Monday, April 23, 2012

புவி நாள் (Earth Day) Apr 22 !


பேருந்து தினம், காதலர் தினம், அம்மாக்கள் தினம், மகளிர் தினம், என்று எல்லாத்துக்கும் நாள் வைத்துக் கொண்டாடுகிறோம். ஆண்கள் தினம் என்று ஒன்றிருக்கா என்று தேடினால், அட, அதுவும் இருக்கத் தான் செய்கிறது :) மற்ற தினங்கள் போலே இந்த நாளுக்கு, அவ்வளவு சிறப்பு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 'புவி நாள்' என்ற Earth Dayக்கும் இது தான் இன்றைய நிலை.

அம்மா என்றைக்கும் அம்மா தான். பேருந்து என்றைக்கும் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப் போகிறது, காதலர் என்றுமே கருத்தொருமித்து தான் இருக்கப் போகின்றனர் ... என்று இவை எல்லாம் அனுதினம் வாழ்வோடு ஒன்றியிருந்தாலும், வருடத்தின் ஒரு நாளை அதற்கென ஒதுக்கி சிறப்பித்ததை, எல்லாவற்றின் பின்னனியிலும் வியாபர நோக்கம் இருக்கிறது எனச் சிலர் விவாதிப்பதும் உண்டு.

ஆனால், மற்ற நாட்களில் இருந்து 'புவி நாள்' சற்று வித்தியாசப்படுகிறது. இதுவரையிலும் எந்த வியாபர நோக்கமும் கண்கூடாக நமக்குத் தெரியவில்லை. புவி நாளில், பல நாடுகளிலும், மரம் நடச் சொல்லி, பல நிறுவனங்கள் இலவசமாக மரக்கன்றுகள் வழங்குகினறன. இது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி.

புவி நாள் (Earth Day) என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.

1969இல் ரான் காப் உருவாக்கிய சுற்றுச் சூழல் குறியீடு: "Environment" மற்றும் "Organism" என்கிற ஆங்கில வார்த்தைகளிலிருந்து எடுக்கப்பட்ட "E" மற்றும் "O" எழுத்துக்களின் ஒருங்கிணைப்பு.
(ந‌ன்றி: விக்கிபீடியா)

புவியில் இருந்து எவ்வளவு பெற்றிருக்கிறோம், இன்றும் பெற்றுக் கொண்டிருக்கிறோம். அத‌ற்கு நாம் என்ன திருப்பிக் கொடுத்திருக்கிறோம் ? வாகனப் புகையையும், தொழிற்சாலைக் கழிவுகளையும், ப்ளாஸ்டிக் குப்பைகளையும், பொது இட அசுத்துங்களும் தானே அதிகம் கொடுத்திருக்கிறோம் !!! நல்லதைப் பெற்று தீயதைக் கொடுப்பதில் என்ன நியாயம் இருக்கிறது ?! 'கிவ் அன்ட் டேக்' பாலிசி என்று சின்ன‌ குழ‌ந்தை முத‌ல் க‌ல்யாண‌ம் முடித்த‌ இள‌ம் த‌ம்ப‌தியின‌ர் வ‌ரை அறிவுறுத்தி வ‌ள‌ர்க்கும் நாம், புவியைப் ப‌ற்றி இன்று வ‌ரை சிந்திக்காவிட்டாலும், இனிமேலாவ‌து சிந்திப்போமே. ந‌ம‌து அடுத்த‌ த‌லைமுறைக்கு இவ்வித்தை விதைத்துச் செல்வோம்.

மரம் வளர்க்காததன் விளைவு, மற்றும் மரம் வளர்த்துக் கொடுப்பதின் மூலம், புவி நமக்கு அளிக்கும் அற்புதம் பற்றி இய‌ற்கை வேளான் விஞ்ஞானி ந‌ம்மாழ்வார் அவ‌ர்க‌ள் ...

(நன்றி: விகடன்)

1987-ல் இயற்கை விவசாயப் பயிற்சிக்குப் போனேன். அங்கு ஒரு பெரியவர் வந்திருந்தார். சுற்றுச்சூழல் கழகத்தினுடைய தலைவர் அவர். அவர் என்னிடம் ``இனிமேல் உங்கள் நாட்டில் பருவ மழையே பெய்யாதென்று'' சொன்னார். இதை அவர் 1987-ல் சொன்னார்.


ஏன் என்று நான் கேட்டதற்கு, ``உங்களுடைய மேற்குத் தொடர்ச்சி மலை 3 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. அதில் 300 அடி உயரத்திற்கு மரங்கள் எல்லாம் இருக்கின்றன. அது அரபிக் கடலிலிருந்து வருகின்ற ஈரக் காற்றையெல்லாம் மேகமாக மாற்றி, மழையாக மாற்றி கீழே இறக்குகிறது. அந்த மழை நீரை பூமியில் இறக்கி பிறகு ஆற்றில் நீராக ஓடுகிறது. அந்த மரங்களையெல்லாம் நீங்கள் வெட்டிவிட்டு, இடுப்பளவு உயரமுள்ள `டீ' தோட்டம் போட்டு விட்டீர்கள். இன்னமும் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இன்னமும் குறையவே இல்லை அது. அதற்குப் பிறகு முழங்கால் உயரத்திற்கு உருளைக்கிழங்கு செடிகளை நடுகிறீர்கள். ஒரு ஜான் உயரத்திற்கு முட்டைக்கோஸ், காலிஃபிளவர் எல்லாம் பயிர் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதனுடைய விளைவு அரபிக்கடலிலிருந்து வரக் கூடிய ஈரக் காற்றை மேகமாக மாற்ற முடியவில்லை. மழையாக மாற்ற முடியவில்லை. அப்படியே தப்பித் தவறி மழை பெய்து ஓடுகின்ற தண்ணீரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆகவே எங்குப் பார்த்தாலும் வெள்ளம். ஆக, இனி உங்களுக்கு புயல் மழைதான் வரும். பருவ மழை வருவதற்கு வாய்ப்பில்லை'' என்று சொன்னார் அவர். அவர் சொன்ன அன்றிலிருந்து தொடர்ந்து உற்றுக் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். அதே தான் நடந்து கொண்டிருக்கிறது. நான் போகின்ற அத்தனை கூட்டங்களிலும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நான் எழுதும் அத்தனை கட்டுரைகளிலும் எழுதி கொண்டுதான் இருக்கின்றேன். யாராவது இதை வாசித்து உணர மாட்டார்களா? தவறைத் திருத்திக் கொள்ள மாட்டார்களா? என்று. ஆனால் யாரும் யோசித்த மாதிரி தெரியவில்லை. தொடர்ந்து காடு அழிக்கப்படுகின்ற செய்தி வந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கென்று ஒரு இலாக்கா இருக்கிறது. ஒரு துறை இருக்கிறது. காட்டை பாதுகாப்பதற்காகவே பணமெல்லாம் செலவழிக்கிறார்கள். அந்த நிகழ்ச்சிகளுக்கு மந்திரிகள் எல்லாம் கூட வருகிறார்கள். ஆனாலும் அழிக்கப்படும் காடுகள் பற்றி எந்த அக்கறையும் இல்லை. இதன் மூலம் உண்டான விளைவுகளைத்தான் இன்றைக்கு நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.


இந்த மரங்கள் மொத்தம் இரண்டு வேலைகளைச் செய்கின்றன. ஒன்று: நமக்கு உணவளிக்கிறது. நம் கால் நடைகளுக்கு உணவளிக்கிறது. இரண்டு: நம்முடைய கரிக் காற்றை உள்வாங்கிக் கொண்டு சுத்தமான காற்றாக மாற்றி திரும்ப நமக்கே அளிக்கிறது. இன்று நாம் என்ன செய்கிறோம்? சாலையோரங்களில் இருக்கின்ற மரங்களையெல்லாம் வெட்டிச் சாய்த்து விட்டு ரோட்டை அகலப்படுத்துகிறோம். எதற்கு ரோட்டை அகலமாக்குகிறோம். வண்டி வேகமாகப் போவதற்காக. அப்போது வாகனத்திலிருந்து நிறைய புகை வெளியேறப் போகிறது. அந்தப் புகையை உறிஞ்சுவதற்கு வேண்டிய மரங்கள் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஏதோ இங்கு மட்டும் நடக்கின்ற நிகழ்ச்சி இல்லை இது. உலகம் முழுக்க நடக்கின்ற நிகழ்ச்சி. ஆனால் பாதிப்பு என்பது நமக்குத்தான் அதிகமாக இருக்கும். ஏனென்றால், தென்னிந்தியாவிலுள்ள ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடுதான் தண்ணீர் குறைந்த மாநிலம்.


இன்றுள்ள நிலையில் இமயமலையே உருகி ஓடி வந்து கொண்டிருக்கிறது. கங்கை ஆற்றிற்கும் காவிரி ஆற்றிற்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? காவிரியில் மழை பெய்தால் தண்ணீர் வரும். கங்கையில் பனி உருகினால் தண்ணீர் வருகிறது. கோடை காலத்தில் கங்கையில் தண்ணீர் வருகிறது. அதனால் அங்கு விளைச்சல் என்னவோ அதிகமாகவே இருக்கும். ஆனால் இப்படியே இமயமலையில் பனிமலை உருகிக் கொண்டே போனால், நாளை கங்கையிலேயே தண்ணீர் வராது. இப்படியே உருகிக் கொண்டு வந்தால் வங்காள விரிகுடாவின் கடல் மட்டம் உயரும். அப்போது சென்னை பாதி இல்லாமல் போய்விடும். கடலூர் பாதி இல்லாமல் போய்விடும். நாகப்பட்டினம் இல்லாமல் போய்விடும். கன்னியாகுமரி இல்லாமல் போய்விடும். இதைக் கூட யோசிக்க கூடிய அளவிற்கு அந்தப் பதவியிலும், அந்தப் பொறுப்பிலேயும் இருப்பவர்களுக்கு அறிவில்லை. அதையெல்லாவற்றையும்தான் இவை கூட்டிக் காட்டுகின்றன.

(நன்றி: குமுதம் குழுமத்தின் தீராநதி)