Wednesday, October 29, 2008

நிறம் மாறும் இலைகள்


Photo: freefoto.com

வெற்றிலைப் பச்சை
நிறத்து இலைகள்

குளிர்வர உதிருமுன்
நிறமாறும் இலைகள்

நெல்லிக் கனிநிறம்
துவங்கும் இலைகள்

பரங்கிப் பூவாய்
பழுக்கும் இலைகள்

செம்மண் போலச்
சிவக்கும் இலைகள்

கத்தரி நிறத்தில்
கறுக்கும் இலைகள்.

மறையும் பச்சையில்
பழுப்பு வண்ணம்

கரையும் சிவப்பில்
காவி வண்ணம்

அனைத்து நிற‌மும்
கலந்த‌ வ‌ண்ண‌ம்

ப‌ட‌ர்ந்து ப‌ரவி
எங்கும் வ‌ண்ண‌ம்

காணும் கண்கள்
களிப்புறும் வண்ணம்

இயற்கை தூரிகை
தீட்டும் வண்ணம் !

Sunday, October 26, 2008

சுடரின் நடனம் - தீபாவளி வாழ்த்துக்கள்


Photo: lpstnvs.com

சுடரின் நடனம்
தொடரும் தீபங்களில்,

காணும் போதே
களிப்புறும் உள்ளம்.

வானின் இருளில்
வண்ணங்கள் தூவி,

மிளிரும் ஒளியில்
சிதறும் பூக்கள்.

பட்டுத் துணியும்
பரிசுப் பொருளும்,

கிடைத்திட‌ இன்புறும்
சின்னஞ் சிறார்கள்.

என்றும் இனிமையாய்
இவ‌ர்க‌ளைப் போலே,

இருந்திட வாழ்த்துக்கள்
இத்தீபாவளி நன்நாளில் !

அனைவருக்கும்
இன்பத் தீபாவளி வாழ்த்துக்கள் !!

Friday, October 24, 2008

உட்ப‌கை உற்ற‌ குடி (குறள் கதை)

குறளில் கதையெழுத, செல்விஷங்கர் அம்மா பொதுவாக அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்கள். நாமும் முயற்சித்துப் பார்க்கலாம் என்றெண்ணி தோன்றிய கதை. கதை பிடித்திருந்தால் ஒரு வரி பின்னூட்டுங்கள் :)

-----

அலுவல‌கத்தின் டென்னிஸ் மைதானம். முதல் செட் ஆடி முடித்து, சிறிது ஓய்வெடுத்தனர் ஜேம்ஸும், ராகினியும்.

"ஜேம்ஸ், நீங்க தப்பா எடுத்துக்கலேன்னா ..." என்று இழுத்தாள் ராகினி.

அந்தப் பண்ணாட்டு நிறுவனத்தின் சென்னை கிளைக்கு ஜேம்ஸ் வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அந்நிறுவனத்தின் மென்பொருள் உற்பத்தி முழுக்க முழுக்க சென்னை என்று ஆகிப் போனது. அதன் முக்கிய பொறுப்பில், அடுத்த இரண்டாண்டுகளுக்கு ஜேம்ஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஜேம்ஸின் "ம்ம் ..." என்ற தலையாடலுக்கு, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு தொடர்ந்தாள் ராகினி.

"என‌க்கு வேற‌ ப்ராஜ‌க்ட் மாத்திக் கொடுக்க‌றீங்க‌ளா ப்ளீஸ் ..."

"ப்ராஜக்ட்ல என்ன‌ ப்ர‌ச்ச‌னை உன‌க்கு ?"

"ப்ராஜ‌க்ட்ல‌ ப்ர‌ச்ச‌னை இல்ல‌, அதில் கூட‌ வேலை செய்ய‌ற‌ நகுலன் தான் ப்ர‌ச்ச‌னை. அவன் சுத்த பொறுக்கி. ஏற்கனவே அவன் கூட வேலை செய்த போத அவன் டார்ச்சர் தாங்கலை. என‌க்கு அவன் செய்கைக‌ள் சுத்த‌மா பிடிக்க‌லை. எவ்வளவு நல்லா பண்ணினாலும், ஏதாவது குறை கண்டுபிடிச்சு கொண்ணுடுவான். இந்த‌ முக்கிய‌மான‌ ப்ராஜ‌க்ட், அவனோட‌ சேர்ந்து என‌க்கு செய்ய‌ இஷ்ட‌மில்லை. தின‌ம் தின‌ம் அவன் கூட‌வா சேர்ந்து செய்ய‌ப் போறோம்னு நினைச்சாலே ந‌டுக்குது."

"சரி, இதுபற்றி நாளைக்கு பேசலாம்" என்றார்.

"டேய் மச்சான், அங்க பாரு ராகினிய ... செம திக் ஆகிட்டு வர்றாடா அந்த ஜி.யு.போப் கூட ..." என்ற பாபுவின் வாசகங்கள், நகுலனை மூச்சடைக்க வைத்தது.

அன்றிரவு, ரெசிடென்ஸி முதல் மாடியில், குளு குளு பாரில் நகுலன் மற்றும் நண்பர்கள் சூழ ஜேம்ஸும் அவர்களோடு. முதல் சுற்று ஊற்றி முடித்த பின்னர், ஆரம்பித்தான் நகுலன், "ஜேம்ஸ், மன்னிக்கணும். எனக்கு இந்த ப்ராஜக்ட்ல ராகினியோட சேர்ந்து வேலை செய்யப் பிடிக்கலை. அவ சுத்த அமுங்குளி. அமைதியா எல்லா காரியத்தையும் சாதிச்சுடுவா. ஏதாவது தப்பு சொல்லிட்டா அவளால தாங்கிக்க முடியாது. இன்னும் அழ மட்டும் தான் செய்யலை. அவ டார்ச்சர் தாங்கலை. எனக்கு வேற ப்ராஜக்ட் மாத்திக் கொடுத்திடுங்க" என்று நீட்டி முழக்கினான்.

"சரி, இதுபற்றி நாளைக்கு பேசலாம்" என்றார்.

மறுநாள், ஜேம்ஸ் குறிப்பிட்ட‌ நேரத்தில் ராகினியும், நகுலனும் அவர் அறைக்கு வந்தனர். இருவரிடமும் "திருக்குறள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா ?" என்று பொதுவாய்க் கேட்டார்.

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, 'இவருக்கு தெரிஞ்சதால, நமக்குத் தெரியாது என்று நினைக்கிறாரா ?' என்று முகம் சுறுக்கினர்.

"ஏன் கேட்கறீர்கள் ?! நல்லாவே தெரியும். சிறுவயதில் பள்ளியில் ஆரம்பித்து, இன்றும் அரசுப் பேருந்துகளில் கூட படிக்கிறோமே" என்றனர் இருவரும் ஒருமித்த குரலில்.

"இதைத் தான் எதிர்பார்த்தேன், அப்ப இனி இது தேவையில்லை" என்று தயாராய் வைத்திருந்த "திருக்குறள் புத்தகத்தை" அவர்கள் கண் முன்னே எரித்து விட்டார்.

ஒரு கணம் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. இனி நீங்கள் செல்லலாம் என்று அவர்களிருவரையும் அனுப்பி வைத்தார்.

எப்படி இவர் இப்படி செய்யலாம். ஒரு புனித நூலை, இரண்டாயிரம் வருடத்து பாரம்பரியத்தை, அநேக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதை. அதுவும் எங்கிருந்தோ வந்து நம்ம ஊரிலேயே, நமது புனிதத்தை எரிக்கலாம். கொதித்தெழுந்தனர் ராகினியின் சுற்றமும், நகுலனின் சுற்றமும். இதை சும்மா விடக்கூடாது. மேலிடத்துக்கு எடுத்து செல்லணும்.

"மேலிடம் என்ன மேலிடம். திரும்பவும் அவனுங்க ஆட்கள் தானே" என்றாள் சுமிதா. அதுவும் சரி தான், ஜி.யு.போப் கிட்டே பேசுவோம் என ஒன்று திரண்டு ஜேம்ஸின் அறை நிறைத்தனர் அனைவரும்.

"அர‌ம்பொருத‌ பொன்போல‌த் தேயும் உர‌ம்பொருது
உட்ப‌கை உற்ற‌ குடி"
89/888

என்றவாறே அனைவரையும் ஒரு சுற்று பார்த்தார் ஜேம்ஸ்.

"இந்தப் பாடலில் வள்ளுவர் என்ன சொல்ல வர்றார் என்றால் ..."

"அவர் சொல்றது இருக்கட்டும், நீங்க பண்ணின காரியத்துக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க" வழக்கம் போலவே துடுக்காய் கேட்டான் ப்ரகாஷ்.

"ஹேய், என்ன இது, கல்லூரியில் இருப்பது போலவே இருக்கீங்க. மொத்தமா கும்பலா வந்து கலாட்டா பண்றீங்க" என்று அதிர்வது போல பாவலா காண்பித்தார் ஜேம்ஸ்.

"இரண்டாயிரம் வருஷம் பழமை என்று இன்று வரை சொல்லி, கற்று வந்து, அதன்படி யாருமே நடப்பதில்லையே ஏன் ? காலம் காலமாக பாடம் மட்டும் படித்து என்ன பயன் ? இன்னும் சூது, வாது, கயமை, பகைமை, கோள் சொல்லுதல் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது. இதெல்லாம் வளர வளர ... நான் மேலெ சொன்ன குறளை நினைவில் கொள்ளுங்கள்

என‌க்கு ரொம்ப‌ வ‌ருட‌ங்க‌ளாக‌வே திருக்குற‌ள் மீது ஈடுபாடு,ப‌ற்று அதிக‌ம். அத‌னைக் க‌ற்று அத‌ன்ப‌டி ந‌ட‌க்க‌ணும் என்று இன்று வ‌ரை அதைக் க‌டைபிடிக்கிறேன்."

ராகினியையும், நகுலனையும் பார்த்து, "உங்க‌ள் இருவ‌ரையும் ஒன்றாய் அழைத்துப் பேசிய‌து கூட‌ குற‌ள் மூல‌ம் நான் க‌ற்ற‌தே.

நான் எரித்தது வெளியில் திருக்குறள் என்று எழுதிய வெறும் நாட்குறிப்பு புத்தகமே ! இந்த செயலில் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்தது குறித்து மெத்த மகிழ்ச்சி. இதே போல உங்கள் ஒற்றுமை என்றும் தொடருட்டும். நமது மென்பொருட்களின் தன்மை பெறுகட்டும்." என்று வாழ்த்தி அனைவரையும் அனுப்பி வைத்தார்.

-----

உங்களுக்கு விருப்பம் இருப்பின், நீங்களும் ஒரு குறள் கதை எழுதிப் பதியலாமே ?!

மார்ச் 16, 2009 யூத்ஃபுல் விகடனில்

Sunday, October 19, 2008

இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமா தான் !

வல்லிம்மாவின் அழைப்பில், நான் தொடரும் சினிமா ...

ஒன்றா ... இரண்டா கேள்விகள் ... எல்லாம் (பதில்) சொல்லவே ... ஒரு நாள் போதுமா ?!!!

பாருங்க, இதுக்கு கூட சினிமாவ இழுத்துக்க வேண்டியதா இருக்கு :) ஒரு நாலு பேரு கூடி பேசினாங்க என்றால், கண்டிப்பா அவங்களால சினிமா பத்தி பேசாமல் இருக்க முடியாது. இதெல்லாம் பெட் கட்டி ஆடின பள்ளி, கல்லூரி காலங்கள் உண்டு. அந்தக் காலம் மட்டும் என்றில்லை, இன்றும் இது நிஜமாய் இருக்கிறது.

சரி, இப்ப ஒரு க்ளிப்பிங் பார்ப்போம் ... (மன்னிக்கணும், அங்க எம்பெடிங் ஆப்சன் இல்லை)

http://www.youtube.com/watch?v=y236HtVx9d8

இந்தக் காட்சியில் வி.கே.ஆரின், "கோவிலக் கட்டினேன், குளத்தை வெட்டினேன், யாருமே வரலை ... ஆனா சினிமா கொட்டகை கட்டினேன், ஊரே திரண்டு வந்திருக்கு" என்று சொல்லி, "இந்த விசயம் என் அறிவுக்கு இது வரை எட்டலேணும், உங்களுக்கு இவ்வளவு சீக்கிரம் எட்டி இருக்கே" என்று நக்கலாய் சொல்லுவதும் அருமை.

இப்ப கேள்விகளுக்கான பதில்களைப் பார்க்கலாம்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

ம். ஹிம். சுத்தமா நினைவில் இல்லை.


2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தசாவதாரம். இது பற்றி விரிவாக ஒரு விமர்சனப் பதிவே போட்டிருக்கிறேன்.


3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

அழகன். ஏற்கனவே பார்த்திருந்தாலும், தங்கஸ் புக் மார்க் செய்திருந்ததை, சமீபத்தில் மீண்டும் பார்த்தோம். மம்முட்டி வசனங்கள், பானுப்ரியாவின் நடனம், கீதாவின் நடிப்பு என எல்லாம் அசத்தல். ஆங்காங்கே கொஞ்சம் வளவளா இருந்தாலும், இன்றும் பார்த்து ரசிக்கும் அளவிற்கு இருக்கும் படங்களில் இதுவும் ஒன்று.


4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

நிறைய இருக்கிறது. இயக்குனர் இமையம் கே.பி. அவர்களின் அநேக படங்கள். மண் வாசனை புகழ் பாரதிராஜாவின் காட்சி அமைப்புக்கள். மணிரத்னம் அவர்களின் படங்கள். கல்லூரி நாட்களில் வந்த அனைத்து கமல் படங்களும். நம்மவர் படம் பார்த்த போது, அட நமக்கும் இப்படி ஒரு ப்ரொஃபசர் இருந்தால் எப்படி இருக்கும் என்ற தாக்கம் இருந்தது.


5. அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

என்னுயிர்த் தோழன். அமைதிப் படை. முதல் படம் வழக்கம் போல பாரதிராஜா படம் போல அல்லாது, கொஞ்சம் வித்தியாசமான படம். கட்சிக்காக பாடுபடும் கடைநிலைத் தொண்டனை அக்கட்சி தலைவனே ஏமாற்றுவது. இது தான் அரசியல் என்று புரிந்தது அப்போது. இரண்டாவது படம், அரசியலை இவ்வளவு நக்கலும், நையாண்டியுமாக ஒருவர் எடுக்க முடியாது என்று கூறலாம். இயக்குனர் மற்றும் மணிவண்ணன் அவர்களின் சரவெடி வசனங்கள், சத்யராஜின் அரசியல் வளர்ச்சி ...


5. ஆ உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

இதயத்தைத் திருடாதே என்று நினைக்கிறேன். ஒளிப்பதிவு பற்றி நண்பர்களுடன் பேச ஆரம்பித்தது அப்போது தான். அப்புறம் டி.டி.எஸ்.


6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

பின்னே ! குமுதம், தட்ஸ் தமிழ், மிஸ்டர் மியாவ்.


7. தமிழ் சினிமா இசை?

மெலடி பிடிக்கும். இளையராஜா, ஏ.ஆர்.ஆர், பரத்வாஜ், ஹாரிஸ் ஜெயராஜ் ... அப்புறம் தசாவதாரம் இசையமைப்பாளர்.


8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

அவ்வளவாக இல்லை. லேட்டஸ்டா எதுவும் இல்லை. ஏற்கனவே பார்த்தவற்றுள் அர்னால்ட் படங்கள். அப்புறம் ஸ்பீட்.


9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

ம். ஹிம். அதற்கான முயற்சி எடுக்கணும் என்று என்றும் தோன்றியதில்லை.


10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தொழில்நுட்ப வளர்ச்சி இருக்கும். ஆனால் இந்த சென்டிமென்ட்ஸ் குறைவதற்கான வழி இல்லை. எந்த விதத்தில் இருவரை இணைத்து, காதலை இன்னும் வித்தியாசமா சொல்லலாம் என்று இயக்குனர்கள் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

வன்முறை அதிகரித்திருக்கும். இப்ப இருக்கும் அளவிற்கு கூட இருக்காது, மக்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பில்லாமல் இருப்பார்கள்.


அடுத்து இந்த தொடரை தொடர நான் அழைக்கும் நண்பர்கள்,

சீனா ஐயா
நாகு
கவிநயா
ஜெயகாந்தன்
புதுவண்டு

Tuesday, October 14, 2008

அமெரிக்காவில் பத்தாயிரம் டாலருக்கு வீடு !!!

"இன்று அமெரிக்க வங்கிகளிடம் பணத்துக்குப் பதிலாக, பறிமுதல் செய்யப்பட்ட சொத்துப் பத்திரங்கள்தான் இருக்கின்றன. அமெரிக்கா முழுவதும் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள், வாங்குவதற்கு ஆள் இல்லாமல் பூட்டி கிடக்கின்றன. அமெரிக்காவில் வசிக்கும் என் நண்பரிடம் இதுபற்றி பேசியபோது, ‘‘Texas, Michigin, Ohio, Vergina போன்ற மாநிலங்களில் இரண்டு பெட்ரூம் குடியிருப்புகள் வெறும் 10 ஆயிரம் ஹிஷி டாலர் அதாவது சுமார் ஐந்து லட்சம் ரூபாய்க்குக் கிடைக்கின்றது. சில இடங்களில் அதற்கும் குறைவாகக்கூட கிடைக்கிறது... அமெரிக்காவில் வீடு வாங்குகிறாயா?' என்கிறார்."

இதை நான் சொல்லவில்லை. அமெரிக்க அதிபர், செனட் என்று ஆரம்பித்து இந்தியாவிற்கு பாடம் என்று வரிந்து கட்டி ஒருவர் கட்டுரை எழுதி இருக்கிறார். மேலே குறிப்பிட்ட பத்தியில், மிச்சிகன் மற்றும் வெர்ஜினியா ஸ்பெல்லிங் கவனிங்க. இதில் இவர், இவரது நண்பர் (அமெரிக்கால எந்தப் பக்கம்பா) கிட்ட பேசினாராம். அவர் சொன்னாராம் பத்தாயிரம் ஹிஷி டாலர் (இதென்னாது ?!!!) கொடுத்தா வீடு வாங்கலாம் என்று சொன்னது மட்டுமில்லாமல், வாங்குகிறாயா என்றும் கேட்டாராம். மேலும் அடிச்சு ஆடறார் பாருங்க, இதற்கும் குறைவான விலையில், மற்ற இடங்களில் வீடுகள் கிடைக்கிறதாம்.

நண்பர்கள் வட்டத்தில் அளந்து விடுவது போல இருக்கும் இக்கட்டுரை வெளிவந்தது பிரபல ஜூ.வி. 15-10-2008 தேதியிட்ட இதழில். எடிட்டர், ஆசிரியர் எல்லாம் வெக்கேஷன்ல போய்ட்டாங்க போல :)))

வானின் நிறம் நீலம் - 9


Photo: http://www.panoramio.com/

அம்பு விடுமுன் வளைந்த வில்லை சரியாகக் கவனித்த செல்வா, "சரிங்க நிர்மலா ... வந்து ... சாரிங்க நிர்மலா, இல்ல ! தனியா போறீங்களே, ஒரு கம்பெனி தரலாம் என்ற எண்ணத்தில் தான் அப்படி கேட்டேன், சரி நான் ஆபீஸ் கெளம்பறேன்".

'அப்பாடா, நல்ல வேளை' என நினைத்துக் கையெடுத்துக் கும்பிடாத குறையாக, தோபிகாட் ரயில் நிலையத்தில், எதிர் திசையில் சென்று நின்ற செல்வாவை உறுதி செய்து கொண்டாள் நிர்மலா.

படியேறி சிறிது தூரம் நடந்து, சிராங்கூன் நோக்கி செல்லும் ரயில் தடத்திற்கான எஸ்கலேட்டரில் இறங்கினாள். அவளுக்காகவே அங்கு காத்திருந்தான் மகேஷ். அவளைப் பிடித்து இழுக்காத குறையாக கீழிழுத்து சென்றான். தூரத்திலிருந்து செல்வா இக்காட்சியை காணாமலில்லை. விளையாட்டு மைதானத்தில் விளையாடுபவர்களைத் தவிர பார்வையாளர்களுக்கு ஒரு பரபரப்பு இருக்குமே, அதே போன்ற நிலையில் இருந்தான் செல்வா. 'இல்லை, நான் பார்வையாளனா இருந்திடக் கூடாது, என்ன ஆனாலும் பரவாயில்லை' என்று நிர்மலா சென்ற திசையில் ஓடினான்.

ஏதோ வாக்குவாதம் பண்ணுவது போலவே இருந்தது அவர்கள் இருவரின் மேனிமொழி. இரண்டு பெட்டிகள் தள்ளி நின்று கொண்டான் செல்வா. லிட்டில் இந்தியா நிறுத்தத்தில் அவர்கள் இறங்க, இவனும் இறங்கிக் கொண்டான். அவளைத் தொடர்வதை அவள் கண்டுவிடக் கூடாதே என்று, நன்றாக இடம் விட்டுத் தொடர்ந்ததில் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது காதில் விழுவது போலில்லை.

அதற்குள் செல்பேசி அழைப்பில் ப்ரஷாந்த். "டேய் செல்வா, எங்கிருக்க ?! உன்ன க்ரிஸ்டினா தேடிட்டு இருக்காங்க" என்றான்.

'போச்சுடா, இங்க ஒரு பரபரப்பு என்றால், அங்க என்ன விறுவிறுப்போ ?!' என்றெண்ணி, "இதோ வந்திட்டே இருக்கேன், பதினைஞ்சு நிமிடத்தில் இருப்பேன்" என்று போனை வைத்தான். எது என்னவானா என்ன, நமக்கு நம்ம வேலை முக்கியம் என்று வந்த வழியே திரும்பினான் செல்வா.

'இன்னும் மலேஷியா போகலையா ?! எதுக்கு அவசரமா நிர்மலாவுக்கு ஆஃபர் லெட்டர் கொடுக்க வர சொல்லியிருக்காங்க ? நம்மை வேறு தேடறாங்க !!!' என்று ஏகப்பட்ட கேள்விகளுடன், செல்வாவையும் சுமந்து சென்றது அந்த கம்ஃபர்ட் டாக்ஸி.

"எத்தனை தடவை சொல்லியிருக்கேன். என்னை இப்படி வந்து பார்த்து டார்ச்சர் பண்ணாதேன்னு" என்று தீபாவளிப் பட்டாசாய் வெடித்தாள் நிர்மலா.

"இதுக்கே கோவிச்சுக்கறே. இதே வாய் கொண்டு தான், அன்பே, ஆருயிரே என்றெல்லாம் கூட சொன்னே, இப்ப மட்டும் மட்டமா போய்டனா ?!!!!"

"அதுக்காக அந்த வாயை வெட்டி எறிஞ்சிருவேன்னு நினைச்சியா ?!!! உடலே ரணமானதுக்கப்புறம் ...." சிறிது ஆசுவாசபடுத்திக் கொண்டு, உடல் விம்மினாலும், மனம் இறுகி, உறுதியானாள்.

"இதோ பார், இது கடைசி தடவையா இருக்கட்டும், இனி ஒரு தடவை கூட என்னைப் பார்க்க வராத, நானும் உன் வழியில் வரமாட்டேன்"

"அவ்வளவு ஈ.ஸியா போயிடுச்சு உனக்கு. அது சரி !!! எல்லாம் உன் கைல தான் கண்ணு இருக்கு. எத்தனை நாளைக்கு தான் நீயும் பிடிவாதமா இருக்கிறாய் எனப் பார்ப்போம்."

ஒற்றை அருவியாய் ஓட எத்தனித்த கண்ணீரை கட்டுப் படுத்திக் கொண்டாள். "இதுக்கு மேலயும் தொந்தரவு செய்தால், அப்புறம் போலீஸுக்கு தான் போவேன்".

"போ ... போடி ... இப்படி எல்லார் வீட்டுப் பிரச்சனையும் தீர்க்க தான் போலீஸ் இருக்கு என்ற நினைப்பு !!!!"

'இங்க எங்க போலீஸ் ஸ்டேஷன் இருக்கு, முன்ன பின்னே போயிருந்தா அல்லவா தெரியும் !! யாருகிட்டயாவது கேட்கலாமா ? கேட்கும் சூழ்நிலையிலா இருக்கிறோம். என்ன செய்யலாம். பின் தொடர்ந்த செல்வாவையும் வேறு திட்டாத குறையாக அனுப்பிவிட்டோம்' எண்ணங்கள் சுழல ஒரு முடிவுக்கு வந்தாள் நிர்மலா.

"சரி இப்ப என்ன பண்ணலாம்ன்ற ?!" என்றாள்.

"அப்படி வா வழிக்கு. யூ ஆர் ஸ்மார்ட் ஆல்வேஸ் நிர்மலா. வா, நடந்துகிட்டே பேசலாம்"

ரயில் நிறுத்தத்திலிருந்து வெளி வந்து சாலையில் நடக்கத் தொடங்கினார்கள். வெய்யில், மழையையும் பொருட்படுத்தாமல், ஓரளவுக்கு அந்த நேரத்திலும் ஜனத்தொகை அடர்த்தியாகவே இருந்தது. சிராங்கூன் சாலை, தீபாவளி அலங்காரத்தில் மின்னியது. சாலையின் ஒரு முனையில் ஆரம்பித்து, சில அடி இடைவெளியில் வரிசையாக வண்ணத் தோரணங்கள் சாலையின் மறுமுனை வரை. எவ்வளவு தூரம் இந்த அலங்காரங்கள் தொடருகிறது என சாலையின் ஓரத்தில் நின்று கவனித்தால், கடைசியில் ஒரு புள்ளி போல தான் தோன்றும்.

நடைபாதையில் நிர்மலா நடக்க, சில அடி இடைவெளி கொண்ட அலங்கார வளைவுகளை, ரோட்டில் இறங்கி பின் நடைபாதையில் ஏறி, எனத் தொடர்ந்து கொண்டிருந்தான் மகேஷ். "ரொம்ப சிம்பிள் நிர்மலா. முதலில் முகத்தை சிரிச்ச மாதிரி வச்சுக்க, யாராவது நான் உன்னைத் தொந்தரவு செய்யறேன்னு நெனச்சிடப் போறாங்க ! ரெண்டு ஃபார்ம்ல கையெழுத்துப் போட்டுக் கொடுத்திடு. நான் என் வழி, நீ உன் வழினு போய்கிட்டே இருப்போம்!"


தொடரும் .....

Sunday, October 12, 2008

குட்டி அணிலே ! (குழந்தைகள் கவிதை)


Photo courtesy: http://flickr.com/photos/43555660@N00/468195506

குட்டி அணிலே
சுட்டி நீயே,

மரங்கள் ஏறி
கனிகள் சுவைத்து,

தரையில் தாவி
விதைகள் தேடி,

பொறுக்கும் எதையும்
இருகை பிடித்து,

மருள விழித்து
கொறித்து உண்பாய் !

எங்கள் வீட்டின்
பக்கம் வந்து

மேனி வரிகள்
மினுக்கி இருக்க,

வளைந்து வாலும்
அடர்ந்து இருக்க,

கீச்சுக் குரலில்
தொடர்ந்து கத்தி

உந்தன் குட்டி
அணில்களுக்கு ஊட்டி

ஓட்டின் மேலே
எட்டித் தாவி,

ஏறிப் பறப்பாய்
குட்டி அணிலே !

Tuesday, October 7, 2008

இ.எ.பா - 2008 - ஓடு, ஓடு, ஓடு ... ஓடு போட்ட வீடு ...

எல்லோரும் திண்ணைப் பதிவுகள் போட்டு, படித்துத் திளைத்து, மற்ற வேலைகளில் மூழ்கியிருக்க ... நான் தூசி தட்டி ஓடு அடுக்குகிறேன்.

நம்ம ஊரில், பொதுவா கிராமப்புறங்களில் ஓட்டு வீடு நிறையப் பார்க்கலாம். எங்க ஊரில் உள்ள பழைய வீடுகள், முக்கால்வாசி ஓட்டு வீடுகள் தான்.

நாட்டு ஓடு, சீமை ஓடு என்று இரு வகையில் ஓடுகள் வேய்ந்து அழகுற இருக்கும் வீடுகள். பெரீய்ய்ய்ய வீடுகளாக இருந்தால் இவ்விருவகை ஓடுகளும் இருக்கும். முன் பக்கம் சீமை ஓடும், அதிகம் புழக்கம் இல்லாத பகுதிகள் நாட்டு ஓடுகளிலும் இருக்கும். இதிலிருந்தே உங்களுக்குத் தெரிந்திருக்குமே ?! ஆம், நாட்டு ஓடு விலை குறைவு, சீமை ஓடு விலை அதிகம்.

நாட்டு ஓடு, நம் கணினி கீ‍போர்டில், எண் ஒன்பது மற்றும் பூஜ்ஜியம் ஆகியவற்றில் இருக்கும் round bracket போன்ற வடிவில், அரை அடிக்கும் சற்று குறைவான‌ நீளத்தில் இருக்கும். இன்று இந்த வகை ஓடுகளைக் காண்பது அறிதாய் இருக்கிறது.

சீமை ஓடு, வளைந்து நெளிந்து, அளவில் பரீட்சை அட்டை போல‌, இப்போழுது இருக்கும் அநேக வீடுகளில் இருப்பது.

இவ்விருவ‌கை ஓடுக‌ளும் ஆர‌ஞ்சு நிற‌த்தில், க‌ண்க‌ளைக் க‌வ‌ரும் வ‌ண்ண‌மாக‌ இருக்கும். புதிதாக‌ வேய்ந்த‌ ஓடுக‌ள் நாள் செல்ல‌ச் செல்ல‌, ம‌ழையிலும், வெய்யிலிலும் ஆங்காங்கே க‌ருத்திருக்கும். 'வெய்யில்ல அலையாதப்பா கருத்துருவ' என்று இதைப் பார்த்து தான் சொன்னார்களோ என்னவோ :)) ஆரஞ்சில் கருமையும், ஒருவகையில் அழ‌கைக் கூட்டும் வித‌மாக‌வே இருக்கும்.

எங்கள் வீட்டில் வளவுப் பகுதியில் முன்னர் நாட்டு ஓடுகள் தான் போட்டிருந்தார்கள். பின்னர், சீமை ஓடுகள் தாத்தா இருக்கும்போது (பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்னர்) போடப்பட்டது. பகுதி பகுதியாகப் பிரித்து ஓடு அடுக்குவார்கள். ஒரே நாளில் பிரித்துவிட்டால், வானம் கூரையைப் பிய்க்காமலே ஏதாவது கொட்டிவிட்டது என்றால், என்ன செய்யறது ?!! :)) அதான் முன் ஜாக்கிரதையாக.

என்னது வரிசையா எடுத்து ஒன்னு மேல ஒன்னா அடுக்கறது தானே என்று தோணும். ஆனால் இந்த நான்கு மூலைகளில் அடுக்கும்போது தான், தொழில் திறமை மேம்படும். மழை நீர் சேகரிக்க வகிடுபோல் இடம் விட்டு, ஓடுகளை வெட்டி அடுக்க வேண்டும். நல்ல ஒரு ஆள் கிடைக்கவில்லை என்றால் கோணல் மாணலாகி விடும். இப்பல்லாம் அதையும் கலையா ஆக்கிட்டாங்க. வளைந்து நெளிந்து ஒரு பழைய காலத்து சொம்பு இருந்தா, பல ஆயிரங்கள் கொடுக்க வியாபாரிகள் ரெடி !!!

எப்படியும் வீடு முழுக்க ஓடுகள் மாத்த கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகும். எப்படா முடிப்பாங்க என்று இருக்கும். ஒரு பக்கம் பழைய ஓடுகள பிரித்து அடுக்கியிருப்பார்கள், இன்னொரு பக்கம் புது ஓடுகள். அத்தோடு பத்தாதற்கு குப்பையும், தூசியும் சேர்ந்து கொள்ளும். அந்த வயதில் அதைக் கூடத் தாங்க முடியவில்லை. இப்ப என்னடான்னா, ஊர் முழுக்க renovation என்ற பெயரில் கட்டுமாணம் களை கட்டுகிறது. சென்னையில இருந்து மதுரை போறதுக்குள்ள, அப்பப்பா பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை (இதைப் பற்றி விரிவாக அடுத்த பதிவில் எழுதுகிறேன்).

எங்கள் வீட்டின் எதிர்வீடுகள் அனைத்தும் நாட்டு ஓடுகள் கொண்டவை. இது அன்று. இன்று எல்லோரும் வீட்டை கொஞ்சம் alter செய்து புதுப்பித்து விட்டார்கள். எதிர் வீட்டு திண்ணையில் தான் அதிகம் விளையாடியது. இந்த முறை ஊருக்குச் சென்றபோது, அது காணாமல் போயிருந்தது. ரோடு போடுகிறேன் என இத்தனை ஆண்டுகள் மேலும், மேலும் போட்டு, திண்ணை இன்று அண்டர் க்ரௌண்டினுள் :(

அதேபோல அநேக வீட்டுப் படிகளையும் மண் விழுங்கி, மன்னிக்கவும், ரோடு விழுங்கிக் கொண்டுள்ளது. இங்க எல்லாம் ரோடு புதுப்பிக்கையில, பழைய ரோடை பெயர்த்து எடுத்துவிட்டு, அதே அளவில் புதிய ரோட்டை உருவாக்குகிறார்கள். ஆனால் நம் ஊரில் கதையே வேறு. ஆறேழு படிகள் கொண்ட வீடுகளில் எல்லாம் ஒன்றிரண்டு படிகள் மட்டுமே இருக்கிறது. இதே ரேஞ்சுல போனால், மழை காலங்களில் படகெடுத்து தான் வீட்டுக்குள் செல்ல வேண்டும் :))

சரி ஓட்டிலிருந்து தாவி எங்கெங்கோ போகிறது பதிவு. இவ்ளோ எழுதிட்டு படம் காட்டலேன்னா நல்லா இருக்காது. அதனால, இங்க சில ஓடுகள் படங்கள். மேலும் படங்களுக்கு கொஞ்சம் பொறுத்திருங்கள், மூன்றாம் கண் தளத்தில் பதிந்து, பின்னர் இங்கு சுட்டி தருகிறேன்.


வீட்டு மாடியில் இருந்து ஒரு புறம்.


மாடிப் பகுதி. மாடிக்கு வரும் வழி சற்று தள்ளி தெரிகிறது பாருங்கள்.


மேல் மாடியில் இருந்து பார்த்தால் தெரியும் வளவுப் பகுதி ஓடுகள்.

Sunday, October 5, 2008

இந்தியா என் பார்வையில் - 2008 - சிங்கத்தை சந்தித்தோம் ...

இம்முறை இந்தியாவிற்கு சென்ற போது, என்ன வேலை இருந்தாலும் சரி, தமிழ்மணம் நன்கு அறிந்த ஒரு சிறந்த‌ மனிதரையும் அவரது துணைவியாரையும் சந்திக்காமல் திரும்பக் கூடாது என்று எண்ணியிருந்தேன்.

முதல் இரண்டு வாரங்கள் நேரம் சாத்தியப்படவில்லை. மதுரை சுப்ரமணியபுரத்தில் (படம் இல்லை, நிஜ இடம்) ஒரு கணினி மையத்தில் தமிழே இல்லை, தமிழ்மணம் பார்த்ததற்கான சாத்தியம் சிறிதும் இல்லை. மூன்றாவது வாரம் அவருக்கு இங்கிருந்து ஆங்கிலத்தில் மின்மடல் அனுப்பினேன். தந்தி போல "we are here" என்று.

சாயந்திரம் அவரிடம் இருந்து தவறாது தொலைபேசி அழைப்பு. ஏற்கனவே அவர‌து குரலை இணையத்தில் கேட்டிருந்ததால், "ஹலோ" எனும் போதே கண்டுகொண்டேன். அட நம்ம "சீனா ஐயா".

ஒரு சிறு பரிசோதனைக்காக மதுரை அப்போலோ சென்றபோது, இரண்டு நாட்கள் அங்கு செலவு செய்யும்படி ஆகிவிட்டது (இது பற்றி கூட ஒரு தனிப் பதிவு போடலாம் !). அங்கிருந்து அவர்கள் வீடு பக்கம் என்பதால், பரிசோதனையின் முடிவில் சீனா ஐயாவின் வீட்டுக்கு வருவதாகக் கூறினோம்.

இன்முகமாய் வரவேற்றனர் சீனா ஐயாவும் அவர் துணைவியார் செல்வி ஷங்கர் அம்மாவும்.

இந்தியாவின் தலைசிறந்த வங்கி ஒன்றில் உயர்ந்த பதவியில், பணியில் இருப்பவர் சீனா ஐயா. சென்னையில் முப்பதாண்டுகளுக்கும் மேலாய் பள்ளி ஆசிரியையாக இருந்து, கணவருக்காக வி.ஆர்.எஸ் வாங்கி மதுரைக்கு வந்த செல்வி ஷங்கர் அம்மா. இருப்பினும், எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் நம்மைப் போன்ற சாதரண மனிதராய் இருப்பது இவர்கள் இருவரின் சிறப்பு.

இணையத்தினால் அறிமுகம் நிறைய இருந்ததால், அதுபற்றி அதிகம் பேசவில்லை யாவரும்.

புதுமனை புகுந்து சில நாட்களே ஆனதால், கொஞ்சம் அதுபற்றி பேசினோம். ஆல்பம் காண்பித்தனர். சொந்தங்களைக் காட்டி மகிழ்வது போல, அதில் வந்திருந்த இணைய நட்புக்களையும் காட்டி ஆனந்தித்தனர் இருவருமே. "இவர் நந்து. தன் குட்டிப் பெண் நிலாவின் போட்டோக்கள், பல ஆயிரங்கள் பதிந்திருக்கிறார். இவர் சிவமுருகன், பல தளங்கள் வைத்திருக்கிறார், தற்போது பங்களூரில் வசிக்கிறார்", மேலும் பாசமலர் வந்திருந்தாங்க என இணைய நட்புக்களைச் சொல்லச் சொல்ல வியப்பு மேலிடத்தான் செய்கிறது.

வீட்டைச் சுற்றிப் பார்த்தோம். அழகாக, அடக்கமான ஒரு அப்பார்ட்மென்ட் வீடு. இங்க பக்கத்தில, அது இருக்கு, இது இருக்கு என்றாலும் எங்களுக்கு மிகவும் பிடித்தது, அப்படியே அருகில் ஓடும் வைகை ஆறு தான். அப்படியே இங்க இழுத்து வந்து எங்க அப்பார்ட்மென்ட் பக்கதில ஓட வைக்க ஆசை. ஹிம்ம்ம்ம்.

லண்டனில் வசிக்கும் தம் இரு மகள்களின் குடும்பத்தாரையும் போட்டோவில் அறிமுகம் செய்து வைத்தனர். இப்ப தான் வந்திட்டு போனார்கள். "கலகலனு இருந்தது வீடு. இப்ப பாருங்க எவ்ளோ அமைதியா இருக்கு". இருந்த சில மணி நேரங்களில் பிள்ளைகள் பற்றி அதிகம் பேசினர். "யாரும் அருகில் இல்லாமல், பாவம் கஷ்டப்படுகிறார்கள். சீக்கிரம் அங்கு சென்று அவர்களுக்கு உதவியாய் இருக்க வேண்டும்." இந்த உறுதி அவர்கள் பேச்சில் உணரமுடிந்தது.

எல்லோருக்கும் இவர்கள் போல் பெற்றோர் கிடைத்தால் எப்படி இருக்கும் !!! சரி, ரொம்ப பேராசை எல்லாம் வேண்டாம். இவர்களின் பிள்ளைகள் கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.

இந்தியா என் பார்வையில் - 2008 - காணாமல் போகும் தெரு ...


Photo: http://www.leelau.net/chai/india.htm

தெருவோரக் குப்பைகளும்
தேங்கிய மழை நீரும்,

தெருவடைக்கும் வாகனங்கள்
தேர் போல ஊருவதும்,

இருபக்கப் பள்ளங்கள்
எமன் போல அமைவதுவும்,

கோலமிடும் வாசல்கள்
குட்டிக் கடைகள் ஆனதுவும் ...

மேடு பள்ளம் பலவுண்டு
மேட்டுக் குடியும் தானுண்டு,

ராமெ ஆண்டாலும்
ராவணெ ஆண்டாலும்,

எனக்கேன் அக்கவலை
என்கவலையே ஏராளம்,

என்றே மனநிலையில்
இருக்கிறோம் அனைவருமே ...

நாட்டு வளர்ச்சியிலே
நம் பங்கும் ஒன்றுமில்லை,

வீட்டு வளர்ச்சி காண
வளர்க்கிறோம் சுயநலத்தை,

தெருவடைக்கும் நம்செயல்கள்,
வீட்டோடு அடைக்கும் நம்மை,

பின்னாளில் என்றாவது
வெளிக்காற்று வாங்க,

வீதியில் நடக்கலாம் என்றால்கூட,

அன்று ...

வீதி என்பது இல்லாது போகலாம் ...

Thursday, October 2, 2008

சிங்கப்பூர் 2008 என் பார்வையில்


Photo: http://www.carolin-witzke.de/Webcard/Subpages/Travel/Singapore.html

மூன்றாண்டுகள் கழித்து சிங்கப்பூர் செல்கிறோம். சாதாரண இடங்களில் பெரிதான மாற்றங்கள் எதுவுமில்லை. அதே H.D.B. அடுக்குமாடிக் குடியிருப்புக்கள், அதே ஹாக்கர் சென்டர்கள், அதே அலுவலகங்கள். வழக்கம் போல ஊரைச் சுற்றி எங்கிலும் கட்டுமானப் பணிகள்.

நீண்ட நாட்களாக, வருகிறது எனச் சொல்லிவந்த கஸினோ விரைவில் திறக்கப் படும் என்கிறார்கள். பின்னே ! எல்லோரும் ஜென்டிங்கில் அல்லவா இன்றுவரை பணத்தை அவிழ்க்கின்றனர். சன்டெக் சிட்டியில், வானை நோக்கி பந்து பிடிக்கக் குவித்திருக்கும் கை விரல்கள் போல ஐந்து கட்டிடங்கள் பார்த்திருக்கிறீர்களா டாக்ஸி ஓட்டுநர் கேட்டார். அவற்றை காணும் வாய்ப்பு இந்த முறையும் கிடைக்கவில்லை.

அனைத்து M.R.T. நிலையங்களிலும் ஜன நெருக்கடி அதிகரித்திருக்கிறது. எங்கும் கூட்டம், எதிலும் கூட்டம். ஹிந்தி அதிகம் காதில் விழுகிறது எங்கிலும். ஒரு சுற்றுலாத் தளத்திற்கு சென்றால், பாதிக்கும் மேல் நம்ம இந்திய மக்கள் தான். குறிப்பாக ஹிந்திக்காரர்கள்.

ஆன்லைனில் விசா தருகிறார்கள். அள்ளி அப்புகிறது ஜனத்தொகை. முன்னர் வெகு சிரத்தை எடுத்து நிரந்தரக் குடியுரிமை பெறவேண்டும். இப்போது வெகு சுலபமாக இருக்கிறது. தீப்பெட்டி வீடுகள் விலை ஏற்றத்தினால், விற்கலாம் என்று இருந்தவர்கள் கூட, இன்னும் கொஞ்சம் ஏறட்டும் என்று விற்காமல் இருக்கிறார்கள்.

சீனர்களின் முகத்தில் வழக்கம் போல சிரிப்பில்லை. ரயில்களில், ஒருவர் எழுந்து இறங்க, அதே இருக்கையில் அமரும் மற்றொருவர், முதலில் இருக்கை நுனியில் அமர்வார். நேரம் செல்லச் செல்ல, கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து நன்கு அமர்வார். இன்றும் இப்பழக்கம் நடைமுறையில் உள்ளது :))

சீன இளைஞர்களிடம் ரொமான்ஸ் கொறஞ்ச மாதிரி தோன்றுகிறது ! சாதாரணமா பஸ்ஸிலோ, ரயிலிலோ குறைந்த‌து நாலைந்து ஜோடிகளாவது சரிந்து விழுந்திருப்பர். இன்று, ஒரு ஜோடி பார்ப்பதே அபூர்வமாயிருக்கிறது.

முன்னர் பார்த்த அளவிற்கு சுத்தம் இப்பொழுது இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. பஸ் நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், கடைகள் என ஆங்காங்கே குப்பைகள் கண்களில் படுகின்றன.

குருணை தூவ, கொக் கொக் என்று கத்தி, டக் டக் என்று கொத்தி உண்ணும் கோழி போல கைத்தொலைபேசிகளில் விரல்களில் விளையாடி இன்றும் டெக்ஸ்ட் மெஸேஜ் அனுப்புகின்றனர்.

எவ்வளவோ ஆயிரங்களில் டாக்ஸி ஓடினாலும், இன்றும் குறிப்பிட்ட நேரங்களில் டாக்ஸி பிடிப்பது ஒரு சாகசமாகவே இருக்கிறது. அதற்காக சொந்தமாக வாகனம் வாங்குபவர்களின் எண்ணிகையும் குறைந்தபாடில்லை. எல்லோரும் புதிதாக வாங்கதான் விரும்புகிறார்களாம். யாருக்கும் பயன்படுத்திய கார் வாங்க விருப்பம் இல்லையாம். எல்லாம் மெர்ஸிடிஸ், லெக்ஸஸ் போன்றவை. பாருங்க இதோ, அதோ என்று டாக்ஸி ஓட்டுநர் நமக்குக் காட்டுகிறார்.

ஞாயிறு மாலைகளில், தேக்கா மார்க்கெட் செல்ல எந்த ஒரு டாக்ஸிகாரரும் வரமாட்டார். இன்றும் அதே நிலை தான். நாங்கள் சென்று இறங்கியது ஞாயிறு மதியம். 'அங் மோ கியோ'விலிருந்து மாலை சிராங்கூன் செல்லலாம் என டாக்ஸிக்கு நின்றால், பச்சை தலை எழுத்து இருந்தாலும், நம்மைப் பார்த்தவுடன் (கண்டிப்பா இவன் தேக்கா தான் போறான் என்றெண்ணி) நிற்காமல் பறக்கின்றனர் :(

ரயிலில் கூட்டத்தோடு பயணித்து சென்றால், இறங்கிய பின்னும் நடக்க முடியாத அளவிற்கு எங்கும் மக்கள் வெள்ளம். காய்கறி வியாபரம் கொடி கட்டிப் பறக்கிறது. வரிசையாக நகைக் கடைகள் அழகாக ஜொலிக்கிறதே அன்றி வாங்குவோரைக் காணவில்லை.

கோவில்களிலும் கூட்டம் அலை மோதுகிறது. முஸ்தாபா ஷாப்பிங் பற்றி கேட்கவே வேண்டாம். வார நாட்களிலும், பகல் என்ன, இரவென்ன கூட்டத்திற்கு குறைவில்லை. ஆனால் ... நகை செக்ஷன் பக்கம் யாரும் அதன் அழகை பார்க்க கூட போக மாட்டேன் என்கிறார்கள். மூன்று ஆண்டுகள் முன்னர், ஒரு கிராம் 19 வெள்ளி, இப்போ கிட்டத்தட்ட 40 வெள்ளி.

தேக்கா மார்க்கெட்டும் கட்டுமானப் பணிகளில் மூடிக் கிடக்க, வங்கி ஏ.டி.எமில் இருந்து பணம் எடுக்க ரொம்ப சிரமமாகப் போய்விட்டது. அவ்வளவு கூட்டத்திற்கும் ஒரே ஒரு ஏ.டி.எம். அதுவும் குட்டி இந்தியக் கடை அடுக்குகளுக்குள், அனுமார் வால் போல நீண்ட க்யூ வேறு.

காந்தி, பனானா லீஃப் போன்ற உணவகங்கள் வழக்கம் போல கூட்டம் இருக்கிறது. ஆனால் ஆந்திரா கரி, கோமளாஸ் போன்ற உணவகங்கள் காற்று வாங்குகிறது. யீஷுன் பனானா லீஃபிலும் க்யூ கட்டி வாங்குகின்றனர் இன்றும்.

படப் பொட்டியை எடுத்துச் சென்றும், நேரமின்மை காரணத்தால் பொறுமையாக அனுபவித்து சிங்கப்பூரைச் சுட முடியவில்லை. அங்கிருப்பவர்கள் போல நம்மையும் பி.ஸி.ஆக ஆக்கிவிட்டார்கள் :))