Friday, February 21, 2014

தமிழ்த் தாத்தா யார்?

'தமிழ்த் தாத்தா யார்?' எனக் கேட்டதற்கு, 'சாலமன் பாப்பையா' என்று சொல்லி அசத்திய ஒரு புள்ளைய சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நீங்கள் பார்த்து பிரமித்திருக்கலாம்.  'அப்படியா, கரெக்ட்டாம்மா ?' என சந்தேகமாக நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்க, பயபுள்ள பட்டுனு, 'இல்லியா... அப்ப, திருவள்ளுவர், திருவள்ளுவர், திருவள்ளுவர்' எனக் கூவி ஏகத்துக்கும் களேபரம் பண்ணி நம்மை எல்லாம் கலவரப்படுத்தியது.  சரி, இந்தக் காலத்துல சாலமன் பாப்பையா அவர்களையும், திருவள்ளுவரையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என சந்தோஷம் கொள்வோம்.

நிஜமாவே 'தமிழ்த் தாத்தா' யாரு ?  தமிழுக்கு அவர் செய்த பணி தான் என்ன ?  இன்றைக்குத் தமிழ் வளர்த்ததாக / வளர்ப்பதாக பிரகடனப்படுத்தும் கூட்டத்திற்கும் இவருக்கும் என்ன வித்தியாசம் ?  என்றெல்லாம் தேடிப் பார்த்தால், இவர் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானதல்ல எனப் புரியும்.  இவரின் பணி இல்லை எனில், இன்று அறிந்த கைமண் அளவு தமிழ் கூட நாம் அறிந்திருப்போமா என்பது சந்தேகமே !





தமிழ்த் தாத்தா என்று அன்போடு அழைக்கப்படும் உ.வே.சா. அவர்கள் ஆற்றிய தமிழ்ப் பணி அளவிடற்கரியது.   ஒரு படைப்பாளியையே நாம் காலம் கடந்து தான் போற்றுகிறோம்.  பாரதி வாழ்ந்த வரை அவருக்கு மலை போல குவிந்தன அவமானங்களே.  அப்படியிருக்க, மற்றவரின் படைப்புகளை, அதுவும் பல்லாண்டு கால முந்தையவற்றை, சுவடியிலிருந்து அச்சுக்குக் கொண்டு வந்தவரை, நாம் பாராட்டியா புகழ்ந்திருப்போம் ?!!  ஆனால், உ.வே.சா. அவர்களை பாரதி புகழ்ந்திருக்கிறார்.

நிதியறியோம் இவ்வுலகத் தொருகோடி
     இன்பவகை நித்தம் துய்க்கும்
கதியறியோம்  என்று மனம் வருந்தற்க
     குடந்தைநகர்க் கலைஞர் கோவே
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
     காலமெல்லாம் புலவர் வாயில்
துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்
     இறப்பின்றி துலங்குவாயே.

இரண்டு நாட்கள் முன்பு Feb-19 உ.வே.சா. அவர்களின் பிறந்த தினம்.  இந்த ஆண்டு காதலர் தினமே வந்த சுவடும் தெரியல, போன சுவடும் தெரியல, இதுல சுவடி எடுத்தவர் பிறந்த தினமா நமகெல்லாம் ஞாபகம் இருக்கப் போகிறது !