுத்துக் கொள்ளாதீர்க‌ள். எல்லாம் அவரவர் ரிலேடிவ் க‌ருத்துக்க‌ள். தொட‌ர்ந்து எழுதுங்கள்" என்று சொன்ன‌வ‌ர்க‌ள் இருவ‌ர். சீனா ஐயா, ராம‌ல‌ஷ்மி மேட‌ம்.

அறிமுகமான பதிவிலிருந்து இன்று வ‌ரை தொட‌ர்ந்து அனைத்து ப‌திவிற்கும் வ‌ந்து, பிழைக‌ள் திருத்தி, பாராட்டி, 'அடுத்து என்ன எழுதப் போறீங்க' என்று ந‌ம‌க்கும் ஆவ‌லைத் தூண்டும் சகோதரி ராமலஷ்மி அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் பல..

வ‌லைச்ச‌ர‌த்தின் ஆசிய‌ராக‌ இருந்த‌ போது ஆரம்பித்த சேட்டிங்க் இன்றும் தொடர்கிறது. எனது எழுத்துக்களுக்கு கிடைத்த முத‌ல் வெற்றி அது. (அப்ப ரெண்டாவது, மூனாவது ... என்றெல்லாம் டீடெய்ல் கேக்கப்படாது :))))) இன்றும் பதிவுகளுக்கு வந்து முழுமையாய் வாசித்து மறுமொழியிடும் சீனா ஐயா, செல்வி அம்மா அவ‌ர்க‌ளுக்கும் இந்த‌ நேர‌த்தில் ந‌ன்றி சொல்லிக்க‌றேன்.

முன்னெல்லாம் ஆஸ்தான‌ ஸ்பெல் செக்க‌ராய் இருந்த‌வ‌ர் ந‌ண்ப‌ர் நாகு. நிறைய பேரு இவரை, ஸ்பெல் செக் ப‌ண்ணி குடுங்க‌ என்று தொல்லை ப‌ண்ண‌, ந‌ம்ம‌ ப‌திவுக‌ளுக்கு அப்ப‌ப்ப வ‌ருவ‌தோடு நிறுத்திக் கொண்டார் :))) அவங்கள்லாம் ரிச்மண்டில் இருப்பதாய் கேள்வி !!! நாகுவின் ம‌னைவி ல‌தா. மின்ன‌ஞ்ச‌ல் ஆக‌ட்டும், தொலைபேசி ஆக‌ட்டும் ... புக‌ழ்ந்து த‌ள்ளிவிடுவார். இவர்கள் இருவ‌ருக்கும் ந‌ன்றிக‌ள் ப‌ல‌.

கதைகளுக்கு என்று ஸ்பெஷலாக கமெண்ட் போட, இவருக்காகவே அடுத்தடுத்த பாகங்கள் விறுவிறு என தட்டச்சிட்டுப் பதிந்ததும் உண்டு. இப்ப கொஞ்சம் நாட்களாகக் காணோம். தங்கச்சி ரம்யா படிப்பில் பிஸியாக இருக்கிறார் போல.

அப்ப‌ப்ப‌ ந‌ம்ம‌ இன்விடேஷ‌ன் ஏற்று அல்லது தமிழ்மணத்தில் பார்த்து வ‌ரும் அன்பு உள்ளங்க‌ள் வ‌ல்லிம்மா, துள‌சி டீச்ச‌ர், நானானிம்மா, க‌விநயா, ஜெய், முரளி, பித்தன், அப்புற‌ம் முக்கிய‌மா நீங்க‌ ... உங்க‌ எல்லோருக்கும் கோடி கோடி ந‌ன்றிக‌ள்.

ந‌ம்மை எல்லாம் இணைக்கும் ஒரு குழுவிற்கு ந‌ன்றி சொல்ல‌வில்லை என்றால் எப்ப‌டி, அத‌னால‌ ...

வ‌ர‌ம் த‌ந்த‌ சாமிக்கு
ப‌த‌மான‌ லாலி
க‌ள‌ம் த‌ந்த‌ த‌மிழ்ம‌ண‌த்திற்கு ...
கனிவான நன்றி !!!

டிஸ்கி : இன்னிக்கு "தேங்க்ஸ்கிவிங் டே" வாம்ல‌. அதான் எல்லாருக்கும் நன்றி சொல்வோம் என்று இந்த‌ சிற‌ப்புப் ப‌திவு.

Sunday, November 23, 2008

அடுக்குமாடிக் குடியிருப்பும், அடுத்தடுத்த கட்டிடங்களும்


Photo: indiaeducation.ernet.in

நீண்டு அக‌ன்ற‌ அந்த‌ அடுக்குமாடிக் குடியிருப்பு ப‌ருத்த‌ ஆல‌ம‌ர‌ம் போல‌ ப‌ர‌ந்து விரிந்து காட்சிய‌ளித்த‌து. ப‌ல்வ‌கைப் ப‌ற‌வைக‌ள் அதில் வாச‌ம் செய்த‌ன‌. ம‌ன்னிக்க‌ணும், ப‌ல்வ‌கை ம‌னித‌ர்க‌ள் அதில் வ‌சித்து வ‌ந்தார்க‌ள்.

முறையே ப‌ணி செய்து, போதுமென‌ ஓய்வு பெற்று, அறுப‌தைக் க‌ட‌ந்த‌ ஜெகந்நாதனும், ராம‌சாமியும் அங்கு வ‌ந்த‌திலிருந்து ந‌ண்ப‌ர்க‌ளும் ஆனார்க‌ள்.'ப்லாக் ஈ'இல் நாலாவ‌து மாடியில் ராம‌சாமியின் வீடு. சில ப்லாக் தள்ளி 'ஐ'இல் கீழ் தளத்தில் ஜெக‌ன் வீடு. தின‌ம் மாலை ஒருவ‌ர் வீடு மாறி ஒருவ‌ர் வ‌ந்து, சில‌ ம‌ணி நேர‌ங்க‌ள் அர‌ட்டை அடித்து விட்டு செல்வ‌து வ‌ழ‌க்க‌ம்.

"வாங்க‌ ஜெக‌ன். என்ன‌ இன்னிக்கு கொஞ்ச‌ம் லேட்டு" என்று ந‌ண்ப‌ரை வ‌ர‌வேற்றார் ராம‌சாமி.

"என்ன தான் தினம் வந்தாலும், சில முறை தவறுதலாய்ப் போயிடுது. இப்ப கூட பாருங்க, ப்லாக் எஃப் போய் கதவ தட்ட, ஒரு பாயம்மா கதவத் தெறக்கறாங்க ! நீங்க அப்படி எல்லாம் இல்லையேனு யோசிச்சா, அப்ப தான் புரியுது ப்லாக் மாத்தி வ‌ந்திருக்கேன் என்று" என்று சொல்லி இடி இடி எனச் சிரித்தார் ஜெக‌ன்.

"குசும்பு புடிச்ச‌ கிழ‌வ‌ரையா நீர். பாய‌ம்மாவ‌ பாக்கறதுக்காகவே போயிட்டு, என் மேல‌ ப‌ழிய‌ போட‌றீர்" என்று சின‌ம் கொள்வ‌து போல‌ ந‌டித்தார் ராம‌சாமி.

"நான் பாய‌ம்மாவ‌ பாக்க‌ப் போன‌து இருக்க‌ட்டும். இந்த‌க் க‌தையையும் கேளும். என் நண்ப‌னின் ம‌க‌ன் ஒருவ‌ன் பாலாஜி என்ஜினிய‌ரிங் க‌ல்லூரியில் பேராசிரிய‌ரா சேர்ந்திருக்கான். ஆர‌ம்ப‌ நாட்க‌ளில் சில‌ வார‌ங்க‌ள் க‌வ‌னித்திருக்கிறான், மாண‌வ‌ர்க‌ளில் சில‌ர் காணாம‌ல் போவ‌தும், புதுமுக‌ங்க‌ள் வ‌ருவ‌தையும்."

"நீர் என்ன‌ சொல்ல‌ப் போறீர் என்று புரிந்து விட்ட‌து. என்ன‌ வ‌குப்பு மாறி வ‌ந்து போனார்க‌ள் ... ச‌ரியா ... க‌ண்டுபிடிச்சிட்டேன் பாரும்" என்று பெருமித‌ம் கொண்டார் ராம‌சாமி.

"வ‌ய‌சுக்கேத்த‌ பொறுமை எப்ப‌ தான் வ‌ர‌ப்போகுதோ உம‌க்கு. இப்ப‌டி குறுக்கே பேச‌க்கூடாது, அப்புற‌ம் சுவார‌ஸ்ய‌ம் கொறஞ்சு போயிடும், பொறுமையா கேளும்" என்று தொட‌ர்ந்தார் ஜெக‌ன்.

ஒரு நாள், புதுசா வ‌ந்த‌ சில‌ முக‌ங்க‌ளை, 'எங்கே இவ்வ‌ள‌வு நாட்க‌ள் காண‌லை, இப்ப‌ தான் உங்க‌ளைப் பார்க்கிறேன்' என்று கேட்டிருக்கிறான். ஒருவ‌ன், 'நான் இந்த ப‌க்க‌த்தில் இருக்கும் வெங்க‌டேஸ்வ‌ரா என்ஜினிய‌ரிங் க‌ல்லூரிய‌ ந‌ம்ம‌ க‌ல்லூரினு நென‌ச்சுப் போயிட்டேன்' என்றானாம். ம‌ற்ற‌வ‌ளோ, நான் அந்த‌ப் ப‌க்க‌ம் இருக்கும் மேரிமாதா என்ஜினிய‌ரிங் க‌ல்லூரிக்குப் போயிட்டேன் என்றிருக்கிறாள்.

இவ‌னுக்கோ ஆச்ச‌ரிய‌ம் தாங்க‌லை. 'அப்ப‌ காணாமப் போன‌வ‌ங்க‌ ??!!' என்று வியந்து கேட்க, 'அவ‌ங்க‌ எல்லோருமே, இதே போல‌ அதே தெருவில் வருசையாய் இருக்கும், ராஜு என்ஜினிய‌ரிங் கல்லூரி, விக்ர‌ம் என்ஜினிய‌ரிங் க‌ல்லூரி, ஜ‌லால் என்ஜினிய‌ரிங் க‌ல்லூரி என்று ஏதாவ‌து ஒன்றைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளாய் இருப்பார்க‌ள்' என்றிருக்கின்ற‌ன‌ர் கோர‌ஸாய்.
உடனே, தான் சரியான கல்லூரியில் தான் இருக்கிறோமா என ஒருமுறை வெளியே வந்து தகர போர்டைப் பார்த்து உறுதி செய்திருக்கிறான்." என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லி, இடி முழக்கச் சிரிப்பைத் தொடர்ந்தார் ஜெகன்.




ஏப்ரல் 08, 2009 யூத்ஃபுல் விகடனில்

Friday, November 21, 2008

துளித் துளியாய்: 2 - காதல்


Photo: cringel.com

அமிழ்தாய் பொழியும்
அன்புத் துளிக‌ள்
அர‌ணாய்க் காக்கும்
அன்புக் க‌ர‌ங்க‌ள்
சாய‌த் துடிக்கும்
அக‌ன்ற‌ தோள்க‌ள்
ம‌ண்ணில் விழும்
ம‌ழைத் துளியைப் போலே
உன்னில் எனையே
ஒளித்துக் கொள்வாயா ?!!

***

மகிழ்ச்சி தரும்
மழையின் சுவாசம்
உருக்கும் குளிராய்
உந்த‌ன் நேசம்
பால் நில‌வின்
குளிர்ந்த‌ இர‌வில்
க‌ம்ப‌ளி உன‌க்காய்
காத்திடும் என்மனம்

***

தூவானத் தீண்ட‌லில்
திடுக்கிட்டேன்
பெரு ம‌ழையாய்ப்
பேரிறைச்ச‌லோடு
சுழ‌லும் சூறாவ‌ளியாய்
சுழ‌ன்றாடும் என்னை
அமைதியாய் ஆட்கொண்டு
அன்பினால் க‌ட்டிய‌ணைத்தாய்
தூவான‌த் தீண்ட‌லில்
திடுக்கிட்டேன்.

***

விண் அதிர‌
மின்ன‌ல் விளக்கெரிய
காற்றில் மிதந்து
மண் ந‌னைத்தாய்
குமுறி அழுவ‌தாய்
கொள்ள‌வில்லை என் ம‌ன‌ம்
கூடும் வெற்றித‌னில்
ஆன‌ந்த‌க் க‌ண்ணீர் தானோ !?

***

Wednesday, November 19, 2008

பச்சை குத்திப் பேரெழுதி



பச்சை குத்திப் பேரெழுதி
இச்சை கொள்ளும் மாந்த‌ருண்டு

இடக்கையோ வலக்கையோ
இழுத்து நீண்ட பெயருமுண்டு.

புருஷ‌ன் பேர் சொல்லாத‌
பொக்கை வாய் பாட்டி

பிற‌ர் கேட்க‌ கைநீட்டி
நாய‌க‌ன் பேர் காட்டிடுவாள்.

நாகரீக வளர்ச்சியிலே
நாட்டுப்புற பச்சை எல்லாம்

நங்கையரின் மேனி எங்கும்
நழுவிக் கிடக்குதிங்கே.

தேளென்ன பாம்பென்ன‌
தேடும் இடுப்பினிலும்

முள் வேலி போட்ட‌
முழ‌ங்கால் க‌ணுக்கால்க‌ள்.

ப‌ச்சை ம‌ட்டுமில்லை
ப‌ல‌ வ‌ண்ணமும் க‌ல‌ந்து

பாரே பார்க்க‌ வைக்கும்
வ‌டிவ‌ங்க‌ள் ப‌ல‌வுண்டு.

ந‌ங்கைய‌ருக்குப் போட்டியாய்
நாய‌க‌ரும் ச‌ளைத்தாரில்லை

நாக்கினிலும் கூட‌
நான்கைந்து படங்கள் கொண்டு !!!

Tuesday, November 18, 2008

துளித் துளியாய்: 1 - ம‌ழை


Photo: icons-pe.wunderground.com


தள்ளித் தள்ளி விழும்
புள்ளிப் புள்ளித் துளியே
வ‌றண்ட‌ பூமி நனைப்பாய்
விழும் சில‌ நொடியே.

இலையில் த‌ங்கி
கிளையில் ப‌துங்கி
ம‌லையில் விழுந்து
ம‌ழையாய்ப் பொழிவாய்.

தெருக்க‌ள் ஓடி
குள‌ங்க‌ள் நிறைத்து
ஏரி ஆறுக‌ளில்
ஏறி விளையாடி
ந‌திக‌ள் ஓடி
க‌டலாய்க் கரைவாய்.

***

துள்ளி விழும்
துளியின் ந‌ட‌ன‌ம்

சிலிர்க்க‌ வைக்கும்
வாடைக் காற்று

காற்றில் ப‌ர‌வும்
ம‌ண்(ணின்) வாச‌ம்

மனதை மயக்கும்
மழைத் துளிகள்.

***

சிற் சில துளிகள்
சேர்ந்து விழ‌
ஆற்றில் வெள்ள
நீர் ஓட்டம்.

போற்றும் அன்பைப்
பொழிந்திட‌வே
மாற்றம் இல்லை
மகிழ்ச்சி தளைத்தோங்கும்.

***

Friday, November 14, 2008

கிராமத்தில் மழையும், மின்வெட்டும்.


Photo: SpraguePhoto.com

சட சட என்று ஆரம்பித்த பெரும் தூறல், சில நொடிகளில் மண் தரையை நீர்த் தரையாய் மாற்றியது. நீரின் ப‌ள‌ப‌ள‌ப்பில் நில‌ம் மின்னிய‌து.

"ஏலேய், சின்னச்சாமி ... தூத்த பெரிசா ஆரம்பிச்சிருச்சு, ஆட்டப் புடிச்சி கட்டுடா" என்று குர‌ல் விடுத்து, அங்குமிங்கும் திரிந்த கோழிகளை, ஒன்று திரட்டி கூடையிட்டு மூடினாள் கருப்பாயி.

கொல்லையில், நான்கு கல்தூண்களின் மேலே, வைக்கப் படப்பின் கீழ், ஆடுகளைக் கட்டினான் சின்னச்சாமி. ஆடுகள் சிலுப்பிக் கொண்டன.

"இந்தா, கோழி கூடைய‌ அப்ப‌டியே ந‌க‌ர்த்தி, வைக்க‌ப் ப‌ட‌ப்பு கீழ‌ வையி"

"எலேய் ... எலேய் .. அங்க‌ பாரு, அந்த‌ சீம‌க் கன்னுக்குட்டி வெளிய‌ திரியுது. புடிச்சு கொட்டாயில‌ அடை."

"ஏ ஆத்தா, உன‌க்கு கையி காலு ந‌ல்லாத் தானே இருக்கு. எல்லாம் நீ பாக்கலாம்ல‌. ஏன் என்னை போட்டு ப‌டுத்த‌றே. நாளைக்கு வேற‌ என‌க்கு பரிச்ச‌ இருக்கு" என்று ம‌ழையை விட‌ ச‌ட‌ச‌ட‌வென‌ விழுந்தான் பாட்டியிட‌ம்.

"பொல்லாத படிப்பு படிச்சு, நாட்டக் காக்கப் போறாரு தொர. மொதல்ல வீட்டப் பாருடா ... அப்புறம் நாட்டப் பார்க்கலாம்" என்று திட்டுவ‌து போல‌ பாவ‌னை செய்தாள் கிழ‌வி.

"ப‌டிப்பு ப‌டிச்சு தான் நாட்ட‌க் காக்க‌ முடியமா என்ன‌ ?!! காம‌ராஜ‌ர் கால‌த்தில‌ இருந்து, இன்னிக்கு வ‌ரைக்கும் யாரு ப‌டிச்சுப்புட்டு நாட்ட‌க் காக்குறாக‌, ஏதோ அன்னிக்காவ‌து ம‌னுச‌த்த‌ன்மை கொஞ்ச‌ம் இருந்துச்சு, இன்னிக்கு அதுவுமில்ல சுத்த‌மா இல்ல‌. இதெல்லாம் நீ சொல்லித் தான எனக்கே தெரியும். நீ என்ன‌டானா ..."

"ச‌ரி, ச‌ரி நின்னு பேசிக்கிட்டு இருக்காம‌, கன்னுக்குட்டிய‌ப் பாரு" என்று பேர‌னை விர‌ட்டினாள்.

அங்கிருந்து கன்று பல அடிகள் தள்ளி இருக்க, வைக்கோல் பிரித்து சிலவற்றை அள்ளி, தலைக்கு மேல் வைத்துக் கொண்டு, ஓட்ட‌மாய், ஹேய் ஹேய், உள்ளே போ, போ என்று க‌த்தி ஓ(ட்)டினான்.

மழையை ரசித்த கன்று, கொட்டாயினுள் செல்ல மறுத்து, கேள்விக் குறி போல வாலை வைத்துக் கொண்டு, அங்கும் இங்கும் துள்ளிக் குதித்து ஓடியது.

'இப்படியே போனால் இன்னும் சில நேரத்தில் இருட்டி விடும், எப்படி பரிட்சைக்குப் படிப்பது' என்று மனம் கேள்வியில் நனைய, உடல் மழையில் மொத்தமாய் நனைந்து போனது.

'இந்த‌க் கிழ‌வியோட‌ பெரிய‌ ரோத‌னையாப் போச்சு, ஒரு நா தானே, வெளிச்சத்தில‌ ப‌டிக்க‌ விடுதா. ராத்திரில‌ விள‌க்கு வைக்க‌ ம‌ண்ணெண்ணை கூட‌ இல்லை, ரேஷ‌ன்ல‌யே ஒழுங்கா த‌ர‌மாட்டேன்கிறான், கேட்டா எங்க‌ளுக்கே ஒழுங்கா வ‌ர்ற‌தில்லைங்க‌றான். பாஸ் மார்க்காவது வாங்கணுமே !' என‌ச் சிந்த‌னையில் ந‌னைந்தான் சின்ன‌ச்சாமி.

வீட்டின் முன், வேலியோடு இருந்த பின்ன‌ல் க‌த‌வை திற‌ந்து உள்ளே நுழைந்தார் ம‌ருத‌ப்ப‌ன். அவ‌ர் வ‌ய‌தோடு ஒத்த‌ சைக்கிளை, கூரையின் கீழ் நிறுத்தி, 'எலேய் சின்ன‌ச்சாமி, இந்தா பரிச்சைக்கு படிக்கணும்னியே " என்று தான் வேலை செய்யும் மில்லில் இருந்து, சில லிட்டர் க‌ட‌னாய் வாங்கிய‌ ம‌ண்ணெண்ணை த‌க‌ர‌த்தை ம‌க‌னிட‌ம் நீட்டினார்.

த‌லையில் இருந்த‌ கோணியை எடுத்து வேலியில் மாட்டினார். 'ஆத்தா, சோற‌ப் போடு ப‌சிக்குது' என்று வானொலியைத் த‌ட்டினார். 'செய்திக‌ள் வாசிப்ப‌து ...' என்று கர கரவென ஆர‌ம்பித்த‌து வானொலி.

என்றும் போல் வெளியில் இல்லாம‌ல், இன்று ம‌ண்ணெண்ணை விள‌க்கொளியில் வீட்டினுள் உண‌வை முடித்தார். ப‌டிக்கும் ம‌க‌னை சில‌ நொடிக‌ள் பார்த்து ம‌கிழ்ந்தார். ம‌க‌னின் முக‌ம் பிர‌காச‌மாய்த் தெரிந்த‌து அவ‌ருக்கு.

வானொலிச் செய்தியின் இடையே, "தமிழகத்தில் தொடரும் கன மழையால், மேலும் மின்வெட்டு தொடரும் என அரசு தெரிவித்துள்ளது" என்ற‌ செய்தி இவ‌ர்களை(போன்றவர்களை) சிறிதும் பாதிக்க‌வில்லை.

ஏப்ரல் 16, 2009 யூத்ஃபுல் விகடனில்

Wednesday, October 29, 2008

நிறம் மாறும் இலைகள்


Photo: freefoto.com

வெற்றிலைப் பச்சை
நிறத்து இலைகள்

குளிர்வர உதிருமுன்
நிறமாறும் இலைகள்

நெல்லிக் கனிநிறம்
துவங்கும் இலைகள்

பரங்கிப் பூவாய்
பழுக்கும் இலைகள்

செம்மண் போலச்
சிவக்கும் இலைகள்

கத்தரி நிறத்தில்
கறுக்கும் இலைகள்.

மறையும் பச்சையில்
பழுப்பு வண்ணம்

கரையும் சிவப்பில்
காவி வண்ணம்

அனைத்து நிற‌மும்
கலந்த‌ வ‌ண்ண‌ம்

ப‌ட‌ர்ந்து ப‌ரவி
எங்கும் வ‌ண்ண‌ம்

காணும் கண்கள்
களிப்புறும் வண்ணம்

இயற்கை தூரிகை
தீட்டும் வண்ணம் !

Sunday, October 26, 2008

சுடரின் நடனம் - தீபாவளி வாழ்த்துக்கள்


Photo: lpstnvs.com

சுடரின் நடனம்
தொடரும் தீபங்களில்,

காணும் போதே
களிப்புறும் உள்ளம்.

வானின் இருளில்
வண்ணங்கள் தூவி,

மிளிரும் ஒளியில்
சிதறும் பூக்கள்.

பட்டுத் துணியும்
பரிசுப் பொருளும்,

கிடைத்திட‌ இன்புறும்
சின்னஞ் சிறார்கள்.

என்றும் இனிமையாய்
இவ‌ர்க‌ளைப் போலே,

இருந்திட வாழ்த்துக்கள்
இத்தீபாவளி நன்நாளில் !

அனைவருக்கும்
இன்பத் தீபாவளி வாழ்த்துக்கள் !!

Friday, October 24, 2008

உட்ப‌கை உற்ற‌ குடி (குறள் கதை)

குறளில் கதையெழுத, செல்விஷங்கர் அம்மா பொதுவாக அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்கள். நாமும் முயற்சித்துப் பார்க்கலாம் என்றெண்ணி தோன்றிய கதை. கதை பிடித்திருந்தால் ஒரு வரி பின்னூட்டுங்கள் :)

-----

அலுவல‌கத்தின் டென்னிஸ் மைதானம். முதல் செட் ஆடி முடித்து, சிறிது ஓய்வெடுத்தனர் ஜேம்ஸும், ராகினியும்.

"ஜேம்ஸ், நீங்க தப்பா எடுத்துக்கலேன்னா ..." என்று இழுத்தாள் ராகினி.

அந்தப் பண்ணாட்டு நிறுவனத்தின் சென்னை கிளைக்கு ஜேம்ஸ் வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அந்நிறுவனத்தின் மென்பொருள் உற்பத்தி முழுக்க முழுக்க சென்னை என்று ஆகிப் போனது. அதன் முக்கிய பொறுப்பில், அடுத்த இரண்டாண்டுகளுக்கு ஜேம்ஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஜேம்ஸின் "ம்ம் ..." என்ற தலையாடலுக்கு, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு தொடர்ந்தாள் ராகினி.

"என‌க்கு வேற‌ ப்ராஜ‌க்ட் மாத்திக் கொடுக்க‌றீங்க‌ளா ப்ளீஸ் ..."

"ப்ராஜக்ட்ல என்ன‌ ப்ர‌ச்ச‌னை உன‌க்கு ?"

"ப்ராஜ‌க்ட்ல‌ ப்ர‌ச்ச‌னை இல்ல‌, அதில் கூட‌ வேலை செய்ய‌ற‌ நகுலன் தான் ப்ர‌ச்ச‌னை. அவன் சுத்த பொறுக்கி. ஏற்கனவே அவன் கூட வேலை செய்த போத அவன் டார்ச்சர் தாங்கலை. என‌க்கு அவன் செய்கைக‌ள் சுத்த‌மா பிடிக்க‌லை. எவ்வளவு நல்லா பண்ணினாலும், ஏதாவது குறை கண்டுபிடிச்சு கொண்ணுடுவான். இந்த‌ முக்கிய‌மான‌ ப்ராஜ‌க்ட், அவனோட‌ சேர்ந்து என‌க்கு செய்ய‌ இஷ்ட‌மில்லை. தின‌ம் தின‌ம் அவன் கூட‌வா சேர்ந்து செய்ய‌ப் போறோம்னு நினைச்சாலே ந‌டுக்குது."

"சரி, இதுபற்றி நாளைக்கு பேசலாம்" என்றார்.

"டேய் மச்சான், அங்க பாரு ராகினிய ... செம திக் ஆகிட்டு வர்றாடா அந்த ஜி.யு.போப் கூட ..." என்ற பாபுவின் வாசகங்கள், நகுலனை மூச்சடைக்க வைத்தது.

அன்றிரவு, ரெசிடென்ஸி முதல் மாடியில், குளு குளு பாரில் நகுலன் மற்றும் நண்பர்கள் சூழ ஜேம்ஸும் அவர்களோடு. முதல் சுற்று ஊற்றி முடித்த பின்னர், ஆரம்பித்தான் நகுலன், "ஜேம்ஸ், மன்னிக்கணும். எனக்கு இந்த ப்ராஜக்ட்ல ராகினியோட சேர்ந்து வேலை செய்யப் பிடிக்கலை. அவ சுத்த அமுங்குளி. அமைதியா எல்லா காரியத்தையும் சாதிச்சுடுவா. ஏதாவது தப்பு சொல்லிட்டா அவளால தாங்கிக்க முடியாது. இன்னும் அழ மட்டும் தான் செய்யலை. அவ டார்ச்சர் தாங்கலை. எனக்கு வேற ப்ராஜக்ட் மாத்திக் கொடுத்திடுங்க" என்று நீட்டி முழக்கினான்.

"சரி, இதுபற்றி நாளைக்கு பேசலாம்" என்றார்.

மறுநாள், ஜேம்ஸ் குறிப்பிட்ட‌ நேரத்தில் ராகினியும், நகுலனும் அவர் அறைக்கு வந்தனர். இருவரிடமும் "திருக்குறள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா ?" என்று பொதுவாய்க் கேட்டார்.

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, 'இவருக்கு தெரிஞ்சதால, நமக்குத் தெரியாது என்று நினைக்கிறாரா ?' என்று முகம் சுறுக்கினர்.

"ஏன் கேட்கறீர்கள் ?! நல்லாவே தெரியும். சிறுவயதில் பள்ளியில் ஆரம்பித்து, இன்றும் அரசுப் பேருந்துகளில் கூட படிக்கிறோமே" என்றனர் இருவரும் ஒருமித்த குரலில்.

"இதைத் தான் எதிர்பார்த்தேன், அப்ப இனி இது தேவையில்லை" என்று தயாராய் வைத்திருந்த "திருக்குறள் புத்தகத்தை" அவர்கள் கண் முன்னே எரித்து விட்டார்.

ஒரு கணம் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. இனி நீங்கள் செல்லலாம் என்று அவர்களிருவரையும் அனுப்பி வைத்தார்.

எப்படி இவர் இப்படி செய்யலாம். ஒரு புனித நூலை, இரண்டாயிரம் வருடத்து பாரம்பரியத்தை, அநேக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதை. அதுவும் எங்கிருந்தோ வந்து நம்ம ஊரிலேயே, நமது புனிதத்தை எரிக்கலாம். கொதித்தெழுந்தனர் ராகினியின் சுற்றமும், நகுலனின் சுற்றமும். இதை சும்மா விடக்கூடாது. மேலிடத்துக்கு எடுத்து செல்லணும்.

"மேலிடம் என்ன மேலிடம். திரும்பவும் அவனுங்க ஆட்கள் தானே" என்றாள் சுமிதா. அதுவும் சரி தான், ஜி.யு.போப் கிட்டே பேசுவோம் என ஒன்று திரண்டு ஜேம்ஸின் அறை நிறைத்தனர் அனைவரும்.

"அர‌ம்பொருத‌ பொன்போல‌த் தேயும் உர‌ம்பொருது
உட்ப‌கை உற்ற‌ குடி"
89/888

என்றவாறே அனைவரையும் ஒரு சுற்று பார்த்தார் ஜேம்ஸ்.

"இந்தப் பாடலில் வள்ளுவர் என்ன சொல்ல வர்றார் என்றால் ..."

"அவர் சொல்றது இருக்கட்டும், நீங்க பண்ணின காரியத்துக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க" வழக்கம் போலவே துடுக்காய் கேட்டான் ப்ரகாஷ்.

"ஹேய், என்ன இது, கல்லூரியில் இருப்பது போலவே இருக்கீங்க. மொத்தமா கும்பலா வந்து கலாட்டா பண்றீங்க" என்று அதிர்வது போல பாவலா காண்பித்தார் ஜேம்ஸ்.

"இரண்டாயிரம் வருஷம் பழமை என்று இன்று வரை சொல்லி, கற்று வந்து, அதன்படி யாருமே நடப்பதில்லையே ஏன் ? காலம் காலமாக பாடம் மட்டும் படித்து என்ன பயன் ? இன்னும் சூது, வாது, கயமை, பகைமை, கோள் சொல்லுதல் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது. இதெல்லாம் வளர வளர ... நான் மேலெ சொன்ன குறளை நினைவில் கொள்ளுங்கள்

என‌க்கு ரொம்ப‌ வ‌ருட‌ங்க‌ளாக‌வே திருக்குற‌ள் மீது ஈடுபாடு,ப‌ற்று அதிக‌ம். அத‌னைக் க‌ற்று அத‌ன்ப‌டி ந‌ட‌க்க‌ணும் என்று இன்று வ‌ரை அதைக் க‌டைபிடிக்கிறேன்."

ராகினியையும், நகுலனையும் பார்த்து, "உங்க‌ள் இருவ‌ரையும் ஒன்றாய் அழைத்துப் பேசிய‌து கூட‌ குற‌ள் மூல‌ம் நான் க‌ற்ற‌தே.

நான் எரித்தது வெளியில் திருக்குறள் என்று எழுதிய வெறும் நாட்குறிப்பு புத்தகமே ! இந்த செயலில் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்தது குறித்து மெத்த மகிழ்ச்சி. இதே போல உங்கள் ஒற்றுமை என்றும் தொடருட்டும். நமது மென்பொருட்களின் தன்மை பெறுகட்டும்." என்று வாழ்த்தி அனைவரையும் அனுப்பி வைத்தார்.

-----

உங்களுக்கு விருப்பம் இருப்பின், நீங்களும் ஒரு குறள் கதை எழுதிப் பதியலாமே ?!

மார்ச் 16, 2009 யூத்ஃபுல் விகடனில்

Sunday, October 19, 2008

இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமா தான் !

வல்லிம்மாவின் அழைப்பில், நான் தொடரும் சினிமா ...

ஒன்றா ... இரண்டா கேள்விகள் ... எல்லாம் (பதில்) சொல்லவே ... ஒரு நாள் போதுமா ?!!!

பாருங்க, இதுக்கு கூட சினிமாவ இழுத்துக்க வேண்டியதா இருக்கு :) ஒரு நாலு பேரு கூடி பேசினாங்க என்றால், கண்டிப்பா அவங்களால சினிமா பத்தி பேசாமல் இருக்க முடியாது. இதெல்லாம் பெட் கட்டி ஆடின பள்ளி, கல்லூரி காலங்கள் உண்டு. அந்தக் காலம் மட்டும் என்றில்லை, இன்றும் இது நிஜமாய் இருக்கிறது.

சரி, இப்ப ஒரு க்ளிப்பிங் பார்ப்போம் ... (மன்னிக்கணும், அங்க எம்பெடிங் ஆப்சன் இல்லை)

http://www.youtube.com/watch?v=y236HtVx9d8

இந்தக் காட்சியில் வி.கே.ஆரின், "கோவிலக் கட்டினேன், குளத்தை வெட்டினேன், யாருமே வரலை ... ஆனா சினிமா கொட்டகை கட்டினேன், ஊரே திரண்டு வந்திருக்கு" என்று சொல்லி, "இந்த விசயம் என் அறிவுக்கு இது வரை எட்டலேணும், உங்களுக்கு இவ்வளவு சீக்கிரம் எட்டி இருக்கே" என்று நக்கலாய் சொல்லுவதும் அருமை.

இப்ப கேள்விகளுக்கான பதில்களைப் பார்க்கலாம்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

ம். ஹிம். சுத்தமா நினைவில் இல்லை.


2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தசாவதாரம். இது பற்றி விரிவாக ஒரு விமர்சனப் பதிவே போட்டிருக்கிறேன்.


3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

அழகன். ஏற்கனவே பார்த்திருந்தாலும், தங்கஸ் புக் மார்க் செய்திருந்ததை, சமீபத்தில் மீண்டும் பார்த்தோம். மம்முட்டி வசனங்கள், பானுப்ரியாவின் நடனம், கீதாவின் நடிப்பு என எல்லாம் அசத்தல். ஆங்காங்கே கொஞ்சம் வளவளா இருந்தாலும், இன்றும் பார்த்து ரசிக்கும் அளவிற்கு இருக்கும் படங்களில் இதுவும் ஒன்று.


4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

நிறைய இருக்கிறது. இயக்குனர் இமையம் கே.பி. அவர்களின் அநேக படங்கள். மண் வாசனை புகழ் பாரதிராஜாவின் காட்சி அமைப்புக்கள். மணிரத்னம் அவர்களின் படங்கள். கல்லூரி நாட்களில் வந்த அனைத்து கமல் படங்களும். நம்மவர் படம் பார்த்த போது, அட நமக்கும் இப்படி ஒரு ப்ரொஃபசர் இருந்தால் எப்படி இருக்கும் என்ற தாக்கம் இருந்தது.


5. அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

என்னுயிர்த் தோழன். அமைதிப் படை. முதல் படம் வழக்கம் போல பாரதிராஜா படம் போல அல்லாது, கொஞ்சம் வித்தியாசமான படம். கட்சிக்காக பாடுபடும் கடைநிலைத் தொண்டனை அக்கட்சி தலைவனே ஏமாற்றுவது. இது தான் அரசியல் என்று புரிந்தது அப்போது. இரண்டாவது படம், அரசியலை இவ்வளவு நக்கலும், நையாண்டியுமாக ஒருவர் எடுக்க முடியாது என்று கூறலாம். இயக்குனர் மற்றும் மணிவண்ணன் அவர்களின் சரவெடி வசனங்கள், சத்யராஜின் அரசியல் வளர்ச்சி ...


5. ஆ உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

இதயத்தைத் திருடாதே என்று நினைக்கிறேன். ஒளிப்பதிவு பற்றி நண்பர்களுடன் பேச ஆரம்பித்தது அப்போது தான். அப்புறம் டி.டி.எஸ்.


6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

பின்னே ! குமுதம், தட்ஸ் தமிழ், மிஸ்டர் மியாவ்.


7. தமிழ் சினிமா இசை?

மெலடி பிடிக்கும். இளையராஜா, ஏ.ஆர்.ஆர், பரத்வாஜ், ஹாரிஸ் ஜெயராஜ் ... அப்புறம் தசாவதாரம் இசையமைப்பாளர்.


8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

அவ்வளவாக இல்லை. லேட்டஸ்டா எதுவும் இல்லை. ஏற்கனவே பார்த்தவற்றுள் அர்னால்ட் படங்கள். அப்புறம் ஸ்பீட்.


9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

ம். ஹிம். அதற்கான முயற்சி எடுக்கணும் என்று என்றும் தோன்றியதில்லை.


10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தொழில்நுட்ப வளர்ச்சி இருக்கும். ஆனால் இந்த சென்டிமென்ட்ஸ் குறைவதற்கான வழி இல்லை. எந்த விதத்தில் இருவரை இணைத்து, காதலை இன்னும் வித்தியாசமா சொல்லலாம் என்று இயக்குனர்கள் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

வன்முறை அதிகரித்திருக்கும். இப்ப இருக்கும் அளவிற்கு கூட இருக்காது, மக்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பில்லாமல் இருப்பார்கள்.


அடுத்து இந்த தொடரை தொடர நான் அழைக்கும் நண்பர்கள்,

சீனா ஐயா
நாகு
கவிநயா
ஜெயகாந்தன்
புதுவண்டு

Tuesday, October 14, 2008

அமெரிக்காவில் பத்தாயிரம் டாலருக்கு வீடு !!!

"இன்று அமெரிக்க வங்கிகளிடம் பணத்துக்குப் பதிலாக, பறிமுதல் செய்யப்பட்ட சொத்துப் பத்திரங்கள்தான் இருக்கின்றன. அமெரிக்கா முழுவதும் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள், வாங்குவதற்கு ஆள் இல்லாமல் பூட்டி கிடக்கின்றன. அமெரிக்காவில் வசிக்கும் என் நண்பரிடம் இதுபற்றி பேசியபோது, ‘‘Texas, Michigin, Ohio, Vergina போன்ற மாநிலங்களில் இரண்டு பெட்ரூம் குடியிருப்புகள் வெறும் 10 ஆயிரம் ஹிஷி டாலர் அதாவது சுமார் ஐந்து லட்சம் ரூபாய்க்குக் கிடைக்கின்றது. சில இடங்களில் அதற்கும் குறைவாகக்கூட கிடைக்கிறது... அமெரிக்காவில் வீடு வாங்குகிறாயா?' என்கிறார்."

இதை நான் சொல்லவில்லை. அமெரிக்க அதிபர், செனட் என்று ஆரம்பித்து இந்தியாவிற்கு பாடம் என்று வரிந்து கட்டி ஒருவர் கட்டுரை எழுதி இருக்கிறார். மேலே குறிப்பிட்ட பத்தியில், மிச்சிகன் மற்றும் வெர்ஜினியா ஸ்பெல்லிங் கவனிங்க. இதில் இவர், இவரது நண்பர் (அமெரிக்கால எந்தப் பக்கம்பா) கிட்ட பேசினாராம். அவர் சொன்னாராம் பத்தாயிரம் ஹிஷி டாலர் (இதென்னாது ?!!!) கொடுத்தா வீடு வாங்கலாம் என்று சொன்னது மட்டுமில்லாமல், வாங்குகிறாயா என்றும் கேட்டாராம். மேலும் அடிச்சு ஆடறார் பாருங்க, இதற்கும் குறைவான விலையில், மற்ற இடங்களில் வீடுகள் கிடைக்கிறதாம்.

நண்பர்கள் வட்டத்தில் அளந்து விடுவது போல இருக்கும் இக்கட்டுரை வெளிவந்தது பிரபல ஜூ.வி. 15-10-2008 தேதியிட்ட இதழில். எடிட்டர், ஆசிரியர் எல்லாம் வெக்கேஷன்ல போய்ட்டாங்க போல :)))

வானின் நிறம் நீலம் - 9


Photo: http://www.panoramio.com/

அம்பு விடுமுன் வளைந்த வில்லை சரியாகக் கவனித்த செல்வா, "சரிங்க நிர்மலா ... வந்து ... சாரிங்க நிர்மலா, இல்ல ! தனியா போறீங்களே, ஒரு கம்பெனி தரலாம் என்ற எண்ணத்தில் தான் அப்படி கேட்டேன், சரி நான் ஆபீஸ் கெளம்பறேன்".

'அப்பாடா, நல்ல வேளை' என நினைத்துக் கையெடுத்துக் கும்பிடாத குறையாக, தோபிகாட் ரயில் நிலையத்தில், எதிர் திசையில் சென்று நின்ற செல்வாவை உறுதி செய்து கொண்டாள் நிர்மலா.

படியேறி சிறிது தூரம் நடந்து, சிராங்கூன் நோக்கி செல்லும் ரயில் தடத்திற்கான எஸ்கலேட்டரில் இறங்கினாள். அவளுக்காகவே அங்கு காத்திருந்தான் மகேஷ். அவளைப் பிடித்து இழுக்காத குறையாக கீழிழுத்து சென்றான். தூரத்திலிருந்து செல்வா இக்காட்சியை காணாமலில்லை. விளையாட்டு மைதானத்தில் விளையாடுபவர்களைத் தவிர பார்வையாளர்களுக்கு ஒரு பரபரப்பு இருக்குமே, அதே போன்ற நிலையில் இருந்தான் செல்வா. 'இல்லை, நான் பார்வையாளனா இருந்திடக் கூடாது, என்ன ஆனாலும் பரவாயில்லை' என்று நிர்மலா சென்ற திசையில் ஓடினான்.

ஏதோ வாக்குவாதம் பண்ணுவது போலவே இருந்தது அவர்கள் இருவரின் மேனிமொழி. இரண்டு பெட்டிகள் தள்ளி நின்று கொண்டான் செல்வா. லிட்டில் இந்தியா நிறுத்தத்தில் அவர்கள் இறங்க, இவனும் இறங்கிக் கொண்டான். அவளைத் தொடர்வதை அவள் கண்டுவிடக் கூடாதே என்று, நன்றாக இடம் விட்டுத் தொடர்ந்ததில் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது காதில் விழுவது போலில்லை.

அதற்குள் செல்பேசி அழைப்பில் ப்ரஷாந்த். "டேய் செல்வா, எங்கிருக்க ?! உன்ன க்ரிஸ்டினா தேடிட்டு இருக்காங்க" என்றான்.

'போச்சுடா, இங்க ஒரு பரபரப்பு என்றால், அங்க என்ன விறுவிறுப்போ ?!' என்றெண்ணி, "இதோ வந்திட்டே இருக்கேன், பதினைஞ்சு நிமிடத்தில் இருப்பேன்" என்று போனை வைத்தான். எது என்னவானா என்ன, நமக்கு நம்ம வேலை முக்கியம் என்று வந்த வழியே திரும்பினான் செல்வா.

'இன்னும் மலேஷியா போகலையா ?! எதுக்கு அவசரமா நிர்மலாவுக்கு ஆஃபர் லெட்டர் கொடுக்க வர சொல்லியிருக்காங்க ? நம்மை வேறு தேடறாங்க !!!' என்று ஏகப்பட்ட கேள்விகளுடன், செல்வாவையும் சுமந்து சென்றது அந்த கம்ஃபர்ட் டாக்ஸி.

"எத்தனை தடவை சொல்லியிருக்கேன். என்னை இப்படி வந்து பார்த்து டார்ச்சர் பண்ணாதேன்னு" என்று தீபாவளிப் பட்டாசாய் வெடித்தாள் நிர்மலா.

"இதுக்கே கோவிச்சுக்கறே. இதே வாய் கொண்டு தான், அன்பே, ஆருயிரே என்றெல்லாம் கூட சொன்னே, இப்ப மட்டும் மட்டமா போய்டனா ?!!!!"

"அதுக்காக அந்த வாயை வெட்டி எறிஞ்சிருவேன்னு நினைச்சியா ?!!! உடலே ரணமானதுக்கப்புறம் ...." சிறிது ஆசுவாசபடுத்திக் கொண்டு, உடல் விம்மினாலும், மனம் இறுகி, உறுதியானாள்.

"இதோ பார், இது கடைசி தடவையா இருக்கட்டும், இனி ஒரு தடவை கூட என்னைப் பார்க்க வராத, நானும் உன் வழியில் வரமாட்டேன்"

"அவ்வளவு ஈ.ஸியா போயிடுச்சு உனக்கு. அது சரி !!! எல்லாம் உன் கைல தான் கண்ணு இருக்கு. எத்தனை நாளைக்கு தான் நீயும் பிடிவாதமா இருக்கிறாய் எனப் பார்ப்போம்."

ஒற்றை அருவியாய் ஓட எத்தனித்த கண்ணீரை கட்டுப் படுத்திக் கொண்டாள். "இதுக்கு மேலயும் தொந்தரவு செய்தால், அப்புறம் போலீஸுக்கு தான் போவேன்".

"போ ... போடி ... இப்படி எல்லார் வீட்டுப் பிரச்சனையும் தீர்க்க தான் போலீஸ் இருக்கு என்ற நினைப்பு !!!!"

'இங்க எங்க போலீஸ் ஸ்டேஷன் இருக்கு, முன்ன பின்னே போயிருந்தா அல்லவா தெரியும் !! யாருகிட்டயாவது கேட்கலாமா ? கேட்கும் சூழ்நிலையிலா இருக்கிறோம். என்ன செய்யலாம். பின் தொடர்ந்த செல்வாவையும் வேறு திட்டாத குறையாக அனுப்பிவிட்டோம்' எண்ணங்கள் சுழல ஒரு முடிவுக்கு வந்தாள் நிர்மலா.

"சரி இப்ப என்ன பண்ணலாம்ன்ற ?!" என்றாள்.

"அப்படி வா வழிக்கு. யூ ஆர் ஸ்மார்ட் ஆல்வேஸ் நிர்மலா. வா, நடந்துகிட்டே பேசலாம்"

ரயில் நிறுத்தத்திலிருந்து வெளி வந்து சாலையில் நடக்கத் தொடங்கினார்கள். வெய்யில், மழையையும் பொருட்படுத்தாமல், ஓரளவுக்கு அந்த நேரத்திலும் ஜனத்தொகை அடர்த்தியாகவே இருந்தது. சிராங்கூன் சாலை, தீபாவளி அலங்காரத்தில் மின்னியது. சாலையின் ஒரு முனையில் ஆரம்பித்து, சில அடி இடைவெளியில் வரிசையாக வண்ணத் தோரணங்கள் சாலையின் மறுமுனை வரை. எவ்வளவு தூரம் இந்த அலங்காரங்கள் தொடருகிறது என சாலையின் ஓரத்தில் நின்று கவனித்தால், கடைசியில் ஒரு புள்ளி போல தான் தோன்றும்.

நடைபாதையில் நிர்மலா நடக்க, சில அடி இடைவெளி கொண்ட அலங்கார வளைவுகளை, ரோட்டில் இறங்கி பின் நடைபாதையில் ஏறி, எனத் தொடர்ந்து கொண்டிருந்தான் மகேஷ். "ரொம்ப சிம்பிள் நிர்மலா. முதலில் முகத்தை சிரிச்ச மாதிரி வச்சுக்க, யாராவது நான் உன்னைத் தொந்தரவு செய்யறேன்னு நெனச்சிடப் போறாங்க ! ரெண்டு ஃபார்ம்ல கையெழுத்துப் போட்டுக் கொடுத்திடு. நான் என் வழி, நீ உன் வழினு போய்கிட்டே இருப்போம்!"


தொடரும் .....

Sunday, October 12, 2008

குட்டி அணிலே ! (குழந்தைகள் கவிதை)


Photo courtesy: http://flickr.com/photos/43555660@N00/468195506

குட்டி அணிலே
சுட்டி நீயே,

மரங்கள் ஏறி
கனிகள் சுவைத்து,

தரையில் தாவி
விதைகள் தேடி,

பொறுக்கும் எதையும்
இருகை பிடித்து,

மருள விழித்து
கொறித்து உண்பாய் !

எங்கள் வீட்டின்
பக்கம் வந்து

மேனி வரிகள்
மினுக்கி இருக்க,

வளைந்து வாலும்
அடர்ந்து இருக்க,

கீச்சுக் குரலில்
தொடர்ந்து கத்தி

உந்தன் குட்டி
அணில்களுக்கு ஊட்டி

ஓட்டின் மேலே
எட்டித் தாவி,

ஏறிப் பறப்பாய்
குட்டி அணிலே !

Tuesday, October 7, 2008

இ.எ.பா - 2008 - ஓடு, ஓடு, ஓடு ... ஓடு போட்ட வீடு ...

எல்லோரும் திண்ணைப் பதிவுகள் போட்டு, படித்துத் திளைத்து, மற்ற வேலைகளில் மூழ்கியிருக்க ... நான் தூசி தட்டி ஓடு அடுக்குகிறேன்.

நம்ம ஊரில், பொதுவா கிராமப்புறங்களில் ஓட்டு வீடு நிறையப் பார்க்கலாம். எங்க ஊரில் உள்ள பழைய வீடுகள், முக்கால்வாசி ஓட்டு வீடுகள் தான்.

நாட்டு ஓடு, சீமை ஓடு என்று இரு வகையில் ஓடுகள் வேய்ந்து அழகுற இருக்கும் வீடுகள். பெரீய்ய்ய்ய வீடுகளாக இருந்தால் இவ்விருவகை ஓடுகளும் இருக்கும். முன் பக்கம் சீமை ஓடும், அதிகம் புழக்கம் இல்லாத பகுதிகள் நாட்டு ஓடுகளிலும் இருக்கும். இதிலிருந்தே உங்களுக்குத் தெரிந்திருக்குமே ?! ஆம், நாட்டு ஓடு விலை குறைவு, சீமை ஓடு விலை அதிகம்.

நாட்டு ஓடு, நம் கணினி கீ‍போர்டில், எண் ஒன்பது மற்றும் பூஜ்ஜியம் ஆகியவற்றில் இருக்கும் round bracket போன்ற வடிவில், அரை அடிக்கும் சற்று குறைவான‌ நீளத்தில் இருக்கும். இன்று இந்த வகை ஓடுகளைக் காண்பது அறிதாய் இருக்கிறது.

சீமை ஓடு, வளைந்து நெளிந்து, அளவில் பரீட்சை அட்டை போல‌, இப்போழுது இருக்கும் அநேக வீடுகளில் இருப்பது.

இவ்விருவ‌கை ஓடுக‌ளும் ஆர‌ஞ்சு நிற‌த்தில், க‌ண்க‌ளைக் க‌வ‌ரும் வ‌ண்ண‌மாக‌ இருக்கும். புதிதாக‌ வேய்ந்த‌ ஓடுக‌ள் நாள் செல்ல‌ச் செல்ல‌, ம‌ழையிலும், வெய்யிலிலும் ஆங்காங்கே க‌ருத்திருக்கும். 'வெய்யில்ல அலையாதப்பா கருத்துருவ' என்று இதைப் பார்த்து தான் சொன்னார்களோ என்னவோ :)) ஆரஞ்சில் கருமையும், ஒருவகையில் அழ‌கைக் கூட்டும் வித‌மாக‌வே இருக்கும்.

எங்கள் வீட்டில் வளவுப் பகுதியில் முன்னர் நாட்டு ஓடுகள் தான் போட்டிருந்தார்கள். பின்னர், சீமை ஓடுகள் தாத்தா இருக்கும்போது (பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்னர்) போடப்பட்டது. பகுதி பகுதியாகப் பிரித்து ஓடு அடுக்குவார்கள். ஒரே நாளில் பிரித்துவிட்டால், வானம் கூரையைப் பிய்க்காமலே ஏதாவது கொட்டிவிட்டது என்றால், என்ன செய்யறது ?!! :)) அதான் முன் ஜாக்கிரதையாக.

என்னது வரிசையா எடுத்து ஒன்னு மேல ஒன்னா அடுக்கறது தானே என்று தோணும். ஆனால் இந்த நான்கு மூலைகளில் அடுக்கும்போது தான், தொழில் திறமை மேம்படும். மழை நீர் சேகரிக்க வகிடுபோல் இடம் விட்டு, ஓடுகளை வெட்டி அடுக்க வேண்டும். நல்ல ஒரு ஆள் கிடைக்கவில்லை என்றால் கோணல் மாணலாகி விடும். இப்பல்லாம் அதையும் கலையா ஆக்கிட்டாங்க. வளைந்து நெளிந்து ஒரு பழைய காலத்து சொம்பு இருந்தா, பல ஆயிரங்கள் கொடுக்க வியாபாரிகள் ரெடி !!!

எப்படியும் வீடு முழுக்க ஓடுகள் மாத்த கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகும். எப்படா முடிப்பாங்க என்று இருக்கும். ஒரு பக்கம் பழைய ஓடுகள பிரித்து அடுக்கியிருப்பார்கள், இன்னொரு பக்கம் புது ஓடுகள். அத்தோடு பத்தாதற்கு குப்பையும், தூசியும் சேர்ந்து கொள்ளும். அந்த வயதில் அதைக் கூடத் தாங்க முடியவில்லை. இப்ப என்னடான்னா, ஊர் முழுக்க renovation என்ற பெயரில் கட்டுமாணம் களை கட்டுகிறது. சென்னையில இருந்து மதுரை போறதுக்குள்ள, அப்பப்பா பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை (இதைப் பற்றி விரிவாக அடுத்த பதிவில் எழுதுகிறேன்).

எங்கள் வீட்டின் எதிர்வீடுகள் அனைத்தும் நாட்டு ஓடுகள் கொண்டவை. இது அன்று. இன்று எல்லோரும் வீட்டை கொஞ்சம் alter செய்து புதுப்பித்து விட்டார்கள். எதிர் வீட்டு திண்ணையில் தான் அதிகம் விளையாடியது. இந்த முறை ஊருக்குச் சென்றபோது, அது காணாமல் போயிருந்தது. ரோடு போடுகிறேன் என இத்தனை ஆண்டுகள் மேலும், மேலும் போட்டு, திண்ணை இன்று அண்டர் க்ரௌண்டினுள் :(

அதேபோல அநேக வீட்டுப் படிகளையும் மண் விழுங்கி, மன்னிக்கவும், ரோடு விழுங்கிக் கொண்டுள்ளது. இங்க எல்லாம் ரோடு புதுப்பிக்கையில, பழைய ரோடை பெயர்த்து எடுத்துவிட்டு, அதே அளவில் புதிய ரோட்டை உருவாக்குகிறார்கள். ஆனால் நம் ஊரில் கதையே வேறு. ஆறேழு படிகள் கொண்ட வீடுகளில் எல்லாம் ஒன்றிரண்டு படிகள் மட்டுமே இருக்கிறது. இதே ரேஞ்சுல போனால், மழை காலங்களில் படகெடுத்து தான் வீட்டுக்குள் செல்ல வேண்டும் :))

சரி ஓட்டிலிருந்து தாவி எங்கெங்கோ போகிறது பதிவு. இவ்ளோ எழுதிட்டு படம் காட்டலேன்னா நல்லா இருக்காது. அதனால, இங்க சில ஓடுகள் படங்கள். மேலும் படங்களுக்கு கொஞ்சம் பொறுத்திருங்கள், மூன்றாம் கண் தளத்தில் பதிந்து, பின்னர் இங்கு சுட்டி தருகிறேன்.


வீட்டு மாடியில் இருந்து ஒரு புறம்.


மாடிப் பகுதி. மாடிக்கு வரும் வழி சற்று தள்ளி தெரிகிறது பாருங்கள்.


மேல் மாடியில் இருந்து பார்த்தால் தெரியும் வளவுப் பகுதி ஓடுகள்.

Sunday, October 5, 2008

இந்தியா என் பார்வையில் - 2008 - சிங்கத்தை சந்தித்தோம் ...

இம்முறை இந்தியாவிற்கு சென்ற போது, என்ன வேலை இருந்தாலும் சரி, தமிழ்மணம் நன்கு அறிந்த ஒரு சிறந்த‌ மனிதரையும் அவரது துணைவியாரையும் சந்திக்காமல் திரும்பக் கூடாது என்று எண்ணியிருந்தேன்.

முதல் இரண்டு வாரங்கள் நேரம் சாத்தியப்படவில்லை. மதுரை சுப்ரமணியபுரத்தில் (படம் இல்லை, நிஜ இடம்) ஒரு கணினி மையத்தில் தமிழே இல்லை, தமிழ்மணம் பார்த்ததற்கான சாத்தியம் சிறிதும் இல்லை. மூன்றாவது வாரம் அவருக்கு இங்கிருந்து ஆங்கிலத்தில் மின்மடல் அனுப்பினேன். தந்தி போல "we are here" என்று.

சாயந்திரம் அவரிடம் இருந்து தவறாது தொலைபேசி அழைப்பு. ஏற்கனவே அவர‌து குரலை இணையத்தில் கேட்டிருந்ததால், "ஹலோ" எனும் போதே கண்டுகொண்டேன். அட நம்ம "சீனா ஐயா".

ஒரு சிறு பரிசோதனைக்காக மதுரை அப்போலோ சென்றபோது, இரண்டு நாட்கள் அங்கு செலவு செய்யும்படி ஆகிவிட்டது (இது பற்றி கூட ஒரு தனிப் பதிவு போடலாம் !). அங்கிருந்து அவர்கள் வீடு பக்கம் என்பதால், பரிசோதனையின் முடிவில் சீனா ஐயாவின் வீட்டுக்கு வருவதாகக் கூறினோம்.

இன்முகமாய் வரவேற்றனர் சீனா ஐயாவும் அவர் துணைவியார் செல்வி ஷங்கர் அம்மாவும்.

இந்தியாவின் தலைசிறந்த வங்கி ஒன்றில் உயர்ந்த பதவியில், பணியில் இருப்பவர் சீனா ஐயா. சென்னையில் முப்பதாண்டுகளுக்கும் மேலாய் பள்ளி ஆசிரியையாக இருந்து, கணவருக்காக வி.ஆர்.எஸ் வாங்கி மதுரைக்கு வந்த செல்வி ஷங்கர் அம்மா. இருப்பினும், எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் நம்மைப் போன்ற சாதரண மனிதராய் இருப்பது இவர்கள் இருவரின் சிறப்பு.

இணையத்தினால் அறிமுகம் நிறைய இருந்ததால், அதுபற்றி அதிகம் பேசவில்லை யாவரும்.

புதுமனை புகுந்து சில நாட்களே ஆனதால், கொஞ்சம் அதுபற்றி பேசினோம். ஆல்பம் காண்பித்தனர். சொந்தங்களைக் காட்டி மகிழ்வது போல, அதில் வந்திருந்த இணைய நட்புக்களையும் காட்டி ஆனந்தித்தனர் இருவருமே. "இவர் நந்து. தன் குட்டிப் பெண் நிலாவின் போட்டோக்கள், பல ஆயிரங்கள் பதிந்திருக்கிறார். இவர் சிவமுருகன், பல தளங்கள் வைத்திருக்கிறார், தற்போது பங்களூரில் வசிக்கிறார்", மேலும் பாசமலர் வந்திருந்தாங்க என இணைய நட்புக்களைச் சொல்லச் சொல்ல வியப்பு மேலிடத்தான் செய்கிறது.

வீட்டைச் சுற்றிப் பார்த்தோம். அழகாக, அடக்கமான ஒரு அப்பார்ட்மென்ட் வீடு. இங்க பக்கத்தில, அது இருக்கு, இது இருக்கு என்றாலும் எங்களுக்கு மிகவும் பிடித்தது, அப்படியே அருகில் ஓடும் வைகை ஆறு தான். அப்படியே இங்க இழுத்து வந்து எங்க அப்பார்ட்மென்ட் பக்கதில ஓட வைக்க ஆசை. ஹிம்ம்ம்ம்.

லண்டனில் வசிக்கும் தம் இரு மகள்களின் குடும்பத்தாரையும் போட்டோவில் அறிமுகம் செய்து வைத்தனர். இப்ப தான் வந்திட்டு போனார்கள். "கலகலனு இருந்தது வீடு. இப்ப பாருங்க எவ்ளோ அமைதியா இருக்கு". இருந்த சில மணி நேரங்களில் பிள்ளைகள் பற்றி அதிகம் பேசினர். "யாரும் அருகில் இல்லாமல், பாவம் கஷ்டப்படுகிறார்கள். சீக்கிரம் அங்கு சென்று அவர்களுக்கு உதவியாய் இருக்க வேண்டும்." இந்த உறுதி அவர்கள் பேச்சில் உணரமுடிந்தது.

எல்லோருக்கும் இவர்கள் போல் பெற்றோர் கிடைத்தால் எப்படி இருக்கும் !!! சரி, ரொம்ப பேராசை எல்லாம் வேண்டாம். இவர்களின் பிள்ளைகள் கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.

இந்தியா என் பார்வையில் - 2008 - காணாமல் போகும் தெரு ...


Photo: http://www.leelau.net/chai/india.htm

தெருவோரக் குப்பைகளும்
தேங்கிய மழை நீரும்,

தெருவடைக்கும் வாகனங்கள்
தேர் போல ஊருவதும்,

இருபக்கப் பள்ளங்கள்
எமன் போல அமைவதுவும்,

கோலமிடும் வாசல்கள்
குட்டிக் கடைகள் ஆனதுவும் ...

மேடு பள்ளம் பலவுண்டு
மேட்டுக் குடியும் தானுண்டு,

ராமெ ஆண்டாலும்
ராவணெ ஆண்டாலும்,

எனக்கேன் அக்கவலை
என்கவலையே ஏராளம்,

என்றே மனநிலையில்
இருக்கிறோம் அனைவருமே ...

நாட்டு வளர்ச்சியிலே
நம் பங்கும் ஒன்றுமில்லை,

வீட்டு வளர்ச்சி காண
வளர்க்கிறோம் சுயநலத்தை,

தெருவடைக்கும் நம்செயல்கள்,
வீட்டோடு அடைக்கும் நம்மை,

பின்னாளில் என்றாவது
வெளிக்காற்று வாங்க,

வீதியில் நடக்கலாம் என்றால்கூட,

அன்று ...

வீதி என்பது இல்லாது போகலாம் ...

Thursday, October 2, 2008

சிங்கப்பூர் 2008 என் பார்வையில்


Photo: http://www.carolin-witzke.de/Webcard/Subpages/Travel/Singapore.html

மூன்றாண்டுகள் கழித்து சிங்கப்பூர் செல்கிறோம். சாதாரண இடங்களில் பெரிதான மாற்றங்கள் எதுவுமில்லை. அதே H.D.B. அடுக்குமாடிக் குடியிருப்புக்கள், அதே ஹாக்கர் சென்டர்கள், அதே அலுவலகங்கள். வழக்கம் போல ஊரைச் சுற்றி எங்கிலும் கட்டுமானப் பணிகள்.

நீண்ட நாட்களாக, வருகிறது எனச் சொல்லிவந்த கஸினோ விரைவில் திறக்கப் படும் என்கிறார்கள். பின்னே ! எல்லோரும் ஜென்டிங்கில் அல்லவா இன்றுவரை பணத்தை அவிழ்க்கின்றனர். சன்டெக் சிட்டியில், வானை நோக்கி பந்து பிடிக்கக் குவித்திருக்கும் கை விரல்கள் போல ஐந்து கட்டிடங்கள் பார்த்திருக்கிறீர்களா டாக்ஸி ஓட்டுநர் கேட்டார். அவற்றை காணும் வாய்ப்பு இந்த முறையும் கிடைக்கவில்லை.

அனைத்து M.R.T. நிலையங்களிலும் ஜன நெருக்கடி அதிகரித்திருக்கிறது. எங்கும் கூட்டம், எதிலும் கூட்டம். ஹிந்தி அதிகம் காதில் விழுகிறது எங்கிலும். ஒரு சுற்றுலாத் தளத்திற்கு சென்றால், பாதிக்கும் மேல் நம்ம இந்திய மக்கள் தான். குறிப்பாக ஹிந்திக்காரர்கள்.

ஆன்லைனில் விசா தருகிறார்கள். அள்ளி அப்புகிறது ஜனத்தொகை. முன்னர் வெகு சிரத்தை எடுத்து நிரந்தரக் குடியுரிமை பெறவேண்டும். இப்போது வெகு சுலபமாக இருக்கிறது. தீப்பெட்டி வீடுகள் விலை ஏற்றத்தினால், விற்கலாம் என்று இருந்தவர்கள் கூட, இன்னும் கொஞ்சம் ஏறட்டும் என்று விற்காமல் இருக்கிறார்கள்.

சீனர்களின் முகத்தில் வழக்கம் போல சிரிப்பில்லை. ரயில்களில், ஒருவர் எழுந்து இறங்க, அதே இருக்கையில் அமரும் மற்றொருவர், முதலில் இருக்கை நுனியில் அமர்வார். நேரம் செல்லச் செல்ல, கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து நன்கு அமர்வார். இன்றும் இப்பழக்கம் நடைமுறையில் உள்ளது :))

சீன இளைஞர்களிடம் ரொமான்ஸ் கொறஞ்ச மாதிரி தோன்றுகிறது ! சாதாரணமா பஸ்ஸிலோ, ரயிலிலோ குறைந்த‌து நாலைந்து ஜோடிகளாவது சரிந்து விழுந்திருப்பர். இன்று, ஒரு ஜோடி பார்ப்பதே அபூர்வமாயிருக்கிறது.

முன்னர் பார்த்த அளவிற்கு சுத்தம் இப்பொழுது இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. பஸ் நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், கடைகள் என ஆங்காங்கே குப்பைகள் கண்களில் படுகின்றன.

குருணை தூவ, கொக் கொக் என்று கத்தி, டக் டக் என்று கொத்தி உண்ணும் கோழி போல கைத்தொலைபேசிகளில் விரல்களில் விளையாடி இன்றும் டெக்ஸ்ட் மெஸேஜ் அனுப்புகின்றனர்.

எவ்வளவோ ஆயிரங்களில் டாக்ஸி ஓடினாலும், இன்றும் குறிப்பிட்ட நேரங்களில் டாக்ஸி பிடிப்பது ஒரு சாகசமாகவே இருக்கிறது. அதற்காக சொந்தமாக வாகனம் வாங்குபவர்களின் எண்ணிகையும் குறைந்தபாடில்லை. எல்லோரும் புதிதாக வாங்கதான் விரும்புகிறார்களாம். யாருக்கும் பயன்படுத்திய கார் வாங்க விருப்பம் இல்லையாம். எல்லாம் மெர்ஸிடிஸ், லெக்ஸஸ் போன்றவை. பாருங்க இதோ, அதோ என்று டாக்ஸி ஓட்டுநர் நமக்குக் காட்டுகிறார்.

ஞாயிறு மாலைகளில், தேக்கா மார்க்கெட் செல்ல எந்த ஒரு டாக்ஸிகாரரும் வரமாட்டார். இன்றும் அதே நிலை தான். நாங்கள் சென்று இறங்கியது ஞாயிறு மதியம். 'அங் மோ கியோ'விலிருந்து மாலை சிராங்கூன் செல்லலாம் என டாக்ஸிக்கு நின்றால், பச்சை தலை எழுத்து இருந்தாலும், நம்மைப் பார்த்தவுடன் (கண்டிப்பா இவன் தேக்கா தான் போறான் என்றெண்ணி) நிற்காமல் பறக்கின்றனர் :(

ரயிலில் கூட்டத்தோடு பயணித்து சென்றால், இறங்கிய பின்னும் நடக்க முடியாத அளவிற்கு எங்கும் மக்கள் வெள்ளம். காய்கறி வியாபரம் கொடி கட்டிப் பறக்கிறது. வரிசையாக நகைக் கடைகள் அழகாக ஜொலிக்கிறதே அன்றி வாங்குவோரைக் காணவில்லை.

கோவில்களிலும் கூட்டம் அலை மோதுகிறது. முஸ்தாபா ஷாப்பிங் பற்றி கேட்கவே வேண்டாம். வார நாட்களிலும், பகல் என்ன, இரவென்ன கூட்டத்திற்கு குறைவில்லை. ஆனால் ... நகை செக்ஷன் பக்கம் யாரும் அதன் அழகை பார்க்க கூட போக மாட்டேன் என்கிறார்கள். மூன்று ஆண்டுகள் முன்னர், ஒரு கிராம் 19 வெள்ளி, இப்போ கிட்டத்தட்ட 40 வெள்ளி.

தேக்கா மார்க்கெட்டும் கட்டுமானப் பணிகளில் மூடிக் கிடக்க, வங்கி ஏ.டி.எமில் இருந்து பணம் எடுக்க ரொம்ப சிரமமாகப் போய்விட்டது. அவ்வளவு கூட்டத்திற்கும் ஒரே ஒரு ஏ.டி.எம். அதுவும் குட்டி இந்தியக் கடை அடுக்குகளுக்குள், அனுமார் வால் போல நீண்ட க்யூ வேறு.

காந்தி, பனானா லீஃப் போன்ற உணவகங்கள் வழக்கம் போல கூட்டம் இருக்கிறது. ஆனால் ஆந்திரா கரி, கோமளாஸ் போன்ற உணவகங்கள் காற்று வாங்குகிறது. யீஷுன் பனானா லீஃபிலும் க்யூ கட்டி வாங்குகின்றனர் இன்றும்.

படப் பொட்டியை எடுத்துச் சென்றும், நேரமின்மை காரணத்தால் பொறுமையாக அனுபவித்து சிங்கப்பூரைச் சுட முடியவில்லை. அங்கிருப்பவர்கள் போல நம்மையும் பி.ஸி.ஆக ஆக்கிவிட்டார்கள் :))