Thursday, September 24, 2009

நடுச்சாம‌ம் - 2


Photo Credit: allposters.com


To read Part 1 click here.

நெல்குதிருக்குள் விழுந்து, கை கால்கள் குத்துவதெல்லாம் பொருட்படுத்தாது, நாசியில் ஏறிய தூசியின் ஆதிக்கத்தில் விழும் பல தும்மல்கள் போல, அந்த இருள் அறையில் நுழைந்ததிலிருந்து மூச்சடைத்து புழுக்கத்தில் தும்மினான் தமிழவன்.

தரையின் பிசுபிசுப்பு, சுவ‌ற்றிலும், ஜ‌ன்ன‌ல் க‌ம்பிக‌ளிலும், க‌த‌வுக‌ளிலும் ப‌ட‌ர்ந்து கான்க்ரீட் கூரை வ‌ரை அப்பி கறுத்திருந்த‌து. நான்கு மூலைக‌ளிலும் ஆளுய‌ர‌த்துக்கு இருந்த‌ ஐந்து முக‌ விள‌க்குக‌ளில், த‌வ‌ழும் குழ‌ந்தையாய், நெய்யூரிய‌ திரியில் நீந்தி விளையாடியது நெருப்புச் சுட‌ர்.

அறையின் மையத்தில் இணையும் விளக்குகளின் ஒளியில் அமைந்திருந்தது அந்தச் சிறிய மேடை. இடுப்புயர‌ அளவிற்கு இருந்த அம்மேடையின் கிழக்கு முகத்தில் இருந்த‌து நான்கு படிகள். மேடையின் மற்ற மூன்று மதில்க‌ளிலும் எண்ணை அப்பிய‌ ப்ரேமிற்குள், மிர‌ள‌ வைக்கும் ப‌ல்வேறு அம்ம‌ன்க‌ளின் ஆக்ரோஷ‌ காட்சிக‌ள். தெற்கு பார்த்த அறைவாயில், அதன் அருகில் இருந்த சிறிய ஜன்னல் சாத்தியே இருந்த‌து. வெகுநாட்க‌ள் திற‌க்காம‌ல் இருந்த‌த‌ற்கான‌ அடையாள‌மாக‌ சில‌ந்திக‌ளின் வ‌லைப்பின்ன‌ல் சாட்சிய‌ம் கூறிய‌து.

மேடையின் ஒருபுறத்தை ஆக்கிர‌மித்து மேலெழும்பி, நாலைந்து துவாரங்கள் கொண்டு ஆங்காங்கே சிறு குன்றுக‌ளாய் நீண்டிருந்த‌து அந்த‌ப் புற்று. அதைச் சுற்றிலும் ம‌ஞ்ச‌ளும் குங்கும‌மும் தெளித்து, புஷ்பங்கள் தூவி, ருத்ராட்ச‌மாலையும், சில புத்தகங்களும், ஒரு மரப்பலகையும், ஒருசில சிறிய மரப் பெட்டிகளும், சருகாய் சுருண்டு கிடந்த பாம்புச்சட்டைகளும் என பார்ப்பவரை ஒரு கணம் மிரள‌ வைக்கும்ப‌டி இருந்த‌து. அறைக்கதவை ந‌ன்கு திற‌ந்துவிட்டாலும் வெளிச்ச‌ம் ப‌டாவ‌ண்ண‌ம் இருந்த‌து மேடையும் புற்றும். மேடைக்குக் கீழே யாக‌ம் வ‌ள‌ர்க்க சதுரமாக‌ மூன்ற‌டுக்கு உயரத்தில் செங்கல் மதில்.

'குளிக்க‌ப் போன‌ சாமியார் ச‌ற்று நேர‌த்தில் வ‌ந்துவிடுவார், உள்ளே அம‌ர்ந்திருங்கள்' என்றிருந்தாள் வாசலில் கோல‌மிட்ட‌ ப‌ணிப்பெண்.

ஒருசில‌ நிமிட‌ங்க‌ள் கூட‌ உள்ளே இருக்க‌ முடிய‌வில்லை. ப‌ட‌ப‌ட‌க்கும் காகித‌ங்க‌ள் கூட‌ ப‌ய‌த்தை ஏற்ப‌டுத்தின‌. உருளும் மாலையும் ஏனோ பாம்பையே நினைவுப‌டுத்திய‌து. 'உண்மையிலேயே இங்கு பாம்பு இருக்கிற‌தா ? எத்த‌னை இருக்கும் ? திடீர் என்று வெளியில் வ‌ந்துவிட்டால் என்ன‌ செய்வ‌து ?" என‌ அடுக்குக் கேள்விக‌ளில் திகைத்து எவ‌ரும் அறையில் இன்றி த‌னிய‌னாய் காத்திருந்தான் த‌மிழ‌வ‌ன்.

விரிச‌டை முடியும், நீள்சாம்பல் தாடியும், காவிசூழ் உட‌லும், கையில் கைத்தடியுமாக வ‌ருவார் குடுகுடு சாமியார் என்று எதிர்பார்த்த‌ த‌மிழ‌வ‌னுக்கு, கெண்டை வேட்டியும், காவி ஜிப்பாவும், க‌ழுத்தில் சிறு ருத்ராட்ச‌ மாலையும், கரும்பச்சையில் தலைப்பாகையும், நெற்றியில் திருநீறும், பழுத்த வெள்ள‌ரிப் ப‌ட்டையாய் மஞ்சள் கீற்றும், செர்ரிப் ப‌ழ‌மாய் அதில் குங்கும‌ப் பொட்டும் என வ‌ந்த நடுத்தர வயது சாமியாரைக் க‌ண்டு சிறிது அதிச‌யித்தான்.

அறைவாயிலில் குனிந்து, சரிந்த ருத்ராட்ச‌ மாலைக‌ளை மார்போடு அணைத்து உள்ளே நுழைந்தார் புற்று சாமியார். திருநீற்று மனம் காற்றில் மிதந்து அந்த அறையை நிறப்பியது. நேரே மேடையில் ஏறி மரப்பலகையில் அம‌ர்ந்து, சிறிது நேர‌ம் க‌ண்க‌ளை மூடிக் கொண்டார்.

ச‌ள‌ச‌ள‌த்து ஓடும் அருவியாய் வெளியே பேச்சுக் குர‌ல்க‌ள். 'ஆறு அற‌ரைக்கு முன்னாடியே போய்ட்டேன்னா சாமியார‌ப் பாக்க‌ற‌து சுல‌ப‌ம்' என்ற பாலாவின் வார்த்தைக‌ள் அர்த்த‌ம் பொதிந்து காண‌ப்ப‌ட்ட‌து. ஒரு நேர‌த்தில் ஒருவ‌ர் தான். அவ‌ருக்கு எத்த‌னை நேர‌ம் ஆனாலும், அதுவ‌ரை ம‌ற்ற‌வ‌ர் வெளியில் காத்திருக்க‌ வேண்டும். முத‌ல் ஆளாய் வ‌ந்த‌தில் சிறிது கர்வமும் கொண்டான் த‌மிழ‌வ‌ன்.

"சொல்லுங்க‌, என்ன‌ விஷ‌ய‌மா வ‌ந்திருக்கீங்க‌ ?!" என்றார் க‌ண்க‌ளைத் திற‌ந்த‌ சாமியார் த‌மிழ‌வ‌னை நோக்கி.

வடநாட்டு சாமியான அவர் உடைந்த‌ த‌மிழில் பேசுவார் என்று எதிர்பார்த்த‌வ‌னுக்கு, அவ‌ர‌து இய‌ல்பு த‌மிழ் தொடக்கம் புதிதாய் இருந்த‌து. வாளின் கூர்மையில் அறுப‌டும் க‌திராய் உண‌ர்ந்தான் அவ‌ர‌து பார்வையில். தூசி விழாத‌ பாலில் மித‌க்கும் இரு ஒற்றை திராட்சைகளாய் திக‌ழ்ந்த‌து அவ‌ர‌து விழிக‌ள். துவைத்து அணிந்த‌ ஆடைக‌ள். குளித்த‌ தூய‌ மேனி. ஆனால் அறைமட்டும் தூசிபடிந்து தூய்மையின்றி !

"நான் சென்னையில் இருந்து வ‌ருகிறேன். என் பேரு த‌மிழார்வ‌ன். நண்பர்களும் மற்றவர்களும் சொல்லியே கால‌ப்போக்கில் த‌மிழ‌வ‌ன் என்றாகிவிட்ட‌து. சொந்த ஊர் திண்டுக்கல் பக்கத்தில்" என்று த‌மிழ‌வ‌ன் தொட‌ர‌, போக்குவ‌ர‌த்து போலீஸ் போல‌ கைகாட்டி நிறுத்துமாறு கூறிய‌ சாமியார், "ரொம்ப நேரம் எடுத்துக் கொள்ளாதீர்கள், விஷயத்தைச் சுருக்கமாகச் சொல்லுங்க‌" என்றார்.

தமிழார்வ‌ன் சொல்ல‌ச் சொல்ல‌ ...

'அதகள பயங்கரீ, ஆக்ரோஷ பைரவீ, ஆனந்த ரூபஸ்ரீ .... உத்தரவு வாங்கிய‌ பின்னுமா நீ இங்கு இருக்கிறாய் ?' என்று நினைத்து உள்ளுக்குள் அதிர்ந்தார் சாமியார்.

"ஓம் ச‌ர்வேஷீ
ஓம் த‌ர்மேஷீ
ஓம் நாகேஷீ
க்லீம் ஜ்லீம் ந்லீம்
ஓஓஓஓம்ம்ம்ம்ம்ம்ம்
நாகேஷ்வ‌ரீஈஈஈ"

என்று உச்ச‌ரித்த‌ சாமியாரின் மேனி விய‌ர்வையில் வ‌ழிந்த‌து. பேரிறைச்சலோடு அறைக்குள் புகுந்தது சூராவளிக் காற்று. நெருப்பு சுட‌ர்க‌ள் ப‌ட‌ப‌ட‌த்த‌ன‌. புத்த‌க‌த் தாள்க‌ள் ச‌ட‌ச‌ட‌த்தன‌. கையில் ருத்ராட்ச‌ மாலையை விடாது உருட்டினார் சாமியார்.

ச‌ற்றைக்கெல்லாம் ம‌யான‌ அமைதி நில‌விய‌து அறையில்.

ந‌ட‌ப்ப‌து எதுவுமே புரியாம‌ல் அதிர்ச்சியில் உறைந்திருந்தான் த‌மிழார்வ‌ன்.


தொடரும் .....


To read Part 1 click here.

3 மறுமொழி(கள்):

ராமலக்ஷ்மிsaid...

விவரிப்புகள் அருமை.

தமிழார்வனுடன் வாசகரும் ‘திக் திக்’!

சதங்கா (Sathanga)said...

ராமலக்ஷ்மி said...

//விவரிப்புகள் அருமை.

தமிழார்வனுடன் வாசகரும் ‘திக் திக்’!//

ரசித்து எழுதிய மறுமொழிக்கு மிக்க நன்றி. 'திக், திக்' தொடர ஊக்கமான வரிகளும் கூட.

sakthisaid...

ஐயோ பயமா இருக்கு..!

Post a Comment

Please share your thoughts, if you like this post !