Thursday, April 30, 2009

சொல்லிட்டீங்கள்ல‌, செஞ்சிருவோம் !



அந்தக் குட்டி ஆட்டோவில் சுற்றி எங்கிலும் தட்டி. ஆளுயரத்தில் அரசியல் தலைவர்கள் கையெடுத்துக் கும்பிட்டு நடப்பது போல் படங்கள். பின்சீட்டில் மைக்செட்டுக்கு வேண்டிய சாமான்கள், இருபுறம் தெருபார்த்து உறுமும் குழாய்கள். ஆட்டோவை சேகர் ஓட்ட, பக்கத்தில் தங்கராசு.

"அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே, உங்கள் பொன்னான வாக்குகளை ... அஞ்சாத சிங்கம், ஆளப் பிறந்தவர், இல்லை என்று சொல்லாத ஈகை குணம் படைத்தவர், உங்களில் ஒருவர், ஊருக்கு உழைப்பவர், எல்லாம் அறிந்தவர், ஏகாதிபத்தியத்தை ஒழிப்பவர் ..."

"டேய், நிறுத்து நிறுத்து ... ஏதோ ஆத்திச்சூடி கணக்கா அடுக்குமொழியில அடுக்கிட்டே போறே, இதுக்கெல்லாம் அர்த்தம் தெரியுமாடா ?!" என்று தங்கராசின் பின்னந்தலையில் தட்டினான் சேகர்.

"அண்ணே, எதுக்குண்ணே அடிக்கிறே ?! அதுவும் தலையில. வீட்டுக்குத் தலைச்சன் புள்ளணே நானு. ஏதாவது ஆகிடுச்சுன்னா நீயா எங்க வீட்டுல பதில் சொல்லுவே" என்றான் தங்கராசு மைக்கை அடைத்துக் கொண்டு.

"பெரிய இவரு, வீட்டுல பதில் வேற சொல்லணுமாக்கும். விட்டா பேசிகிட்டே இருப்பியே ! சரி, சரி, பேச்ச மைக்கில காண்பி. அப்புறம் இதுதான் சாக்குனு சொல்லி நமக்கு மண்டகப்படி வச்சிறப் போறானுங்க" என்றான் சேகர்.

"தாய்மார்களே, பெரியோர்களே உங்கள் பொன்னான வாக்குகளை ..." என்று தங்கராசு ஆரம்பிக்க, மேடு பள்ளமான ரோடுகளில், குலுங்கிச் சென்றது ஆட்டோ.

இருபதுகளில் இருந்தனர் சேகரும், தங்கராசும். தேர்தல் வந்தால் போதும், தினமும் திருவிழா தான் இவர்களுக்கு. படிப்பு ம‌ற‌ந்து, விளையாட்டு மற‌ந்து, ஊண் ம‌ற‌ந்து, துயில் ம‌ற‌ந்து, 'என் க‌ட‌ன் தேர்தல் ப‌ணி செய்து கிட‌ப்ப‌தே' என்றிருப்ப‌ர்.

"டேய் மைக்க‌ ஆஃப் ப‌ண்ணு. வா டீ சாப்பிட்டு வ‌ர‌லாம்" என்ற‌ சேக‌ருட‌ன் சென்றான் த‌ங்க‌ராசு. சாப்பாடு செல்லுதோ இல்லையோ ! டீ, காபி ம‌ட்டும் இடைவிடாது இற‌ங்கும்.

"ஏப்பா, ப‌டிக்கிற‌ வ‌ய‌சுல‌ இதெல்லாம் தேவையா உங்க‌ளுக்கு. எவ‌னோ வ‌ர்றான் ! எவ‌னோ போறான் !! நீங்க‌ ஏன் கெட‌ந்து லோல்ப‌ட‌றீங்க‌" என்றார் 'டீக்க‌டை பெரிசு' மாரி.

"உங்க‌ க‌டையில‌ டீ ஆத்த‌ற‌ வேலை த‌ர்ரேண்ணு சொல்லுங்க‌. இதோ ! இப்ப‌வே ஆட்டோவை 'செயல்' வீட்டுல‌ விட்டு வ‌ந்திர்றோம்" என்றனர்.

"சரிதான், எம்பொழப்புல கைய வைக்கிறீங்களா..." என்று அங்க‌லாய்த்தார் மாரி.

"நீங்க எங்க பொழப்புல கை வைக்கலாம். நாங்க வைக்கக் கூடாது !!" எனப் பொங்கினான் தங்கராசு.

மைக் இல்லாமலே கம்பீரமாக தங்கராசு பேச, "ஏய் போங்கப்பா ... வயசு வித்தியாசமில்லாம இப்படியா பெரியவர் கிட்ட பேசறது, போங்க போங்க" என்று அங்கிருந்தவர்கள் சேகரையும், தங்கராசையும் கிளம்பச் செய்தனர்.

'செயல்' என்றழைக்கப்படும் ராசேந்திரன், அந்த மாவட்டத்திலேயே பெரும் அரசியல் புள்ளி. அவரது வயதை விட, அரசியல் வளர்ச்சி அபாரமாக இருந்தது. மற்ற மாவட்ட நிர்வாகிகள் பார்த்து வாய்பிளக்கும் அளவிற்கு, கட்சி தலைமையுடனான நெருக்கம். இந்த‌த் தேர்த‌லில் சொந்தத் தொகுதியில் வேட்பாள‌ராக ஆகும் அள‌விற்கு உய‌ர்ந்திருந்த‌து.

வ‌ருங்காலம் இளைஞ‌ரின் கையில்
வகை செய்தார் தலைவர்.

செயல் வீரர் நம் அண்ணன்
செவ்வனே செயல்ப‌டுவார்.

வ‌ள‌மான‌ வாழ்வை, நமக்கு
மனம்போலத் தரவே,

வாக்களிப்பீர் அண்ணனுக்கு !!!

என்ற‌ வாச‌க‌ங்க‌ள் தாங்கி, வெள்ளுடுப்பில் இருக‌ர‌ம் கூப்பி, வெண்ப‌ற்க‌ள் சிரித்து ராசேந்திர‌னின் ஆளுய‌ர‌ப் ப‌ட‌ம் கொண்ட‌ த‌ட்டிக‌ள் த‌யாராய் இருந்த‌து அவ‌ர‌து வீட்டில்.

தெருவெலாம் சுற்றி, அர‌சிய‌ல் த‌லைவ‌ரின் புக‌ழ் பாடி, தொண்டைக் குழி வ‌ற்றி, முக‌மெலாம் சோர்ந்து செய‌ல் வீட்டை வ‌ந்த‌டைய‌ இர‌வு ப‌தினோறு ம‌ணி ஆகி இருந்த‌து.

இவ‌ர்க‌ள‌து கூட்டாளி இளைஞர்கள் ப‌ல‌ரும் அங்கே குழுமியிருந்த‌ன‌ர். போஸ்ட‌ர் ஓட்டுவ‌து, சுவ‌ர்க‌ளில் சித்திர‌ம் தீட்டுவ‌து, பிர‌ச்சார‌ முழ‌க்க‌ம் இடுவ‌து என‌ அத்த‌னை ப‌ணிக‌ளும் ஆற்றி, அன்றைய‌ கூலி வாங்க‌ காத்திருந்த‌ன‌ர்.

தலைக்கு ஐந்நூறும், ஆயிரமுமாய் ப‌கிர்ந்த‌ளிக்க‌ப்ப‌ட, ஆயிர‌ம் வாட்ஸ் ப‌ல்புகளாய் மின்னியது அவர்க‌ள‌து முக‌ங்க‌ள்.

"இந்த போஸ்டர் வாசகம் எழுதினது நீ தான ?!! இந்தா ரெண்டாயிரம் எஸ்ட்ரா வச்சுக்க, அண்ணன் குடுக்க சொன்னாரு." என்றார் பணப் பட்டுவாடா செய்த கரை வேட்டி ஒருவர்.

"த‌ம்பிக‌ளா, நாளைக்கு இன்னும் கொஞ்ச‌ம் வெள்ள‌ன‌ வ‌ந்திருங்க‌டா. வ‌ரிச‌யா த‌ட்டி இருக்கு பாருங்க‌. நாளைக்கு ஊரு முழுக்க‌ க‌ட்ட‌ணும், ச‌ரியா ?!!" என்றார் க‌ர்ன‌கடூரமாய் இருந்த‌ க‌ரை வேட்டி ம‌னித‌ர்.

'சொல்லிட்டீங்கள்ல‌, செஞ்சிருவோம் !' என்பதாய் அங்கிருந்து கிளம்பியது இளைய சமுதாயம் !!!

மே 2, 2009 யூத்ஃபுல் விகடனில்