Friday, August 24, 2007

கனவு மெய்ப்பட வேண்டும்

அந்தக் காலத்தில் தான் தலைவன் வரவை எதிர் பார்த்து தலைவி காத்திருந்ததாக நிறையப் படித்திருக்கிறோம். தற்போது உள்ள கால மாற்றத்தில், நிறைய தலைவர்கள் காத்திருக்கிறார்கள் ;-) அவர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம்.

நில வதன் ஒளி
ஒளி படர் வெளி
வெளி அதில் மதில்
மதில் அதில் நீ.

நீ காக்கும் நேரம்
நேரம் கடத்தி நான்
நான் வரச் சினம்
சினம் கொள் மனம்.

மனம் அதில் அலை
அலை ஒடுங்கிய நிலை
நிலை கொண்ட மண்
மண் அதில் செடி.

செடி அதில் கொடி
கொடி அதை ஒடி
ஒடித் ததைப் பிடி
பிடித் ததில் அடி.

அடித் தெனை அனை
அனைத் தெனை வளை
வளைத் தெனை இழு
இழுத் தெனை முகர்.

முகர் உன் சுவாசம்
சுவாசம் அதில் நேசம்
நேசம் நித்தம் பொளி
பொளி வது அருள்.

அருள் அது பெற்று
பெற் றதைப் பேணி
பேணி உனை நாணி
நாணும் எனைக் காண்.

காணும் உனை மறவேன்
மறவா துனை இருக்க
இருப்பில் நித்தமும் கனவு
கனவு மெய்ப்பட வேண்டும் !

(எழுத்துப் பிழை இருப்பின் சொல்லுங்க நண்பர்களே !)

Friday, August 10, 2007

வாத்து (குழந்தைகள் கவிதை)

வாத்தின் உருவமும், அதன் நிறமும், நடையும் பார்ப்பதற்கு நமக்கே அழகாய் இருக்கும். குழந்தைகளுக்கு அதைவிட மேலாய் ஆனந்தம். வீட்டின் அருகில் இருக்கும் ஒரு சிறு குளத்தில் நிறைய வாத்துக்கள் இருக்கின்றன. அங்கு செல்லும் போது அவற்றிற்கு ரொட்டித் துண்டுகள் போட்டு, குழந்தைகள் படும் கொண்டாட்டத்திற்கு அளவே இல்லை. அதன் நினைவாய் தோன்றிய கவிதை கீழே.



வெள்ளை நிற வாத்து
காவி மூக்கை சாய்த்து

தட்டை காலை வீசியே
தத்தித் தத்தி நடந்திடும்

கிட்ட நீயும் செல்லவே
நீரில் தாவி நீந்திடும் !

Thursday, August 9, 2007

நிலாச் சோறு (குழந்தைகள் கவிதை)

முதலில் எழுதிய யானை கவிதையை, எனது எட்டு வயது மகன் பிழையின்றி வாசித்து ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டான். இதிலென்ன ஆச்சரியம் என்று கேட்போருக்கு, புலம் பெயர்ந்த அனேகரின் குழந்தைகள் தமிழில் பேசுவதே இல்லை, அதிலும் வாசிக்கிறார்கள் என்றால் எவ்வளவு ஆனந்தம். அதே நிலை தான் எனக்கும்.

அடுத்த சந்ததியினருக்கு நாம் நமது மொழியைக் கற்றுக் கொடுக்காவிடில், பல்லாயிரம் ஆண்டுப் பாரம்பரியம் மிக்க காப்பியங்கள், அதன் பின் வந்த இலக்கியங்கள், இன்று நாம் விவாதிக்கும் பல நிகழ்வுகள், இதெல்லாம் எதற்காக ?

மொழியும், இயற்கையும், உணவும், பாசமும் எல்லாம் கலந்து, நமது பெற்றோர் நமக்குச் சொல்லியதை, நாம் நமது சந்ததியினருக்குச் சொல்லித்தர வேண்டாமா ?

எனது இரண்டாவது கவிதை (நிலாச் சோறு):



வட்ட நிலா மேலே
தட்டில் சோறு கீழே
நிலா பார்த்து நாமும்
நித்தம் உண்ணலாமா ?!

நெய் சோறு கொஞ்சம்
பருப்பு சோறு கொஞ்சம்
அழகாய் நீயும் சாப்பிடு
அன்னை சொல் கேட்டிடு !

அண்ணாவுக்கு ஒரு வாய்
அப்பாவுக்கு ஒரு வாய்
பகிர்ந்து நீயும் கொடுத்திடு
பாசத்தோடு வளர்ந்திடு.

Tuesday, August 7, 2007

யானை (குழந்தைகள் கவிதை)

நாம் படித்த அளவிற்கு இக்காலக் குழந்தைகள் தமிழில் பாடல்கள் படிப்பதில்லை (சினிமா பாடல்கள் அல்ல :)). அவர்கள் தமிழில் பேசுவதே அறிதாய் இருக்கிறது. வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தில் சிதைந்துவிடுமோ நம் தமிழ் என்று எண்ணத் தோன்றுகிறது.

வலையில் நாம் தமிழில் இடுகைகள் இட்டாலும், வளையவரும் நம் குழந்தைகள் தமிழில் பேசுவதை விரும்புவதில்லை. இதற்கு பல பெற்றோர் பல கருத்துக்களைச் சொல்கிறார்கள். அதைப் பற்றிப் பிறகு வேறு பதிவுகளில் பார்ப்போம்.

எளிமையாய் குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி எழுதலாம் என்றால், எளிமை தான் கடினம் என்று புரிந்தது. ஓரளவுக்கு எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். இது எனது முதல் முயற்சி. படித்து, நன்றாக இருந்தாலும் / திருத்தங்கள் தேவைப்பட்டாலும் மறவாமல் தெரிவியுங்கள். -- நன்றி.



கரு கரு யானை
பட பட காது
குரு குரு கண்ணு
துரு துரு தும்பிக்கை
பெரிய பெரிய வயிறு
டம் டம் காலு
கம்பி முடி வாலு

------

ஆற்றில் நீரை உறிஞ்சி
பீச்சி அடிக்கும் யானை

உச்சி மர இலையையும்
உறித்து உண்ணும் யானை

கோவில் வாசல் நின்று
ஆசி வழங்கும் யானை

காசு தரும் குழந்தைகளை
முதுகில் ஏற்றும் யானை

பாடி ஆடும் சிறுவர்களோடு
பந்தடிக்கும் யானை

Friday, August 3, 2007

வரவு எட்டணா செலவு பத்தணா -- கண்ணதாசன்

"பாமா விஜயம்" திரைப்படம் நான் பிறப்பதற்கு முன்னால் வந்தாலும், பின்னாளில் பல முறை பார்த்த திரைப்ப(ா)டங்களில் இதுவும் ஒன்று.

திரைப்படம் என்ற எண்ணம் தோன்றாமல், இயல்பு வாழ்க்கை, இது தான் எதார்த்தம் என்று படம் முழுதும் காட்டியது கே.பாலச்சந்தர் அவர்களின் திறமை.

என்ன தான் தற்போதைய திரைப்படங்கள் அதிரவைத்தாலும், இன்னும் சில மாதங்கள் கழித்துப் பார்த்தால் அவை நம்மை அழவைக்கும் என்பது நிச்சயம்.

கே.பி. தான் இமயம் என்றால், நம் கவியரசர் முழுப் படத்தையும் நறுக்கென்று அவருக்கே உரிய எளிய (நாமெல்லாம் படிக்கனுமே) வரிகளில் பாடலாக்கி விட்டார்.

தற்போது, இந்த நிலையில் இருந்து நாம் கொஞ்சம் மாறுபட்டு இருக்கிறோமோ என்று தோன்றுகின்றது. வளர்ந்து வரும் பொருளாதாரம். அதை வளர்த்துக் கொள்ளத் துடிக்கும் இளைஞர்கள். நல்ல முன்னேற்றமே.

வரவு, செலவு என்பதைப் பொருத்து இந்தப் பாடல் (எனக்கு) தற்கால வாழ்வு முறைக்கு முறண்பட்டிருந்தாலும், நம்ம நடிகர், நடிகையர் மோகம் இன்னும் குறைந்த பாடில்லை என்று துணிச்சலாய்ச் சொல்ல முடியும். நடிகர் ரஜினியின் நியூயார்க் / நியூஜெர்சி வருகையில், நம் இளைய கணிப்பொறியாளர்கள் படையைப் பார்த்தால், அதிரத்தான் செய்கிறது ;-)

சரி, பாடலுக்குச் செல்வோம். பாடலைக் கேட்டு, பார்த்து, வாசித்து மகிழுங்கள்.



Thanks senthil5000 for youtube


வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டணா
கடைசியில் குந்தனா குந்தனா

1.2.3.4.5.6.7.8.

வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டணா
கடைசியில் குந்தணா குந்தணா

நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தா நிம்மதி இருக்காது
ஐயா நிம்மதி இருக்காது

அளவுக்கு மேலே ஆசை வந்தா உள்ளதும் கிடைக்காது
அம்மா உள்ளதும் கிடைக்காது

வயசுக்கு மேலே உலகத்தில் உள்ள நல்லது பிடிக்காது
மாமா நல்லது பிடிக்காது

வயசுப் பிள்ளைகள் புதுசா பெருசா வாழ்வது பொருக்காது
அப்பா வாழ்வது பொருக்காது

வாடகை சோபா ... இருபது ரூபா
விலைக்கு வாங்கினா ... முப்பதே ரூபா !

வரவு எட்டணா ...

அடங்கா மனைவி அடிமைப் புருசன் குடும்பத்துக் காகாது
ஐயா குடும்பத்துக் காகாது

யானையைப் போலே பூனையும் தின்னால் ஜீரணம் ஆகாது
ஐயா ஜீரணம் ஆகாது

பச்சைக் கிளிகள் பறப்பதைப் பார்த்தா பருந்துக்குப் பிடிக்காது
அப்பா பருந்துக்குப் பிடிக்காது

பணத்தைப் பார்த்தால் கவுரவம் என்பது மருந்துக்கும் இருக்காது
மாமா மருந்துக்கும் இருக்காது

தங்கச் சங்கிலி ... இரவல் வாங்கினா ...
தவறிப் போச்சுன்னா ... தகிடத் தந்தனா ...

பாமா விஜயம் கிருஷ்ணனுக்காக இங்கே எதுக்காக ?
அம்மா இங்கே எதுக்காக ?

மாதர்களெல்லாம் கன்னிகளாக மாறனும் அதுக்காக
அப்பா மாறனும் அதுக்காக

கன்னிகளாக மாறிய பின்னால் பிள்ளைகள் எதுக்காக ?
ஐயா பிள்ளைகள் எதுக்காக ?

காதல் செய்த பாவத்துக்காக வேறே எதுக்காக ?
அப்பா வேறே எதுக்காக

பட்டால் தெரியும் ... பழசும் புதுசும் ...
கெட்டால் தெரியும் ... கேள்வியும் பதிலும் ...

வரவு எட்டணா செலவு பத்தணா ...

Thursday, August 2, 2007

அம்மா எப்பவும் இப்படித்தான்

மார்க்கெட்டில் இருந்து வரும்போது, அப்பப்பா.... என்ன வெய்யில் என்று அலுத்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்தார் பார்வதி. ஹாலில் மின் விசிறியைத் தட்டிவிட்டு அதன் கீழே அமர்ந்தார். கழுத்தில் வழியும் வியர்வையை, சேலைத் தலைப்பால் சுற்றித் துடைத்து விட்டுக் கொண்டவர், ஏதோ பொறி தட்டியவராய், சேலைத்தலைப்பைப் பார்த்தார், காய்கறிக் கூடையைக் கொட்டிப் பார்த்தார். காணவில்லை. மின்விசிறி படபடக்க, பார்வதியும் அதனோடு சேர்ந்து கொண்டார்.

"இப்பத்தானே உள்ளே வந்தே, எங்கேம்மா திரும்பக் கெளம்பிட்டே" என்ற திலகத்தின் சொற்களைக் கேட்டவாறே தெருவில் நடையைத் துரிதப்படுத்தினார் பார்வதி.

கல்லு, மண்ணு, அங்கே அங்கே தோண்டியிருந்த குழிகள், அதில் தேங்கிய நேற்றைய மழை நீர் இவைகள் தான் பார்வதியின் கணகளில் பட்டன. எதை அவர் தேடுகிறாரோ அது தென்படவில்லை.

மாடியிலிருந்து கீழே இறங்கிய ஜெகன், "அம்மா குரல் கேட்டதே, எங்கே இப்ப காணோம்" என்று திலகத்திடம் கேட்டான்.

"என்ன நடக்குதுனு தெரியல. மார்க்கெட் போய்ட்டு வந்தவங்க, வந்த வேகத்திலேயே கெளம்பிட்டாங்க. ஆமா, நீ எதுக்கு அம்மாவத் தேடுற" என்றாள்.

"ஒன்னுமில்ல, சும்மாதான்" என்று சோபாவில் அமர்ந்து டி.வியை ஆன் செய்தான்.

அலைந்து திரிந்து வீடு திரும்பியவர், "கொடுத்திட்டேன்னா, கொடுத்திட்டேனு சொல்ல வேண்டியது தானே, எதுக்கு இந்தக் கத்து கத்துறான், எல்லாரயும் மாதிரியா நான் இருக்கேன், என்ன பார்த்தா ஏமாத்தறவ மாதிரியா இருக்கு, பேசிகிட்டே போறான்" என்று கடைக்காரனைத் திட்டிக் கொட்டினார்.

பார்வதியின் குரலைக் கேட்டு, "அம்மா, நேத்து ஒரு ஐநூறு ரூபாய் கேட்டேனே", என்று சோபாவில் இருந்தே குரல் கொடுத்தான் ஜெகன்.

"ஏன்டா, அம்மா படபடனு இருக்காங்க, அதுபத்தி ஏதாவது கவலைப் பட்டியா ? காசு தான் உனக்கு ரொம்ப முக்கியமாப் போச்சு" என்று வாயிலில் இருந்தே கத்தினாள் திலகம்.

"அம்மா, இப்பவாவது சொல்லு, அப்படி என்னதான் மார்க்கெட்டுல நடந்துச்சு" என்று கேட்ட திலகத்திடம், அம்மா சொன்னாள்

கத்தரிக்காய், தக்காளி, வெங்காயம் இது தான் வாங்கினேன். கொடுத்த 50 ரூபாய்க்கு மீதி 5 ரூபா கடைக்காரன் தரணும். அவன் கொடுத்திட்டேன்கறான். ஆனா அந்த அஞ்சு ரூபா எங்கே போச்சுனே தெரியல, அதான் தேடிக்கிட்டு இருக்கேன் என்றார்.

"அம்மா, என்னோட ஐநூறு என்னாச்சு" என்று மீண்டும் குரல் விட்டான் ஜெகன்.

"இருப்பா வர்றேன்" என்று மகனுக்குச் சொல்லி, மொத்தமா அஞ்சு ரூபா, எனக்கென்னமோ கடைக்காரன் மேல தான் சந்தேகமா இருக்கு. அத்தனை பேரு வரும்போது அவன் சில்லரை தர மறக்க வாய்ப்பு இருக்கு, என்னடான்னா என்னை அல்லவா திட்டறான், மனதுக்குள்ளே நொந்து கொண்டார்.

கொட்டிய கூடையிலிருந்து காய்கறிகளை பிரித்து எடுத்து வைத்தாள் திலகம். ஒரு வெங்காயத்தோடு ஒட்டிக் கொண்டிருந்தது அந்தப் பழைய ஐந்து ரூபாய் நாணயம்.

"அம்மா, இதோ இருக்கு பாரு, நீ பாடுபட்டு தேடிக் கொண்டிருந்த ஐந்து ரூபாய்" என்று ஹாலில் இருந்து கத்தினாள் திலகம்.

அளவற்ற சந்தோசத்துடன் வாயிலிலிருந்து எழுந்து உள்ளே வந்தார் பார்வதி. "அப்பாடா கெடச்சிருச்சு, நம்ம பணம் எங்கே போயிடும்" என்று திலகத்தின் கையில் இருந்து நாணயத்தை வாங்கிக் கொண்டார். "மருதமல முருகன் அருள் நமக்கு எப்பவும் உண்டுனு" உங்க தாத்தா அடிக்கடி சொல்லுவார் என்று சொல்லி நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

அடுக்களைக்குச் சென்றவர், மகனின் நினைவு வரவே, "ஏப்பா ஜெகா எவ்வளவு கேட்டே நீ, ஐநூறு தானே ? இந்தா" என்று தனது 'பிகிபேங்க்' அஞ்சறைப் பெட்டியிலிருந்து எடுத்துக் கொடுத்தார்.

பணத்தை மகன் வாங்கிச் செல்வதை சந்தோசமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார் பார்வதி.