Tuesday, March 25, 2008

உதிரம் இருக்கும்வரை உன்னை மறவேனே

க‌ழுத்தில் உருள் கருக‌ மணி
காதில் ஆடும் பொன் கம்மல்

கரம் குலுங்கும் கை வளை
விர‌ல் ந‌க‌த்தின் வர்ண இழை

இடை நீளும் கருங் கூந்தல்
அதில் வ‌ள‌ர் குண்டு ம‌ல்லி

முத்த‌ மிடும் சிறு பிள்ளை
மார் தழுவும் சில புத்தகங்கள்.

இமை மூடி இவ்வுலகை
இனிதாய் ரசித்திடவே !

இவற்றில் நானொன்றாய்
இருந்திடக் கூடாதா ?

இவையெல்லாம் சிறுபொழுதே
இனிமேலும் எண்ணாதே

என்னோடு எப்பொழுதும்
இவ்வாறிரு என்றாயே !

விழி காக்கும் இமை முடியாய்
விழும் கன்னச் சிறு குழியாய்

பட படக்கும் கரு விழியாய்
பச் சரிசிப் பல் அழகாய்

இளஞ் சிவப்புச் செந் நாவாய்
இனிக்கும் தேன் செவ் விதழாய்

முத்து உருளும் மணிக் கழுத்தாய்
முழுதும் அலங்கரித்த பொன் உடலாய்

உன்னிலே என்னை
உள்ளுள் சேர்த்தாயே

உதிரம் இருக்கும்வரை
உன்னை மறவேனே !

11 மறுமொழி(கள்):

Kavinayasaid...

முத்து உருளும் மணிக் கழுத்து ரொம்பப் பிடிக்கும் போல; ரெண்டு தரம் சொல்லீட்டிங்க :) நல்லாருக்கு.

jeevagvsaid...

அழகு!

சதங்கா (Sathanga)said...

கவிநயா,

//முத்து உருளும் மணிக் கழுத்து ரொம்பப் பிடிக்கும் போல; ரெண்டு தரம் சொல்லீட்டிங்க :) நல்லாருக்கு.//

இதுக்கே இப்படி சொல்லிட்டிங்க. இன்னும் சில கவிதைகள் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு நேர்த்தி வந்தவுடன் பதிகிறேன், அவற்றையும் படித்து விட்டு சொல்லுங்கள் கவிநயா.

வாழ்த்துக்களுக்கு நன்றி !!!

சதங்கா (Sathanga)said...

//அழகு!//

ஒரு சொல்லில் பாராட்டியதும் அழகே ! மிக்க நன்றி ஜீவா.

நாகு (Nagu)said...

//விழி காக்கும் இமை முடியாய்
விழும் கன்னச் சிறு குழியாய்

பட படக்கும் கரு விழியாய்
பச் சரிசிப் பல் அழகாய்//

அழகாய் இருக்கிறது.

//
இவையெல்லாம் சிறுபொழுதே
இனிமேலும் எண்ணாதே//

இது புரியவில்லை....


மறக்காமல் பொன்னுடலும் ஆஜர். ஜமாயும்!

cheena (சீனா)said...

சதங்கா,

காதல் ரச்ம் சொட்டச் சொட்ட - நாகரீகமாக, நளினமாக, நல்ல சிந்தனையோடு எழுதப்பட்ட கவிதை. வாழ்த்துகள்.

கழுத்து, காது, கரம். விரல், இடை, இதழ், மார்பு, இமை - இவைகளுடன் உறவாடும் புறப் பொருட்கள். இவைகளில் ஒன்றாக ஆசைப் பட்டவனுக்கு உடலோடு உடலில் ஒன்றாக இருக்க அழைப்பு விடுத்த காதலியின் காதல் வாழ்க.

நல்ல சிந்தனை. பாராட்டுகள்

cheena (சீனா)said...

சதங்கா,

இயற்கை இன்னிசையாய் இதயத்தைத் தொட்டது. புறம் பார்க்கும் பொருளெல்லாம் புன்சிரிப்பை சிரித்தாலும் அகத்துள்ளே அகமாக எனைச் சேர்த்தாய் என்ற அடி தமிழ் போல் இனிக்கிறது. அகமென்றால் தமிழ். தமிழென்றால் அகம். சுவையான கவிதை. சொல் கூட்டு இனிது.

செல்வி ஷங்கர்
-------------

எனது துணைவி யின் மறு மொழி - சீனா
----

சதங்கா (Sathanga)said...

நாகு,

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

//
இவையெல்லாம் சிறுபொழுதே
இனிமேலும் எண்ணாதே

இது புரியவில்லை....//

சீனா ஐயாவின் துனைவியாரின் பின்னூட்டத்தில் பதில் கிடைத்திருக்குமே ?

//மறக்காமல் பொன்னுடலும் ஆஜர். ஜமாயும்!//

பாரதியார் பாடினால் கேட்பீர்கள். நாங்கள் எழுதினால் விடமாட்டேன் என்கிறீர்கள் =:D

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா & செல்வி ஷங்கர் மேடம்,

//காதல் ரச்ம் சொட்டச் சொட்ட - நாகரீகமாக, நளினமாக, நல்ல சிந்தனையோடு எழுதப்பட்ட கவிதை. வாழ்த்துகள். //

//புறம் பார்க்கும் பொருளெல்லாம் புன்சிரிப்பை சிரித்தாலும் அகத்துள்ளே அகமாக எனைச் சேர்த்தாய் என்ற அடி தமிழ் போல் இனிக்கிறது//

வாசித்தலுக்கும், மனம் நிறைந்த‌ பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. மேலும் எழுத வைக்கும் தூண்டுகோல்கள் !

தமிழ்said...

எளிமையான
இயலபான
அழகான வரிகள்

சதங்கா (Sathanga)said...

திகழ்மிளிர்,

பேரு நல்லா இருக்கே !

வாசித்தலுக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி.

Post a Comment

Please share your thoughts, if you like this post !