Monday, July 14, 2008

ஹுஸ்ட‌ன் ப‌ய‌ண‌ம் - 3 - கேல்வ‌ஸ்ட‌ன் பீச்

ஜூலை 05, சனி.

நாசா விட்டு வெளியில் இர‌ண்டு ம‌ணி போல் வ‌ந்து, பீட்ஸா ஹ‌ட்டில் சாப்பிட்டுவிட்டு, ந‌ண்ப‌ன் வீட்ட‌ருகிலேயே நிறைய‌ ஹோட்டல்க‌ள் இருக்க‌, ச‌ரி ஒவ்வொன்றாய் விசாரிக்க‌லாம் என்று போனால், முத‌ல் ஹோட்ட‌லிலேயே ரூம் கிடைத்த‌து. கொஞ்ச‌ம் வாட‌கை தான் ஜாஸ்தி, கிடைத்த‌வ‌ரைக்கும் பெருமூச்சாக‌ இருந்த‌து.

நான்கு ம‌ணி போல் பீச்சுக்கு கிள‌ம்பினோம். 45 நிமிட‌ ட்ரைவ்.

காற்று சிலுசிலுவென‌ வீச‌, அலைக‌ள் காற்றோடு உருண்டு விளையாட, க‌ரையோர‌ம் ஸீக‌ல் ப‌ற‌வைக‌ளின் ந‌ட‌ன‌ம். நின்று கொண்டேயிருக்கும் அவை, அலை கிட்ட‌ வ‌ர‌, எகிறி குதித்து, காற்றில் மித‌ந்து, அலை உள் செல்லும்போது த‌ரை மிதித்து, ப‌ட‌ ப‌ட‌ வென‌ அங்குமிங்கும் சிறு பூச்சிக‌ள் தேடுவ‌து அப்ப‌டியே ஸீ‍டான்ஸ் போன்று இருந்த‌து.

ந‌ம்ம‌ ஊர் திரைய‌ர‌ங்குக‌ளில், க‌தாநாய‌க‌னைக் காட்டும் போது மேலிருந்து பறக்கும் காகித‌த் தூவ‌ல்க‌ள் போல் எக்க‌ச்ச‌க்க‌ ப‌ற‌வைக‌ள். ஸீக‌ல், பெலிக‌ன், நாரை ம‌ற்றும் ப‌ல‌. உடல் வெள்ளையாய் இருக்க, தலையை கருப்பு மை டப்பாவிற்குள் முக்கி எடுத்தது போல இருந்தது ஸீகல்லின் வண்ணம்.

பார்க்கிங் ப‌ற்றி க‌வ‌லைப்ப‌ட்டோம், ஆனால் நினைத்ததை விட‌ மிக‌வும் எளிதாய் இருந்த‌து. ரோட்டிலேயே க‌ட‌லை ஒட்டி ஒரு லேன் பார்க்கிங்காக‌வே !!!

நிறைய இடங்கள் காலியாக இருக்க, வசதியான ஒரு இடம் பார்த்து வண்டியை நிறுத்தி, குழந்தைகளுக்கு உடுப்பு எடுத்துக் கொண்டு கீழிறங்கினோம். ரோட்டிலிருந்து கடலுக்கு இறங்க ஒரு பத்து பதினைந்து படிகள். அதன் வழியே கீழே பார்த்தால் நெடுகிலும் ஒரே பாறை கற்கள். நம்ம பாண்டிச்சேரி பீச் போலவே.

குழந்தைகள் தண்ணீரில் இறங்கணும் இப்பவே என்கிறார்கள். ரொம்ப தூரம் தள்ளிப் பார்த்தால் மண் இருப்பது போலத் தெரிந்தது. நிறைய மக்கள் தெரியவே, பொடி நடையாய் நடந்தோம்.

அங்கும் பாறைகள் தான். ஆனால் அதற்கும் மேலே மண் வந்து, நீரும் வந்திருந்தது. நீரில் ஆடி, மணல் வீடு கட்டி, சிப்பிகள் பொறுக்கி, குட்டீஸுக்கு ஏகப்பட்ட குஷி.

கரையோரம் நடந்து, நீரின் அலைகள் காலைத் தொட்டுச் செல்லும்போது மனம் ஒரு கனம் லேசாவது உணர முடிந்தது. 'ரிலாக்ஸ் ப்ளீஸ்' என்றால் அநேகருக்கு இந்தக் கரையோர நடை லிஸ்டில் முதலிடம் தான் இல்லையா ?!

நிறைய மக்கள் குடும்பம் குடும்பமாக, இக்கரையோரங்களில் டெண்ட் போட்டு கதையளந்து கொண்டிருக்கிறார்கள். வாலிபர்கள் சர்ஃபிங் பண்ண, குட்டீஸ்கள் மணல் வீடு கட்ட, நம்ம ஊரு போலவே இங்கும் சில அஞ்சா நெஞ்சர்கள் கரையை விட்டு வெகு தூரம் கடலுக்குள் செல்கின்றனர். அவர்களை விசில் அடித்து எச்சரிக்கும் லைஃப் கார்ட்.

பாறைகள் இருக்கும் இடங்களில் நிறைய மிச்சிகள் (மெக்ஸிகன்ஸ்). பாறை இடுக்குகளில் கயிறு விட்டுக் கொண்டு. ஒருவர் மேலே கயிறை எடுக்கும்போது பார்த்தால், இரண்டு விர‌ல் அளவிற்கு ஒரு கோழித் துண்டு கட்டியிருக்க, மீண்டும் வேறொரு இடுக்கில் உள்ளே விடுகிறார். எம்மாம் பெரிய மீனைப் பிடிப்பார் எனத் தெரியவில்லை. மீனுக்குத் தானா இல்ல வேற ஏதாவதுக்கா என்றும் தெரியவில்லை.

'ஆர் வி கோயிங் டு கம் பேக் ஹியர் ?'. கிளம்பலாமா என்று கேட்டதற்கு என் மகளின் எதிர் கேள்வி. 'லெட்ஸ் ஸீ' என்று சொல்ல, அரை மனதாய் இருந்த அவர்களை அழைத்துக் கொண்டு ஹோட்டல் வந்து சேர்ந்தோம்.

நாசாவில் சுற்றி, பீச்சில் ஆடிய‌ களைப்பில் குழந்தைகள் தூங்கிப் போயிருந்தார்கள். நாமும் தான்.

நீங்களும் தான். ரெஸ்ட் எடுங்க, அடுத்து 'மூடிஸ் கார்டன்' போகலாம்.

-----


கரையிலிருந்து கீழ இறங்கலாம் என பார்த்தால் .....


பீச் கரை ஓரம், எங்கள் நடை தொடரும் ...


அஞ்சா நெஞ்சர்கள் ...


தனியே, தன்னந் தனியே ...


சூரியக் கதிர்களை தாங்கிச் செல்லும் அலைகள் ...


ஸீ-கல்லின் நீர் நடனம் ...


காகிதத் தூவல்கள் ...


திஸ் இஸ் மை டர்ன் ...


சாக்லெட் கழுத்து ...


என் கால்த் தடங்களையா எடுக்கறீங்க ... (ஒரு ஸீ-கல்லின் முணுமுணுப்பு)


தொடரும் நீர் நடனம் ...


இந்த மாதிரி படம் எடுக்கணும் என்று ரொம்ப நாள் ஆசை ... கரை தொட்ட நீர் மீண்டும் கடலுக்குள் வழிந்தோடுவது ...


ஆர்ப்பரிக்கும் அலைகள் ...


நேராமாச்சு ... எல்லாரும் கெளம்பியாச்சு ...

8 மறுமொழி(கள்):

ராமலக்ஷ்மிsaid...

கடலோரம் வாங்கிய காத்து
இனிதாக இருந்ததைப் பாத்து-
சந்தோஷம் சதங்கா.

படங்களைக் காட்டி எங்களையும் அங்குக் கூட்டிச் சென்று விட்டீர்கள். அத்தனையும் அருமையான ஷாட்கள்!

//'ஆர் வி கோயிங் டு கம் பேக் ஹியர் ?'. கிளம்பலாமா என்று கேட்டதற்கு என் மகளின் எதிர் கேள்வி.//

நமக்கே முக்கால் மனதாக இருக்கையில் அவர்கள் அரை மனதாகத்தான் வெளியில் வருவார்கள்:)).

Unknownsaid...

ரொம்ப நல்லா இருந்துச்சுங்கோ

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

//கடலோரம் வாங்கிய காத்து
இனிதாக இருந்ததைப் பாத்து-
சந்தோஷம் சதங்கா.
//

ஆஹா அருமையான பாடல் வரிகளை ஞாபகப் படுத்துகிறீர்கள். பாடலோடு கூறிய பாராட்டு சந்தோசத்தைக் கொடுக்கிறது :)) நன்றி.

//படங்களைக் காட்டி எங்களையும் அங்குக் கூட்டிச் சென்று விட்டீர்கள். அத்தனையும் அருமையான ஷாட்கள்!//

எல்லாம் மூன்றாவது கண்ணின் மாயம், நம்ம கைல எண்ண இருக்கு, க்ளிக்குவதைத் தவிர :))) ரசிப்புக்கு நன்றிகள்.

//நமக்கே முக்கால் மனதாக இருக்கையில் அவர்கள் அரை மனதாகத்தான் வெளியில் வருவார்கள்:)).//

ஆமாங்க. மகன் கூட சரினு வந்திட்டான். சின்னவளுக்குத் தான் ரொம்ப சோகம். நாங்க இருக்க ஊருல இருந்து இது தான் பக்கத்தில் (சுமார் 600 மைல் :))) இருக்கும் பீச். அதனால அவளைச் சமாளிக்கறத தவிர வேறு வழி தெரியவில்லை !!

சதங்கா (Sathanga)said...

வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி தாமோதர் சந்துரு.

jeevagvsaid...

படங்களெல்லாம் அருமை சதங்கா!
எல்லோரும் கிளம்பிய அப்புறமும், கடலழகைக் கண்டு மயங்கி அங்கேயே...அப்படியெல்லாம் இல்லையே?

Anonymoussaid...

நல்ல படங்கள்.

இருந்தாலும் நம்ம மெரினா பீச் எம்புட்டு அழகு !

சதங்கா (Sathanga)said...

வரணும் ஜீவா,

பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.

//எல்லோரும் கிளம்பிய அப்புறமும், கடலழகைக் கண்டு மயங்கி அங்கேயே...அப்படியெல்லாம் இல்லையே?//

எங்கே லயித்து அங்கேயே இருந்தாலும் ஆளில்லா கடற்கறை சற்று பயம் தருவதாய் தான் இருக்கிறது.

சதங்கா (Sathanga)said...

அனானி,

பாராட்டுக்கு நன்றி.

//இருந்தாலும் நம்ம மெரினா பீச் எம்புட்டு அழகு !//

மூன்று வருடத்திற்கும் முன்னால் பார்த்தேன். புரட்சி தலைவி அவர்கள் பீச்சுக்கு எடுத்துக் கொண்ட அக்கறை பாராட்டியே ஆக வேண்டும் :) உண்மையிலேயே செம க்ளீன். இப்ப எப்படி இருக்கிறதென்று தெரியவில்லை.

Post a Comment

Please share your thoughts, if you like this post !