Friday, June 27, 2008

கிராமத்து தெருக் கூத்து

தலைகாணி பாயோடு
கயிற்றுக் கட்டிலோடு
ஊருசனம் உண்டபின்னே
வாரியோடும் கூத்துப்பார்க்க.
மைக் செட் கரகரக்க‌
ஆர்மோனியச் சத்தமும் கேட்க‌
ஆரம்பிச்சிட்டான்யா என்றே
நில்லாமல் ஓடும் சனம்
கூத்துப் பொட்டல் சேர்ந்தபின்னே
இருக்க இடம் தேடும்.

முக‌ப்பூச்சு வ‌ழுவ‌ழுக்க‌
மேலாடையும் சேர்ந்து வ‌ழுக்க‌
காற்றாடும் காரிருளில்
கான‌ம் பாடி வ‌ந்திடுவார்
க‌ல் நெஞ்சும் க‌றையும்ப‌டி
க‌ல‌க‌ல‌ப்பாய் க‌தை சொல்லி
வ‌ந்த சனத்தை
குந்தவும் வைப்பார்
வைய‌த்து செய்தி சொல்லும்
நாக‌ரீக‌க் கோமாளி.

வ‌ண்ண‌ப் பொடி தூவி
வ‌ட்ட‌ விள‌க்கு சுற்ற‌
வ‌ளைகை சுழ‌ற்றி
வெண் த‌ண்டை சினுசினுங்க‌
அச்சு வெல்ல‌த் தொண்டையில்
அழ‌காய் பாட்டுப் பாடி
காற்றிலாடி வந்திடுவார்
கான‌க் குயில் ஆன‌ ம‌யில்
நாய‌கியின் தோழியான‌
நங்கை ந‌ட‌னம‌ணி.

எம்.ஜி.ஆரு பாட்டுப் பாடி
எம்.ஆர்.ராதா பேச்சுப் பேசி
ஆர்மோனியம் அழுத்திக் கிட்டு
பக்க வாத்தியம் சேர்த்துக்கிட்டு
தங்களுக்கும் கூத்தில்
தனித்த இடம் இருக்குதென
இசைக்கும் இடிமுழ‌க்கி
இன்புற‌ கூட்டம் காட்டும்
ஆர்மோனியம் தபேலா
மோர்சிங் கலைஞர்கள்.

ஆலோல‌ம் பாடும்
மேயாத‌ மான் தேடி
வேட‌வ‌ராய் நாய‌க‌ரும்
விவாதிக்கும் நாய‌கியும்
விடியும் வ‌ரை
அது தொட‌ரும்
விடிந்த‌ பின்னே
மணம் புரிவர்
கூத்து பார்த்த‌ ம‌க்க‌ள் கூட்ட‌ம்
குதூகலமாய் விடை பெறுவ‌ர்.

மார்ச் 28, 2009 யூத்ஃபுல் விகடனில்

12 மறுமொழி(கள்):

cheena (சீனா)said...

சதங்கா

அருமையான கவிதை - கிராமங்களில் நடக்கும் தெருக்கூத்து பற்றிய அழகு சிந்தனை.

ஊர்சனம் கூடுவதிலிருந்து, கோமாளியின் செய்தி, நாயகியின் தோழியின் நடனம், ஆர்மோனியம் - தபேலா - மோர்சிங் கலைஞர்கள், இரவு முழுவதும், மேயாத ............ மானைப் பற்றியே விவாதம் செய்து - காலையில் மணம் முடிக்கும் நாயக நாயகிகள் - இவை அனைத்தையும் கவிதையில் கொண்டு வந்த விதம் பாராட்டுக் குரியது.

நல்வாழ்த்துகள்

சரண்said...

இந்த கூத்துக்கள் எல்லாம் இன்னும் நடக்குதுங்களா? எல்லொருக்கும் மெகா தொடரை பாத்து அழுவரக்கே நேரம் சரியாருக்கும் போது.. இந்தக் கூத்தெல்லாம் பாக்க மக்கள் வராங்களா?

சென்ஷிsaid...

ரொம்ப நல்லாயிருக்குங்க கவித...

சூர்யாவிற்கு கண்டிப்பாக இந்த மண்ணின் கலைகள் அவ்வளவு சீக்கிரம் அழியுமென்று தோணவில்லை. இன்றும் கூத்து பார்க்க செல்பவர்களின் எண்ணிக்கை ஸ்டார் ஷோவிற்கு வருவதை விட சற்று அதிகம் தான். என்ன இட நெருக்கடி, வசதிகளை பொறுத்து மாறுபடும்.

(ஒரு சிறிய வேண்டுகோள்: தயவு செய்து பின்னூட்ட பெட்டியை பாப் அப் விண்டோவிலிருந்து மாற்றவும். பின்னூட்டமிட சிரமமாக உள்ளது. தொந்தரவுக்கு மன்னிக்க :( )

ராமலக்ஷ்மிsaid...

நுண்ணிய விவரங்களுடன் கண்ணின் முன் கொண்டு வந்திருக்கிறீர்கள் தெருக் கூத்தினை. அழகான கவிதை.
தெருக் கூத்தினை காணும் வாய்ப்பு கிடைத்ததில்லை என்றாலும் நடு இரவு தாண்டி வரும் சாமி உலா முன்னே ஆடிச் செல்லும் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் கண்டு ரசித்த அனுபவம் உண்டு.(என் அடுத்த பதிவில் இது பற்றி ஓரிரு வரிகள் குறிப்பிட்டிருப்பேன்)

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

//ஊர்சனம் கூடுவதிலிருந்து, கோமாளியின் செய்தி, நாயகியின் தோழியின் நடனம், ஆர்மோனியம் - தபேலா - மோர்சிங் கலைஞர்கள், இரவு முழுவதும், மேயாத ............ மானைப் பற்றியே விவாதம் செய்து - காலையில் மணம் முடிக்கும் நாயக நாயகிகள் - இவை அனைத்தையும் கவிதையில் கொண்டு வந்த விதம் பாராட்டுக் குரியது. //

அனைத்தையும் சுருக்கி, சில‌ வ‌ரிக‌ளில் அட‌க்கி எழுதிய‌தும் அற்புத‌ம்.

//நல்வாழ்த்துகள்//

மிக்க‌ ந‌ன்றி.

சதங்கா (Sathanga)said...

சூர்யா

//இந்த கூத்துக்கள் எல்லாம் இன்னும் நடக்குதுங்களா? எல்லொருக்கும் மெகா தொடரை பாத்து அழுவரக்கே நேரம் சரியாருக்கும் போது.. இந்தக் கூத்தெல்லாம் பாக்க மக்கள் வராங்களா?//

சிற்றூர், ம‌ற்றும் சிட்டிக்க‌ளாக‌ மாறி வ‌ரும் கிராமங்களில் இருக்குமா என‌த் தெரிய‌வில்லை. அத‌ற்கும் அடுத்த‌ நிலையில் குக்கிராம‌ங்க‌ளில் நிச்ச‌ய‌ம் இருக்கும் என‌ ந‌ம்புகிறேன். அவ‌ர்க‌ள் தானே உழைக்கும் ம‌க்க‌ள் !! சீரிய‌ல் பார்க்க‌ நேர‌மேது அவ‌ர்க‌ளுக்கு. ம‌ற்றும் சென்ஷியின் ப‌திலையும் பார்க்க‌வும்.

சதங்கா (Sathanga)said...

சென்ஷி

//ரொம்ப நல்லாயிருக்குங்க கவித...//

மிக்க‌ ந‌ன்றி

//(ஒரு சிறிய வேண்டுகோள்: தயவு செய்து பின்னூட்ட பெட்டியை பாப் அப் விண்டோவிலிருந்து மாற்றவும். பின்னூட்டமிட சிரமமாக உள்ளது. தொந்தரவுக்கு மன்னிக்க :( )//

தொந்தரவா ? அதெல்லாம் இல்லைங்க. நீங்க மற்றொரு பதிவிற்கும் இதே தகவலை சொன்னதிலிருந்து, வேர்ட்ப்ரஸ் போன்று அதே பக்கத்தில் கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். சரி, தற்போதைக்கு பாப் அப் தூக்கி விடலாம் :)))

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

//நுண்ணிய விவரங்களுடன் கண்ணின் முன் கொண்டு வந்திருக்கிறீர்கள் தெருக் கூத்தினை. அழகான கவிதை.//

மிக்க நன்றி.

//நடு இரவு தாண்டி வரும் சாமி உலா முன்னே ஆடிச் செல்லும் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் கண்டு ரசித்த அனுபவம் உண்டு.(என் அடுத்த பதிவில் இது பற்றி ஓரிரு வரிகள் குறிப்பிட்டிருப்பேன்)//

ஆம் இது பற்றி எழுதலாம் என நினைத்தேன். அப்புறம் விட்டுவிட்டேன். உங்க பதிவ படிக்க இப்பவே ஆயத்தமாகிவிட்டேன் :))

நாகு (Nagu)said...

தெருக்கூத்து, வில்லுப் பாட்டு எல்லாம் இன்னமும் நடக்குதா என்ன? நாம் இழந்த பலவற்றில் அவையும் சில.

ஏதோ இதைப் பார்த்து மனசை தேத்திக்க வேண்டியதுதான் ;-)

எத்தனை முறை பார்த்தாலும்/கேட்டாலும் அலுக்காது(எனக்கு)

சதங்கா (Sathanga)said...

நாகு,

//தெருக்கூத்து, வில்லுப் பாட்டு எல்லாம் இன்னமும் நடக்குதா என்ன?//

எங்க ஊருல வருசா வருசம் திருவிழாக்களில் கூத்து நடக்கும். இன்னும் இருக்கனு தெரியல. கண்டிப்பா இருக்கும்னு நம்பறேன்.

யூட்யூப் லிங்க் அருமை.

சதங்கா (Sathanga)said...

சென்ஷி,

//ஒரு சிறிய வேண்டுகோள்: தயவு செய்து பின்னூட்ட பெட்டியை பாப் அப் விண்டோவிலிருந்து மாற்றவும். //

இப்ப எப்படி ? சூப்பரா இல்ல !!!! :) பின்னூட்டப் பொட்டி இதே பக்கத்திலேயே !!

ராமலக்ஷ்மிsaid...

//ஆம் இது பற்றி எழுதலாம் என நினைத்தேன். அப்புறம் விட்டுவிட்டேன். உங்க பதிவ படிக்க இப்பவே ஆயத்தமாகிவிட்டேன் :))//

போட்டாச்சு அந்தப் பதிவை:)!

Post a Comment

Please share your thoughts, if you like this post !