Wednesday, May 2, 2012

நா சுழற்றி - அருணகிரியார்


ம‌ணிய‌டிக்க‌ உடனெழுந்து குளித்துச்
சில‌நொடியில் உடை நுழைத்து
ஊண் திணித்துப் பறந்து தெருவேறி


வாக‌ன‌ப் புகை க‌சிந்து
விய‌ர்த்தொழுக‌ வீதி நிறைத்து
உட‌ல் துடைத்து அலுவ‌ல் ப‌டியேறி


கணிணி த‌ட்டிக் க‌டித‌மெழுதி
க‌ல‌வையாக‌க் குழுக்க‌ள் க‌ல‌ந்து
காஃபி குடித்து ம‌திய‌ உண‌வருந்தி


இருக்கை ச‌ரிந்து க‌ண்மூடிக்
கனாக்கண்டு சிறுநகை பூத்து
பின்னெழுந்து ப‌ல‌ கதைகள் பேசி


இரவு நிலா ஒளிவீச
காலைச் சூரியன் த‌க‌த‌க‌க்க‌
இன்று என்பணி இவையெலாம் என்று


மின்னஞ்சல்செய்து அலுவ‌ல் ம‌ற‌ந்து 
மீண்டும் வீதி நிறைத்து
அயர்வாக அடுக்கு மாடிப் ப‌டியேறி


க‌ணிணி த‌ட்டி உல‌கிற்க‌ல‌ந்து
க‌ண்ட‌தையும் உண‌வென்று உண்டு
தொலைக்காட்சி சிறிது க‌ண்டு முட‌ங்கியே !


ம‌ணிய‌டிக்க‌ உடனெழுந்து குளித்துச்
சில‌நொடியில் உடை நுழைத்து
ஊண் திணித்துப் பறந்து தெருவேறி

சமீப காலமாகக் கேட்டு வரும் ஞான சொற்பொழிவுகள், சற்று ... இல்லை இல்லை, பலமாகவே சிந்திக்க வைக்கிறது. திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் என்றார்கள். மனம் இளகும். கண்கள் நீர் சுரக்கும் என்றும் சேர்த்துக் கொள்ளலாம்.  சங்கீத ஞானம் இல்லாதவர்கள் கூட ராகத்தோடு பாடக் கூடிய மென்தமிழ்ப் பாடல்கள் அத்தனையும். அத்தோடு நில்லாம‌ல், இன்றைய‌ கால‌த்திற்கு ஏற்ற‌வாறு பாட‌லும் நாம் எழுத‌லாம்.  உதாராண‌ம்: மேலே :)

ஏற்கனவே அருணகிரியாரை வில்லிபுத்தூரார் யாரென்று கேட்டதற்கு, அருணகிரியாரின் நகைச்சுவை கலந்த தத்துவார்த்தமான பதிலை இந்தப் பதிவில் கண்டோம்.

ஒரு குழந்தை, கருவாகி உருவாகி வளரும் நிலையை எளிய தமிழில் அழகாகப் பாடியிருக்கிறார் அருணகிரியார். பாடலுக்கு விளக்கம் தேவையில்லை, ஒருமுறைக்கு இருமுறை படித்தால் நிச்சயம் புரியும்.

கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப் பயின்று
கடையில்வந் துதித்துக் குழந்தை வடிவாகி


கழுவியங் கெடுத்துச் சுரந்த
முலையருந்து விக்கக் கிடந்து
கதறியங்கை கொட்டித் தவழ்ந்து நடமாடி


அரைவடங்கள் கட்டிச் சதங்கை
யிடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக் கிளர்ந்து வயதேறி


அரியபெண்கள் நட்பைப் புணர்ந்து
பிணியுழன்று சுற்றித் திரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தமென்று பெறுவேனோ

இதே கருத்தை ஒத்த, ஆனால் சற்று விரிவாக வரும் 'இத்தா ரணிக்குள்மநு வித்தாய்' இப்பதிவில் வரும் இப்பாடலில் இறுதி வரிகள் சற்று ஆழமாகச் சிந்திக்க வைக்கிறது.  எனக்கு விபரம் தெரிந்து இருபது ஆண்டுகள் முன்னர் வரை கோவில் திருவிழாக் காலங்களில் நிச்சயம், சொற்பொழிவுகள், கதாகாலட்சேபங்கள் இருந்தன.  இன்று ஆங்காங்கே ஒன்றிரெண்டு இருந்தாலும் கருத்தைக் கவர்வதாய் இருக்கின்றனவா என்றால், பெரும் கேள்விக்குறியே பதில்.  வர்த்தகத்தையே முதற்கண் நோக்கும் ஊடகங்களும், தமக்கு ஆதாயம் இருந்தாலலன்றி இதற்கு முக்கியத்துவம் தருவதில்லை.  நம்முடைய பழம்பாடல்கள் பொக்கிஷம் எனில், அதைக் காத்து நமக்கு எடுத்துச் சொல்ல ஆட்கள் இப்பொழுதில்லை.  இப்படியிருக்க, அருணகிரியார், இவ்வுலகில் பிறந்து, வளர்ந்து, கலைகள் பயின்று, புத்தி கெட்டு, நரை கூடி, பின் கிழப் பருவம் எய்திடினும் தமிழ் பாடும் நேசத்தை என்றும் தரவேண்டும் என்று வேண்டுகிறார்.  இன்று வரை தமிழ் வந்து கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறது.  சிதைந்துவிடாமல், மேலும் காப்பது நமது பெரும் கடமை.  முக்கியமாக அடுத்த தலைமுறைக்கு நிச்சயம் இவ்வித்தையும் விதைத்துச் செல்ல வேண்டும்.  கட கட என ஓடும் இத்தாரணிக்குள் பாடல்:

இத்தா ரணிக்குள்மநு வித்தாய் முளைத்தழுது
கேவிக் கிடந்துமடி மீதிற் றவழ்ந்தடிகள்
தத்தா தனத்ததன இட்டே தெருத்தலையில்
ஓடித் திரிந்துநவ கோடிப் ப்ரபந்தகலை
யிச்சீர் பயிற்றவய தெட்டொ டுமெட்டுவர
வாலக் குணங்கள்பயில் கோலப் பெதும்பையர்க ...... ளுடனுறவாகி 


இக்கார் சரத்துமத னுக்கே இளைத்துவெகு
வாகக் கலம்பவகை பாடிப் புகழ்ந்துபல
திக்கோ டுதிக்குவரை மட்டோ டிமிக்கபொருள்
தேடிச் சுகந்தஅணை மீதிற் றுயின்றுசுக
மிட்டா தரத்துருகி வட்டார் முலைக்குளிடை
மூழ்கிக் கிடந்துமய லாகித் துளைந்துசில ...... பிணியதுமூடிச் 


சத்தா னபுத்தியது கெட்டே கிடக்கநம
னோடித் தொடர்ந்துகயி றாடிக் கொளும்பொழுது
பெற்றோர் கள்சுற்றியழ வுற்றார் கள்மெத்தஅழ
ஊருக் கடங்கலிலர் காலற் கடங்கவுயிர்
தக்கா திவர்க்குமய னிட்டான் விதிப்படியி
னோலைப் பழம்படியி னாலிற் றிறந்ததென ...... எடுமெனவோடிச் 


சட்டா நவப்பறைகள் கொட்டா வரிச்சுடலை
யேகிச் சடம்பெரிது வேகப் புடஞ்சமைய
இட்டே யனற்குளெரி பட்டா ரெனத்தழுவி
நீரிற் படிந்துவிடு பாசத் தகன்றுனது
சற்போ தகப்பதும முற்றே தமிழ்க்கவிதை
பேசிப் பணிந்துருகு நேசத் தையின்றுதர ...... இனிவரவேணும் 


தித்தா திரித்திகுட தத்தா தனத்தகுத
தாதத் தனந்ததன தானத் தனந்ததன
செச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு
தாதத் தசெந்திகுத தீதத் தசெந்தரிக
தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு
தோதக் கணங்கணக கூகுக் கிணங்கிணென ...... ஒருமயிலேறித் 

நா சுழற்றி அடிக்கும் மேற்க‌ண்ட‌ வ‌ரிக‌ளில் வ‌ரும் சொற்க‌ள் எல்லாம் ஒலியைக் குறிப்ப‌தாக‌வே ஆகிற‌து.  'இவ்வாறு ஒலிக்கும் படியான ஒரு மயிலேறி வந்து' காக்க‌ வேண்டும் என்று சொல்கிறார் அருண‌கிரியார்.

'பக்தி என்றால் வியாபாரம்' என்ற எண்ணம் தளைத்தோங்க இன்றைய சாமியார்களும் மடாதிபதிகளுமே பெரும் காரணம்.  இவர்களையும் மீறி, தமிழைப் போல் பக்தியும் இவ்வளவு தூரம் வந்திருக்கிறதெனில், நம்மையும் மீறி ஒரு சக்தி இருக்கிறது என்பதை உணரலாம்.  'அன்பே சிவம்' என்றார் திருமூலர்.  இது தான் பக்தி.  தமிழோடு பயணித்து பல இடர்களையும் தடைகளையும் கடந்து தான் வந்திருக்கிறது பக்தியும்.  அப்படி வந்த அருணகிரியாரின் அடுத்த தமிழ்கவிதையின் பால் காதல் கொள்ளாதவர் எவருமில்லை எனலாம்.  இப்பொழுதெல்லாம் படத்திற்கு முன்னரே பாடல் வெளியாகிவிடுகிறது.  அதுவும், மிகப் பிரபலமான நடிகரின் படம் என்றால்,  பட்டி தொட்டி எங்கும் டீக்கடை, பஸ் ஸ்டாண்ட், தொலைக்காட்சி, பத்திரிகைகள் என மாதக்கணக்கில் எங்கும் பரப்பி, நம் மண்டைக்குள் நீங்கா இடம்பெற்று பெரும் வெற்றி பெரும் அவர்தம் பாடல்கள்.  இப்பேற்பட்ட விளம்பரங்கள் சிறிதுமின்றி, பொருள் புரிகிறதோ இல்லையோ, முதன்முதலில் கேட்கையிலே மனதில் சட்டென்று ஒட்டிக் கொள்ளும் பாடல்:

முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ....எனவோதும் 


முருகா...

என்று திரை இசைப்புகழ் டி.எம்.சுந்தரராஜன் அவர்கள் அட்சர சுத்தமாக ஆரம்பிக்க, திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் இருக்கை நுனியில் அமரும் ஆர்வத்தைப் போல, மனம் பரபரப்பாகும்.  திரை சம்பந்தமாக அதிக மேற்கோள் காட்டியதற்கு, இப்பாடல் திரையின் மூலம் தானே நம்மை வந்தடைந்தது.  முழுப் பாடல்:

முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ....எனவோதும் 


முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பதுமூ வர்க்கத்து அமரரும் ....அடிபேண


பத்துத் தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ....இரவாகப்


பத்தற்கு இரதத்தைக் கடவிய
பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ....ஒருநாளே


தித்தித் தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கு ஒக்கு நடிக்கக் கழுகொடு .... கழுதாடத்


திக்குப் பரி அட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத் தொகு தொகு
சித்ரப் பவுரிக்கு த்ரிகடக ....எனவோதக்


கொத்தப் பறை கொட்டக் களமிசை
குக்குக் குகு குக்குக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடியென ....முதுகூகை


கொட்புற் றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி இட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல ....பெருமாளே !

நம்மைப் போலவே பால்ய பருவத்தில் அருணகிரியாரும் படிப்பில் நாட்டம் அதிகமில்லாமல் இருந்திருக்கிறார். தொழு நோய் வந்து, மனம் வாடி, தன் உயிரை மாய்த்துக் கொள்ள இருந்தவரைக் காப்பாற்றி, நாவினில் வேல் கொண்டு மந்திரம் எழுதி, 'அருணகிரி தற்கொலை செய்து கொள்வது பாவம், மீண்டும் ஒரு பிறப்பு வாராது. எம்மருள் உனக்குண்டு', என முதலடி முத்தாக எடுத்துக் கொடுத்து, 'திருப்புகழ் பாடுவாயாக' என்று எம்பெருமான் முருகன் சொல்வது, அருணகிரியாரின் மிகச் சுருக்கிய வரலாறு. முருகனருள் பெற்று முத்து முத்தாய்ப் பொழிந்தார் அருணகிரியார் திருப்புகழை. மேற்கண்ட பாடல்கள் போலவே இன்னும் ஏராளம் இருக்கிறது அதனுள்.





Tuesday, May 1, 2012

எங்கும் எதிலும் கலாம் ...



'ஒன்னா ரெண்டா ... ஆயிரம் பொன்னாச்சே, ஆயிரம் பொன்னாச்சே' என திருவிளையாடல் படத்தில் நாகேஷ் புலம்புவது இன்றும் காதுக்குள் ஒலிக்கின்றது.  அப்படி இருக்க, தனக்குக் கிடைத்த ஒரு கோடியை, நான்காகப் பிரித்து, நான்கு நிறுவனங்களுக்குத் தந்த டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்களை எவ்வளவு பாராடினாலும் தகும்.  அப்பொழுதே எனது மற்ற தளத்தில் பதிந்த சிறு கவிதை இப்பொழுது இங்கே:


அன்பாகப் பேசிக்கலாம்
அறன்போற்றிப் பழகிக்கலாம்
சிந்தனை வ‌ள‌ர்த்துக்கலாம்
சோம்பல் வீழ்த்திக்கலாம்
ஆன்றோரை அணைத்துக்கலாம்
சிறியோரைச் ச‌கித்துக்கலாம்
நல்லவை படித்துக்கலாம்
அல்லவை அடித்துக்கலாம்
விழியெனக் கோபித்துக்கலாம்
கனவில் விழித்துக்கலாம்
விழித்தபின் சிரித்துக்கலாம்
சிதறாமல் பார்த்துக்கலாம்
கருத்துக்களோடு மோதிக்கலாம்
நற்செயலால் சாதித்துக்கலாம்
பரிசுபல பெற்றுக்கலாம்
பிறருக்குக் கொடுத்துக்கலாம்
துயர் துடைத்துக்கலாம்
தோள் சாய்த்துக்கலாம்
புத்தகம் படித்துக்கலாம்
அறிவிய‌ல் ஆராய்ந்துக்கலாம்
இன்னும் பல கலாம்கள்
ம‌ன‌தில் இருத்திக்கலாம்
நிறைவாய் உணர்ந்துக்கலாம்
இறைவனை வணங்கிக்கலாம்
இனிது வாழ்ந்துக்கலாம்.

Monday, April 23, 2012

புவி நாள் (Earth Day) Apr 22 !


பேருந்து தினம், காதலர் தினம், அம்மாக்கள் தினம், மகளிர் தினம், என்று எல்லாத்துக்கும் நாள் வைத்துக் கொண்டாடுகிறோம். ஆண்கள் தினம் என்று ஒன்றிருக்கா என்று தேடினால், அட, அதுவும் இருக்கத் தான் செய்கிறது :) மற்ற தினங்கள் போலே இந்த நாளுக்கு, அவ்வளவு சிறப்பு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 'புவி நாள்' என்ற Earth Dayக்கும் இது தான் இன்றைய நிலை.

அம்மா என்றைக்கும் அம்மா தான். பேருந்து என்றைக்கும் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப் போகிறது, காதலர் என்றுமே கருத்தொருமித்து தான் இருக்கப் போகின்றனர் ... என்று இவை எல்லாம் அனுதினம் வாழ்வோடு ஒன்றியிருந்தாலும், வருடத்தின் ஒரு நாளை அதற்கென ஒதுக்கி சிறப்பித்ததை, எல்லாவற்றின் பின்னனியிலும் வியாபர நோக்கம் இருக்கிறது எனச் சிலர் விவாதிப்பதும் உண்டு.

ஆனால், மற்ற நாட்களில் இருந்து 'புவி நாள்' சற்று வித்தியாசப்படுகிறது. இதுவரையிலும் எந்த வியாபர நோக்கமும் கண்கூடாக நமக்குத் தெரியவில்லை. புவி நாளில், பல நாடுகளிலும், மரம் நடச் சொல்லி, பல நிறுவனங்கள் இலவசமாக மரக்கன்றுகள் வழங்குகினறன. இது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி.

புவி நாள் (Earth Day) என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.

1969இல் ரான் காப் உருவாக்கிய சுற்றுச் சூழல் குறியீடு: "Environment" மற்றும் "Organism" என்கிற ஆங்கில வார்த்தைகளிலிருந்து எடுக்கப்பட்ட "E" மற்றும் "O" எழுத்துக்களின் ஒருங்கிணைப்பு.
(ந‌ன்றி: விக்கிபீடியா)

புவியில் இருந்து எவ்வளவு பெற்றிருக்கிறோம், இன்றும் பெற்றுக் கொண்டிருக்கிறோம். அத‌ற்கு நாம் என்ன திருப்பிக் கொடுத்திருக்கிறோம் ? வாகனப் புகையையும், தொழிற்சாலைக் கழிவுகளையும், ப்ளாஸ்டிக் குப்பைகளையும், பொது இட அசுத்துங்களும் தானே அதிகம் கொடுத்திருக்கிறோம் !!! நல்லதைப் பெற்று தீயதைக் கொடுப்பதில் என்ன நியாயம் இருக்கிறது ?! 'கிவ் அன்ட் டேக்' பாலிசி என்று சின்ன‌ குழ‌ந்தை முத‌ல் க‌ல்யாண‌ம் முடித்த‌ இள‌ம் த‌ம்ப‌தியின‌ர் வ‌ரை அறிவுறுத்தி வ‌ள‌ர்க்கும் நாம், புவியைப் ப‌ற்றி இன்று வ‌ரை சிந்திக்காவிட்டாலும், இனிமேலாவ‌து சிந்திப்போமே. ந‌ம‌து அடுத்த‌ த‌லைமுறைக்கு இவ்வித்தை விதைத்துச் செல்வோம்.

மரம் வளர்க்காததன் விளைவு, மற்றும் மரம் வளர்த்துக் கொடுப்பதின் மூலம், புவி நமக்கு அளிக்கும் அற்புதம் பற்றி இய‌ற்கை வேளான் விஞ்ஞானி ந‌ம்மாழ்வார் அவ‌ர்க‌ள் ...

(நன்றி: விகடன்)

1987-ல் இயற்கை விவசாயப் பயிற்சிக்குப் போனேன். அங்கு ஒரு பெரியவர் வந்திருந்தார். சுற்றுச்சூழல் கழகத்தினுடைய தலைவர் அவர். அவர் என்னிடம் ``இனிமேல் உங்கள் நாட்டில் பருவ மழையே பெய்யாதென்று'' சொன்னார். இதை அவர் 1987-ல் சொன்னார்.


ஏன் என்று நான் கேட்டதற்கு, ``உங்களுடைய மேற்குத் தொடர்ச்சி மலை 3 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. அதில் 300 அடி உயரத்திற்கு மரங்கள் எல்லாம் இருக்கின்றன. அது அரபிக் கடலிலிருந்து வருகின்ற ஈரக் காற்றையெல்லாம் மேகமாக மாற்றி, மழையாக மாற்றி கீழே இறக்குகிறது. அந்த மழை நீரை பூமியில் இறக்கி பிறகு ஆற்றில் நீராக ஓடுகிறது. அந்த மரங்களையெல்லாம் நீங்கள் வெட்டிவிட்டு, இடுப்பளவு உயரமுள்ள `டீ' தோட்டம் போட்டு விட்டீர்கள். இன்னமும் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இன்னமும் குறையவே இல்லை அது. அதற்குப் பிறகு முழங்கால் உயரத்திற்கு உருளைக்கிழங்கு செடிகளை நடுகிறீர்கள். ஒரு ஜான் உயரத்திற்கு முட்டைக்கோஸ், காலிஃபிளவர் எல்லாம் பயிர் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதனுடைய விளைவு அரபிக்கடலிலிருந்து வரக் கூடிய ஈரக் காற்றை மேகமாக மாற்ற முடியவில்லை. மழையாக மாற்ற முடியவில்லை. அப்படியே தப்பித் தவறி மழை பெய்து ஓடுகின்ற தண்ணீரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆகவே எங்குப் பார்த்தாலும் வெள்ளம். ஆக, இனி உங்களுக்கு புயல் மழைதான் வரும். பருவ மழை வருவதற்கு வாய்ப்பில்லை'' என்று சொன்னார் அவர். அவர் சொன்ன அன்றிலிருந்து தொடர்ந்து உற்றுக் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். அதே தான் நடந்து கொண்டிருக்கிறது. நான் போகின்ற அத்தனை கூட்டங்களிலும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நான் எழுதும் அத்தனை கட்டுரைகளிலும் எழுதி கொண்டுதான் இருக்கின்றேன். யாராவது இதை வாசித்து உணர மாட்டார்களா? தவறைத் திருத்திக் கொள்ள மாட்டார்களா? என்று. ஆனால் யாரும் யோசித்த மாதிரி தெரியவில்லை. தொடர்ந்து காடு அழிக்கப்படுகின்ற செய்தி வந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கென்று ஒரு இலாக்கா இருக்கிறது. ஒரு துறை இருக்கிறது. காட்டை பாதுகாப்பதற்காகவே பணமெல்லாம் செலவழிக்கிறார்கள். அந்த நிகழ்ச்சிகளுக்கு மந்திரிகள் எல்லாம் கூட வருகிறார்கள். ஆனாலும் அழிக்கப்படும் காடுகள் பற்றி எந்த அக்கறையும் இல்லை. இதன் மூலம் உண்டான விளைவுகளைத்தான் இன்றைக்கு நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.


இந்த மரங்கள் மொத்தம் இரண்டு வேலைகளைச் செய்கின்றன. ஒன்று: நமக்கு உணவளிக்கிறது. நம் கால் நடைகளுக்கு உணவளிக்கிறது. இரண்டு: நம்முடைய கரிக் காற்றை உள்வாங்கிக் கொண்டு சுத்தமான காற்றாக மாற்றி திரும்ப நமக்கே அளிக்கிறது. இன்று நாம் என்ன செய்கிறோம்? சாலையோரங்களில் இருக்கின்ற மரங்களையெல்லாம் வெட்டிச் சாய்த்து விட்டு ரோட்டை அகலப்படுத்துகிறோம். எதற்கு ரோட்டை அகலமாக்குகிறோம். வண்டி வேகமாகப் போவதற்காக. அப்போது வாகனத்திலிருந்து நிறைய புகை வெளியேறப் போகிறது. அந்தப் புகையை உறிஞ்சுவதற்கு வேண்டிய மரங்கள் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஏதோ இங்கு மட்டும் நடக்கின்ற நிகழ்ச்சி இல்லை இது. உலகம் முழுக்க நடக்கின்ற நிகழ்ச்சி. ஆனால் பாதிப்பு என்பது நமக்குத்தான் அதிகமாக இருக்கும். ஏனென்றால், தென்னிந்தியாவிலுள்ள ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடுதான் தண்ணீர் குறைந்த மாநிலம்.


இன்றுள்ள நிலையில் இமயமலையே உருகி ஓடி வந்து கொண்டிருக்கிறது. கங்கை ஆற்றிற்கும் காவிரி ஆற்றிற்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? காவிரியில் மழை பெய்தால் தண்ணீர் வரும். கங்கையில் பனி உருகினால் தண்ணீர் வருகிறது. கோடை காலத்தில் கங்கையில் தண்ணீர் வருகிறது. அதனால் அங்கு விளைச்சல் என்னவோ அதிகமாகவே இருக்கும். ஆனால் இப்படியே இமயமலையில் பனிமலை உருகிக் கொண்டே போனால், நாளை கங்கையிலேயே தண்ணீர் வராது. இப்படியே உருகிக் கொண்டு வந்தால் வங்காள விரிகுடாவின் கடல் மட்டம் உயரும். அப்போது சென்னை பாதி இல்லாமல் போய்விடும். கடலூர் பாதி இல்லாமல் போய்விடும். நாகப்பட்டினம் இல்லாமல் போய்விடும். கன்னியாகுமரி இல்லாமல் போய்விடும். இதைக் கூட யோசிக்க கூடிய அளவிற்கு அந்தப் பதவியிலும், அந்தப் பொறுப்பிலேயும் இருப்பவர்களுக்கு அறிவில்லை. அதையெல்லாவற்றையும்தான் இவை கூட்டிக் காட்டுகின்றன.

(நன்றி: குமுதம் குழுமத்தின் தீராநதி)

Thursday, March 22, 2012

தோற்றத்தில் என்ன இருக்கிறது ?


ம்மில் சிலர், உடுத்தும் துணி ஆகட்டும், கால் நுழைக்கும் காலணி ஆகட்டும், பார்த்துப் பார்த்து வாங்குவார்கள். அதாவது, நிறுவனக் குறியீடு பார்த்து வாங்குவார்கள்! காலணிக்கு இந்த நிறுவனம். மேலாடைக்கு இந்த நிறுவனம். கைக்கெடிகாரம், கால்சட்டை, காதணி, கைவளை, சாந்து மற்றும் சந்தனப் பொட்டு, வாகனம், வீட்டுப் பொருட்கள் என அது அதற்கு பேர்பெற்ற‌ நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து வாங்குவார்கள்.

பேர்பெற்ற நிறுவனங்களின் பொருள் வாங்குவதற்கும், சாதாரண நிறுவனப் பொருள் வாங்குவதற்கும் முக்கிய காரணிகள், விலை மற்றும் அதன் தரம். முன்ன‌தில் விலை, மற்றும் த‌ர‌ம் அதிக‌ம். பின்ன‌தில் விலையும் த‌ர‌மும் குறைவே. தங்கள் வசதிக்கேற்பப் பின்ன‌தைப் ப‌ல‌ரும், முன்னதைச் சில‌ரும் வாங்கி ப‌ய‌ன‌டைகிறார்க‌ள்.

முன்ன‌தில் உடை உடுத்திய‌ ஆணோ, பெண்ணோ, அப்படியெ லாவகமாக வந்து தங்கள் ஊர்தியில் இருந்து இறங்கினால், அங்கே அவ‌ர்க‌ளுக்குக் கிடைக்கும் ம‌ரியாதையே த‌னி தான். "திரைப்படங்களின் தாக்கமா, அல்லது, 'இது என்னால் முடியவில்லை இவன் செய்கிறான்' என்றா?, அல்லது வேறு என்னென்ன காரணங்களாக‌ இருக்க முடியும்?" என்று யோசித்தால், உள‌விய‌ல் ரீதியாக‌ அனுகினால் தான் இத‌ற்கு விடை காண‌ முடியும் போல‌.

கோவில் விஷேஷ‌ங்கள், வீட்டுத் திரும‌ண‌ங்கள், போன்ற இடங்களில் விலை மிகுதி போன்று போலியாக‌வோ, அல்ல‌து உணமையிலேயே விலை மிகுதியாகவோ ப‌ள‌ப‌ள‌க்கும் ஆடை அணிக‌ல‌ண்க‌ள் பூண்ட இச்சிலரின் அல‌ங்கார‌ம் ப‌ல‌ரின் க‌ண்களைப் படுத்தி எடுக்கும். ப‌ல‌ க‌ண‌ங்களில் 'ஏன் இப்படித் த‌ங்க‌ளை அல‌ங்கார‌ம் செய்து காட்சிப் பொருட்க‌ளாய் வ‌ல‌ம் வ‌ருகிறார்கள்' என்ற எண்ண‌ம் எழும்.

இப்ப‌டிப் ப‌ள‌ ப‌ளா என்று இல்லாம‌ல், 'கந்தையாணாலும் கசக்கிக் கட்டு' என்று சாத‌ர‌ண‌மாக‌ இருந்தால் தான் என்ன‌? இவ்வுல‌க‌ம் ந‌ம்மை எவ்வாறு பார்க்கும், ந‌ட‌த்தும்?

த‌லைக்குமேல‌ ஏறி உட்காருமா? எட்டி உதைக்குமா? திட்டுமா? வில்லெடுத்து எல்லாம் அடிக்குமா?

'நன்றாக உடுத்தாமல் தோற்றத்தில் பொலிவில்லாமல் ஏழையாய்த் தோற்றம் தரும் இறைவா, உன்னையே இவ்வுலகம் இப்படித் தானே நடத்திற்று' என்று வேடிக்கையாக‌ வெண்பா வ‌டிக்கிறார் ஆசுக‌வி காள‌மேக‌ம்.

தாண்டி ஒருத்தி தலையின் மேல் ஏறாளோ
பூண்ட செருப்பாலொருவன் போடானோ –
மீண்டொருவன் வையானோ வில்முறிய மாட்டானோ
தென் பாலியூர் ஐயா நீ ஏழையானால்.

தில்லை நாதனே, "நீ எழையானதால், உன் தலையில் கங்கை ஏறினாள். உன்னை செருப்பால் மிதித்தார் க‌ண்ணப்பர். 'பித்தா பேயா' என்று திட்டினார் சுந்தரர். வில்லால் அடித்தார் அர்ச்சுனன்" என்கிறார் காள‌மேக‌ம்.

ச‌மீப‌த்தில் என் நெருங்கிய நண்பர் ஒருவரின் அலுவலகத்தில் நடந்த சம்பவம். வேறொரு குழுவினரைச் சந்திக்க வேண்டி, இவரும் இவரது குழுவிலிருந்து வில்லியம் என்ற அமெரிக்கரும் காத்திருக்கிறார்கள். நம் நண்பர் சாதாரண தோற்றத்தில் என்ன தேவையோ அதற்கேற்ப இருப்பவர். ஐந்து நிமிடத்தில் வருகிறேன் பேர்வழி என்று சொல்லி கால்மணி நேரம் கழித்து வந்த இருவர், இவரைப் பார்த்து, 'யாரு வில்லியம்?' என்றிருக்கிறார்கள். நம் நண்பர் வில்லியத்தைக் காண்பிக்க. அவரிடம் ஓடி, 'ஹாய்... ஐ ஆம் ...' என்று சொல்லி இருவரும் அறிமுகம் செய்து கொண்டு, உரையாடலைத் தொடங்க ஆரம்பித்துவிட்டார்கள். அவரிடமே தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். பக்கத்தில் இருக்கும் நம் நண்பரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. வில்லியமும் எவ்வளவோ சங்கேதமாகச் சொல்லியும் அவர்களுக்குப் புரியவில்லை. வந்த இருவரும் நம் நாட்டினர். ந‌ண்ப‌ர் இதுபோல‌ நிறைய‌ பார்த்திருப்பார் போல‌, அவ‌ர் முக‌த்தில் ச‌ல‌ன‌மில்லை. வில்லிய‌த்திற்கு ந‌ம் ந‌ண்பர் தான் மேலாள‌ர். ஆனால், க‌டைசி வ‌ரை ந‌ண்ப‌ர் அதைக் காட்டிக் கொள்ள‌வில்லை.

இதில், வெள்ளைக்கார‌ன் போல் தோற்ற‌மில்லாத‌, கோட் சூட் அணியாத‌ ந‌ம் ந‌ண்ப‌ரின் பேரில் த‌வ‌றா? அல்ல‌து ந‌ம் இந்திய‌ ம‌ன‌ங்க‌ளின் மீது த‌வ‌றா? இந்த எண்ண ஓட்டம் இந்தியா ம‌ற்றுமில்லை, பொதுவாக உலகெங்கிலும் உண்டு என்றே தோன்றுகிற‌து.


ஒரு காட்சி இங்கு அமெரிக்காவில். ஒரு கடையில், ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி ஒருவரும், நல்ல தோற்றம் கொண்ட ஒரு வெள்ளைக்காரரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் க‌டைக்கு ச‌ர‌க்கு இற‌க்க‌ வ‌ருகிறார் ஒரு வெள்ளையர். நேரே மற்ற வெள்ளைக்கார‌ரிட‌ம் சென்று, 'ஹலோ அலெக்ஸ், ...' என்று கைகுலுக்கி உரையாட‌லைத் தொட‌ங்குகிறார். ந‌ம் ந‌ண்ப‌ருக்கு நேர்ந்த‌ அதே க‌தி தான் இங்கு 'அலெக்ஸ்' என்ற‌ ஆப்பிரிக்க‌ அமெரிக்க‌ப் பெண்ம‌ணிக்கும். இத்த‌னைக்கும் அலெக்ஸ் கோட் சூட் எல்லாம் அணிந்திருந்தார், ம‌ற்ற‌ வெள்ளையர் ஓர‌ள‌வுக்கு அலுவ‌ல‌க‌ உடையில் இருந்தார். இருப்பினும், அலெக்ஸை ச‌ரியாக‌க் க‌ண்டு கொள்ளாது ஏன்?

இப்பொழுதெல்லாம் இங்கே அலுவ‌ல‌க‌ங்க‌ளில், மேற்க‌ண்ட‌ காட்சிக‌ளில் எவ்வாறு ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டும், எவ‌ரிட‌ம் எங்கு எப்படிப் பேச‌ வேண்டும் என்றெல்லாம் வ‌குப்பெடுக்கிறார்க‌ள். இந்த‌ நிலை இந்தியாவிலும் க‌டைபிடிக்க‌ வேண்டும். எல்லோரும் ச‌ம‌மாக‌ ந‌ட‌த்த‌ப்ப‌ட‌ வேண்டும் !!!

(படங்கள்: நன்றி இணையம்)

Thursday, March 15, 2012

கொடுப்பது கடினம் !


பத்திருபது ஆண்டுகள் முன்னர், நூறு ரூபாய் என்றாலே அது பெரிய பணம். இப்பொழுதெல்லாம் ஆயிரக்கணக்கில் சர்வசாதாரணமாக செலவழிக்கும் மனப்பாங்கு தழைத்தோங்குகிறது. காரணம், தாராளமயமாக்கல், வேலை உற்பத்தி, வாழ்க்கைத் தரம், பன்னாட்டு முதலீடுகள், இப்படிப் பல காரணங்கள் அடுக்கிக் கொண்டே போகலாம். நடந்து போனவன் சைக்கிள் வாங்கினான், சைக்கிளில் போனவன் பைக் வாங்கினான், பைக் காராச்சு, கார் வேனாச்சு, அதினும் மேலாய் எல்லாம் சொகுசாச்சு ... இதெல்லாம் நாம் பெற்றவை. பெறுவதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். கொடுப்பதற்கு ?

கிணறென்றிருந்தால் அதில் நீரென்றிருக்கும். எடுக்க எடுக்கத் தான் சுரக்கும். இல்லை என்றால் அது பாழும் கிணறு. 'தொட்டனைத்தூறும் மணற் கேணி' என்றார் வள்ளுவர். வீட்டினுள்ளே புகும் காற்று வெளியே செல்லவும் வழி இருக்க வேண்டும், அதற்கு வீடமைப்பு இப்படி இருக்க வேண்டும் என்கிறது மனை சாஸ்த்திரம். உள்ளே... வெளியே.... ஆனால், இக்கால வாழ்க்கை உள்ளே மட்டும் தான் செயல்படுகிறது, அநேக அப்பாட்மென்ட்கள் போல‌..,. வெளியேயும் செயல்பட்டால் நம் வாழ்வு மேலும் சிறக்கும் அல்லவா!

வாரியார் தன் வ‌ள்ள‌லார் உரையில்:

இந்த‌ உல‌க‌த்திலே ப‌க்த‌ர்க‌ள் ப‌லர். ஞானிக‌ள் ப‌ல‌ர். வீர‌ர்க‌ள் ப‌ல‌ர். சிற‌ந்த‌ அடியார்க‌ள் ப‌ல‌ர். பதிவிர‌தைக‌ள் ப‌ல‌ர். ஆனால், அள்ளிக் கொடுத்த‌ வ‌ள்ள‌ல்க‌ள் சில‌ர் ! வ‌ள்ள‌ல்க‌ளுக்குத் தான் எண்ணிக்கை உண்டு. முத‌லேழு வ‌ள்ள‌ல், இடையேழு வ‌ள்ள‌ல், க‌டையேழு வ‌ள்ள‌ல். ஒருவ‌ன் விடிய‌ விடிய‌ப் பேசுவான், அற‌ஞ்செய்ய‌ மாட்டான். நீர் மேல் குமிழிக்கு நிக‌ர் என்ப‌ர். ஆனால், அற‌ம் என்று சொன்னால், ஐம்ப‌து மைல் ஓடுவான். கொடுப்ப‌து தான் க‌டின‌ம். அதைத்தான் ஔவையார்,

ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன்றாம் புலவர்
வார்த்தை பதினாயிரத் தொருவர் பூர்த்தமலர்த்
தண்டாமரைத் திருவே தாதா கோடிக் கொருவர் ...

வேட்டையாடி அர‌ண்ம‌னைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறான் ஒரு குறுநில‌ ம‌ன்ன‌ன். வ‌ழியிலே ஒரு முல்லைக் கொடி தாவிப் ப‌ட‌ர‌ கொழு கொம்பில்லாம‌ல் த‌ள்ளாடித் த‌விப்ப‌தைக் க‌ண்டான். உள்ள‌ம் துடித்த‌து, க‌ண்ணீர் வ‌டிந்த‌து. என் நாட்டிலே இப்ப‌டி ஒரு முல்லைக் கொடி தாவிப் ப‌ட‌ர‌ கொழு கொம்பில்லாம‌ல் த‌விக்க‌லாமா என்று தேரை விட்டு இற‌ங்கி த‌ன் ம‌ணித்தேரிலே முல்லைக் கொடியைப் ப‌ட‌ர‌ விட்டு ந‌ட‌ந்து போனான் அர‌ண்ம‌னைக்கு.

இதில் என்ன‌ கிடைக்கிற‌து?

செடி கொடிக‌ளுக்கு ஓர‌றிவு
ந‌த்தைக்கும் ச‌ங்குக்கும் ஈர‌றிவு
க‌றையானுக்கும் எறும்புக்கும் மூவ‌றிவு
ந‌ண்டுக்கும் வ‌ண்டுக்கும் நால‌றிவு
வில‌ங்குக‌ளுக்கும் ம‌னித‌ர்க‌ளில் ப‌ல‌ருக்கும் ஐய‌றிவு
மாவும் மாக்க‌ளும் ஐய‌றிவு என‌வே என்ப‌து தொல்காப்பிய‌ம்
ம‌க்க‌ள் தாமே ஆற‌றிவு !

ம‌னிதனாக‌ப் பிற‌ந்த‌ எல்லோருக்குமே ஆற‌றிவு கிடையாது. ஐய‌றிவோடு வில‌ங்குக‌ள் போல‌த் தான் வாழ்கிறார்க‌ள் ப‌ல‌ர். சில‌ வீட்டில் போய், 'அம்மா, ஐயா எங்க?' என்று கேட்டால், 'அது எங்க‌ போச்சோ தெரியவில்லை' என்பாள் அஃறினையில் வைத்து. ஆக‌வே, செடிக்கு ஒரே அறிவு, கொடிக்கும் ஒரே அறிவு. அந்த‌ ஓர‌றிவு ப‌டைத்த‌ முல்லைக் கொடிக்குத் தேரைக் கொடுப்பானானால், ஆறறிவு ப‌டைத்த‌த‌ற்கு என்ன‌ த‌ர‌மாட்டான்?!

க‌பில‌ர் என்ற‌ அந்த‌ண‌ப் புல‌வ‌ர் பாரியை ஒரு பாட‌ல் பாடின‌வுட‌ன், முன்னூறு கிராம‌ம் கொடுத்தான். அத‌னால் தான் சுந்த‌ர‌மூர்த்தி நாய‌னார், கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பானில்லை. வ‌ன்புக‌ழ் பாரி காரி என்பார் அருண‌கிரிநாத‌ர். அள்ளிக் கொடுக்கிற‌ வ‌ள்ள‌ல்க‌ள் சில‌ர். க‌வ‌ச‌ குண்ட‌ல‌த்தை அறுத்துக் கொடுத்தான் க‌ர்ண‌ன். சிர‌ம் கொடுக்க‌ முய‌ன்றான் கும‌ண‌ன். ஆனால், அப்ப‌டி அள்ளி அள்ளி கொடுத்த‌வ‌ங்க‌ எல்லாம் வ‌ள்ள‌ல்.

நம்மால இவ்வாறெல்லாம் அள்ளி அள்ளித் தர முடியுமா?
'எவன் வூட்டுக் காச எவனுக்குத் தர்றது' என்பது தான் நம் சிந்தை எல்லாம். கொடுப்பது கடினம் !

***

கீர‌ன் த‌ன் திரும‌ந்திர‌ உரையில்:

நாம் தவம் தவம் என்று சொல்கிறோமே, பன்னெடுங்காலம் நீரிலே நின்றார்கள். நெருப்பிலே நின்றார்கள். ஊசி முனையிலே ஒரு காலைப் பொருத்திக் கொண்டு நின்றார்கள். என இந்த முனிவர் தவம் செய்தார் என்றெல்லாம் படிக்கின்றோமே, அப்பேர்ப்பட்ட தவத்தினாலே பெறக் கூடிய கருத்து, இல்லாவிட்டால் அப்பேர்ப்பட்ட தவத்தினாலே பெறக்கூடிய பலன், மிக மிக எளிதாகவே நமக்குக் கிடைத்து விடும் என எவ்வளவு அழகாகச் சொல்லுகிறார். யாருக்கும் செலவில்லாமல், போகிற போக்கில், அனைத்து உயிர்களுக்கும் பயன்படக் கூடிய ஒரு செயலைச் செய்தால் போதும். அதற்காக சிவபெருமான் மகிழ்ந்து நமக்கு மிகப் பெரிய தவப் பலனைத் தருகிறான் என்பது திருமூலர் கருத்து. அவர் சொல்கிறார்,

யாவ‌ர்க்குமாம் இறைவ‌ர்க்கு ஒரு ப‌ச்சிலை
யாவ‌ர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவ‌ர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவ‌ர்க்குமாம் பிறருக்கு இன்னுரை தானே


***

இறைவனுக்குத் தங்கத் தேரிழுத்து, உடல் வருத்தி அலகு குத்தி எல்லாம் இல்லாமல் மிக மிக எளிதாகப் பச்சிலை கொடுத்து அர்ச்சித்தாலே புண்ணியம் என்கிறது முதல் வரி. ப‌ச்சிலை ப‌றித்துச் சென்று கோவிலில் கொடுக்க‌ முடியவில்லையா, அப்படியே போகிற வழியில் புல்லிருந்தால் பிடுங்கி அங்கிருக்கும் ஒரு பசுவுக்கு அளித்தால் புண்ணியம் என்கிறது இரண்டாவது வரி. 'புல்லுக்கு எங்கே செல்வேன்?, பசுவுக்கு என்ன செய்வேன்?, இதெல்லாம் கடினம்' என்கிறீர்களா, உண்ணும் போது ஒரு கைபிடி அப்படியே எடுத்து காகத்துக்கோ மற்ற ஜீவராசிகளுக்கு அளியுங்கள் புண்ணியம் என்கிறது மூன்றாவது வரி. இதுவும் கஷ்டம்னா, பேசாம வாய மூடிகிட்டு இருங்க, அதுவே பெரும் புண்ணியம் என்கிறது நான்காவது வரி.



இந்த நான்காவது வரியில் லேசாகப் புன்னகை சேர்த்தாவது நாம் தரலாமே ! மேற்கண்டவை நம் தமிழ் இலக்கிய ச‌முத்திர‌த்தில் இருந்து எடுக்கப்பெற்ற சிறு உதாரணங்களே ! பணம் தந்தால் தான் வள்ளல் என்றில்லை. நம்மால் இயன்றதை (மேற்கண்ட வரிகளில் வாயை மூடிக்கொண்டு சும்மா இருத்தல் சேர்த்து) பிறருக்குக் கொடுப்போம். உங்களால் என்ன தரமுடியும் என்று நீங்கள் சிந்தித்தால், 'என்னால் என்ன தரமுடியும்?' என்ற நம் ராமேஸ்வரத்து மசூதி தெரு நாயகன், அப்துல் கலாம் ஐயா அவர்களின் தளத்தைச் சென்று பாருங்கள். சுட்டி கீழே.

What can I give ?



படங்கள் நன்றி: இணையம்

Tuesday, February 14, 2012

ஆதலினால், காதல் செய்வீர் !





ப‌ழகிய‌ சில‌ கால‌மே
ஈருடல் ஓருயிராய் இணைந்தோம்

இன்னார்க்கு இன்னாரென்று
எழுதியா வைத்தான் இறைவ‌ன் ?

அன்று, இன்னார் இன்னார் என்றறிந்தே
காத‌லித்துக் க‌ர‌ம்பிடித்தோம் !

இங்கே ஏது காத‌ல் ?

பகல் இர‌வாய் உழைத்து
ம‌னை ஊர்தி ம‌க்க‌ள் பெற்றோம்

உணவத‌னை வாய் விழுங்கி
தொலைக்காட்சியை க‌ண் விழுங்க‌

மனை வாழ்வை ம‌ற‌ந்தோம்
ம‌ற்ற‌ ம‌னை அறியோம்

இங்கே ஏது காத‌ல் ?

ப‌க‌ல‌வ‌ன் யாரென்றும்
குளிர் நில‌வை ஏனென்றும்

இய‌ற்கையை அறிவ‌த‌ற்கு
இணைய‌த்தை அணுகுகிறோம்

நான்கு சுவ‌ர்க‌ளுக்குள்ளே
தொலைத் தொட‌ர்பை வ‌ள‌ர்த்தோம்.

இங்கே ஏது காத‌ல் ?

பெற்ற‌ பிள்ளை கிட்டே வ‌ர‌
கீரியாய்ச் சீறுகின்றோம்

க‌ட்டிய‌வ‌ர் ம‌ன‌ம் க‌ன‌க்க‌
க‌டுஞ்சொற்கள் காட்டுகின்றோம்

மூன்றே வ‌ருட‌த்தில்
முட்டி நின்றோம் இருபுறமும்.

இங்கே ஏது காத‌ல் ?

இன்றுவ‌ரை எல்லாம் நல‌மே
சென்று சேருமிட‌ம் அறிந்தால்
என்றும் எல்லாம் ந‌ல‌மே !

முட்டி நின்றாலும் விட்டுக் கொடுப்பீர்
தடிக்கும் சொற்க‌ளை தள‌ர்த்திக் கொள்வீர்
வாய் நிறுத்த‌ கை உய‌ர்ந்தால்
துணையைப் ப‌ற்றி அணைப்பீர்

ம‌ற்ற‌ ம‌னை அறிவோம்
சுற்றம் சூழ‌ வாழ்வோம்
ஒற்றுமையை வ‌ள‌ர்ப்போம்

பெற்றோரைப் போற்றிடுவோம்
பெற்ற‌ பிள்ளை வ‌ள‌ரும‌ழ‌கை ர‌சிப்போம்
க‌ட்டிய‌வ‌ர் ம‌ன‌ம் இனிக்க‌க் க‌னிவாய் பேசிடுவோம்

இவ‌ற்றை எல்லாம் காத‌லிப்போம்.

காத‌லின்றி நாளையேது ?
ஆதலினால், காதல் செய்வீர் !


காதல் சிறப்பிதழ் அதீதத்தில் ஆதலினால், காதல் செய்வீர் !


(படம்: நன்றி இணையம்)

Sunday, January 8, 2012

வீராப்பு


படம்: நன்றி இணையம்

பெய்த மழையில் உழுத நிலமாய் சதசதத்துக் கிடந்தது மாட்டுக் கூடம்.

நடுவில் குப்புறக் கிடந்த கூடையை சுவரோரமாய் நகர்த்தினான் பாண்டி. 'கொக் ... கொக்...' என்று கூடை நகர, உள்ளே நாலைந்து கோழிக் குஞ்சுகள்.

ஆத்தாவுக்கு எப்பச் சொன்னாலும் புரியாது. இந்த மாட்டுக் கூடத்துல கோழியவும் போட்டு அடைக்காதேன்னு. கேக்குதா?...

எதுக்கெடுத்தாலும் ஒரு டயலாக்கு, 'அட போடா போக்கத்தவனே...'

எரிந்து கொண்டிருந்த அறுபது வாட்ஸ் பல்ப், படக் படக் என மினுக்கியது. பொசுக்கென்று காரிருள். மையிருட்டில் நின்ற இடத்திலேயே நின்றான் பாண்டி.

இருட்டினுள் கண்கள் பழக சிறிது வினாடி பிடித்தது. உத்தரத்தில் தொங்கிய அரிக்கேன் விளக்கை எடுத்து விளக்கை ஏற்றினான். நான்கடி தூரத்தில் படுத்திருந்தது லக்ஷ்மி. ம்மாஆஆஆ என்று முனகிக் கிடந்தது. இன்றோ நாளையோ குட்டியை ஈன்றுவிடும். காளையா இருந்தா, அதுவும் அர‌க்கும் வெள்ளையுமா இருந்தா 'செவலை', க‌ருப்பா இருந்தா 'க‌ருப்பு'. 'காளையாத் தான் இருக்க‌னும் க‌ட‌வுளே...' அப்ப‌டி இருந்துச்சு, த‌லை ம‌ழித்து உன் தாள் ப‌ணிகிறேன் என்று வேண்டிக் கொண்டான்.

சட சடவெனத் தூறல் பிடிக்க ஆரம்பித்தது. கூடவே ல‌க்ஷ்மியின் முன‌க‌ல் வ‌லுப்பெற்றுத் தூற‌லோடு சேர்ந்து கொண்ட‌து. அக்க‌ம் ப‌க்க‌ம் யாரையும் கூப்பிடும் நிலையில் இல்லை பாண்டி. எழுந்திருக்க‌ முடியாம‌ல் இருந்த ல‌க்ஷ்மியை, முடிந்த‌ வ‌ரை தூக்கி ம‌றுபுற‌ம் ப‌டுக்க‌ வைக்க‌ முய‌ற்சித்தான். ம்..ஹீம்... வயிறு மேலும் கீழும் ஏறி இறங்க, ஜ‌ன‌ன‌ப் பை திற‌க்க‌, திரை அப்பிய‌ முக‌த்தோடு முன்னிரு கால்க‌ளை நீட்டிய‌ க‌ன்றை வெளித்தள்ளியது ல‌க்ஷ்மி.

ச‌ற்றும் தாம‌திக்காது, த‌ன் இட‌க்கையை ஜனனப் பாதையினுள் விட்டு, ச‌ள‌க் புள‌க் என்று தொங்கிய‌வ‌ற்றை வாரி வெளித்த‌ள்ளி ஒரு ப்ளாஸ்டிக் பையில் முடிந்து கொண்டான் பாண்டி. சில நாட்களாக அசையாம‌ல் ப‌டுத்திருந்த‌ ல‌க்ஷ்மி, விறுட்டென்று துள்ளி எழுந்த‌து. வாஞ்சையாக‌ நாவினால் த‌ட‌விக் கொடுத்து, க‌ண்றின் மேலிருந்த‌ திரையை அக‌ற்றி அழ‌கூட்டிய‌து. ர‌ப்ப‌ர் ப‌ந்து போல‌ துள்ளிய‌ க‌ண்றின் அழ‌கையும், மாட்டுத் தொழுவத்தை சுத்த‌ம் செய்வ‌திலும் க‌வ‌ன‌மாக‌ இருந்த‌ பாண்டி, அப்போது தான் க‌வ‌னித்தான், அட... 'காளை'. நிறம் அரக்கும் வெளுப்புமாக.

ப‌ல‌ நாள் க‌ன‌வு இன்னும் சில வருடங்களில் நினைவாகப் போகிறது.

***

'ஏய், க‌ருப்பு ... இன்னிக்கு செவ‌லைய‌க் குளிப்பாட்ட‌ணும். நான் ப‌க்க‌த்துல‌ மதுரை வ‌ரைக்கும் போயிட்டு வ‌ந்திர்றேன், பாத்துக்க‌' என்று த‌ங்கையிட‌ம் சொல்லிவிட்டுக் கிள‌ம்பினான் பாண்டி.

அரிசி மாவு தேய்த்து வாரம் இருமுறை குளியல். துருவிய தேங்காயை சாதத்தில் பிசைந்து திருப்பதி லட்டு அளவுக்கு உருட்டி தினம் சிலபல உருண்டைகள். பாண்டி டவுனுக்கு போயிட்டு வரும்போதெலாம் பார்லே பிஸ்கட் பாக்கெட்கள், என ஏக கவனிப்புடன் பராமரிக்கப் பட்டான் செவலை. பாண்டிக்குத் தானும் தன் குடும்பமும் சாப்பிடுதோ இல்லையோ, நேரம் தவறாமல் செவலை கவனிக்கப்பட வேண்டும்.

ஆறேழு வருடங்களில், ஐயனார் விழிப் பார்வையும், மூக்க‌னாங்க‌யிறிடாத ப‌ள‌ப‌ள‌த்த‌ மூக்கும், சற்றே வளைந்து திமிறிய திமிலும், அக‌ன்ற‌ தோள்க‌ளும், ப‌ருத்த‌ கால்க‌ளும், நெய்யும் எண்ணையும் தடவித் தந்தம் போன்ற கூரிய கொம்புகளும் என‌ க‌ம்பீர‌மாக‌ நின்றான் செவ‌லை.

'ஒரு பயல கிட்ட நெருங்கவிட மாட்டான்' என்றும், 'பாண்டி..., மிஞ்சிப் போனா அவந்தங்கச்சி கருப்பு. ரெண்டு பேத்தையும் தவிர யாருமே செவலைய நெருங்க முடியுமா? குத்தித் தூக்கிருவான்ல ....' என்றும் ஊருக்குள் சொல்லிக் கொண்டார்கள்.

அதே நேரம். 'இவனுக்கென்ன இப்படி ஒரு கேடு. பேசாம இந்தக் காச வேற எங்காவது போட்டா, சாப்பாட்டுக்காவது கவலை இல்லாம இருக்கலாம். இந்த மாட்டக் கட்டி அழுது அப்படி என்னத்த பெரிசா கிழிக்கப் போறான்' என்று தூற்றிக் கொண்டும் இருந்தார்கள்.

'டவுனுக்குப் போகலாமாடா ?' என்று பாண்டி கேட்டால் தலையாட்டுவான். 'இன்னிக்கு என்ன சாப்பாட்டு அளவு கூடிருச்சே' என்று பாண்டி நையாண்டி செய்தால், முறைப்பான். குளிக்க நீச்சலுக்குச் செல்கையில் குஷியாகும் சமயங்களில் முதுகின் மேல் பாண்டியை அமர்த்திக் கொள்வான். அவர்களுக்குள் நாளுக்கு நாள் நெருக்கம் கூடிக் கொண்டிருந்தது.

மதுரையிலிருந்து திரும்பி வருகையில், 'ஏம்பாண்டி செவலைக்கு இந்த கவனிப்பு நடக்குதே, அடுத்த வருஷமாவது அலங்காநல்லூர்ல இறக்கிட வேண்டியது தானே?' என்றார் சுப்பு வாத்தியார்.

'அடுத்த வருஷம் என்ன சார் அடுத்த வருஷம் இந்த வருஷமே அலங்காநல்லூர் போகணும்னு செவலையே அடம் பிடிக்க ஆரம்பிச்சிட்டான்' என்றான் வீட்டை நெருங்கிய பாண்டி.

இவர்கள் சம்பாஷனையைக் கேட்டு, பக்கத்து வேப்ப மரத்தில் கட்டியிருந்த செவலை தலையை மேழும் கீழும் ஆட்டினான். பக்கத்தில் இருந்த மண்மேட்டில், தலை கவிழ்ந்து கூரிய கொம்புகளால் மண்ணைக் கீறினான். விண்ணில் புயலெனப் புழுதி பறந்தது.

***

'அடுத்து வருவது படமாத்தூரைச் சேர்ந்த முத்துப்பாண்டியின் செவலை. முதன்முறையாக அலங்காநல்லூரில் கால் பதிக்கிறான் செவலை.

மாமலை எனத் தோள்கள்
மதயானைத் தந்தக் கொம்புகள்
பாரினில் கண்டதுண்டா
படமாத்தூர் செவலை போலே ...
பார் ... என்னைப் பிடித்துப் பார் ...

வருகிறான், இதோ ...

எனக் கவிதை பாடிக் கொண்டிருந்தது ஆங்காங்கே கட்டியிருந்த பச்சை வண்ணக் குழாய்கள்.

'இன்னோரு சிறப்பம்சம் என்னன்னா, செவலையின் கழுத்தில் ரெண்டு கிராம் தங்கக் காசு முடிந்திருக்கிறது...' வாடிவாசல் மேலே சாளரத்தில் அமர்ந்து அறிவிப்பு செய்து கொண்டிருந்தார் ஒருவர்.அவரைச் சுற்றிலும் கூட்டம். வாடிவாசல் திறந்து சிங்கமெனச் சீறிப் புறப்பட்டான் செவலை. கிட்ட நெருங்க முயற்சிப்போரை மணல் மேடாய் நினைத்து மோதினான. பதறிச் சிதறினர் மாடுபிடி வீரர்கள். 'யாரையும் கிட்ட நெருங்க விட மாட்டேங்குதே...' என்ற வீரர்களின் சொற்கள் செவலையின் காதுகளுக்குள் புகுந்து இனிமை கசிந்தது. உத்வேகம் பெற்று பாய்ந்து பறந்தான். 'செவ்லை நல்லா ஞாபகம் வச்சுக்க ... ஒரு பய கிட்ட வரப்படாது. அப்படியே வந்தாலும் முட்டித்தள்ளீரு. வாலைப் பிடிச்சா அப்படியே சுத்தித் தூக்கி வீசீரு...' என்ற வாசகங்களும் செவலைக்குள் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

'ஏன்டாப்பா பாண்டி, போட்டில ஜெயிச்சா இந்த வருஷம் என்ன குடுக்குறாக' என்றார் டீக்கடை அழகர்.

'அத ஏங்கேக்குற பெருசு. ஒரு சைக்கிளாம், டிவிடி ப்ளேயராம், அப்புறம் அம்பதாயிரத்துக்கிட்ட மத்த சன்மானம்னு பேசிக்கிறாக' அப்புறம் பாரும், இந்தப் பாண்டிய யாரும் பிடிக்கமுடியாது. நம்ம கிட்ட எல்லாம் பேசுவானான்னு கூடத்தெரியாது. எது பேசுறதா இருந்தாலும் இந்தப் பொங்கலுக்கு முன்னாடி அவன்கிட்ட நாமெல்லாம் பேசிக்கிட்டாத்தேன்...' எனப் புகழ்கிறாரா அல்லது இகழ்கிறாரா என்று தெரியாத வண்ணம் சொல்லிக்கொண்டிருந்தார் நாத்திகம் பேசும் தேசிகன்.

யாரும் நெருங்க முடியவில்லை. வீரர்கள் சிலர் கூச்சலிட்டுக் கொண்டனர். புதுசா வந்திருக்கு படக்குனு புடிபட்டுரும்னு பார்த்தா, விடாக்கண்டனா இருகே இந்த மாடு' என்று. இதெல்லாம் சரிப்பட்டு வராது. டேய் பரந்தாமா, நீ இடது பக்கமா ஓடு, நான் வலது பக்கம் ஓடிக்கிறேன். நம்ம ஆளுகள மேற்கால வரச்சொல்லிரு என்று சைகையிலேயே தன் கூட்டத்தாருக்கு செய்தி அனுப்பினான் மாறன். மாட்டோடவே ஓடிக்கொண்டு திமிலைப் பிடித்துக் கொண்டான். சரக்கென்று மாட்டின் வயிற்றை ஒட்டி உள்ளே கால்களை நுழைத்தான் மாறன். முட்டித் தூக்க நினைத்த செவலை தடாலடியாகச் சுருண்டு விழுந்தது. பாய்ந்து அதன் கழுத்துகளில் இருந்த துணியை அவிழ்த்து பொன் காசை எடுத்துக் கொண்டன் பரந்தாமன். 'அதான் விழுந்திருச்சுல்ல, விடுங்கப்பா ... மாட்டு மேல விழுகாதிங்க ... போகட்டும் விடுங்க' என்று அறிவிப்பாளர் அலறிக் கொண்டிருந்தார்.

மாறனின் குறுக்கு புத்தியினால் இடறி விழுந்ததில் செவலையின் இடது பின்னங்கால் முறிந்து விட்டது. கெந்திக் கெந்தி நடக்க ஆரம்பித்தது செவலை. வழியெங்கும் அழுது கொண்டே வந்தான் பாண்டி. செவலையின் கண்களிலும் கண்ணீர் பெருகி நீண்ட கழுத்துகளில் ஒற்றை நீர்வீழ்ச்சியாய் ஓடியது. 'நீ என்னடா செய்வ, நீ ஏன் அழுகறே. பாவம் கால வேற ஒடச்சிட்டாய்ங்களே, பாவிங்க. நல்லாயிருப்பாய்ங்களா ... நாசாமாப் போவாய்ங்க' என்று திட்டித்தீர்த்தான். 'நான் இனி எந்த மூஞ்சியோட ஊருக்குள்ள போவேன். இனி என் செவலைய எவன் மதிப்பான்.' என்று சிந்தனை கண்ணீரோடு சேர்ந்து பெருகி ஓடியது.

'சொன்னாக் கேட்டாத்தானே ... தனம் இருக்கவென தானம் பண்ணாத காலத்தில ... நமக்கெல்லாம் இது தேவையா ... பேசாம மாட்ட கோவிலுக்கு நேந்து விட்டமா, வயக்காட்டுல வேல செஞ்சு பொழப்ப ஓட்டுனமா, தின்னுனு வளந்து நிக்கிற தங்கச்சிக்கு ஒரு கல்யாணத்த பன்னமான்னு இல்லாம ...' என்றும், 'யானைக்குத் தீனி போடற மாதிரில்ல போட்ட ... இந்த மாட்ட கவனிச்சதுக்கு, ஒரு யானையை கவனிச்சிருந்தாக் கூட வீதிவீதியாப் போய் நாலு காசு பாத்திருக்கலாம்' என்றும் ஊராரின் பழிப்புச் சொற்களுக்கு ஆட்பட்டான்.

சில நாட்கள் கால்களுக்கு மருந்து தடவியதில் முன்னைப் போல நடக்க ஆரம்பித்தது செவலை. முன்னிருந்த கம்பீரம் குறைந்து களையிழந்து நடைபோட்டது.

'ஏன்டா பாண்டி. அதான் சொன்னேன்ல‌, அடுத்த‌ வ‌ருஷ‌ம் விடுறான்னு. என்ன‌மோ செவ‌லை சொன்னானாம், இந்த‌ வ‌ருஷ‌மே அல‌ங்காந‌ல்லூர் போக‌னும்னு. இவ‌ரும் ஓட்டிக்கிட்டு போனாராம். க‌ட‌சீல‌ என்ன‌ ஆச்சு ... வாத்தியார் சொல்றத எவன் தான் கேக்கறான் ...' என்று எறியும் வேள்விக்கு எண்ணையிட்டார் சுப்பு வாத்தியார்.

'அப்ப‌டி என்ன‌தான் வீராப்பு உனக்கு. அரசாங்கமே இத நிறுத்தலாமான்னு யோசிக்குது. ஜ‌ல்லிக்க‌ட்ட நிறுத்துனு பல ஊர்கள்ல கூட்டம் போடுறாக‌. இந்த வீரவிளையாட்டெல்லாம் ஒரு கால‌த்துல‌ தேவையா இருந்திருக்கலாம். இன்னிக்குத் தேவையா? கைத் தொலைபேசி, கணிணினு மாறிவிட்ட காலத்தில‌, இப்ப‌டி மாட்ட‌ப் பேணிப் பாதுகாத்து, போட்டியில‌ விட்டு, ப‌ல‌ பேற‌ காய‌ப்ப‌டுத்தி, சில‌ உயிர்க‌ள‌ மாய்ச்சு...எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கல. ஒரு காலத்துல எனக்குப் பிடிச்சது தான். ஆனால் இன்னிக்கு பிடிக்கல, விட்டுரு‌' என்று குழைந்து கொண்டிருந்தாள் மாமன் மகள் சித்ரா.

பல்லாண்டுக் காதலை உதறி, ஊராரின் ப‌ல‌ வ‌ச‌வுச் சொற்க‌ளையும் ம‌ன‌தில் இறுத்தி, அடுத்த ஓராண்டில், அண்ண‌னும் த‌ங்கையும் சேர்ந்து செவ‌லையை மீண்டும் த‌யார் செய்த‌ன‌ர் ஜ‌ல்லிக்க‌ட்டுக்கு !!!

***

அதீதம் பொங்கல் சிறப்பிதழில் 'வீராப்பு'.