Tuesday, August 26, 2008

வானின் நிறம் நீலம் - 5

அண்ணி வீட்டில் இல்லை என்று அமைதியான‌ சூழ்நிலை தெரிவித்த‌து. ந‌ல்ல வேளை அவ‌ர்க‌ள் இல்லை என‌ நினைத்துக் கொண்டாள். வெளிக் கதவைத் தாழிட்டு, த‌ன‌து ரூமிற்கு சென்று பையை வைத்து விட்டு, ப‌டுக்கையில் ச‌ரிந்து விழுந்தாள் நிர்மலா.

வாழ்வில் எத்த‌னை எத்த‌னை மாற்ற‌ங்க‌ள். கால‌ம் தான் வேக‌மெடுத்து ஓடுகிற‌தென்றால், மாற்றங்க‌ளும் போட்டி போட்டுக் கொண்டு அல்ல‌வா வ‌ருகிற‌து.

இர‌ண்டு வாரங்கள் முன்பு வ‌ரை வேலை செய்த‌ இட‌ம் எத்த‌னை ர‌ம்மிய‌மாக‌ இருந்த‌து. எத்தனை எத்த‌னை ந‌ண்ப‌ர்க‌ள். இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளாக‌ சேர்த்து வைத்த‌ ந‌ட்பு இப்ப‌டி ச‌ட்டென‌ ஆளையே சாய்த்து விடும் என‌ நிர்ம‌லா நினைத்தும் பார்த்த‌தில்லை.

'ந‌ல்ல‌ வேளை க‌ணினித் துறை எடுத்தேன். அடுத்த‌ வேலை கிடைக்காம‌ல் போய்விடாது'. ஆனாலும் இரு வார‌ இடைவெளியில் அண்ணியின் ஆக்கிர‌மிப்பு, ம‌ற்றும் அண்ண‌ன் மேல் அவ‌ள் செலுத்தும் ஆளுமை, சமீப காலமாய் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல‌ உள்ள‌ர்த்த‌ம் கொண்ட‌ வார்த்தைகள் என எல்லாவ‌ற்றையும் தாங்கி அம்மி போலக் க‌ல்லென‌ இருந்தாள்.

ஆடிக் காற்றில் அம்மியும் ந‌க‌ரும் தானே !

நிர்ம‌லாவின் அண்ண‌ன் ர‌குப‌தி. பிட்ஸ் பிலானியில் ப‌டித்து விட்டு, ஒரு கெமிக்க‌ல் க‌ம்பெனியில், ப்ராஜ‌க்ட்டிற்காக பல வருடங்கள் முன்னர் சிங்கப்பூர் வ‌ந்தவ‌ன். அங்கேயே வேலையும் தர, அப்ப‌டியே ப‌டிப்ப‌டியாக‌ முன்னேறி, தற்சமயம் 'வைஸ் ப்ரெசிடென்ட்' அந்த‌ஸ்த்தில் இருப்ப‌வ‌ன்.

படிக்கும் போதே, சென்னையிலேயே ந‌ல்ல‌ குடும்ப‌த்தில் இருந்து, ச‌க‌லமும் முறைப்ப‌டி பெரியோர்க‌ளால் ஏற்பாடு செய்ய‌ப்பட்டு, ஜானகியைக் க‌ர‌ம் பிடித்தான்.

சென்னையில், நிர்ம‌லாவின் த‌ந்தை கட்டுமானத் தொழிலில் கொடிக‌ட்டிப் ப‌ற‌ப்ப‌வ‌ர். ஜான‌கியின் த‌ந்தை பல தொழில்கள் செய்து எதுவும் சரிவராமல், ச‌மீப‌ கால‌மாக‌ உண‌வ‌க‌த் தொழிலில் நாட்ட‌ம் செலுத்தி வ‌ருப‌வ‌ர். ஜான‌கி ஒரே பெண் அவ‌ருக்கு. அத‌னால் செல்ல‌த்திற்கு அள‌வே இல்லை என‌ச் சொல்ல‌வும் வேண்டுமோ ! க‌ட்டுக்க‌ட‌ங்காத‌ ப‌ச்சிள‌ங்க‌ன்றாய் சுற்றித் திரிந்தாள் ஜான‌கி இள‌வ‌ய‌தில். அப்பா செல்ல‌ம் என்பதால், அம்மா அவ்வ‌ப்போது அறிவுரைக‌ள் கூற‌த் த‌வ‌ற‌வில்லை. இத‌னாலேயே அம்மாவைப் பிடிக்காது அவ‌ளுக்கு !!

திரும‌ண‌த்திற்குப் பின், நிர்மலாவிற்கு உற்ற‌ தோழியாய், உட‌ன் பிற‌ப்பினும் மேலாய் இருந்தாள் ஜான‌கி. 'நான் கொடுத்து வைத்த‌வ‌ள் அண்ணி' என்று ப‌ல‌முறை நிர்மலா சொல்ல‌ .... "நாம் இருவருமே ! அண்ணி எல்லாம் இல்லை, உனக்குத் தோழி சரியா ?" என்பாள் க‌ண்ண‌க் குழி மூடி புன்சிரிப்புடன்.

ர‌குப‌தியின் வீட்டில் அவன‌து அப்பா, அம்மா ரொம்ப‌ க‌ண்டு கொள்ளாத‌து, டீன் ஏஜ் நிர்ம‌லாவின் ஃப்ரெண்ட்ஷிப், அப்புற‌ம் சிங்க‌ப்பூர் சென்ற‌து, அங்கே க‌ல்லூரித் தோழிக‌ள் சில‌ரைச் ச‌ந்தித்த‌து, என எல்லாம் அவளுக்குப் பிடித்த மாதிரியே இருக்க, அப்ப‌டியே செட்டிலும் ஆனாள் ஜான‌கி.

கால‌ மாற்ற‌த்தில், அன்றிருந்த தோழி இன்று அண்ணியானாள், அன்னிய‌னானாள்.

இத்த‌னைக்கும் நிர்ம‌லா சிங்கை வ‌ந்த‌ புதிதில், ம‌ற்ற‌வ‌ர்க‌ளை விட‌ ஜான‌கி தான் ரொம்பப் பெருமை கொண்டாள். "வெளியில் எல்லாம் நீ த‌ங்க‌ வேண்டாம், எங்க‌ வீட்டிலேயே தான் இருக்க‌ணும். அதான் எங்களுக்கும் பெருமை" என்று, விடாப்பிடியாய் வெளியில் செல்ல‌ இருந்த‌ நிர்ம‌லாவைத் த‌ன் வீட்டில் தங்கவும் வைத்தாள்.

நினைவுக‌ளினூடே வெளிக் க‌த‌வு திற‌க்கும் ச‌ப்த‌ம் கேட்ட‌து. அண்ணி தான் வ‌ருகிறாள் என‌ அவ‌ள‌து பாத‌ணிக‌ள் கதறியது. வ‌ந்த‌தும் வ‌ராத‌துமாக‌, "இறைவா, ஏன் இப்ப‌டி என்ன‌ சோதிக்க‌ற‌. அவ‌ கிட்ட‌ போன் ப‌ண்ணிட்டு தானே போனேன். கொஞ்சம் லேட்டாயிடுச்சு, அதற்காக எதிர்பாராத விதமா பி.ஸி., நாளைக்கு வாங்க‌னு அனுப்பிட்டாளே. என்ன‌ திமிர், என்ன‌ தைரிய‌ம். எல்லாம் நாலு காசு பார்க்கிறோம் என்கிற‌ அழிச்சாட்டியம், எல்லாம் நம்ம நேரம், இதுங்க சொல்றதெல்லாம் கேட்க வேண்டும் என்று !!!" என‌ பியூட்டி பார்ல‌ர் பெண்ணைத் திட்டுவ‌து போல் த‌ன்னையும் சேர்த்து திட்டுகிறாள் என உணர்ந்தாள் நிர்மலா.

"ம‌த்த‌வ‌ங்க‌ மாதிரி அழ‌கா பொற‌க்கவில்லை என்றாலும், அழ‌கா இருக்க‌ணும் என்று நினைக்கிற‌து த‌ப்பா ! ஒரு ஐப்ரோ, ச்ஃபேசிய‌ல் இது கூட‌ நினைத்த‌வுட‌ன் செய்துக்க‌ முடிய‌லையே !!! இதுல, உன‌க்கு க‌ல‌ர் காம்பினேச‌ன் ச‌ரியா ப‌ண்ண‌த் தெரிய‌லை, அவ‌ கிட்ட‌ க‌த்துகனு, இவ‌ரு ரெக‌மென்டேஷ‌ன் வேற !!! எல்லாம் என் தலை எழுத்து ...."

கோப‌மும் ஆத்திர‌மும் பொங்கினாலும், 'பொறுத்தார் பூமி ஆள்வாராய்' அமைதி காத்தாள் நிர்ம‌லா.

"எவ்வ‌ள‌வு பொலம்பிட்டு இருக்கேன். ஏதாவ‌து விழுதா காதில‌, இல்ல விழாத‌ மாதிரி ந‌டிக்க‌றியா ?!!" என்று நேர‌டியான‌ கேள்விக்குத் தாவினாள் ஜான‌கி.

ச‌டாரென‌ க‌த‌வைத் திற‌ந்து தன்ன‌றையிலிருந்து வெளி வ‌ந்த‌ நிர்ம‌லா "அண்ணி, எதுக்கும் ஒரு அள‌வு இருக்கு, வாய் இருக்க‌ன்ற‌தால‌ நினைத்த‌தை எல்லாம் பேசாதீங்க. உங்க காரியம் நடக்கலைனா அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் !? அவளத் திட்டற மாதிரி என்னையும் திட்டறீங்க‌"

அப்படிக் கேளுடி என் நாத்தினாம‌ணி. காரிய‌ம் ந‌ட‌க்காத‌தே உன்னால‌ தானே !!!!


தொடரும் .....

12 மறுமொழி(கள்):

ராமலக்ஷ்மிsaid...

குடும்பச் சண்டை குடுமிச் சண்டை இதெல்லாமும் நல்லா வருதே:)))! பாவம் நிர்மலா.

எது அவளை இங்கு கொண்டு வந்து சேர்த்தது?

//இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளாக‌ சேர்த்து வைத்த‌ ந‌ட்பு இப்ப‌டி ச‌ட்டென‌ ஆளையே சாய்த்து விடும் என‌ நிர்ம‌லா நினைத்தும் பார்த்த‌தில்லை.//

எந்த நட்பு அவளை இப்படிச் சாய்த்தது? அறியக் காத்திருக்கிறோம்.

Anonymoussaid...

அட இப்படி ஒரு திருப்பமா..

\\//இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளாக‌ சேர்த்து வைத்த‌ ந‌ட்பு இப்ப‌டி ச‌ட்டென‌ ஆளையே சாய்த்து விடும் என‌ நிர்ம‌லா நினைத்தும் பார்த்த‌தில்லை.//

எந்த நட்பு அவளை இப்படிச் சாய்த்தது? அறியக் காத்திருக்கிறோம்.
\\

Exactly :)

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம், ரம்யா,

//அட இப்படி ஒரு திருப்பமா..

இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளாக‌ சேர்த்து வைத்த‌ ந‌ட்பு இப்ப‌டி ச‌ட்டென‌ ஆளையே சாய்த்து விடும் என‌ நிர்ம‌லா நினைத்தும் பார்த்த‌தில்லை.

எந்த நட்பு அவளை இப்படிச் சாய்த்தது? அறியக் காத்திருக்கிறோம்.//

உங்களின் ஆவல் கண்டு அளவிலா மகிழ்ச்சி. அடுத்த பாகம் இதோ ரெடியாயிட்டே இருக்கு.

cheena (சீனா)said...

பாவமே !! இது என்ன நாத்தனார் - அண்ணி சண்டை - எதிர்பாராததௌ - அதென்ன - நிமலாவிற்கு சோதனை - 2ஆண்டு நட்பு ?

ம்ம்ம்ம்ம்ம்ம் பொறுத்திருந்து பார்க்கலாம்

Ramya Ramanisaid...

சதங்கா அண்ணே (சார்ன்னு கூப்பிட கூடாதுன்னு சொல்லிட்டீங்களே :(( ) "வானின் நிறம் நீலம்" அடுத்த பாகம் எப்போ??

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

//ம்ம்ம்ம்ம்ம் பொறுத்திருந்து பார்க்கலாம்//

பொறுத்திருங்கள். எல்லாம் கால மாற்றங்களின் சோதனை தான். கொஞ்ச கொஞ்சமா பார்ப்போம்.

சதங்கா (Sathanga)said...

ரம்யா,

//சதங்கா அண்ணே (சார்ன்னு கூப்பிட கூடாதுன்னு சொல்லிட்டீங்களே :(( )//

அதுக்காக !!! அண்ணனாஆஆஆஆஆ (வடிவேலு ஸ்டைல்ல படிங்க தங்கச்சி :)))

// "வானின் நிறம் நீலம்" அடுத்த பாகம் எப்போ??//

உங்க ஆர்வம் பிடிச்சிருக்கு. இதோ தூக்கத்தையும் விட்டு தட்டச்சிட்டு இருக்கேன்.

குட்டிபிசாசுsaid...

குடும்பக்கதை நல்ல எழுதுரிங்க! டீவி சீரியல் இயக்க வாய்ப்பு கிடைக்கும்...ஜக்கம்மா சொல்லுறா!

சதங்கா (Sathanga)said...

குட்டிப்பிசாசு,

//குடும்பக்கதை நல்ல எழுதுரிங்க! //

மிக்க நன்றி.

//டீவி சீரியல் இயக்க வாய்ப்பு கிடைக்கும்...ஜக்கம்மா சொல்லுறா!//

தெரியாம தான் கேட்கிறேன், அவ்ளோ மோசமாவா இருக்கு என் கதைகள் ?!!! :)

சதங்கா (Sathanga)said...

ரம்யா,

// "வானின் நிறம் நீலம்" அடுத்த பாகம் எப்போ??//

அடுத்த பாகம் போட்டாச்சு தங்கச்சி :))

வல்லிசிம்ஹன்said...

எந்த நட்பு அவளை இப்படிச் சாய்த்தது? அறியக் காத்திருக்கிறோம்.//
நிர்மலா பாவம்பா. என்ன நடந்ததோ தெரியலையே. ஆமாம் அண்ணி ஏன் இப்படி நடந்துக்கிறாங்க. இவ தனியா போயிட வேண்டியதுதானே. சரி அடுத்த பதிவைப் பார்க்கிறேன்.

சதங்கா (Sathanga)said...

வல்லிம்மா,

//நிர்மலா பாவம்பா. என்ன நடந்ததோ தெரியலையே. ஆமாம் அண்ணி ஏன் இப்படி நடந்துக்கிறாங்க. இவ தனியா போயிட வேண்டியதுதானே. சரி அடுத்த பதிவைப் பார்க்கிறேன்.//

அடுத்த பதிவு இல்லை, அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போமே, சரியா ?!!!

Post a Comment

Please share your thoughts, if you like this post !