Thursday, March 15, 2012

கொடுப்பது கடினம் !


பத்திருபது ஆண்டுகள் முன்னர், நூறு ரூபாய் என்றாலே அது பெரிய பணம். இப்பொழுதெல்லாம் ஆயிரக்கணக்கில் சர்வசாதாரணமாக செலவழிக்கும் மனப்பாங்கு தழைத்தோங்குகிறது. காரணம், தாராளமயமாக்கல், வேலை உற்பத்தி, வாழ்க்கைத் தரம், பன்னாட்டு முதலீடுகள், இப்படிப் பல காரணங்கள் அடுக்கிக் கொண்டே போகலாம். நடந்து போனவன் சைக்கிள் வாங்கினான், சைக்கிளில் போனவன் பைக் வாங்கினான், பைக் காராச்சு, கார் வேனாச்சு, அதினும் மேலாய் எல்லாம் சொகுசாச்சு ... இதெல்லாம் நாம் பெற்றவை. பெறுவதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். கொடுப்பதற்கு ?

கிணறென்றிருந்தால் அதில் நீரென்றிருக்கும். எடுக்க எடுக்கத் தான் சுரக்கும். இல்லை என்றால் அது பாழும் கிணறு. 'தொட்டனைத்தூறும் மணற் கேணி' என்றார் வள்ளுவர். வீட்டினுள்ளே புகும் காற்று வெளியே செல்லவும் வழி இருக்க வேண்டும், அதற்கு வீடமைப்பு இப்படி இருக்க வேண்டும் என்கிறது மனை சாஸ்த்திரம். உள்ளே... வெளியே.... ஆனால், இக்கால வாழ்க்கை உள்ளே மட்டும் தான் செயல்படுகிறது, அநேக அப்பாட்மென்ட்கள் போல‌..,. வெளியேயும் செயல்பட்டால் நம் வாழ்வு மேலும் சிறக்கும் அல்லவா!

வாரியார் தன் வ‌ள்ள‌லார் உரையில்:

இந்த‌ உல‌க‌த்திலே ப‌க்த‌ர்க‌ள் ப‌லர். ஞானிக‌ள் ப‌ல‌ர். வீர‌ர்க‌ள் ப‌ல‌ர். சிற‌ந்த‌ அடியார்க‌ள் ப‌ல‌ர். பதிவிர‌தைக‌ள் ப‌ல‌ர். ஆனால், அள்ளிக் கொடுத்த‌ வ‌ள்ள‌ல்க‌ள் சில‌ர் ! வ‌ள்ள‌ல்க‌ளுக்குத் தான் எண்ணிக்கை உண்டு. முத‌லேழு வ‌ள்ள‌ல், இடையேழு வ‌ள்ள‌ல், க‌டையேழு வ‌ள்ள‌ல். ஒருவ‌ன் விடிய‌ விடிய‌ப் பேசுவான், அற‌ஞ்செய்ய‌ மாட்டான். நீர் மேல் குமிழிக்கு நிக‌ர் என்ப‌ர். ஆனால், அற‌ம் என்று சொன்னால், ஐம்ப‌து மைல் ஓடுவான். கொடுப்ப‌து தான் க‌டின‌ம். அதைத்தான் ஔவையார்,

ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன்றாம் புலவர்
வார்த்தை பதினாயிரத் தொருவர் பூர்த்தமலர்த்
தண்டாமரைத் திருவே தாதா கோடிக் கொருவர் ...

வேட்டையாடி அர‌ண்ம‌னைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறான் ஒரு குறுநில‌ ம‌ன்ன‌ன். வ‌ழியிலே ஒரு முல்லைக் கொடி தாவிப் ப‌ட‌ர‌ கொழு கொம்பில்லாம‌ல் த‌ள்ளாடித் த‌விப்ப‌தைக் க‌ண்டான். உள்ள‌ம் துடித்த‌து, க‌ண்ணீர் வ‌டிந்த‌து. என் நாட்டிலே இப்ப‌டி ஒரு முல்லைக் கொடி தாவிப் ப‌ட‌ர‌ கொழு கொம்பில்லாம‌ல் த‌விக்க‌லாமா என்று தேரை விட்டு இற‌ங்கி த‌ன் ம‌ணித்தேரிலே முல்லைக் கொடியைப் ப‌ட‌ர‌ விட்டு ந‌ட‌ந்து போனான் அர‌ண்ம‌னைக்கு.

இதில் என்ன‌ கிடைக்கிற‌து?

செடி கொடிக‌ளுக்கு ஓர‌றிவு
ந‌த்தைக்கும் ச‌ங்குக்கும் ஈர‌றிவு
க‌றையானுக்கும் எறும்புக்கும் மூவ‌றிவு
ந‌ண்டுக்கும் வ‌ண்டுக்கும் நால‌றிவு
வில‌ங்குக‌ளுக்கும் ம‌னித‌ர்க‌ளில் ப‌ல‌ருக்கும் ஐய‌றிவு
மாவும் மாக்க‌ளும் ஐய‌றிவு என‌வே என்ப‌து தொல்காப்பிய‌ம்
ம‌க்க‌ள் தாமே ஆற‌றிவு !

ம‌னிதனாக‌ப் பிற‌ந்த‌ எல்லோருக்குமே ஆற‌றிவு கிடையாது. ஐய‌றிவோடு வில‌ங்குக‌ள் போல‌த் தான் வாழ்கிறார்க‌ள் ப‌ல‌ர். சில‌ வீட்டில் போய், 'அம்மா, ஐயா எங்க?' என்று கேட்டால், 'அது எங்க‌ போச்சோ தெரியவில்லை' என்பாள் அஃறினையில் வைத்து. ஆக‌வே, செடிக்கு ஒரே அறிவு, கொடிக்கும் ஒரே அறிவு. அந்த‌ ஓர‌றிவு ப‌டைத்த‌ முல்லைக் கொடிக்குத் தேரைக் கொடுப்பானானால், ஆறறிவு ப‌டைத்த‌த‌ற்கு என்ன‌ த‌ர‌மாட்டான்?!

க‌பில‌ர் என்ற‌ அந்த‌ண‌ப் புல‌வ‌ர் பாரியை ஒரு பாட‌ல் பாடின‌வுட‌ன், முன்னூறு கிராம‌ம் கொடுத்தான். அத‌னால் தான் சுந்த‌ர‌மூர்த்தி நாய‌னார், கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பானில்லை. வ‌ன்புக‌ழ் பாரி காரி என்பார் அருண‌கிரிநாத‌ர். அள்ளிக் கொடுக்கிற‌ வ‌ள்ள‌ல்க‌ள் சில‌ர். க‌வ‌ச‌ குண்ட‌ல‌த்தை அறுத்துக் கொடுத்தான் க‌ர்ண‌ன். சிர‌ம் கொடுக்க‌ முய‌ன்றான் கும‌ண‌ன். ஆனால், அப்ப‌டி அள்ளி அள்ளி கொடுத்த‌வ‌ங்க‌ எல்லாம் வ‌ள்ள‌ல்.

நம்மால இவ்வாறெல்லாம் அள்ளி அள்ளித் தர முடியுமா?
'எவன் வூட்டுக் காச எவனுக்குத் தர்றது' என்பது தான் நம் சிந்தை எல்லாம். கொடுப்பது கடினம் !

***

கீர‌ன் த‌ன் திரும‌ந்திர‌ உரையில்:

நாம் தவம் தவம் என்று சொல்கிறோமே, பன்னெடுங்காலம் நீரிலே நின்றார்கள். நெருப்பிலே நின்றார்கள். ஊசி முனையிலே ஒரு காலைப் பொருத்திக் கொண்டு நின்றார்கள். என இந்த முனிவர் தவம் செய்தார் என்றெல்லாம் படிக்கின்றோமே, அப்பேர்ப்பட்ட தவத்தினாலே பெறக் கூடிய கருத்து, இல்லாவிட்டால் அப்பேர்ப்பட்ட தவத்தினாலே பெறக்கூடிய பலன், மிக மிக எளிதாகவே நமக்குக் கிடைத்து விடும் என எவ்வளவு அழகாகச் சொல்லுகிறார். யாருக்கும் செலவில்லாமல், போகிற போக்கில், அனைத்து உயிர்களுக்கும் பயன்படக் கூடிய ஒரு செயலைச் செய்தால் போதும். அதற்காக சிவபெருமான் மகிழ்ந்து நமக்கு மிகப் பெரிய தவப் பலனைத் தருகிறான் என்பது திருமூலர் கருத்து. அவர் சொல்கிறார்,

யாவ‌ர்க்குமாம் இறைவ‌ர்க்கு ஒரு ப‌ச்சிலை
யாவ‌ர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவ‌ர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவ‌ர்க்குமாம் பிறருக்கு இன்னுரை தானே


***

இறைவனுக்குத் தங்கத் தேரிழுத்து, உடல் வருத்தி அலகு குத்தி எல்லாம் இல்லாமல் மிக மிக எளிதாகப் பச்சிலை கொடுத்து அர்ச்சித்தாலே புண்ணியம் என்கிறது முதல் வரி. ப‌ச்சிலை ப‌றித்துச் சென்று கோவிலில் கொடுக்க‌ முடியவில்லையா, அப்படியே போகிற வழியில் புல்லிருந்தால் பிடுங்கி அங்கிருக்கும் ஒரு பசுவுக்கு அளித்தால் புண்ணியம் என்கிறது இரண்டாவது வரி. 'புல்லுக்கு எங்கே செல்வேன்?, பசுவுக்கு என்ன செய்வேன்?, இதெல்லாம் கடினம்' என்கிறீர்களா, உண்ணும் போது ஒரு கைபிடி அப்படியே எடுத்து காகத்துக்கோ மற்ற ஜீவராசிகளுக்கு அளியுங்கள் புண்ணியம் என்கிறது மூன்றாவது வரி. இதுவும் கஷ்டம்னா, பேசாம வாய மூடிகிட்டு இருங்க, அதுவே பெரும் புண்ணியம் என்கிறது நான்காவது வரி.



இந்த நான்காவது வரியில் லேசாகப் புன்னகை சேர்த்தாவது நாம் தரலாமே ! மேற்கண்டவை நம் தமிழ் இலக்கிய ச‌முத்திர‌த்தில் இருந்து எடுக்கப்பெற்ற சிறு உதாரணங்களே ! பணம் தந்தால் தான் வள்ளல் என்றில்லை. நம்மால் இயன்றதை (மேற்கண்ட வரிகளில் வாயை மூடிக்கொண்டு சும்மா இருத்தல் சேர்த்து) பிறருக்குக் கொடுப்போம். உங்களால் என்ன தரமுடியும் என்று நீங்கள் சிந்தித்தால், 'என்னால் என்ன தரமுடியும்?' என்ற நம் ராமேஸ்வரத்து மசூதி தெரு நாயகன், அப்துல் கலாம் ஐயா அவர்களின் தளத்தைச் சென்று பாருங்கள். சுட்டி கீழே.

What can I give ?



படங்கள் நன்றி: இணையம்

4 மறுமொழி(கள்):

ராமலக்ஷ்மிsaid...

கொடுப்பதை பற்றி ஆன்றோர் சொன்னதை அருமையாக விளக்கியுள்ளீர்கள்.

cheena (சீனா)said...

அன்பின் சதங்கா - இலக்கியங்களில் விளையாடுகிறீர்களா .... நன்று நன்று. கொடுப்பதென்பது அருகி வரும் செயலாகி விட்டது. பலனை எதிர்பாராமல் கொடுக்கும் சிந்தனை குறைந்து விட்டது.
உள்ளே வெளியே - அருமையான விளக்கம். தண்டாமைத் திருவே - தாதா - கோடிக்கொருவர் - அவ்வையின் வாக்கு பலிக்கட்டும். முல்லைக்குத் தேரீந்த பாரி - தேரினை விட்டு விட்டு மட்டும் செல்லவில்லை. மணீத்தேரில் முல்லைக் கொடியினைப் படர விட்டுச் சென்றான். முல்லைக் கொடியே இத்தேரினைக் கொள்வாயாக என்றான். அதுதான் கொடையின் சிறப்பு. உதவ இயலாத போது முக மலர்ச்சியுடன் நல்லுரை அளிக்கலாமே ! நன்று நன்று - நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா

வல்லிசிம்ஹன்said...

மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள் சதங்கா. எவ்வளவு நாட்கள் ஆயிற்று உங்கள் எழுத்துகளைப் பார்த்து!!

சதங்கா (Sathanga)said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராமலக்ஷ்மி அக்கா, சீனா ஐயா, வல்லிம்மா.

@சீனா ஐயா: ப‌க்தியைப் ப‌ர‌ப்புகிற‌து புராண‌ங்கள் மற்றும் இலக்கியங்கள் என்ற‌ க‌ருத்து மாறி, அவை எல்லாம் அற‌நெறிக‌ளைப் ப‌ர‌ப்பி ம‌னித‌ ம‌ன‌ம் த‌ளைத்தோங்க‌வே என்ற‌ எண்ண‌ மாற்ற‌ம் இப்பொழுது எழ‌ ஆர‌ம்பித்திருக்கிறது என்னுள்ளே. காவி உடை த‌ரித்துவிடுவேனோ என்ற‌ எண்ண‌ மாற்றம் மற்றும் பயம் என் ம‌றுபாதிக்கு ;)

@வல்லிம்மா: ஓரிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது தொடர்ந்து எழுதி. மீண்டும் எழுத இழுத்து வந்ததற்கு ராமலக்ஷ்மி அக்காவிற்கு தான் நன்றி சொல்லணும்.

Post a Comment

Please share your thoughts, if you like this post !