Sunday, February 14, 2010

வட்டக் கரிய விழி (ஒரு காதல் கதை !)


"ஆமா, நம்ம ராஜேஷ் எங்க சொல் பேச்சுத் தட்ட மாட்டான்."

...

"என்னது, உங்க மருமக வேளைக்குப் போவேன்னு அடம்பிடிக்கிறாளா ? விட்டுட்டீங்களா ?"

...

"ஆமா...நாப்பதாயிரம், அம்பதாயிரம்னு வருமானத்துக்காகப் பார்த்தா குடும்பம்ல செதஞ்சு போயிடுது.... அதான பார்த்தேன். உங்கள மீறி அவ போயிருவாளா என்ன ?"

...

"ஆமா...மத்த பிள்ளைங்க மாதிரி இல்லாம நம்ம பிள்ளைங்க‌ நம்ம பேச்சு கேக்குதுங்களே, அதுவே எவ்வளவு பெரிய விஷயம். இதுக்கே கொடுத்து வச்சிருக்கணும்."

...

"சரி, வச்சிருங்க. அப்புறம் பேசலாம்".

***

"அம்மா, இன்னிக்கு ஆஃபீஸில் சரியான வேலை. தலைவலிக்குது, காஃபி சீக்கிரம் போடு" என்று சொன்ன‌ ராஜேஷின் காதுகளில் விழுந்த, அவன் அம்மாவின் தொலைபேசி உரையாடல், சிறிதே நெருடலை ஏற்படுத்தியது. காரணம், இன்று தான் வாளினும் கூறிய விழியாளிடம் மொத்தமாய்ச் சுருண்டிருந்தான்.

***

'வந்த மின்னஞ்சல்களுக்கு எல்லாம் பதில் எழுதியாச்சு. ரீடெய்ல் ப்ராஜக்ட் டிசைன் முடிச்சு கோடிங் ஆரம்பிக்கப் போறாங்க. நாளைக்கு டிசைன் ரிவ்யூ ப்ரெஸன்ட் பண்ணனும். அதற்கான பவர்பாயின்ட் ரெடியா எடுத்து டெஸ்க்டாப்பில் போட்டாச்சு. ஃபார்மஸி ப்ராஜக்ட் கிக் ஆஃப் மீட்டிங் வேற இருக்கு நாளைக்கு. அதற்காக சேகரித்த செய்திகள், ஃபைல்கள் என எல்லாம் எடுத்து வச்சாச்சு' எனத் தனக்குள் பேசிக் கொண்டு வீட்டுக்குக் கிளம்ப ஆயத்தமானாள் ஷாலினி. எப்பவுமே அவள் பெர்ஃபக்ட். ஆனாலும் 'பெர்ஃபக்ட் ஷாலினி' என்பதைவிட 'புயல் ஷாலினி' என்றால் அந்த ஆறரை ஏக்கர் இந்திய மென்பொருள் கம்பெனியில் அறியார் யாருமில்லை எனலாம். எல்லாவற்றிலும் ஒரு வேகம். தன் வேலையை, வேலை செய்யும் அலுவலகத்தை அந்த அளவிற்கு நேசித்ததன் பலன் தான் இந்த வேகம், பதவி எல்லாம்.

இதே அலுவலகத்தில் ராஜேஷ் ஒரு சீனியர் மேனேஜர்.

இவர்கள் இருவருக்கும் ஒரு 'இது' வந்து, நட்பாகிக் காதலாகிச் சில பல மாதங்களாகவே கசிந்து உருகிக் கொண்டிருந்தது.

"புயல், ஐ லவ் யூ" என்று ஷாலினிக்கு நொடித்தகவல் (இன்ஸ்டன்ட் மெஸேஜ் தாங்க, இதற்குத் தமிழ் வார்த்தை கண்டுபிடித்து எழுதுவதற்குள் இவங்க எங்கேயாவது போயிடப்போறாங்க‌. அதனால இவங்கள ஃபாலோ பண்ணலாம், சரியா ?)) அனுப்பினான் ராஜேஷ்.

"எத்தனை தடவை சொல்லிட்ட ... ஏதாவது புதுசா சொல்லுடா !" என்று ப‌தில‌டித்தாள் ஷாலினி.

"உட‌ல் ம‌ண்ணுக்கு ... உயிர் ஷாலுவுக்கு ..."

"உவ்வே ... அரசியல் ஸ்டேமென்ட். ம்.ஹிம். நாட் இம்ப்ர‌ஸ்ட் ..."

"வ‌ட்ட‌க்க‌ரிய‌ விழி க‌ண்ண‌ம்மா ‍‍ என்னை
வாட்டி வ‌தைக்கிற‌தே !
கிட்ட நெருங்கிவரக் க‌ண்ண‌ம்மா ‍‍ புயலாய்
கிற‌ங்க‌(வும்) வைக்கிற‌தே !"


"பாவன்டா பார‌தியார் பாட்டு. ப்ளீஸ் விட்டுடு. உல்டா ப‌ண்ணி சொன்னாலும் ந‌ல்லாத் தான் இருக்கு. ஏன் அவ‌ரு, இவ‌ருனு மத்தவங்க சொன்னதே சொல்றே ? உன‌க்கு என்று எதுவும் சொல்ல‌த் தெரியாதா ?" என்று சீண்டினாள்.

"விளையாடாதே ஷாலு. ஐம் சீரிய‌ஸ்"

"நானும் சீரியஸ் தான் ராஜேஷ்"

"போதும் ... உங்க‌ அப்பா கிட்ட பேசறேன் பேசறேனு சொல்லிட்டே இருக்கியே. எப்போ பேசப் போறே? இன்னும் நாட்களைத் த‌ள்ளிப் போட்டுக் கடைசியில் என்னைக் குறை சொல்லாதே. அப்புறம், எங்க‌ வீட்டில் பார்க்கும் எந்த‌ அழ‌கான‌ பெண்ணையாவ‌து நான் திரும‌ண‌ம் செய்து கொள்ள, நீயே வாய்ப்புத் த‌ந்த‌ மாதிரி ஆகிவிடும்."

"என்ன மிரட்டறியா ? அப்ப‌டியாவ‌து ஆள‌ விடு சாமீ. அட‌க்க‌மா அழ‌கா எங்க‌ வீட்டில‌யும் எனக்குப் பைய‌ன் பார்க்கிறாங்க, தெரிஞ்சுக்கோ !"

'இன்னிக்கு என்னாச்சு இவ‌ளுக்கு. ரொம்ப‌வே பொங்குது புயல். சூராவ‌ளி ஆக‌ற‌துக்கு முன் த‌டுக்க‌ணுமே !' என்று யோசித்திருந்தான் ராஜேஷ்.

"ஹேய் ஷாலு, நான் கெளம்ப‌‌றேன். என்ன‌டி அர‌ட்டை அங்க‌ இன்னும் கிள‌ம்பாம‌ல் ?!" என்று ஷாலினியின் க‌ணினித்திரையை ஊடுருவினாள் (ஸ்கேன்க்கு த‌மிழ் வார்த்தை என்ன‌வா இருக்கும் ?) லதா.

"ஓ... சாருக்குத் தெரியாதா செய்தி. அதான் இந்த‌ வாரு வாருறியா ? இதோ இப்ப‌வே போய் ராஜேஷ் கிட்ட‌ எல்லாவற்றையும் சொல்றேன்" என்று புய‌லாய்க் கிள‌ம்பிய லதாவைத் தென்றலாய்த் தடுத்தது புயல்.

"அவ‌ளைத் த‌டுத்து என்ன‌ பிர‌யோஜ‌ன‌ம். எல்லாத்தையும் கேட்டுட்டேன் ஷாலு." என்று பூரிப்புட‌ன் வ‌ந்த ராஜேஷை, "என்ன‌து மறைந்து நின்றுகொண்டு அந்த‌க்கால‌ க‌தாநாய‌கன் ... ம்ம்ம்ம் ... ஜெய்சங்கர் மாதிரி ட‌ய‌லாக் விட்டுகிட்டு வ‌ர்றே" என்று வாருத‌லைத் தொடர்ந்தாள் ஷாலினி.

"அம்மாடீ... நீயாச்சு ராஜேஷாச்சு. நான் வ‌ர்றேம்பா ... ராஜேஷ், பை தி வே, க‌ங்க்ராட்ஸ் அன்ட் ஆல் தி பெஸ்ட்" என்று அங்கிருந்து நாக‌ரீக‌மாக‌ ந‌க‌ன்றாள் லதா.

அலுவ‌ல‌க‌த் த‌ள‌த்தில் அருகில் யாருமின்றித் தாம் இருவ‌ர் மட்டும் என்று உண‌ர்ந்த‌து முத‌லாய் அண்ண‌லும் அவ‌ளும் நோக்கிய‌தில், அந்த‌க் க‌ட்டிட‌த்தில் இருந்த‌ எல்லா விள‌க்குக‌ளும் ப‌ட்டு ப‌ட்டென்று விட்டுப் பிரகாசித்தது.

இனிய‌ மாலை நேர‌த்தில் மெரீனாவை நோக்கி ப‌ய‌ணித்த‌து தென்ற‌ல். வ‌ழியில் செடி, கொடி, ம‌ர‌ம், ம‌க்க‌ள் என‌ எல்லோரும் சிலிர்த்த‌ப‌டி ர‌சிக்க‌, மெரீனாவில் க‌ட‌ல்நீரில் கால்ந‌னைத்து ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்திருந்த‌ன‌ர் ராஜேஷும் ஷாலினியும்.

"வீட்டில் என்ன நடந்தது ? எப்படி ஆரம்பிச்சே ?" என்று ஆரம்பித்தான் ராஜேஷ்.

"ஆச்சார‌ம், அனுஷ்டான‌ம் இதெல்லாம் இந்த‌க்கால‌ப் பிள்ளைக‌ள் எங்கே பாக்க‌ற‌து. அதாவது ப‌ரவாயில்ல‌, ஒரு குல‌ம் கோத்ர‌மாவ‌து பாக்க‌ப்ப‌டாதா ? அபிஷ்டுக்க‌ள் இதெல்லாம் எங்கே போய் முடிய‌ப்போற‌தோ. ஈஸ்வ‌ரா ..." என்றார் அப்பா.

"குல‌ம் கோத்ர‌ம் பார்த்தால் ஆச்சார‌ம் அனுஷ்டான‌ம் தன்னால வ‌ந்திடாதா என்ன ? என்ன‌ பேச‌றேள் ? எங்கே போய் முடியும் ? கல்யாணத்தில தான்" என்றாள் அம்மா.

"கமலம், நீ என்ன‌ பேச‌றேனு புரிஞ்சு தான் பேச‌றியா ? நீயே ந‌ம்ம‌ ஷாலுவ‌ப் பிடிச்சு, இந்தாடீ உன் ஆம்ப‌டையான்னு அந்த‌ ராஜேஷ் கையில‌ கொடுத்திடுவ‌ போல் இருக்கு"

"நான் புரிஞ்சுண்டு தான் பேச‌றேன். 'இந்த‌ப் பைய‌ன‌ப் பிடிச்சிருக்கு. இவ‌ன் இன்னார். அவா ஆத்துப் பழக்கம் இதான். நான் இவ‌ன‌க் க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌றேன்'னு ந‌ம்ம‌ கிட்ட‌ வ‌ந்து திடமா சம்மதம் கேக்கறச்சே எவ்வ‌ள‌வு ச‌ந்தோஷ‌மா இருக்கு. அத்த விட்டுட்டு ..."


"எனக்குத் தெரியும் அப்பா உஷ்ணமா இருந்தாலும், அம்மா தாங்கிப் பிடிப்பார் என‌. சில‌நேர‌ வாக்குவாத‌த்திற்குப்பின் பெண்கள் கூட்டணி வெற்றி வாகை சூடியது." என்று சொல்லி "த‌ பால் இஸ் இன் யுஅர் கோர்ட் நௌ" என்றாள் ஷாலினி.

பன்னாட்டுக் குழுவினர் சந்திப்பில் கூட அவ்வளவு படபடப்பு ஏற்பட்டதில்லை. தற்போது படபடப்பின் உச்சத்தில் இருந்தான் ராஜேஷ்.

"இவ்ளோ ஈஸியா ச‌ம்ம‌த‌ம் வாங்கிட்டே. இத‌ முன்னாடியே செய்திருக்க‌லாமே ?" என்றான் ராஜேஷ்.

'உன்ன‌ ந‌ல்லாத் தெரிஞ்சுக்க‌ டைம் வேண்டாமாடா ம‌டையா ?' என்று நினைத்துச் சிரித்தாள்.

என்ன‌தான் க‌ம்பெனியில் சீனிய‌ர் மேனேஜ‌ர் ப‌தவியில் மிடுக்குட‌ன் வ‌ளைய‌ வ‌ந்தாலும், வெளியில் அதுவும் ஒரு பெண்ணின் பிடியில், திருவிழாக் குழ‌ந்தையாய் ஆகிவிடும் ஆண்க‌ளில், ராஜேஷ் ம‌ட்டும் விதிவில‌க்கா என்ன‌ ?

சேலைத்த‌லைப்பு இருந்தால் பிடித்துக் கொண்டு ந‌ட‌ந்திருப்பான். சுடிதாரில் 'துப்ப‌ட்டாவைப் பிடித்தால் கையோடு வ‌ந்துவிடுமே' என்று எண்ணியோ என்னவோ ஷாலினியின் விரல் பற்றி ந‌ட‌ந்தான் ராஜேஷ்.

"ஷாலு, ஜீன்ஸ் டி.ஷ‌ர்ட் விட‌ இந்த‌ சுடிதார்ல‌ நீ எவ்வளவு அழ‌கா இருக்க‌ தெரியுமா ? ... அதையும் விட‌ சேலையில, கடவுளே ... ரம்பை மேனகைகளை எல்லாம் விட அழகானவளை பூலோகத்திற்கு அனுப்பிவிட்டு அங்கே எப்படி இருக்கிறீரோ ... நீர் கடவுளே தான்" என்று த‌த்துவ‌ம் சிந்தினான்.

ஷாலினி அப்ப‌டி ஒன்றும் வெளித் தோற்றத்தில் அழ‌கு எல்லாம் இல்லை. அது அவ‌ளுக்கும் தெரியும். இருப்பினும் ராஜேஷின் வ‌ரிக‌ளை வெகுவாக‌ ர‌சித்தாள். முள்வெளி உள்சுவைக்கும் ப‌லா அல்லவா அவ‌ள்.

"ராஜேஷ், இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா மன நிறைவா உணருகிறேன். நீயும் சீக்கிரம் உங்க வீட்டில் இருந்து நல்ல செய்தி கொண்டுவா. இப்போ ஏதாவது கவிதை சொல்லேன். அவரு இவரு என்று சொல்லாமல் உனக்குத் தோன்றுவதைச் சொல்" என்றாள்.

"இது ஒரு விதமான 'ஞ்'சிருங்கோ கவிதை ஸ்டைல் ஷாலு. உனக்கான ஸ்பெஷல்...

வட்ட‌விழி விட்ட வழி
சுற்றுதடி நெஞ்சம்,
விட்டிடாது பற்றி அதை
சுற்றிவந்தே கெஞ்சும்.

சுட்டுவிடும் ஈர இதழ்
முத்தம்தர அஞ்சும்,
தட்டித்தட்டி நீயும் சென்று
காட்டுகிறாய் க‌‌ஞ்சம்.

கட்டவிழ் காளை நானும்
அடையணுமே தஞ்சம்,
ப‌ட்டுத்தொட்டு நீயும் என்று
தீர்த்திடுவாய் பஞ்சம் ?"

"சாருக்கு ரொம்ப ஏக்கமும் ஆசையுமாத் தேங்கி நிக்குது போல. எதுனாலும் கல்யாணத்திற்கு அப்புறம் தான். முதலில் உங்க வீட்டில் சம்மதம் வாங்கப் பாருங்க" என்று கஞ்சத்தனத்தைத் தொடர்ந்தாள்.

ஷாலினியின் பாத‌ங்க‌ளுக்குக் கொலுசாய் வ‌ந்து சுற்றிய‌ நுரை த‌ள்ளிய‌ அலையை ர‌சிக்க‌வும் முடியாம‌ல், ர‌சிக்காம‌ல் இருக்க‌வும் முடியாம‌ல் த‌வித்திருந்தான் ராஜேஷ்.

***

இர‌வு, உண‌வு வேளையில் பேச்சை ஆர‌ம்பித்தான் ராஜேஷ். "அப்பா, உங்க‌ கிட்ட‌ ஒரு முக்கிய‌மான‌ விஷ‌ய‌ம் பேச‌ணும். இப்ப‌ பேச‌லாமா ?" என்றான்.

"இருப்பா, அம்மாவும் வ‌ந்திர‌ட்டும்" என்று சொல்லி, "சார‌தா, கொஞ்ச‌ம் இங்க‌ வ‌ர்றியா ..." என்றார்.

"என்ன‌ங்க, உப்புப் புளி எதிலாவது குறைவா இருக்கா ?" என்று ஈரக் கைகளைத் துடைத்துக் கொண்டே வ‌ந்து உண‌வு மேசையில் அம‌ர்ந்தார் சாரதா.

"அதெல்லாம் ச‌ரியாவே இருக்கு. ந‌ம்ம‌ ஜூனிய‌ர் நம்ம கிட்ட பேசணுமாம். அவரு ஏதாவ‌து சொல்லி ந‌ம்ம‌ வ‌யிற்றில் புளிய‌க் க‌ரைக்காம‌ல் இருந்தால் ச‌ரி" என்றார் விஸ்வ‌நாத‌ன்.

"தோளுக்கு மேல் வ‌ள‌ர்ந்த‌வ‌னை, அதுவும் ஒரு ஐ.டி. க‌ம்பெனியில் சீனிய‌ர் மேனேஜ‌ரா இருக்க‌ புள்ளைகிட்ட‌ இப்படியா சர்க்காஸ்டிக்கா பேச‌ற‌து ..." என்றார் சாரதா.

'அப்பா மூடு சரியில்லையே. இன்று பார்த்தா இந்த டாப்பிக்க ஓப்பன் பண்ணனும் ? ரொம்ப முரண்டு பிடிச்சாங்க என்றால், ரெஜிஸ்டர் மேரேஜ் தான் பண்ணனுமோ ?' என்று யோசித்திருந்தான் ராஜேஷ்.

"ச‌ரி, நானே நேரா விஷ‌ய‌த்துக்கு வ‌ருகிறேன். 'அப்பா, நான் ஒரு பெண்ணைக் காத‌லிக்கிறேன். நாங்க ரெண்டு பேரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்கிறோம். அவ‌ள் பேர‌ழகி எல்லாம் இல்லை. என் ம‌ன‌திற்குப் பிடித்திருக்கிற‌து. அவ‌ளுக்கும் என்னைப் பிடித்திருக்கிற‌து. நாங்க‌ள் இருவ‌ரும் சேர்ந்து வாழ‌லாம் என்று நாங்க‌ள் எடுத்த‌ முடிவிற்கு, உங்க‌ள் ஒத்துழைப்புத் தேவை...' என்ன‌டா, ச‌ரியா சொல்லிட்ட‌னா" என்று மகனைப் நோக்கிவிட்டு ம‌னைவியைப் பார்த்துக் க‌ண் சிமிட்டினார்.

'பெற்றோர்கள் இவ்வளவு ஈஸியா எடுத்துப்பார்களா ?' என ராஜேஷுக்கு ஒன்றும் புரிய‌வில்லை.

"அப்பா ..." என்று இழுத்தான் ராஜேஷ். பிறகு அம்மாவை நோக்கி, "அம்மா, உன‌க்கு ம‌ரும‌க‌ வேலைக்குப் போனால் பிடிகாதே. அப்ப, கதையின் ஆரம்பத்தில் நீ விட்ட பில்ட்‍அப் ?"

"அது உங்க அத்தை தான். மூனு மணி நேரமா போன் போட்டுத் தொல்லை தாங்கல. எப்படி கட் பண்றதுனு யோசிச்சுக்கிட்டிருந்தேன். அதான் அவங்க சொன்னதுக்கெல்லாம் ஆமா போட்டுகிட்டு இருந்தேன். என‌க்கெதுக்குப்பா வேலைக்குப் போற‌வ‌ள‌ப் பிடிச்சு வீட்டுல அடைக்கணும்னு ஆசை. அதுக்குத் தகுந்த மாதிரி வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு நீங்க நல்லா இருந்தா, அதைவிட வேறு என்ன வேண்டும் எங்களுக்கு..." என்று அன்டார்ட்டிக்காவின் குளிருக்குள் ராஜேஷை நிறுத்தினார் சாரதா.

"முன்ன‌ரே எல்லாம் தெரியும்பா எங்களுக்கு. உங்க ஆஃபீஸ்ல லதா வேலை பாக்குதுல்ல. அவங்க அப்பாவும், உங்க அப்பாவும் சமீபத்தில ஒரு மீட்டிங்கில் சந்திச்சிருக்காங்க. அப்புறம் அடிக்கடி சந்தித்ததில், ஒரு நாள் உங்க அப்பா, அவருகிட்ட உனக்குப் பொண்ணு கேட்டிருக்காரு. பிறகு, லதா எல்லா விஷ‌யத்தையும் அவங்க அப்பாகிட்ட சொல்லியிருக்கு. அவரு உங்க அப்பாகிட்ட சொல்லியிருக்காரு." என்ற சாராதவைத் தொடர்ந்தார் விஸ்வநாதன்.

"நீ எவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கே என்று எங்களுக்குத் தெரியாது. உன‌க்கு ஒரு கான்ஃபிட‌ன்ட் வ‌ந்து, நீயா எங்க‌கிட்ட பேசட்டும் என்று தான் காத்திருந்தோம். இப்ப எங்களுக்குப் பூரண சம்மதம். உங்க கல்யாணத்த இந்த‌ பிப்ர‌வ‌ரி 14 வ‌ச்சிக்க‌லாமா ?" என்று குறுந‌கை பூத்தார் விஸ்வ‌நாத‌ன்.

மொட்டவிழ்ந்த வலையில் இருந்து, ஆயிரம் பட்டாம்பூச்சிகள் வானில் பறப்பதாய் உணர்ந்தான் ராஜேஷ்.

***

படம்: நன்றி யூத்ஃபுல் விகடன்.
பிப்ரவரி 14 காதல் ஸ்பெஷல் - யூத்ஃபுல் விகடனில்

Sunday, January 17, 2010

லெட்சுமி மாமி (நாடக அனுபவம்)



அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

இதுவரையிலும் செய்திராத ஒரு புதிய படைப்பை ஏற்படுத்த இந்த ஆண்டுப் பொங்கல் விழா அமைந்தது. இப்ப தான் 'எங்கள் ஊர்ப் பொங்கல் விழா'னு பதிவு போட்ட மாதிரி இருக்கு, அதுக்குள்ள ஒரு வருடம் ஓடிவிட்டது.

விழாக் கமிட்டியில் இருந்து, கலைக்குழுவின் சார்பில் நண்பர் ஒருவர் சொன்னார், "நீங்க இந்த ஆண்டு ஒரு நாடகம் போடுங்களேன்" என்று. "நாடகமா ? நானா ? (தினம் தினம் வீட்டில் போடுவது பத்தாதா ? வெளியில் வேறு போடவேண்டுமா ? :)))" என சற்றுப் பின் வாங்கினேன். அவர் விடுவதாய் இல்லை. "விகடனுக்கு என்றால் எழுதுவீர்கள். எங்களுக்கு எழுதுங்க என்றால், உங்களுக்கு அதெல்லாம் ஜூஜூபி தானே !" என்று போட்டு வாங்கிவிட்டார் நாடகத்தை :) நம்மை ஏதோ பெரிய எழுத்தாளர் ரேஞ்சுக்கு உயர்த்திய நண்பருக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நான் இன்னும் 'எழுத்துலகில் தவழும் ஒரு குட்டிப் பையன்' என :)

என்ன எழுதப்போறோம், எது எழுதப்போறோம் என்று யோசனையே இல்லாமல், வழக்கம் போல 'என்ன பதியலாம்' என்று சிந்திக்கும் உங்களைப்போல (சரி, சரி கோச்சுக்காதீங்க, நம்மளைப் போல்) சென்றது சிலநாட்கள். விழாவிற்கு ஒரு வாரம் இருக்கையில் தான் இந்த ப்ராஜக்ட் நம் கைக்கு வந்தது. கதை இல்லை, கதை மாந்தர்கள் இல்லை. ஆனால், வீராப்பாக பதினைந்து நிமிடம் ஸ்லாட் பதிந்து கொண்டாயிற்று.

ஒரு அளவிற்கு சிறிய கதையை ரெடி பண்ணி, நண்பர்கள் இருவரிடம் சொல்லி வைத்திருந்தேன் கதைமாந்தர்களுக்கு. ஆளுக்கு மூன்று பேரைப் பிடித்து விட்டோம் (நம்ம ஊரு போலீஸ் மாதிரி வலைவீசி தான் :)) என்று இருவருமே சென்ற வெள்ளி சொன்னபோது கொஞ்சம் நிம்மதி.

அன்றிரவே நண்பர் வீட்டில் அனைவரும் சந்தித்து கதை விவாதம் நடத்தினோம். கமல், ரஜினி (அதெல்லாம் ஓல்டோ) சரி விஜய், சூர்யா (ம்.ஹிம்மா ?), சரி ... சரி ... ஒரு சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு சுவிட்ஸர்லாந்தில் கதை விவாவதம் பண்ண முடியவில்லை என்றாலும், நண்பர் வீட்டில் நல்ல விதமாகவே எங்கள் கதை விவாதம் தொட‌ங்கிய‌து.

கதைப்படி அறுவர் தேவை. மூன்று பெண்கள், மூன்று ஆண்கள். மாமி வேடத்திற்கு ஆண் நண்பரே வேடமிட்டு நடிக்கவும் தயாராக இருந்தார்.

இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்து வ‌சிக்கையில் ஒரு வெள்ளைக்கார‌ப் பெண்ணைத் திரும‌ண‌ம் செய்து கொள்கிறான் க‌தையின் நாய‌க‌ன் லோகு. சில‌நாட்க‌ள் க‌ழித்து த‌ன் தாய் லெட்சுமிக்கு விஷ‌ய‌த்தைத் தெரிவிக்கிறான். த‌ன‌க்குக் குழ‌ந்தை பிற‌க்கையில், தாயை இங்கு அழைத்து வ‌ருகிறான். அவ‌ர‌து முத‌ல் விமான‌ம் ம‌ற்றும் வெளிநாட்டுப் ப‌ய‌ண‌ம் தான் க‌தை.

"வெள்ளைக்கார‌ப் புள்ள‌ தான‌ங்க‌, புடிச்சிருவோம்" என்றார் ந‌ண்ப‌ர். அப்புற‌ம், ந‌ம்ம‌ இஷ்ட‌த்துக்கு அவ‌ங்க‌ ப்ராக்டிஸ் எல்லாம் வ‌ருவாங்க‌ளா என்றெல்லாம் தெரியாது. அத‌னால் ந‌ம்ம‌ ஊரு பொண்ணு, அதுவும் வ‌ட‌நாட்டுப் பொண்ணுனு க‌தையில் சிறிது மாற்ற‌ம் செய்தோம். ஒரு ந‌ண்பியும் க‌தையின் நாய‌கி சாந்தியாக‌ ந‌டிக்க‌ ச‌ம்ம‌தித்தார்.

நாட‌க‌த்தின் ந‌டுந‌டுவே இசை சேர்த்தால் ந‌ன்றாக‌ இருக்கும் என்று யோசித்தோம். எப்ப‌டி செய்ய‌லாம் ? ஒவ்வொரு கோப்பாக‌ வைத்துக் கொண்டு, நேர‌ம் வ‌ரும்போது ஒருவ‌ர் ப்ளே செய்யலாம். அல்ல‌து வ‌ரிசையாக‌ எல்லா கோப்புக‌ளையும் இணைத்து, ந‌டுந‌டுவே சைல‌ன்ஸ் வைத்து ஒரே கோப்பாக‌ ஆக்கி ஒருவ‌ர் கையாளுவ‌து போல் செய்ய‌லாம். எது எப்படியோ, டி.ஜே.வாக‌ இருக்க ஒரு ந‌ண்ப‌ர் ச‌ம்ம‌தித்தார்.

மறுநாள் கூடி கதை விவாதம் சிறிது நடத்தி, சிலர் சொன்ன மாற்றங்களைச் செய்து, சரி 'இன்று, முதல் இரு காட்சிகள் செய்து பார்த்துவிடுவோம்' என அமர்ந்தோம். அப்பொழுது நண்பர் ஒருவர் சொன்னார், "ஊரில் இருந்து வந்த‌ ஒரு மாமி இருக்காங்க. அவங்கள வேணா நடிக்கக் கேட்டுப் பார்ப்போம். இதிலெல்லாம் அவங்களுக்கு நிறைய ஆர்வம் உண்டு" என்றார். தொலைபேசியிலும் தொடர்பு கொண்டார்.

"அப்படியா, பேஷ் நல்லா செய்யறேனே. எனக்கு என்ன காஸ்ட்யூம் ? எங்க, எப்ப ரிகர்சலுக்கு வரணும் ?" என்றெல்லாம் கேட்டு எங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார் மாமி. கதைக்கு எப்படி அவர் முதுகெலும்போ, அதே போல் ரிகர்சலிலும் எங்கள் அனைவருக்கும் அவர் தான் இன்ஸ்ப்பிரேஷன். பொங்கல் அன்று ரிகர்சலுக்கு நிஜ பொங்கலுடன் வந்து இறங்கினார். டப்பாக்களில் அடைத்து முறுக்கு செய்து வந்தார். கமகம மொறுமொறு என ரிகர்சலும் நடந்தது.

காட்சி அமைப்பில் முக்கிய‌ உத‌வியாக‌ இருந்தார், இக் க‌தையில் நண்ப‌ன் ராக‌வனாக நடிக்க சம்மதித்த‌ ந‌ண்ப‌ர். ரொம்ப‌ சிம்ப்பிளான‌ மேடை. ஒரு காட்சி விட்டு ம‌று காட்சிக்கு ஸ்க்ரீன் எல்லாம் போட்டு வித்தியாசப்படுத்த முடியாது. சொற்ப எண்ணிக்கை மைக்குகள், மேசை, நாற்காலிக‌ள் எல்லாம் சரியான‌ இட‌த்தில் அமைத்து அதை நாட‌க‌த்தின் க‌டைசிவ‌ரை எப்ப‌டிப் ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து என்று யோச‌னைக‌ள் சொன்ன‌தில் நடிக நண்பர்கள் அனைவ‌ரின் ப‌ங்கும் பாராட்ட‌த்த‌க்க‌து.

"காட்சிகளில் ஒரு தொய்வு தெரியாமல், கடைசி வரை அந்த‌ ப்ளோ சூப்ப‌ரா இருந்துச்சுங்க" என்று ஒரு ந‌ண்ப‌ர் பிறகு சொன்ன‌போது, அட ! இந்த‌ அளவுக்கு மக்கள் கூர்ந்து க‌வ‌னிக்கிறாங்க‌ளா என்று ஆன‌ந்த‌ விய‌ப்ப‌டைந்தோம்.

மாலை ஆறரை அல்லது ஏழு என்று தொடங்கி ஒரு மணி நேரம் ரிகர்சல். ஐந்து நாட்க‌ள் ரிக‌ர்ச‌லில் அனைவ‌ரும் ச‌ந்தித்த‌து முத‌ல் நாள் ம‌ட்டுமே. அனைவருக்கும் வேலைப் ப‌ளு தான் முக்கிய‌ கார‌ண‌ம். கடைசி நாள் மட்டும் கொஞ்சம் ரிகர்சலுக்கு அதிக நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தேன். அப்படி இருந்தும் நாயகியால் வரமுடியவில்லை. "விழா அன்று கண்டிப்பாக வந்துவிடுவேன். எனது டயலாக் எல்லாம் ஞாபகம் இருக்கு ஒன்னும் கவலைப்படாதீர்கள்" என்றார்.

ப‌யிற்சி விட்டுவிட‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌, ஒருவ‌ரே ம‌ற்ற‌வ‌ர் பாத்திர‌த்தை செய்ய‌, சில‌ இட‌ங்க‌ளில் பெய‌ரை மாற்றி உச்ச‌ரிக்கும் ப‌டி ஆன‌தெல்லாம் த‌மாஷாக‌ இருந்த‌து. அம்மாவ‌ மாமினு கூப்பிட‌ற‌து, ராக‌வ‌னை லோகுனு சொல்ற‌து என்று. மேடையில் பெயரை மாற்றி சொல்லிவிட்டாலும் ச‌மாளித்துவிடுங்க‌ள் என்று அனைவ‌ருக்கும் சொல்லி வைத்தோம்.

ஜ‌ன‌வ‌ரி 16, 2010 அன்று வெகு சிற‌ப்பாக‌ ந‌டைபெற்ற‌து எங்க‌ள் ஊர்ப் பொங்க‌ல் விழா. அதில் எங்க‌ள் 'லெட்சுமி மாமி' நாட‌க‌மும்.


'லெட்சுமி மாமி' நாடகக் குழுவினர் - From left to right: Uma Shankar, Shan, Nagarajan, Vibha, Pangajam Mami, Mani, Srivatsan

தனக்குக் கொடுத்தது மிகச் சிறிய வேடமே என்றாலும், உண்மையான அபீசர் போல, உடையில் இருந்து, அச்சடித்து கொடுக்கும் பாஸ்போர்ட் என்றெல்லாம் செவ்வனே செய்து அசத்தினார், இமிக்ரேஷன் ஆபீசராக நடித்த உமா சங்கர்.

இமிக்ரேஷ‌னில் மூவ‌ர் என்றிருந்த‌தைக் குறைத்து இருவ‌ராக்கி, இருவ‌ரையுமே ஆண் கதாபாத்திரங்களாக‌‌ ஆக்கிய‌போது எங்க‌ளிட‌ம் அக‌ப்ப‌ட்டுக் கொண்டார் இந்த‌ ந‌ண்ப‌ர். மாமிக்கு குடைச்சல் கொடுக்கும் நுழைவாயில் ஆபீசராக வந்து, பாடி லேங்குவேஜ் மற்றும் கேஷுவல் டயலாக் டெலிவரியில் அசத்தினார் மணி.

ராகவனாக வந்த நண்பர் தனது ஒவ்வொரு செயலிலும் நேர்த்தியைக் கையாண்டார். கொண்டு வந்த ரோலர் ஹேண்ட்லக்கேஜ், விமனப்பயணத்தில் போர்த்திக் கொள்ளக் கம்பளிப்போர்வை, மாமியின் குடைச்சல் பொறுத்து நண்பனைப் பார்த்தவுடன், மாமியை ஒப்படைத்துவிட்டு தலைதெரித்து ஓடுவது என கலக்கிவிட்டார் நாகராஜன்.

ஆர‌ம்ப‌ம் முத‌ல் க‌டைசி வ‌ரையில் மேடையில், க‌ம‌ல் போல‌ வித்தியாச‌மான‌ கெட்ட‌ப்புக‌ளில் வ‌ந்து அச‌த்தினார் மாமி. முத‌லில் போர்த்திய‌ சால்வை, ப்ளேனில் இருந்து இற‌ங்கிய‌வுட‌ன் சால்வையை எடுத்த வெளிச்சுற்று சேலை, பிற‌கு குளித்துமுடித்து வ‌ருகையில் வேறொரு சேலை என்று வித்தியாச‌ம் காண்பித்தார். ஹேண்ட்ல‌க்கேஜில் வைத்துக் கொள்ளும் பொருட்க‌ள் சேக‌ரிப்பிலும் பங்கஜம் மாமி காட்டிய‌ ஆர்வ‌ம் பாராட்ட‌த்த‌க்க‌து.

துறுதுறுப்புள்ள‌ இளைஞ‌ர் லோகுவாக‌ வ‌ந்த‌ ந‌ண்ப‌ர். "என்ன‌ பேச‌ணும் ? எங்க பேசணும் ? நீங்க‌ ஒன்னும் க‌வ‌லைப்ப‌டாதீங்க" என்று எப்பவும் ஒரு பரபரப்புடனேயே இருப்பவர். ஆள் மாற்றி ப்ராக்டிஸ் செய்த‌தில் அம்மாவை மாமி என்ற‌வ‌ர். அப்ப‌டியே mommyனு மேடையிலும் ஆக்கிக்கொண்டார் ஸ்ரீவத்ஸன்.

"சாந்தியாக நீங்கள் சேலையில் வரணுமே" என்றபோது, ('உங்க ஊர்க்காரங்களே எங்க சேலை கட்டறாங்க ?' என்பது போல் பார்த்து) , "சல்வார் ஓகே வா ?" என்றார். ஆரம்பம் மட்டும் தமிழில் சொல்லுங்கள், பிறகு ஆங்கிலத்தில் பேசுங்கள் என்றோம். 'ம்.ஹிம். எனக்கு என்ன பேசணும் என்று தமிங்கிலத்தில் எழுதிக் கொடுங்கள்' என்றார். வட இந்தியப் பெண்ணாக இருந்தாலும், தமிழில் பேசி மேடையில் அனைவரையும் அசத்தி விட்டார் விபா.

ஒரு சினிமா டைர‌க்ட‌ருக்குக்கூட ப‌ட‌த்தின் முத‌ல்நாள் வெளியீடு அன்று இந்த அளவு டென்ஷ‌ன் இருக்குமா ? தெரியாது.... ஓர‌ளவுக்கு எங்க‌ள் ஊர் ம‌க்க‌ளை சிரிக்க‌ வைக்க‌ முடிந்த‌தில் எங்கள் குழுவினர் அனைவருக்கும் நிறைவான‌ ம‌கிழ்ச்சியே.

கலைக்குழு நண்பர்: குமரேஷ்; நடிக‌ ந‌ண்ப‌ர்கள்: பங்கஜம் மாமி, விபா, ஸ்ரீவத்ஸன், நாகராஜன், உமா சங்கர், மணி; நடிகர்கள் சம்மதம் மற்றும் டி.ஜே வாக‌ இருந்த‌ ந‌ண்பர்கள்: குமரேஷ், அருள்; மேடை அல‌ங்கார‌ம் ம‌ற்றும் வீடியோ உத‌வி செய்த‌ ந‌ண்பர்: யோகா; மற்றும் யோசனைகள் சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் அன்பு க‌ல‌ந்த‌ ந‌ன்றிக‌ள்.

நாடகத்தின் வீடியோ வடிவம் யூடியூபில்: