Friday, July 10, 2009

பரவால்ல விடுங்க பாஸூ ...


Photo Thanks: www.apexwealthmgmt.net

அந்த அலுவலக அறையில் ஏழு பேர் இருந்தனர். ந‌ம்மூர்க்கார‌ங்க‌ மூனு பேரும், வெள்ளைக்கார‌ங்க‌ நாலு பேரும். இந்த‌ காம்பினேஷ‌ன்லேயே புரிந்திருக்கும் அது ஒரு மென்பொருள் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ அலுவ‌ல‌க‌ மீட்டிங்க் என்று. உங்கள் நம்பிக்கையைத் தகர்க்க விரும்பவில்லை :)) அதே தான் !

'இப்ப என்ன சொல்லிட்டேனு இவ்ளோ கோபப்படறான். திடீர்னு டென்ஷனாகிட்டான்' என்று நினைத்திருந்தான் மூர்த்தி.

வெள்ளைக்கார‌ர்க‌ள் ஆளாளுக்குப் பார்த்துக் கொண்ட‌ன‌ர்.

மூச்சு ஏற இறங்க, காற்றோடு கலந்த குரலில் "அதெல்லாம் முடியாது. அதெப்படி இந்த ப்ரோக்ராம் ஈஸியா தகர்த்திடலாம்னு சொல்றீங்க‌. இத டிஸைன் பண்ணதே நான் தான். யாரும் உள்ள புகுந்து உடைக்க முடியாது. முடிஞ்சா தகர்த்திக் காட்டுங்க‌. ஆங்..." என்று சவால் விட்டுக் கொண்டிருந்தான் ச‌ர‌வ‌ண‌ன்.

இந்தியர்ளோடு வேலை செய்வ‌து தான் க‌டின‌மோ ?! இதே வெள்ளைக்காரர்கள் என்றால், பேச‌வும் செய்வாங்க‌, கேட்க‌வும் செய்வாங்க‌. தாமரை இலை நீராய் இல்லாமல், ந‌ம்ம‌ ஆளுங்க‌ ஏன் இப்ப‌டி எல்லாத்தையும் பெர்ச‌ன‌லா சொன்ன‌ மாதிரி எடுத்துக் கொள்கிறார்க‌ள் !

"சாஃப்ட்வேர் என்னிக்கு ரிலீஸ் ப‌ண்றோம் !" என்றான் ராப‌ர்ட்.

"ரிலீஸ் டேட் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். மூர்த்தி சொல்வ‌தும் ச‌ரி தான், எதுக்கும் இன்னொரு ரௌண்ட் டெஸ்டிங் ப‌ண்ணிடுங்க" என்றாள் கேத்தி.

"ச‌ர‌வ‌ண‌ன் என்ன பெரிய ஆளா ? அவர்‌ ப்ரோக்ராம்ல சிறு குறை இருக்குனு சொன்னா, தாங்க முடியலையே ! ஒன்னு ச‌ரி செய்கிறேன்னு சொல்லனும். இல்லேன்னா நீ ச‌ரி ப‌ண்ணிக் கொடுனு சொல்ல‌னும். அத‌விட்டுட்டு ஏன் இப்ப‌டி மீட்டிங்கில் எறிந்து விழ‌ணும். நல்ல வேளை 'நக்கீரன்' மாதிரி கேத்தி வந்து, தப்பு தப்பு தான்னு சொல்லி காப்பாத்தினாங்க ! " என்று வெளியே வந்து புல‌ம்பினான் மூர்த்தி த‌ன் ந‌ண்ப‌ன் அனீஷிட‌ம்.

"இன்னிக்கு நேத்து க‌தையா. அவ‌ன் போக்கிலேயே போவோம். பாரு, நீ கூட தான் பெர்சனலா எடுத்துக்கற ... ப‌ர‌வால்ல விடுங்க‌ பாஸு" என்று அனீஷ் மூர்த்தியைத் தேற்றினான்.

***

"ராப‌ர்ட், நீங்க இப்ப தான் இன்டர்ன்ஷிப் முடிச்சிட்டு இங்க சேர்ந்திருக்கீங்க‌. கத்துக்க வேண்டியது நிறைய இருக்கிறது. ஆனா இந்த‌ப் ப‌ச‌ங்க‌ எத்த‌னை வ‌ருஷ‌மா இருக்காங்க‌னு தெரியுமா ? இவ‌ங்க‌ அடிச்சிக‌றாங்க‌ளேனு, த‌ய‌வு செய்து உள்ளே புகுந்து ப‌ஞ்சாய‌த்து ப‌ண்ண‌லாம் என்று ம‌ட்டும் நெனைக்காதீங்க‌. ந‌ல்ல‌ வேளை மீட்டிங்கில் அமைதி காத்தீர்க‌ள்."

"என்ன இருந்தாலும், ஒரே அலுவலகத்துக்குள்ள இப்ப‌டி இவங்க அடிச்சிக்க‌ற‌து க‌ம்பெனி வ‌ள‌ர்ச்சியை பாதிக்கும்" என்றான் ராப‌ர்ட்.

"இந்திய‌ர்க‌ள் எப்ப‌வுமே உண‌ர்ச்சி பூர்வ‌மான‌வ‌ர்க‌ள். அவங்க‌ போக்கிலேயே விட்டு தான் போக‌ணும். க‌ம்பெனியுடைய‌ வ‌ள‌ர்ச்சி அவ‌ங்களுடைய‌ வ‌ள‌ர்ச்சி தான். இதையும் அவங்க‌ கிட்ட‌ சொன்னா, அதுக்கும் அடிச்சிகுவாங்க‌ளோ என்ன‌வோ. ப‌ர‌வால்ல‌ விடுங்க‌ பாஸு..." என்று கண்கள் சுருக்கிச் சிரித்து, தன் இளைய‌ த‌லைமுறையைத் தேற்றினாள் கேத்தி.

Wednesday, July 8, 2009

நீயா ? நானா ? -- அப்பாக்கள் பாஸாட்டம் ஆடுகிறார்களா ?

காலத்தின் பயணத்தில் எவ்வளவோ சகிப்புத் தன்மையை நாம வளர்த்துகிட்டாலும், சில நேரங்களில், சில மனிதர்களின் செயல்கள் நம்மை ரொம்பவே அமைதி இழக்கச் செய்துவிடுகின்றன‌. சரீ, பில்டப் நிறுத்திக்கறேன் :))

சமீபத்தில் பார்த்த "நீயா‍ ? நானா ?" நிகழ்ச்சி "அப்பா பாஸாட்டம் ஆடுகிறாரா ?" தலைப்பு இதுவல்ல, இதுபோல ஒன்னு :))) ரெண்டு விச‌ய‌ங்க‌ள் ந‌ம்ம‌ ச‌கிப்புத் த‌ன்மையையும் மீறி சோதித்த‌து.

முதலாவது, ஒரு கட்டத்தில் விழுந்து விழுந்து கோபிநாத் சிரிக்க, என்னாச்சுனு நாங்க பதறிபோய், ஏற்கனவே டி.வி. திரையில் ஒட்டிக்கிட்டிருந்த கண்களை, மேலும் அழுத்தி விழுந்து விடாமல் ஒட்டிப் பார்க்க, 'சின்ன இடைவேளைக்குப் பிறகு'னு, சைக்கிள் கேப்ல ஆட்டோ வேற (வேற ஒன்னும் புதுசா கெடைக்கலபா) ....

'அப்பாக்கள் ஔட் டேட்டட் என்கிறதுக்கு இத விட வேற என்ன வேணும்'னுட்டு மேலும் இடி இடி என சிரிப்பு !!! ஏன் ? ஏ.இ.கொ.வெ ??? ஒரு அப்பாவிற்கு மைக்கை சரி வர பயன்படுத்தத் தெரியவில்லை ! இதுக்கு தான் இத்தனை அலப்பரை. ரொம்ப சி.பு.த.இ ஓய் !!!!

அப்பாக்க‌ள் ஔட் டேட்ட‌ட் ஆக‌ இருப்ப‌தால் தான், பிள்ளைக‌ள் அப் டு டேட் ஆக‌ இருக்க‌ முடியுது ! ந‌ல்ல‌ வீடு வேணும், வ‌ண்டி வேணும், செல்போன் வேணும், ஜிமிக்கி வேனும், ச‌ல்வார் வேனும், செருப்பு(க‌ள்) வேணும் ... ஆனா "ஏன் ?" அப்ப‌டினு ஒரு வார்த்தை கேட்டுர‌ப்ப‌டாது.

இரண்டாவது, "பொட்டு இப்படி வச்சா நல்லா இருக்கும். செல் போன் அதிகம் பயன்படுத்தாதீங்க. ராத்திரில சீக்கிரம் வீட்டுக்கு வாங்க" இப்படீனு ஒரு அப்பா சொல்ல ... "நிறுத்து ... இதெல்லாம் உங்களுக்கு அதிகமா தெரியல ... இத தீர்மானிக்க நீங்க யாரு சார்" என்றாரே பார்க்கலாம். "உன் பிள்ளைக்கு நீ எப்படி டா பேர் வைக்கலாம்"ன்கிற மாதிரில இருக்கு !!!

ஆரம்பத்தில விட்டாலும் பிறகு பிடித்தார் ஒரு அப்பா. "ஒரு அலுவ‌ல‌க‌த்தில் பாஸ் திட்டிட்டான்னா, இவ‌ங்க‌ வேலைக்கு போகாம‌ இருப்பாங்க‌ளா ? என் சிறுவ‌ய‌தில் ஒரு நூறு ரூபாய் இல்லாம‌ல் ப‌ட்ட‌ க‌ஷ்ட‌ம் என‌க்குத் தான் தெரியும். என் க‌ஷ்ட‌ம் என் பிள்ளைக‌ள் ப‌ட‌க்கூடாதுனு தான் இத்த‌னை செய்கிறோம் பிள்ளைக‌ளுக்கு. அவர்கள் தவறுதலான வழியில் செல்கையில், நாங்க‌ ஏன்னு கேட்க‌ கூடாதா ?"

யாராவ‌து ப‌தில் சொல்ல‌ணுமே ! ம்.ஹிம்.

வ‌ழ‌க்க‌ம் போல‌ ந‌டுவில‌ நாலு அப்பா, அம்மாக்க‌ள அழ‌விட்டு ... ப்ளீஸ் இதைத் த‌விர்த்துவிடுங்க‌ள். அய‌ல‌க‌த்து டி.வி.க்க‌ளை அப்ப‌டியேவா காப்பி அடிப்ப‌து !

உலகம் முழுக்க மதர்ஸ் டே, எர்த் டே ஃப்ரீ ஏர் டே, இப்படி என்னன்னெவோ டேக்கல் படு பிரபலம். ஆனா ஃபாதர்ஸ் டேயும் வருது ! அது பாட்டுக்குப் போகுது. இங்க கூட ஃபாதர்ஸ் டே பத்தி அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்.

சில‌ வீடுக‌ளில் மோச‌மான‌ அப்பாக்க‌ள் இருக்கிறார்க‌ள். அத‌ற்காக, ந‌ட‌ந்த‌ இந்த‌ நிக‌ழ்ச்சியில், ஒட்டு மொத்த‌ அப்பாக்களையும் கூப்பிட்டு அவ‌மான‌ப்ப‌டுத்தியதாக‌வே ஆகிற‌து :((

Monday, July 6, 2009

மைக்கேல் ஜாக்ஸன் - நடனப் புயலும், ஓய்வும் !



பாடலில் பரவசம்
மேடையில் நவரசம் -- உன்
ஆடலில் உல‌கே
ஆடியது நிதர்சனம் !

குதூகலிக்கும் குழ‌ந்தைத்த‌ன‌ம்
சிறுவயதில் ம‌ற‌ந்தாய் -- உன்
சிலிர்க்கும் நடனத்தில்
உல‌கையே க‌வ‌ர்ந்தாய் !

திகிலூட்டும் த்ரில்லர்
சிலிர்ப்பூட்டும் டேஞ்சரஸென -- உன்
அற்புத‌ பாட‌ல்க‌ளில்
கிறங்க‌(வும்) வைத்தாய் !

ஒவ்வொரு அசைவிற்கும்
ஓராயிர‌ம் ப‌யிற்சி -- உன்
ஒத்திகை ந‌ட‌ன‌ங்களிலும்
அத்துணை ஈடுபாடு !

பொங்கும் மாக்கடலில்
திரண்டது நீரலை -- உன்
உலுக்கும் தோள்களில்
உருண்டது கடலலை !

நிலவிருக்கும் வரை
நினைவு இருக்கும் -- உன்
நீந்தும் கால்களின்
நிலவு நடனத்தில் !

ஈடிலா‌ வ‌ள‌ர்ச்சி
ஈட்டிய‌து ப‌ல‌கோடி -- உன்
வாழ்க்கையும் உழன்றதே
அனுதினம் அலைமோதி !

சீறிப் பாய்ந்து
சிருங்காரம் செய்து -- உன்
நடனம் (நெஞ்சில்) நிறுத்தி
ஓய்வாய் புயலே !

தூற்றுவார் தூற்ற
போற்றுத‌ல் நிலைநிறுத்தி -- உன்
ம‌ன‌ம் அமைதியில்
துயில்வாய் புய‌லே !

உனைத்துர‌த்தித் துன்புறுத்த
இனி எவருமில்லை -- உன்
க‌ல்லறையும் இனி(தாக‌)
காவிய‌ம் பாடிடுமே !

-----

மேலே இருக்கும் மைக்கேலின் படம், 93-ல் வரைந்தது. அவரோட படம் வரைந்தோமே என்றது மட்டும் நினைவில் இருந்தது. கால ஓட்டத்தில் எங்கே வைத்தோம் என்பது மறந்தே போனது ! அங்க தேடி, இங்க தேடி, நல்ல வேளைக்கு எங்கும் போய்விடவில்லை. படம் இருந்தது என்னுடனே !

Friday, July 3, 2009

ஈர்பதினாறு கேள்விகளும் ஹி.ஹி. பதில்களும்

கேள்வி கேக்கறது ஈ.ஸி. பதில் சொல்றது தான் கஷ்டம் இல்லையா ? இதுவரை பதில் சொன்னவங்க எல்லோருக்கும் அது தெரிந்திருக்கும். இந்த ஆட்டதில நம்மையும் சேர்த்துக்கிட்ட கவிநயா அவர்களுக்கு நன்றி! சரி, ரொம்ப பில்ட்டப் கொடுத்து உங்கள சீண்ட விரும்பவில்லை :)) கேள்விகளுக்குள் புகுந்து செல்வோம் ...

*****

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

எந்த‌ப் பெய‌ர் ? சொந்த‌ப் பெய‌ரா ? (வ‌லைக்கு) வ‌ந்த‌ பெய‌ரா ? (எப்ப‌டீ !!! எதிர் கேள்வி கேக்க‌லேன்னா ந‌ம‌க்கெல்லாம் தூக்கம் வ‌ராது, ஆங்ங்ங்ங்ங் :))

இர‌ண்டு பெய‌ர்க‌ளுமே பிடிக்கும். முன்னது, கோபித்து மலை ஏறிய‌ கும‌ர‌னின் மாற்று பெய‌ர். தாத்தா(க்கள்) பாட்டி(க்கள்) அப்பா அம்மா எல்லாரும் சேர்ந்து வைத்த‌ பெய‌ர். பின்ன‌து, ஏக‌ப்ப‌ட்ட‌ நாள் ரூம் போட்டு உட்கார்ந்தெல்லாம் யோசித்த‌தாக‌ நினைவில்லை. அழ‌கிய‌ ப‌ர‌த‌க் க‌லை முத‌ல், தெருவில் ஆடும் வித்தைக்கார‌ர் வரை, கால்க‌ளில் க‌ட்டியிருக்கும் வ‌ரை ஒன்றும் தெரியாது, ஒரு அடி எடுத்து வைத்தால், 'ஜ‌லீர்'என்று ஒலி எழும்பி, உள்ள‌த்தின் எல்லை வ‌ரை சென்று ஒரு உண‌ர்வைக் கிள‌ப்புமே அந்தச் 'ச‌த‌ங்கை' ஒலி ரொம்ப‌ப் பிடிக்கும். என‌து ப‌திவுக‌ளில் அந்த‌ உண‌ர்வைக் கொண்டு வ‌ர‌ணும் என்ற‌ எண்ண‌மும் இருக்கிற‌து. இதுவ‌ரைக்கும் சாத்தியமாகி இருக்கிற‌தா என‌த் தெரியவில்லை ! நீங்க‌ள் தான் சொல்ல‌ணும்.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

நினைவில் இல்லை.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்ப‌வே, அதுவும் பள்ளி நாட்களில். கணினி ஆதிக்கத்தில் இப்பொழுது த‌லை எழுத்து போல‌ ஆனது :)) அப்பொழுதெல்லாம் ஜெராக்ஸ், பேக்ஸ், கணினி எல்லாம் ஆதிக்கத்தில் இல்லை. வீட்டில் ஏதாவது விஷேஷம் என்றால் நெருங்கிய சொந்தங்களுக்கு கைப்பட எழுதி தான் அழைப்பு அனுப்புவார்கள். சில வாண்டுகளை அழைத்து தான் எழுத வைப்பார்கள். அதில் நானும் சேர்த்தி :) இப்பல்லாம் ஒரு பத்து பேருக்கு அனுப்பனும் என்றால் கூட அச்சிட்டோ, மின்னஞ்சலிலோ தான் :((

4. பிடித்த மதிய உணவு என்ன?

ந‌ல்ல‌ வேளைக்கு 'சுவை மொட்டுக்கள்' (அதாங்க‌ டேஸ்ட் ப‌ட்ஸ்) இன்னும் மாற‌லை. சொர்க்க‌மே என்றாலும் ந‌ம்ம‌ ஊரு சாப்பாடு போல‌ வ‌ருமா ?

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ஹாய், பய் என்பது உட‌னே வ‌ரும் :)) நீடிக்கும் ந‌ட்புக‌ளுக்கு நாளாகும்.

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

சந்தேகமே இல்லை பின்ன‌து தான். ம‌டேர் ம‌டேனு பின்ன‌ந்த‌லையில் விழுந்து, சிலுசிலுவென‌ சிலிர்ப்பூட்டி செல்லுவ‌தால்.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

க‌ண்க‌ள். உடை. (ஆள் பாதி, ஆடை பாதி ... எப்ப‌டீ ? :))

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

ரெண்டுத்திலும் நிறைய‌ இருக்கே ?!

பிடித்தது: சோக‌மா வ‌ந்து உத‌வினு கேட்டா உட‌னே ந‌ம்பி செய்ய‌ற‌து. (பிற்பாடு ந‌ம்ம‌ல‌ ஏமாத்திட்டாங்க‌னு தெரிஞ்சா வ‌ரும் பாருங்க‌ ரௌத்ர‌ம். ஹிம்ம்ம்.)

பிடிக்காத‌து: ம‌ன‌சு புண்ப‌டுமாறு பேசிவிடுவோமோ என்று அநேக‌ இட‌ங்க‌ளில் (ரொம்ப‌ நெருக்க‌மான‌வ‌ங்க‌ த‌விர்த்து) மௌனியாய் இருப்ப‌து.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்தது: அவ‌ர்க‌ளின் அன்பு :)
பிடிக்காத‌து: அவ‌ர்க‌ளின் அள‌வுக‌ட‌ந்த‌ அன்பு :))

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

என‌து கிராம‌ம்.

11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

க்ரே டி.ஷர்ட்; மிலிட்டரி க்ரீன் கால்சட்டை.

12. என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

பார்ப்பது: க‌ணினித் திரை.
கேட்பது: விர‌ல்க‌ளின் ந‌ட‌ன‌த்தில்,
விசைப‌ல‌கை எழுப்பும் ஒலி :)

13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

எல்லா வ‌ண்ண‌ங்க‌ளிலும் ஒவ்வொன்றாய். ரொம்ப‌ ஓவரோனு நெனைச்சிடாதீங்க. கேள்வியிலேயே பண்மை இருக்கே :)

14. பிடித்த மணம்?

காற்றில் க‌ரைந்த‌ ரோசாப்பூ வாச‌ம்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

நாகு - ரிச்மண்ட் வெர்ஜீனியாவில் நிறைய பேரை வலை(வீசி)க்கு இழுத்து வந்தவர். நம்மையும் விடவில்லை ! கொஞ்ச காலம் அமைதி காத்த தமிழ்சங்க ப்லாக் தற்போது சூடுபிடித்திருக்கிறது. புதுப் புது பதிவர்கள் வந்து கலக்குகிறார்கள். இந்த பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரர். சமீபத்தில் தமிழ்மண நட்சத்திரமாக ஜொலித்தவர்.

லாவண்யா - மின்னலெனத் தோன்றி உயிரோடையாக ஓடிக் கொண்டிருப்பவர். சங்ககாலப் பாடல்களில் நாட்டம் கொண்டவர். ரசனை மிகுந்த எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்.

அன்புடன் அருணா - கலகலப்பான எழுத்துக்கு சொந்தக்காரர். பின்னூட்டுவதிலும் தான். நன்றாக படம் வரைபவர் (சேம் ப்ளட்). அதற்கென தனித் தளமும் வைத்திருக்கிறார்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

க‌விந‌யாவின் ப‌திவில் தாள‌த்தோடு இணைந்த‌ க‌விதைக‌ள், மனதில் நிற்கும் க‌தைகள் மற்றும் அவ‌ர‌து எளிமையான‌ வ‌ரிக‌ள் பிடிக்கும்.

17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட், டென்னிஸ், கால்ப‌ந்து ...

18. கண்ணாடி அணிபவரா?

ஆம்.

19. எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

ஹ்யூம‌ர், ஆக்ஷ‌ன், ரிய‌லிஷ‌ம்.

20. கடைசியாகப் பார்த்த படம்?

ப்ரகாஷ் ராஜின் 'வெள்ளித் திரை'.

21. பிடித்த பருவ காலம் எது?

வச‌ந்த‌கால‌ம் தான்.....

ப‌ட்ட‌ ம‌ர‌ம் துளிர்த்து,
ப‌ட்டுப் பூப் போலே,
மொட்டாய் சுருள் இலைக‌ளும்,
கொத்தாய் ம‌ல‌ரும் கால‌ம் !

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

ஹிம். ந‌ல்லா கேட்டிங்க‌. புத்தக‌ம் வாசித்து ரொம்ப‌ நாளாச்சு போங்க‌.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

எப்பல்லாம் புதுசா படங்கள் எடுக்கிறோமோ அப்ப‌ல்லாம்.

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தது: குழ‌லினிது யாழினிது எனினும் குழ‌ந்தையின் குதூக‌ல‌த்துக்கு இணை ஏது ?
பிடிக்காதது: அழுகை.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

பெரிய‌ண்ண‌ன் ஊரு தான் :)

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

போட்டிக்கோ, போர்க்க‌ள‌த்துக்கோ போற‌வ‌ங்க‌ளுக்கு தான் த‌னித் திற‌மை வேண்டும் என்பது என் எண்ணம். 'நான் உங்க‌ளில் ஒருவன்' அப்ப‌டினு சொல்ற‌துக்கு தான் ஆசைப்ப‌டுகிறேன்.

இருப்பினும், கொஞ்ச‌ம் வ‌ரைவேன். கொஞ்சம் (சாக்பீஸ்ல) குடைவேன். கொஞ்ச‌ம் (த‌மிழில்) எழுதுவேன். கொஞ்ச‌ம் ப‌ட‌ம் காண்பிப்... இல்லை, இல்லை, ப‌ட‌ம் பிடிப்பேன். கொஞ்ச‌ம் ச‌மைப்பேன். ஆனால், எதிலும் முழுமை இல்லை இன்றுவ‌ரை.

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நிறைய்ய‌ !!! அர‌சிய‌லாக‌ட்டும், சினிமாவாக‌ட்டும், ந‌டைமுறை வாழ்வாக‌ட்டும் ... ஒருவ‌ரைப் புக‌ழ்ந்து துதிபாடி அவ‌ர் பின்னால‌ ஒரு கூட்ட‌மாக‌வே தொட‌ர்வது / தொடர வைப்பது. குறிப்பாக‌ இளைஞ‌ர்க‌ளை இப்ப‌டி வீணாக்கும் க‌ய‌வர்க‌ளின் செய‌ல்க‌ள்.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபித்த‌ கும‌ர‌னோட‌ பேரை வெச்சிகிட்டு கோப‌ப்ப‌ட‌லேன்னா எப்ப‌டீ ? முன்கோப‌ம் தான் :))

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

நியூஸீல‌ன்ட் இய‌ற்கைக்கு ! பாரீஸ் க‌லைக்கு !! இவ்விரு இடங்களுக்கும் இன்னும் சென்ற‌‌தில்லை :(

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

என்றும் இள‌மையாய் ! ம‌ன‌சுல‌ தாங்க‌ :)

31. மனைவி/கணவன் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

அட‌டே, இதுவ‌ரைக்கும் யோசிக்க‌லையே !!! எனிவே, குட் கொஸ்ட்டீன் :))

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

What Goes Around Comes Back Around (Thanks: Justin Timberlake) !

Tuesday, June 30, 2009

கருப்புச் சாலையில் வெண்நிறப் புரவி

சடுகுடு ஆடி
சளசளத்து ஓடி,
பள்ளமேடு பாரா
பயணிக்கும் ஆறே !

கண்ணெட்டும் தூரம்
விண்முட்டி நிற்க,
நீர்த்திவலை ஓடி
நீந்திவரும் ஆறே !

சிலந்தி வலைகளும்
சிற்சில பறவைகளும்,
சாய்ந்த மரத்தண்டுகளும்
கடந்துவரும் ஆறே !

பாடித் திரிந்து
ஓடிக் களைத்து,
தாவிக் குதிக்க(வும்)
தயாரான ஆறே !

த‌டுத்து நிறுத்தி
அடக்கி வைக்க‌,
துளியும் த‌ய‌க்க‌ம்
எம‌‌க்கு இல்லை !!!

சோவென்று இறைத்து
சருக்கியது ஆறு ...
பட்டொளி வீசிப்
பாய்ந்தது அருவி !

பொங்கும் நுரைதனில்
வெண்முகில் குருதி,
கரும்பாறையில் மோதி
கனைத்தது அருவி !

ஈரத்தில் சிலிர்க்கும்
நீள்வெண் சுருளி,
காற்றில் மிதக்கும்
வெண்புகை அருவி !

கருப்புச் சாலை(யில்)
வெண்நிறப் புரவி,
கண்களைக் கவரும்
நயாகரா அருவி !

*****

க‌விதை பிடித்ததா உங்க‌ளுக்கு ?! அப்ப, இந்தக் காட்சியும் ரொம்ப‌ப் பிடிக்கும். கொட்டும் அழகில், அருவியைக் கண்டு மகிழுங்க‌ள். அந்த‌ ச‌ந்தோஷ‌த்தோடு உங்க‌ள் க‌ருத்தையும் ப‌திந்து செல்லுங்க‌ள்.

Sunday, June 28, 2009

பட்டாம்பூச்சி

சும்மா வலையில ஒப்பேத்தித் திறிந்த என்னை வம்பா பிடிச்சு, இந்தா நீ நல்லா பண்றே என்று பட்டாம்பூச்சி விருதை வழங்கியவர்கள் இருவர். பதிவு தவறாமல் வந்து வாழ்த்தும் ராமலஷ்மி அக்கா, மற்றும் தற்போது பி.ஸி. ஆகிவிட்ட நண்பர் நாகு. இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.



சமீபத்தில் நயாகரா சென்ற போது, என்னடா நம்மையே சுற்றி வருகிறதே என ஒரு விநாடி வியந்தேன். பட்சி இல்லீங்க :)) பட்டாம்பூச்சி ! நாகு அவரின் பதிவில் குறிப்பிட்ட அதே டைகர் ஸ்வால்லோ டெய்ல் பட்டாம்பூச்சி, நயாகராவில் நமக்காக காட்சி அளித்தது. அது உட்கார்ந்து தேன் உறிஞ்சும் அழகை அப்படியே விழுங்கியது நமது டிஜிட்டல்.

அடுத்தடுத்து இது போல் தொடர் அழைப்புகள் வந்தாலும், அடுத்துக் கூப்பிட யாராவது இருக்காங்களா என்று, நம்ம ஊர் போலீஸ்காரங்க மாதிரி 'வலை வீசித் தேட' வேண்டியிருக்கிறது :)) ஏறக்குறைய அநேக பதிவர்களையும் சுற்றி வந்துவிட்ட நிலையில் இங்கு வந்திருக்கிறது பட்டாம்பூச்சி !

'வீட்டுக்குள்ளேயே ச‌ம்ப‌ந்த‌ம் வெளியில் தேவையில்லை ஒப்ப‌ந்த‌ம்'ன்கிற‌ க‌தையாக‌ கூட்டுக்குள்ளேயே ப‌ற‌க்க‌ விட‌ப்ப‌டுகிற‌து இப்ப‌ட்டாம்பூச்சி விருது.

மீனா சங்கரன்: சமீபத்தில தான் வந்திருக்காங்க (தமிழ்) வலைக்குள்ள. பேச்சுவழக்கை அப்படியே எழுத்தில் கையாளும் திறம். சுவையாக‌ பதிவுகள் படைத்து நகைக்கவும் வைப்பார் நம்மை. அவர் மேலும் நிறைய எழுத இந்த பட்டாம்பூச்சி விருது.

பித்த‌ன் பெருமான்: ரிச்ம‌ண்டின் அச்ச‌டிக்காத‌ செய்தித்தாளின் ஆசிரிய‌ர். அங்கு ந‌ட‌க்கும் நிக‌ழ்ச்சிக‌ளை விம‌ர்சித்தும், ஒருவ‌ர் ம‌ற‌க்காம‌ல் பெய‌ர்க‌ள் குறிப்பிட்டும், அமெரிக்க இந்திய நாட்டு ந‌ட‌ப்புக‌ள், சினிமா செய்திகள் என்று இவ‌ர் கிறுக்கும் கிறுக்க‌ல்க‌ள் ரொம்ப‌ பிர‌சித்த‌ம். தொட‌ர்ந்து கிறுக்க‌ அவ‌ருக்கு இந்த பட்டாம்பூச்சி விருது.

ஜெய‌காந்த‌ன்: ரொம்ப‌ நாட்க‌ளாக‌ எழுதாம‌ல் இருந்து, த‌ற்போது நிறைய‌ எழுத‌ ஆர‌ம்பித்திருக்கிறார். வீட்டுக்கு ந‌ல்ல‌து சொல்வேன் என்று ப‌ய‌னுள்ள‌ குறிப்புக‌ளில் ப‌ர்ஸைப் பாதுகாப்ப‌து எப்ப‌டிங்க‌ற‌து வ‌ரைக்கும் எழுதுவ‌தில் வ‌ல்லவ‌ர். தொட‌ர்ந்து பயனுள்ள தகவல்கள் தர, இவருக்கு பட்டாம்பூச்சி விருது.

மூவருக்கும் வாழ்த்துகள் !



நீங்கள் பின்பற்ற வேண்டிய பட்டாம்பூச்சி விருதின் விதிகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும்

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும்

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்

Thursday, June 25, 2009

அன்புள்ள ஆனந்திக்கு ...

உயிரோடை லாவண்யா ஒரு சிறுகதைப் போட்டி வைத்திருக்கிறார். முன்பு போல அவ்வளவாக போட்டிகளில் ஆர்வம் இல்லை எனினும், அவரது அன்புக்கு இணங்கி இதோ எனது கதை ...

---

அன்புள்ள ஆனந்திக்கு ...




குருதி வரிகள் கண்களில் கொப்பளித்து ஓட‌ போதையில் தன்னை நெருங்கியவனை, மாதுளம் சிவந்த விழிகளில் சுட்டெறித்து, சுவற்றில் பல்லியென அறைந்து எச்சரித்தாள் ... "யாருகிட்ட மோதற, தண்ணிய போட்டாலும் தடம் மாறாம இருக்கணும் ?! அவன் தான் மனுஷன் !" என்ற‌வ‌ளை வைத்த‌ க‌ண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தான் தியாகேஷ்.

"மொத‌ டேக்லேயே ஓ.கே. ப‌ண்ணிட்ட‌ம்மா. சூப்ப‌ர், ஆஸ‌ம், கார்ஜிய‌ஸ்" என்று அமெரிக்கர்களை போல நம்ம ஊரு டி.வி.ஜ‌ட்ஜுக‌ள் ஆர்ப்ப‌ரிக்கும் வார்த்தைக‌ளில் ரிஷ்காவை புக‌ழ்ந்து த‌ள்ளிய‌ இள‌ம் டைர‌க்ட‌ர் ருத்ரன், கையோடு "பேக்கப்" என்று மைக்கில் கத்தினான்.

படிக்கிற காலம் தொட்டு, பாடங்களை விட படங்களில் தான் நாட்டம் அதிகம் தியாகேஷுக்கு. டிகிரி முடித்து முதன் முதலாய் வந்திறங்கியது கோடம்பாக்கம் தான். கொஞ்ச‌ ந‌ஞ்ச‌ம‌ல்ல‌ டைர‌க்ட‌ர் ஆகும் க‌ன‌வுட‌ன். அறைக‌ளில் த‌னித்து, வீதிக‌ளில் வாழ்ந்து, அங்கே இங்கே என்ற‌லைந்து க‌டைசியில் சேர்ந்த‌து ருத்ர‌னிட‌ம் உத‌வி இய‌க்குன‌ராக‌.

அப்ப‌டி என்ன‌ ம‌ந்திர‌ ச‌க்தியோ 'பேக்க‌ப்' என்ற‌ வார்த்தைக்கு. ஆயிர‌மாயிர‌ம் ப‌ட்டாம்பூச்சிக‌ள் ப‌ட‌ப‌ட‌ப்ப‌தாய் ஆன‌து மொத்த‌ யூனிட்டும். எல்லோரும் வெளியே கிள‌ம்ப‌, ரிஷ்காவின் கேர‌வ‌னுக்குள் நுழைந்தான் ருத்ர‌ன்.

த‌த்ரூப‌ம் கொண்டு வ‌ருகிறேன் பேர்வ‌ழி என, வெட்ட‌ வெளி என்றும் பாராமல், அங்க‌ தொட்டு, இங்க‌ தொட்டு, என ஏற்க‌ன‌வே நொந்திருந்த ரிஷ்கா, இப்ப‌டி உள்ளே நுழைவான் இவனென‌ ச‌ற்றும் எதிர்பார்க்க‌வில்லை.

'வெளியே போடா நாயே !' என‌ சொல்ல‌ நினைத்து, இய‌லாமையில் குறுகி, எழுந்து நின்றாள்.

"எதுக்கு எழுந்து நின்னுகிட்டு, உட்கார் உட்கார்... பாரு இந்த‌ ப‌ட‌ம் வெளிவ‌ர‌ட்டும் த‌மிழ்நாடே எழுந்து நிற்கும் உன்னைக் க‌ண்டா. அதில நானும் சேர்த்தி தான்" என்றான் ந‌ம‌ட்டு சிரிப்புட‌ன்.

"அப்ப‌டிலாம் சொல்லாதீங்க‌ சார். நீங்க‌ எவ்ளோ பெரிய‌ ஆளு !" என்று ருத்ர‌ன் எதிர்பார்த்த‌ப‌டி ப‌தில‌ளித்தாள்.

இத்த‌னைக்கும் ருத்ர‌னுக்கும் இது தான் முத‌ல் ப‌ட‌ம் டைர‌க்ட‌ராக‌. டெக்னிக‌ல் விஷ‌ய‌ங்க‌ளில் சாம‌ர்திய‌சாலி, அதிக‌ம் செல‌வு செய்யாத‌ ப‌ட்ஜெட், கொஞ்ச‌ம் க‌தை, ந‌ல்ல‌ ந‌டிக‌ர்க‌ள் தேர்வு. இது தான் ருத்ர‌ன் ஃபார்முலா. ப‌ட‌த்தயாரிப்பாளருக்கு இதைவிட‌ என்ன‌ வேண்டும்.

ரிஷ்காவிற்கு ஒன்றிரண்டு பட வாய்ப்புகள் நாயகியாக வந்தும், சில காரணங்களால் த‌டைப‌ட்டு பாதியிலேயே நின்றும் போன‌து. ருத்ரனின் க‌தை அவ்வ‌ளாக‌ பிடிக்காவிட்டாலும், வ‌ந்த‌ வாய்ப்பை விடாம‌ல் ஏற்று கொண்டாள்.

படம் வளர வளர அடுத்த‌டுத்த‌ ப‌ட‌ப்பிடிப்புக‌ளிலும் ருத்ர‌னின் தொல்லையும் வ‌ள‌ர‌, ஒரு க‌ட்ட‌த்தில் ப‌ட‌த்தை விட்டு ஓடிவிட‌லாமா என்று கூட‌ நினைத்தாள். ஆணாதிக்க‌ சினிமாவில் அவ‌ர்க‌ளை மீறி த‌ன்னால் ஒன்றும் செய்ய‌ முடிய‌வில்லையே என எல்லாவற்றையும் பொறுத்திருந்தாள். நாள‌டைவில் ருத்ர‌னின் செய்கைக‌ளுக்கு எதுவும் பெரிய‌ எதிர்ப்பு காட்டுவ‌தையும் த‌விர்த்திருந்தாள்.

"மேட‌ம் அடுத்தது, ரெண்டு நாள் முன்னாடி எடுத்ததோட‌ க‌ன்டினியூட்டி ஷாட். ஸீ க்ரீன் ஸாரி க‌ரெக்ட், ஆனா உங்க‌ தோடு நீங்க‌ மாத்த‌ணும்" என்றான் தியாகேஷ்.

"சரி" என்று கேர‌வ‌னுக்குள் நுழைந்து தேடினாள். "தியாகேஷ், கொஞ்ச‌ம் நீங்க‌ளும் தேடுங்க‌ளேன். இங்க‌ தான் வ‌ச்சேன், இப்ப‌ காணோம்" என்றாள் கொஞ்(சசு)ம் த‌மிழில்.

"இன்னும் ரெண்டு நிமிஷ‌ம் தான் இருக்கு. ரெடியாம்மா ?" என்று உள்ளே நுழைந்தான் ருத்ர‌ன். ரிஷ்காவின் பின்னால் சென்று வழக்கம் போல அப்ப‌டியே க‌ட்டியும் அணைத்தான்.

குனிந்திருந்து "இங்க‌ இருக்குங்க‌ மேடம் !" என்று எழுந்த‌ தியாகேஷைக் க‌ண்டு திகைத்தான் ருத்ர‌ன். "இங்க‌ என்னையா ப‌ண்ணிகிட்டு இருக்கே ?! உன்னை நம்பி ஷூட்டிங்கே கொடுத்திருக்கேன். ஸ்பாட்டுல‌ எல்லாம் ரெடி ப‌ண்ணிட்டு இருப்பேனு பார்த்தால் ..."

"சார் வ‌ந்து ... மேட‌ம் தான்..." என்று வெல‌வெல‌த்துப் போனான் தியாகேஷ்.

"ச‌ரி, ச‌ரி. பார்த்த‌து பார்த்திட்டே. ப‌ம்மிகிட்டுப் போ. வெளியில‌ ஏதாவ‌து காமிசிச்சுக்கிட்டே.... அப்புறம்... சரி, வேணாம். புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்" என்று தியாகேஷை எச்சரித்து அனுப்பினான் ருத்ர‌ன்.

'வந்தா எல்லாம் ஒன்னா வரும்' என்பது போல அன்றைக்கு தியாகேஷுக்கு இரட்டை மகிழ்ச்சி.

"இனிமே நீங்க‌ என்னை மேட‌ம்னு கூப்பிடாதீங்க‌. ம‌ல்லிகானு சொந்த‌ பேரைக் கூப்பிட்டா ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ப்ப‌டுவேன்" என்றாள் படப்பிடிப்பின் இடைவேளையில் ருத்ரன் இல்லாத ஒரு நாளில். க‌ண்க‌ளில் மை போல சோகமும் அப்பியிருந்த‌து.

'நான் இன்னும் ஒன்றும் சாதித்துவிட‌வில்லை. என்னைப் போயி...' என்று நினைத்தாலும், ரிஷ்காவின் வார்த்தைக‌ளில் ம‌கிழ்ந்து போனவ‌னின் செல் சிணுங்கிய‌து.

"சார் ! நீங்க‌ளா ? சொல்லுங்க‌ சார். இதோ, இப்ப‌வே கெளம்பறேன் சார்" என்று அடித்துப் பிடித்து, கேமிராவைத் த‌ள்ளி ஓடிய‌வ‌னை, கால‌ரைப் பிடித்து நிறுத்தினான் கேமிராமேன் பாலு.

"ம‌ச்சி எதுக்காக‌ இத்த‌னை நாள் காத்திருந்தேனோ, அந்த‌க் க‌ன‌வு ந‌ன‌வாக‌ப் போகுது. என்ன மாதிரி ஆளுங்க தவமா தவம் கிடக்கிற தயாரிப்பாளர் கிட்ட இருந்து தான் போன். இதுக்கு மேல‌ கேக்காத‌, போய்ட்டு வ‌ந்து விப‌ர‌ம் சொல்றேன்" என்று காற்றில் க‌ரைந்தான் தியாகேஷ்.

'கடவுளாவது கத்தரிக்காயாவது !' என்று சொல்கிற‌ முன்ன‌னி ந‌டிகர் ஒருவர் வ‌ந்து குத்து விள‌க்கேற்ற‌, அம‌ர்க்க‌ள‌மாக‌ பூஜை போட்டு, ஆர‌ம்ப‌மான‌து தியாகேஷின் 'த‌லைப் பிர‌ச‌வ‌ம்'.

சோக‌ம் அப்பிய‌ க‌ண்க‌ள் கொண்ட‌வ‌ள் தான் க‌தாநாய‌கியாக‌ சித்த‌ரித்து வைத்திருந்தான். ரிஷ்காவின் பாதிப்பாக‌க் கூட‌ இருக்க‌லாம். கதாநாயகிக்கு அவ‌ளையே த‌யாரிப்பாளரிடம் சிபாரிசும் செய்து, போராடி ஒப்புத‌லும் வாங்கினான்.

சினிமாத் துறையில் ப‌த்து வ‌ருட‌ங்க‌ள் பட்ட‌ க‌ஷ்ட‌ங்க‌ளும், சினிமா பற்றி க‌ற்ற‌ பாட‌ங்க‌ளும் சேர்த்து வைத்து, சின்ன‌ சின்ன‌ விஷ‌ய‌த்துக்கு கூட‌ முக்கிய‌த்துவ‌ம் த‌ந்து, கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தனுமே என்று கிட்ட‌த் த‌ட்ட‌ ப‌ட‌த்தை செதுக்கினான் என்றே சொல்ல‌லாம்.

ருத்ரனின் படமும் நன்றாக ஓடினாலும், எதிர்பார்த்த அளவிற்கும் மேலாக தியாகேஷின் ப‌ட‌ம் வ‌சூலில் ச‌க்கைப் போடு போட, ஊரெல்லாம் தியாகேஷுக்கு போஸ்டர் ஒட்ட, அவனைத் தன் மனதில் சிக்கென‌ ஒட்டிக் கொண்டாள் ரிஷ்கா.

"ரெண்டு பேரோட‌ வ‌ள‌ர்ச்சிக்கும், இப்போதைக்கு திரும‌ண‌ம் என்ப‌து த‌டையா இருக்கும். அத‌னால‌ கொஞ்ச‌ கால‌ம் போக‌ட்டும், பொறுத்திரு !" என்றான் ரிஷ்காவின் திரும‌ண‌ யோச‌னைக்கு.

"உங்க‌ளுக்கு என்னைப் பிடிக்க‌லை. அதான் சாம‌ர்த்தியமா என் யோச‌னையைத் த‌ள்ளிப் போட‌றீங்க !" என்று சிறு குழ‌ந்தையாய் தேம்ப‌ ஆர‌ம்பித்தாள்.

சினிமா போலவே, ஒரே இரவில் தியாகேஷின் வாழ்வும் முற்றிலும் மாறிப் போனது. கார், பங்களா, காவலாளி என்றும் ஆனது.

"புரிஞ்சுக்க‌ மாட்டேங்க‌றியே ! இப்ப‌ தான் ரெண்டாவ‌து ப‌ட‌ம் ப‌ண்ண‌ப் போறேன். பாரு, ஹாலில் க்யூ க‌ட்டி த‌யாரிப்பாள‌ர்க‌ள் உட்கார்ந்திருப்பதை. இவ‌ங்க‌ள‌ இப்ப‌ விட்டா அப்புற‌ம் எப்ப‌வும் பிடிக்க‌ முடியாது" என்றான்.

தியாகேஷ், ரிஷ்கா, இருவ‌ருக்கும் ஏராள‌மான‌ வாய்ப்புக‌ள் குவிந்தாலும், இருவ‌ருக்கும் பிடித்த‌மாதிரி ஒரு க‌தையைத் தேர்ந்தெடுத்து, 'அன்புள்ள ஆனந்திக்கு...' என்றும் தலைப்பிட்டு, த‌யாரிப்பாள‌ரைத் தேர்ந்தெடுத்து, இசை அமைப்பாளரைத் தேர்ந்தெடுத்து என வ‌ரிசையாய் இவ‌ர்க‌ள் செல‌க்ஷ‌ன் தான் அனைத்தும்.

"சரி, ஊரறிய‌ வேண்டாம். உங்க‌ கூட‌வே இருக்கேன்ல ! யாருக்கும் தெரியாம ஒரு தாலியாவ‌து க‌ட்டிடுங்க. வேண்டாம், வேண்டாம் ஒரு மோதிரம் போதும். பிற்பாடு ஒரு நிலைக்கு வ‌ந்த‌வுட‌ன் ஊரே விய‌க்கும் ப‌டி க‌ல்யாண‌ம் செய்துக்குவோம்" என்றாள்.

"பேசாம‌ ரெஜிஸ்ட‌ர் மேரேஜ் ப‌ண்ணிக்குவோமே !"என்றான் தியாகேஷ்.

"இத‌ விட‌ வேறு செய்தி வேணுமா ந‌ம்ம‌ ப‌த்திரிகைகார‌ங்க‌ளுக்கு !! ந‌ம‌க்குள்ள‌ ம‌ட்டும் இருக்க‌ட்டும். 'இந்தாங்க, இந்த‌ மோதிரத்தை என‌க்குப் போட்டுவிடுங்க‌'" என்று த‌யாராய் வைத்திருந்த‌ மோதிர‌த்தை தியாகேஷிட‌ம் நீட்டினாள் ரிஷ்கா.

வீடு, ம‌னை, வாக‌ன‌ம், வ‌ங்கிக்க‌ண‌க்கு என‌ எல்லாவற்றையும் இருவ‌ர் பெய‌ரிலும் ப‌திந்து கொண்டார்க‌ள். வெளியில் அதிக‌ம் நெருக்க‌ம் காட்டிக் கொள்வதில்லை இருவ‌ரும். ஆனால், த‌னித்திருக்கையில் சுனாமியே வ‌ந்தாலும் அவர்களைப் பிரிக்க முடியாது. 'முளை விட்ட‌ பூ, வெடித்துக் காய்ப்ப‌து போல்' இவ‌ர்க‌ளின் நெருக்க‌ம், நெருக்க‌மான‌வ‌ர்க‌ளால் வெளியில் வெடித்துக் கசிய‌வும் செய்த‌து.

ராஜ‌ர் ஃபெட‌ரரிட‌ம் டென்னிஸ் விளையாடி நாம‌ ஜெயிச்சுட்டோம் என்றால் எப்ப‌டி ந‌ம்ப‌ முடியாதோ, அந்த‌ அள‌விற்கு ஆச்சரியப்படும்படி தியாகேஷின் இர‌ண்டாவ‌து பட‌ம் ப‌டு தோல்வியைச் ச‌ந்தித்த‌து.

பங்களாவில் ஹால் வெறிச்சோடிய‌து. இவ‌ன் தொலைபேசி என்றால் ம‌றுமுனையில் உத‌வியாள‌ருட‌ன் இணைப்பு முறிந்து விடும். ரிஷ்காவின் நிலையும் அதுவே. இருவ‌ருக்கும் வாய்ப்புக‌ள் 'க‌ழுதை தேய்ந்து க‌ட்டெறும்பான‌' க‌தையான‌து !

வெளியில் செல்லவே கூசினான் தியாகேஷ். "எங்காவது கொஞ்ச நாளைக்கு போய் இருந்துட்டு வ‌ர‌லாம். கிராமத்துக்குப் போனா நல்லது" என்றான்.

ரிஷ்காவிற்கு சுத்த‌மாக‌ இதில் இஷ்ட‌மில்லை. "நீங்க வேணா போய் இருந்துட்டு வாங்க. நான் இங்க இருந்து பாத்துக்கறேன்" என்றாள்.

இந்நிலையில் சினிமாவில் ந‌ன்றாக‌ பெய‌ர் வாங்கியிருந்தான் ருத்ர‌ன். கைராசி டாக்ட‌ர் மாதிரி, கைராசி டைர‌க்ட‌ர் என்றார்க‌ள் தயாரிப்பாளர்கள் ருத்ர‌னை.

"'அடுத்த‌ ப‌ட‌த்துக்கு நீ தான் ஹீரோயின் ! என்ன சொல்றே'னு ருத்ர‌ன் கேட்கிறார். என்ன‌ சொல்ல‌ ?" என்றாள் ரிஷ்கா தியாகேஷிட‌ம்.

"உன‌க்காவ‌து வாய்ப்பு வ‌ருதே ! எதுக்கு வேண்டாம் என்று சொல்லிகிட்டு. எடுத்து பண்ணு. நான் இங்க இருக்க விரும்பலை. நீ தனியா இருக்க, ஜாக்கிறதையா இருந்துக்க‌" என்று சொல்லிச் சென்றான்.

இர‌ண்டொரு வார‌ங்க‌ள் க‌ட‌ந்த‌ நிலையில், ரிஷ்காவின் மேக்கப் அறைக்குள் நுழைந்தான் ருத்ர‌ன். அவ‌ள் திடுக்கிட‌வில்லை. முன்பு போல‌வே க‌ட்டிப் பிடித்து காதுக‌ளில் கிசு கிசுத்தான், 'எத்த‌னை நாள் தான் உன‌க்காக‌ த‌வ‌மிருப்பேன்' என்று. அப்ப‌டியே ப‌டுக்கையில் சாய்த்தவ‌னை சேர்த்திழுத்தாள் ரிஷ்கா.

'ம்ம்ம். நீ முன்பு போல‌ இல்லையே. ரொம்ப‌ தேறிட்ட‌ !' என்று முன‌கினான். ச‌ற்றும் எதிர்பார்க்க‌வில்லை ருத்ர‌ன். அப்ப‌டியே அவ‌னைப் புர‌ட்டி, அவ‌ன் மேலேறி ... விட்டாள் ஒரு குத்து ! பொல‌ பொல‌வென்று சிறுமூக்கு உடைந்து ர‌த்த‌ம் சித‌றிய‌து !!!

"ஆம் நான் முன்பு போல‌ இல்லை தான் ! ரொம்ப‌வே தேறிட்டேன் !!" என்று சொல்லி திராட்சைக் கொத்தாய் முன் விழுந்த சுருள் முடிகளைப் பின் தள்ளி கொண்டையிட்டு விறுவிறுவென‌ ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வெளியேறினாள் ரிஷ்கா !!!