Thursday, August 9, 2007

நிலாச் சோறு (குழந்தைகள் கவிதை)

முதலில் எழுதிய யானை கவிதையை, எனது எட்டு வயது மகன் பிழையின்றி வாசித்து ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டான். இதிலென்ன ஆச்சரியம் என்று கேட்போருக்கு, புலம் பெயர்ந்த அனேகரின் குழந்தைகள் தமிழில் பேசுவதே இல்லை, அதிலும் வாசிக்கிறார்கள் என்றால் எவ்வளவு ஆனந்தம். அதே நிலை தான் எனக்கும்.

அடுத்த சந்ததியினருக்கு நாம் நமது மொழியைக் கற்றுக் கொடுக்காவிடில், பல்லாயிரம் ஆண்டுப் பாரம்பரியம் மிக்க காப்பியங்கள், அதன் பின் வந்த இலக்கியங்கள், இன்று நாம் விவாதிக்கும் பல நிகழ்வுகள், இதெல்லாம் எதற்காக ?

மொழியும், இயற்கையும், உணவும், பாசமும் எல்லாம் கலந்து, நமது பெற்றோர் நமக்குச் சொல்லியதை, நாம் நமது சந்ததியினருக்குச் சொல்லித்தர வேண்டாமா ?

எனது இரண்டாவது கவிதை (நிலாச் சோறு):



வட்ட நிலா மேலே
தட்டில் சோறு கீழே
நிலா பார்த்து நாமும்
நித்தம் உண்ணலாமா ?!

நெய் சோறு கொஞ்சம்
பருப்பு சோறு கொஞ்சம்
அழகாய் நீயும் சாப்பிடு
அன்னை சொல் கேட்டிடு !

அண்ணாவுக்கு ஒரு வாய்
அப்பாவுக்கு ஒரு வாய்
பகிர்ந்து நீயும் கொடுத்திடு
பாசத்தோடு வளர்ந்திடு.

3 மறுமொழி(கள்):

Anonymoussaid...

குழந்தைகள் தமிழ் பேச எழுத கற்றுக் கொள்வதன் மூலம் பணமும் நேரமும் சேமிக்க முடியும். எப்படி என்று சொல்கிறேன்.

முதலில்
//முதலில் எழுதிய யானை கவிதையை, எனது எட்டு வயது மகன் பிழையின்றி வாசித்து ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டான//

இந்த நிகழ்ச்சியை, உங்கள் மகனும் நீங்களும் மறக்கப் போவதில்லை. வாழ்க்கை என்பது என்ன? நினைவுகளின்
கோர்வை தானே! இத்தகைய தருணங்கள் தரும் மகிழ்ச்சி தனியானது, சுகமானது.

இளங்கலை படிப்பை தொடங்கும் போது, ஆங்கிலம் அல்லாத மொழி ஒன்றை பாடமாக எடுக்கச் சொல்வார்கள்.
தமிழையும் பாடமாகத் தெரிவு செய்யலாம். அந்தப் பல்கலைக்கழகத்தில், தமிழ் சொல்லித் தராவிட்டாலும், தமிழ் சொல்லிக் கொடுக்கும் பல்கழைக்கழகங்களில் தேர்வு எழுதி, மதிப்பெண்கள்(credits) பெறலாம் என்று படித்திருக்கிறேன். இதன் மூலம் காசும் நேரமும் சேமிக்க முடிகிறது. படிப்பிற்கு எக்கச்சக்கமாக செலவு ஆவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. பல்கலைக்கழகங்கள் எதிர்பார்க்கும் தமிழறிவு, அதிகம் ஒன்றும் இல்லை.

ஜீவிsaid...

தமிழகத்தின் தலைநகர் சென்னையில்
ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை பள்ளி போகும் பெரும்பாலான
சிறார்களுக்கு தமிழ் எழுத, பேசத்
தெரியாது என்பது ஒரு கசப்பான
உண்மை. இதற்கு தமிழாய்ந்த தமிழன் முதல்வராய் இருக்கும்
தமிழக அரசு, ஏதாவது செய்தாக
வேண்டும்.

Anonymoussaid...

ippadi oru valai dhalam nalla muyarchidhaan,paaraatugal.nagrpura siru kulandhaigalukku thamil moli thooramdhaan.aanaal enna seivadhu.?
naeramum,aatralum irukkum ungalaipol.., seyalpada elloraalum mudivathillai..oonamaana enadhu indha thamilaipola.!
-paamaran.pollachi.

Post a Comment

Please share your thoughts, if you like this post !