Sunday, June 28, 2009

பட்டாம்பூச்சி

சும்மா வலையில ஒப்பேத்தித் திறிந்த என்னை வம்பா பிடிச்சு, இந்தா நீ நல்லா பண்றே என்று பட்டாம்பூச்சி விருதை வழங்கியவர்கள் இருவர். பதிவு தவறாமல் வந்து வாழ்த்தும் ராமலஷ்மி அக்கா, மற்றும் தற்போது பி.ஸி. ஆகிவிட்ட நண்பர் நாகு. இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.



சமீபத்தில் நயாகரா சென்ற போது, என்னடா நம்மையே சுற்றி வருகிறதே என ஒரு விநாடி வியந்தேன். பட்சி இல்லீங்க :)) பட்டாம்பூச்சி ! நாகு அவரின் பதிவில் குறிப்பிட்ட அதே டைகர் ஸ்வால்லோ டெய்ல் பட்டாம்பூச்சி, நயாகராவில் நமக்காக காட்சி அளித்தது. அது உட்கார்ந்து தேன் உறிஞ்சும் அழகை அப்படியே விழுங்கியது நமது டிஜிட்டல்.

அடுத்தடுத்து இது போல் தொடர் அழைப்புகள் வந்தாலும், அடுத்துக் கூப்பிட யாராவது இருக்காங்களா என்று, நம்ம ஊர் போலீஸ்காரங்க மாதிரி 'வலை வீசித் தேட' வேண்டியிருக்கிறது :)) ஏறக்குறைய அநேக பதிவர்களையும் சுற்றி வந்துவிட்ட நிலையில் இங்கு வந்திருக்கிறது பட்டாம்பூச்சி !

'வீட்டுக்குள்ளேயே ச‌ம்ப‌ந்த‌ம் வெளியில் தேவையில்லை ஒப்ப‌ந்த‌ம்'ன்கிற‌ க‌தையாக‌ கூட்டுக்குள்ளேயே ப‌ற‌க்க‌ விட‌ப்ப‌டுகிற‌து இப்ப‌ட்டாம்பூச்சி விருது.

மீனா சங்கரன்: சமீபத்தில தான் வந்திருக்காங்க (தமிழ்) வலைக்குள்ள. பேச்சுவழக்கை அப்படியே எழுத்தில் கையாளும் திறம். சுவையாக‌ பதிவுகள் படைத்து நகைக்கவும் வைப்பார் நம்மை. அவர் மேலும் நிறைய எழுத இந்த பட்டாம்பூச்சி விருது.

பித்த‌ன் பெருமான்: ரிச்ம‌ண்டின் அச்ச‌டிக்காத‌ செய்தித்தாளின் ஆசிரிய‌ர். அங்கு ந‌ட‌க்கும் நிக‌ழ்ச்சிக‌ளை விம‌ர்சித்தும், ஒருவ‌ர் ம‌ற‌க்காம‌ல் பெய‌ர்க‌ள் குறிப்பிட்டும், அமெரிக்க இந்திய நாட்டு ந‌ட‌ப்புக‌ள், சினிமா செய்திகள் என்று இவ‌ர் கிறுக்கும் கிறுக்க‌ல்க‌ள் ரொம்ப‌ பிர‌சித்த‌ம். தொட‌ர்ந்து கிறுக்க‌ அவ‌ருக்கு இந்த பட்டாம்பூச்சி விருது.

ஜெய‌காந்த‌ன்: ரொம்ப‌ நாட்க‌ளாக‌ எழுதாம‌ல் இருந்து, த‌ற்போது நிறைய‌ எழுத‌ ஆர‌ம்பித்திருக்கிறார். வீட்டுக்கு ந‌ல்ல‌து சொல்வேன் என்று ப‌ய‌னுள்ள‌ குறிப்புக‌ளில் ப‌ர்ஸைப் பாதுகாப்ப‌து எப்ப‌டிங்க‌ற‌து வ‌ரைக்கும் எழுதுவ‌தில் வ‌ல்லவ‌ர். தொட‌ர்ந்து பயனுள்ள தகவல்கள் தர, இவருக்கு பட்டாம்பூச்சி விருது.

மூவருக்கும் வாழ்த்துகள் !



நீங்கள் பின்பற்ற வேண்டிய பட்டாம்பூச்சி விருதின் விதிகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும்

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும்

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்

Thursday, June 25, 2009

அன்புள்ள ஆனந்திக்கு ...

உயிரோடை லாவண்யா ஒரு சிறுகதைப் போட்டி வைத்திருக்கிறார். முன்பு போல அவ்வளவாக போட்டிகளில் ஆர்வம் இல்லை எனினும், அவரது அன்புக்கு இணங்கி இதோ எனது கதை ...

---

அன்புள்ள ஆனந்திக்கு ...




குருதி வரிகள் கண்களில் கொப்பளித்து ஓட‌ போதையில் தன்னை நெருங்கியவனை, மாதுளம் சிவந்த விழிகளில் சுட்டெறித்து, சுவற்றில் பல்லியென அறைந்து எச்சரித்தாள் ... "யாருகிட்ட மோதற, தண்ணிய போட்டாலும் தடம் மாறாம இருக்கணும் ?! அவன் தான் மனுஷன் !" என்ற‌வ‌ளை வைத்த‌ க‌ண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தான் தியாகேஷ்.

"மொத‌ டேக்லேயே ஓ.கே. ப‌ண்ணிட்ட‌ம்மா. சூப்ப‌ர், ஆஸ‌ம், கார்ஜிய‌ஸ்" என்று அமெரிக்கர்களை போல நம்ம ஊரு டி.வி.ஜ‌ட்ஜுக‌ள் ஆர்ப்ப‌ரிக்கும் வார்த்தைக‌ளில் ரிஷ்காவை புக‌ழ்ந்து த‌ள்ளிய‌ இள‌ம் டைர‌க்ட‌ர் ருத்ரன், கையோடு "பேக்கப்" என்று மைக்கில் கத்தினான்.

படிக்கிற காலம் தொட்டு, பாடங்களை விட படங்களில் தான் நாட்டம் அதிகம் தியாகேஷுக்கு. டிகிரி முடித்து முதன் முதலாய் வந்திறங்கியது கோடம்பாக்கம் தான். கொஞ்ச‌ ந‌ஞ்ச‌ம‌ல்ல‌ டைர‌க்ட‌ர் ஆகும் க‌ன‌வுட‌ன். அறைக‌ளில் த‌னித்து, வீதிக‌ளில் வாழ்ந்து, அங்கே இங்கே என்ற‌லைந்து க‌டைசியில் சேர்ந்த‌து ருத்ர‌னிட‌ம் உத‌வி இய‌க்குன‌ராக‌.

அப்ப‌டி என்ன‌ ம‌ந்திர‌ ச‌க்தியோ 'பேக்க‌ப்' என்ற‌ வார்த்தைக்கு. ஆயிர‌மாயிர‌ம் ப‌ட்டாம்பூச்சிக‌ள் ப‌ட‌ப‌ட‌ப்ப‌தாய் ஆன‌து மொத்த‌ யூனிட்டும். எல்லோரும் வெளியே கிள‌ம்ப‌, ரிஷ்காவின் கேர‌வ‌னுக்குள் நுழைந்தான் ருத்ர‌ன்.

த‌த்ரூப‌ம் கொண்டு வ‌ருகிறேன் பேர்வ‌ழி என, வெட்ட‌ வெளி என்றும் பாராமல், அங்க‌ தொட்டு, இங்க‌ தொட்டு, என ஏற்க‌ன‌வே நொந்திருந்த ரிஷ்கா, இப்ப‌டி உள்ளே நுழைவான் இவனென‌ ச‌ற்றும் எதிர்பார்க்க‌வில்லை.

'வெளியே போடா நாயே !' என‌ சொல்ல‌ நினைத்து, இய‌லாமையில் குறுகி, எழுந்து நின்றாள்.

"எதுக்கு எழுந்து நின்னுகிட்டு, உட்கார் உட்கார்... பாரு இந்த‌ ப‌ட‌ம் வெளிவ‌ர‌ட்டும் த‌மிழ்நாடே எழுந்து நிற்கும் உன்னைக் க‌ண்டா. அதில நானும் சேர்த்தி தான்" என்றான் ந‌ம‌ட்டு சிரிப்புட‌ன்.

"அப்ப‌டிலாம் சொல்லாதீங்க‌ சார். நீங்க‌ எவ்ளோ பெரிய‌ ஆளு !" என்று ருத்ர‌ன் எதிர்பார்த்த‌ப‌டி ப‌தில‌ளித்தாள்.

இத்த‌னைக்கும் ருத்ர‌னுக்கும் இது தான் முத‌ல் ப‌ட‌ம் டைர‌க்ட‌ராக‌. டெக்னிக‌ல் விஷ‌ய‌ங்க‌ளில் சாம‌ர்திய‌சாலி, அதிக‌ம் செல‌வு செய்யாத‌ ப‌ட்ஜெட், கொஞ்ச‌ம் க‌தை, ந‌ல்ல‌ ந‌டிக‌ர்க‌ள் தேர்வு. இது தான் ருத்ர‌ன் ஃபார்முலா. ப‌ட‌த்தயாரிப்பாளருக்கு இதைவிட‌ என்ன‌ வேண்டும்.

ரிஷ்காவிற்கு ஒன்றிரண்டு பட வாய்ப்புகள் நாயகியாக வந்தும், சில காரணங்களால் த‌டைப‌ட்டு பாதியிலேயே நின்றும் போன‌து. ருத்ரனின் க‌தை அவ்வ‌ளாக‌ பிடிக்காவிட்டாலும், வ‌ந்த‌ வாய்ப்பை விடாம‌ல் ஏற்று கொண்டாள்.

படம் வளர வளர அடுத்த‌டுத்த‌ ப‌ட‌ப்பிடிப்புக‌ளிலும் ருத்ர‌னின் தொல்லையும் வ‌ள‌ர‌, ஒரு க‌ட்ட‌த்தில் ப‌ட‌த்தை விட்டு ஓடிவிட‌லாமா என்று கூட‌ நினைத்தாள். ஆணாதிக்க‌ சினிமாவில் அவ‌ர்க‌ளை மீறி த‌ன்னால் ஒன்றும் செய்ய‌ முடிய‌வில்லையே என எல்லாவற்றையும் பொறுத்திருந்தாள். நாள‌டைவில் ருத்ர‌னின் செய்கைக‌ளுக்கு எதுவும் பெரிய‌ எதிர்ப்பு காட்டுவ‌தையும் த‌விர்த்திருந்தாள்.

"மேட‌ம் அடுத்தது, ரெண்டு நாள் முன்னாடி எடுத்ததோட‌ க‌ன்டினியூட்டி ஷாட். ஸீ க்ரீன் ஸாரி க‌ரெக்ட், ஆனா உங்க‌ தோடு நீங்க‌ மாத்த‌ணும்" என்றான் தியாகேஷ்.

"சரி" என்று கேர‌வ‌னுக்குள் நுழைந்து தேடினாள். "தியாகேஷ், கொஞ்ச‌ம் நீங்க‌ளும் தேடுங்க‌ளேன். இங்க‌ தான் வ‌ச்சேன், இப்ப‌ காணோம்" என்றாள் கொஞ்(சசு)ம் த‌மிழில்.

"இன்னும் ரெண்டு நிமிஷ‌ம் தான் இருக்கு. ரெடியாம்மா ?" என்று உள்ளே நுழைந்தான் ருத்ர‌ன். ரிஷ்காவின் பின்னால் சென்று வழக்கம் போல அப்ப‌டியே க‌ட்டியும் அணைத்தான்.

குனிந்திருந்து "இங்க‌ இருக்குங்க‌ மேடம் !" என்று எழுந்த‌ தியாகேஷைக் க‌ண்டு திகைத்தான் ருத்ர‌ன். "இங்க‌ என்னையா ப‌ண்ணிகிட்டு இருக்கே ?! உன்னை நம்பி ஷூட்டிங்கே கொடுத்திருக்கேன். ஸ்பாட்டுல‌ எல்லாம் ரெடி ப‌ண்ணிட்டு இருப்பேனு பார்த்தால் ..."

"சார் வ‌ந்து ... மேட‌ம் தான்..." என்று வெல‌வெல‌த்துப் போனான் தியாகேஷ்.

"ச‌ரி, ச‌ரி. பார்த்த‌து பார்த்திட்டே. ப‌ம்மிகிட்டுப் போ. வெளியில‌ ஏதாவ‌து காமிசிச்சுக்கிட்டே.... அப்புறம்... சரி, வேணாம். புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்" என்று தியாகேஷை எச்சரித்து அனுப்பினான் ருத்ர‌ன்.

'வந்தா எல்லாம் ஒன்னா வரும்' என்பது போல அன்றைக்கு தியாகேஷுக்கு இரட்டை மகிழ்ச்சி.

"இனிமே நீங்க‌ என்னை மேட‌ம்னு கூப்பிடாதீங்க‌. ம‌ல்லிகானு சொந்த‌ பேரைக் கூப்பிட்டா ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ப்ப‌டுவேன்" என்றாள் படப்பிடிப்பின் இடைவேளையில் ருத்ரன் இல்லாத ஒரு நாளில். க‌ண்க‌ளில் மை போல சோகமும் அப்பியிருந்த‌து.

'நான் இன்னும் ஒன்றும் சாதித்துவிட‌வில்லை. என்னைப் போயி...' என்று நினைத்தாலும், ரிஷ்காவின் வார்த்தைக‌ளில் ம‌கிழ்ந்து போனவ‌னின் செல் சிணுங்கிய‌து.

"சார் ! நீங்க‌ளா ? சொல்லுங்க‌ சார். இதோ, இப்ப‌வே கெளம்பறேன் சார்" என்று அடித்துப் பிடித்து, கேமிராவைத் த‌ள்ளி ஓடிய‌வ‌னை, கால‌ரைப் பிடித்து நிறுத்தினான் கேமிராமேன் பாலு.

"ம‌ச்சி எதுக்காக‌ இத்த‌னை நாள் காத்திருந்தேனோ, அந்த‌க் க‌ன‌வு ந‌ன‌வாக‌ப் போகுது. என்ன மாதிரி ஆளுங்க தவமா தவம் கிடக்கிற தயாரிப்பாளர் கிட்ட இருந்து தான் போன். இதுக்கு மேல‌ கேக்காத‌, போய்ட்டு வ‌ந்து விப‌ர‌ம் சொல்றேன்" என்று காற்றில் க‌ரைந்தான் தியாகேஷ்.

'கடவுளாவது கத்தரிக்காயாவது !' என்று சொல்கிற‌ முன்ன‌னி ந‌டிகர் ஒருவர் வ‌ந்து குத்து விள‌க்கேற்ற‌, அம‌ர்க்க‌ள‌மாக‌ பூஜை போட்டு, ஆர‌ம்ப‌மான‌து தியாகேஷின் 'த‌லைப் பிர‌ச‌வ‌ம்'.

சோக‌ம் அப்பிய‌ க‌ண்க‌ள் கொண்ட‌வ‌ள் தான் க‌தாநாய‌கியாக‌ சித்த‌ரித்து வைத்திருந்தான். ரிஷ்காவின் பாதிப்பாக‌க் கூட‌ இருக்க‌லாம். கதாநாயகிக்கு அவ‌ளையே த‌யாரிப்பாளரிடம் சிபாரிசும் செய்து, போராடி ஒப்புத‌லும் வாங்கினான்.

சினிமாத் துறையில் ப‌த்து வ‌ருட‌ங்க‌ள் பட்ட‌ க‌ஷ்ட‌ங்க‌ளும், சினிமா பற்றி க‌ற்ற‌ பாட‌ங்க‌ளும் சேர்த்து வைத்து, சின்ன‌ சின்ன‌ விஷ‌ய‌த்துக்கு கூட‌ முக்கிய‌த்துவ‌ம் த‌ந்து, கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தனுமே என்று கிட்ட‌த் த‌ட்ட‌ ப‌ட‌த்தை செதுக்கினான் என்றே சொல்ல‌லாம்.

ருத்ரனின் படமும் நன்றாக ஓடினாலும், எதிர்பார்த்த அளவிற்கும் மேலாக தியாகேஷின் ப‌ட‌ம் வ‌சூலில் ச‌க்கைப் போடு போட, ஊரெல்லாம் தியாகேஷுக்கு போஸ்டர் ஒட்ட, அவனைத் தன் மனதில் சிக்கென‌ ஒட்டிக் கொண்டாள் ரிஷ்கா.

"ரெண்டு பேரோட‌ வ‌ள‌ர்ச்சிக்கும், இப்போதைக்கு திரும‌ண‌ம் என்ப‌து த‌டையா இருக்கும். அத‌னால‌ கொஞ்ச‌ கால‌ம் போக‌ட்டும், பொறுத்திரு !" என்றான் ரிஷ்காவின் திரும‌ண‌ யோச‌னைக்கு.

"உங்க‌ளுக்கு என்னைப் பிடிக்க‌லை. அதான் சாம‌ர்த்தியமா என் யோச‌னையைத் த‌ள்ளிப் போட‌றீங்க !" என்று சிறு குழ‌ந்தையாய் தேம்ப‌ ஆர‌ம்பித்தாள்.

சினிமா போலவே, ஒரே இரவில் தியாகேஷின் வாழ்வும் முற்றிலும் மாறிப் போனது. கார், பங்களா, காவலாளி என்றும் ஆனது.

"புரிஞ்சுக்க‌ மாட்டேங்க‌றியே ! இப்ப‌ தான் ரெண்டாவ‌து ப‌ட‌ம் ப‌ண்ண‌ப் போறேன். பாரு, ஹாலில் க்யூ க‌ட்டி த‌யாரிப்பாள‌ர்க‌ள் உட்கார்ந்திருப்பதை. இவ‌ங்க‌ள‌ இப்ப‌ விட்டா அப்புற‌ம் எப்ப‌வும் பிடிக்க‌ முடியாது" என்றான்.

தியாகேஷ், ரிஷ்கா, இருவ‌ருக்கும் ஏராள‌மான‌ வாய்ப்புக‌ள் குவிந்தாலும், இருவ‌ருக்கும் பிடித்த‌மாதிரி ஒரு க‌தையைத் தேர்ந்தெடுத்து, 'அன்புள்ள ஆனந்திக்கு...' என்றும் தலைப்பிட்டு, த‌யாரிப்பாள‌ரைத் தேர்ந்தெடுத்து, இசை அமைப்பாளரைத் தேர்ந்தெடுத்து என வ‌ரிசையாய் இவ‌ர்க‌ள் செல‌க்ஷ‌ன் தான் அனைத்தும்.

"சரி, ஊரறிய‌ வேண்டாம். உங்க‌ கூட‌வே இருக்கேன்ல ! யாருக்கும் தெரியாம ஒரு தாலியாவ‌து க‌ட்டிடுங்க. வேண்டாம், வேண்டாம் ஒரு மோதிரம் போதும். பிற்பாடு ஒரு நிலைக்கு வ‌ந்த‌வுட‌ன் ஊரே விய‌க்கும் ப‌டி க‌ல்யாண‌ம் செய்துக்குவோம்" என்றாள்.

"பேசாம‌ ரெஜிஸ்ட‌ர் மேரேஜ் ப‌ண்ணிக்குவோமே !"என்றான் தியாகேஷ்.

"இத‌ விட‌ வேறு செய்தி வேணுமா ந‌ம்ம‌ ப‌த்திரிகைகார‌ங்க‌ளுக்கு !! ந‌ம‌க்குள்ள‌ ம‌ட்டும் இருக்க‌ட்டும். 'இந்தாங்க, இந்த‌ மோதிரத்தை என‌க்குப் போட்டுவிடுங்க‌'" என்று த‌யாராய் வைத்திருந்த‌ மோதிர‌த்தை தியாகேஷிட‌ம் நீட்டினாள் ரிஷ்கா.

வீடு, ம‌னை, வாக‌ன‌ம், வ‌ங்கிக்க‌ண‌க்கு என‌ எல்லாவற்றையும் இருவ‌ர் பெய‌ரிலும் ப‌திந்து கொண்டார்க‌ள். வெளியில் அதிக‌ம் நெருக்க‌ம் காட்டிக் கொள்வதில்லை இருவ‌ரும். ஆனால், த‌னித்திருக்கையில் சுனாமியே வ‌ந்தாலும் அவர்களைப் பிரிக்க முடியாது. 'முளை விட்ட‌ பூ, வெடித்துக் காய்ப்ப‌து போல்' இவ‌ர்க‌ளின் நெருக்க‌ம், நெருக்க‌மான‌வ‌ர்க‌ளால் வெளியில் வெடித்துக் கசிய‌வும் செய்த‌து.

ராஜ‌ர் ஃபெட‌ரரிட‌ம் டென்னிஸ் விளையாடி நாம‌ ஜெயிச்சுட்டோம் என்றால் எப்ப‌டி ந‌ம்ப‌ முடியாதோ, அந்த‌ அள‌விற்கு ஆச்சரியப்படும்படி தியாகேஷின் இர‌ண்டாவ‌து பட‌ம் ப‌டு தோல்வியைச் ச‌ந்தித்த‌து.

பங்களாவில் ஹால் வெறிச்சோடிய‌து. இவ‌ன் தொலைபேசி என்றால் ம‌றுமுனையில் உத‌வியாள‌ருட‌ன் இணைப்பு முறிந்து விடும். ரிஷ்காவின் நிலையும் அதுவே. இருவ‌ருக்கும் வாய்ப்புக‌ள் 'க‌ழுதை தேய்ந்து க‌ட்டெறும்பான‌' க‌தையான‌து !

வெளியில் செல்லவே கூசினான் தியாகேஷ். "எங்காவது கொஞ்ச நாளைக்கு போய் இருந்துட்டு வ‌ர‌லாம். கிராமத்துக்குப் போனா நல்லது" என்றான்.

ரிஷ்காவிற்கு சுத்த‌மாக‌ இதில் இஷ்ட‌மில்லை. "நீங்க வேணா போய் இருந்துட்டு வாங்க. நான் இங்க இருந்து பாத்துக்கறேன்" என்றாள்.

இந்நிலையில் சினிமாவில் ந‌ன்றாக‌ பெய‌ர் வாங்கியிருந்தான் ருத்ர‌ன். கைராசி டாக்ட‌ர் மாதிரி, கைராசி டைர‌க்ட‌ர் என்றார்க‌ள் தயாரிப்பாளர்கள் ருத்ர‌னை.

"'அடுத்த‌ ப‌ட‌த்துக்கு நீ தான் ஹீரோயின் ! என்ன சொல்றே'னு ருத்ர‌ன் கேட்கிறார். என்ன‌ சொல்ல‌ ?" என்றாள் ரிஷ்கா தியாகேஷிட‌ம்.

"உன‌க்காவ‌து வாய்ப்பு வ‌ருதே ! எதுக்கு வேண்டாம் என்று சொல்லிகிட்டு. எடுத்து பண்ணு. நான் இங்க இருக்க விரும்பலை. நீ தனியா இருக்க, ஜாக்கிறதையா இருந்துக்க‌" என்று சொல்லிச் சென்றான்.

இர‌ண்டொரு வார‌ங்க‌ள் க‌ட‌ந்த‌ நிலையில், ரிஷ்காவின் மேக்கப் அறைக்குள் நுழைந்தான் ருத்ர‌ன். அவ‌ள் திடுக்கிட‌வில்லை. முன்பு போல‌வே க‌ட்டிப் பிடித்து காதுக‌ளில் கிசு கிசுத்தான், 'எத்த‌னை நாள் தான் உன‌க்காக‌ த‌வ‌மிருப்பேன்' என்று. அப்ப‌டியே ப‌டுக்கையில் சாய்த்தவ‌னை சேர்த்திழுத்தாள் ரிஷ்கா.

'ம்ம்ம். நீ முன்பு போல‌ இல்லையே. ரொம்ப‌ தேறிட்ட‌ !' என்று முன‌கினான். ச‌ற்றும் எதிர்பார்க்க‌வில்லை ருத்ர‌ன். அப்ப‌டியே அவ‌னைப் புர‌ட்டி, அவ‌ன் மேலேறி ... விட்டாள் ஒரு குத்து ! பொல‌ பொல‌வென்று சிறுமூக்கு உடைந்து ர‌த்த‌ம் சித‌றிய‌து !!!

"ஆம் நான் முன்பு போல‌ இல்லை தான் ! ரொம்ப‌வே தேறிட்டேன் !!" என்று சொல்லி திராட்சைக் கொத்தாய் முன் விழுந்த சுருள் முடிகளைப் பின் தள்ளி கொண்டையிட்டு விறுவிறுவென‌ ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வெளியேறினாள் ரிஷ்கா !!!


Tuesday, June 16, 2009

கல்விச் செல்வம் - அரைப் பக்க கதை

"இதுவரைக்கும் படிச்சதெல்லாம் சும்மா தான். இனிமேல் தான் கவனமா இருக்கணும். எப்படியாவது இங்க சீட் வாங்கிறனும். என்ட்ரன்ஸ் நல்லா பண்ணு. கௌன்ஸிலிங்ல தைரியமா பேசு. எதுவும் தெரியாதுனு சொல்லாதே. என்ன சரியா ?"

அம்மாவும், அப்பாவும், இருபுறம் இருந்து மத்தளம் வாசிக்க, பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் ரேஷ்மா. 'ஏன் இப்படி போட்டு டார்ச்சர் பண்றீங்க' என்பது போல இருந்தது அவள் பார்வை.

"பக்கத்து வீட்டு பொண்ணு இங்க படிச்சு தான் எம்.ஐ.டி. சேர்ந்திருக்கா. ஞாபகம் இருக்கில்லங்க உங்களுக்கு" என்று அம்மா, அப்பாவை இடித்தாள்.

இரவெல்லாம் கண் விழித்துத் தயார் செய்ததில், காலையிலேயே சோர்வாய் இருந்தாள் ரேஷ்மா.

லீவு நாட்களில் கூட சும்மா இல்லை. அந்த கோச்சிங், இந்த கோச்சிங் என்று படு பி.ஸி. தான்.

"நீங்க ஹாஸ்டல் எடுத்துக்கிட்டீங்கனா, இங்க சீட் கண்டிப்பா கிடைக்கும்" என்றார்கள்.

"ஹாஸ்டலில் இருந்துவிடுவாளா ? பழக்கமே இல்லையே ! இன்று வரை எங்களை விட்டுப் பிரிந்து இருந்ததில்லை" என்றார் அப்பா.

"அதெல்லாம் பிள்ளைங்களோட பிள்ளைங்களா இருக்கும்போது பழகிடும் சார். சரி, போய் ஆஃபீஸ்ல ஃபீஸ் கட்டி, ரெஸிப்ட் வாங்கிக்கங்க" என்றார் ரேஷ்மாவை நேர்முகம் செய்த ஆசிரியை.

"ஸ்டூடண்ட் பேரு என்னங்க ?" என்றார் ரைட்டர்.

"ரேஷ்மா"

"எந்த க்ளாஸ் ?"

"எல்.கே.ஜி. !"

Tuesday, June 9, 2009

கோழித் திருடன்



மெல்ல அடிமேல் அடிவைத்து முன்னேறி, தலையில் இருந்த துண்டால், லபக்கென்று அந்தக் கோழியின் தலையில் போட்டு அமுக்கிப் பிடித்தான் மாயாண்டி.

கோழியைத் தூக்கிக் கொண்டு சுற்று முற்றும் பார்த்துக் கொண்டான். 'நல்ல வேளை யாரும் பார்க்கலை' என்று திரும்பு முன், அவன் தலையைச் சுற்றி இறுக்கியது ஒரு துண்டு. அவன் கைபிடி நழுவ, பக் பக் என்று விழுந்து பறந்தது கோழி.

"அடியேய்ய்ய்.. ராக்காயீ, மூக்காயி, கருப்பாயீ, வெள்ளையம்மா ... எல்லாரும் ஓடியாங்கடியோய் ... ரொம்ப நாளா நம்ம ஊர்ல கோழி திருடிகிட்டிருந்த திருடன் மாட்டிக்கிட்டான்" என்று செவந்தி கூவிய கூவலில் ஊரே திரண்டது.

முதலில் திமிறினாலும், சனங்களின் முனகலில், ஊரே திரண்டதை அறிந்து உறைந்தான் மாயாண்டி. 'வ‌ச‌மா மாட்டிக்கிட்ட‌மே இப்ப‌டி ! கொஞ்ச‌ம் கூட‌ த‌ப்பிக்க‌ முடியாது போல‌வே' என்று சிந்தித்த‌வ‌னை, பக்கத்தில் இருந்த ஆலமரத்தில் கட்டினர், வாட்ட‌சாட்ட‌மாக‌ இருந்த‌ இர‌ண்டு இளைஞ‌ர்க‌ள்.

"வெத்தியூருக்கு வாக்க‌ப்ப‌ட்டு போயி, ரெண்டாம் வ‌ருச‌மே திரும்பி வ‌ந்தாளே ம‌ர‌க‌தம்..... அவ‌ ம‌க‌ந்தாம்லா கோழித் திருடனாம் !!! நாமெல்லாம் புதுசா வந்த சோசியக்காரன்னுல நெனச்சுகிட்டு இருந்தோம் ! மாயாண்டிய புடிச்சு ம‌ர‌த்துல‌ க‌ட்டிவ‌ச்சிருக்காக‌லாம். வா, ஒரு எட்டு போயி பாத்துட்டு வ‌ர‌லாம்" என‌க் கிள‌ம்பின‌ர் கிழ‌விய‌ர் இருவ‌ர்.

"பண்ணையாரு வரட்டும். அவரு ஊட்டுல வேல பாக்குறாங்கறதுக்காக சும்மா விட்டாலும் விட்டிருவாரு. இந்த மாதிரி பசங்களுக்கு சரியான தண்டனை கொடுக்கச் சொல்லணும். இனி ஒரு பய உன்ன மாதிரி ஊருக்குள்ள திறியப்படாது" என்று காரி உமிழ்ந்தார் பெரியவர் ஒருவர்.

வயல் வேலைக்கும், வீட்டு வேலைக்கும் மரகதம் செல்ல, கவனிப்பாரற்று வளர்ந்த மாயாண்டி... படிப்பும் ஏறாமல், பட்டி தொட்டி எங்கும் சுற்றித் திரிந்தவனைத் தன்னுடன் சேர்த்து, தனக்கு உதவியாக தன் வீட்டு வேலைக்கு வைத்துக் கொண்டார் பண்ணையார்.

யேசுபிரானைப் போல ஒரு பக்கம் தலை சாய்த்து, கன்னங்கள் வீங்கி, கை கால்கள் எல்லாம் சிராய்த்துச் சோர்ந்திருந்தான் மாயாண்டி.

"ப‌ண்ணையாரு ஊட்டுல‌ வேலைக்கு இருந்துகிட்டே இத்த‌ன‌ ப‌ண்ணியிருக்கியா ? உன‌க்கு இதுவும் வேணும், இன்ன‌மும் வேணுன்டா" என்று, இர‌ண்டு போடு போட்டு ஒதுங்கி நின்றான், அந்த‌ப் ப‌க்க‌ம் சைக்கிளில் வ‌ந்த‌ ஒருவ‌ன்.

நைந்த‌ நூலாய்த் தொய்ந்து போனான் மாயாண்டி. 'ஒரு கோழிக்கு இத்தன ரகளை பண்றானுங்களே ! தெரிஞ்சிருந்தா கை வைச்சிருக்க மாட்டேனே ! எல்லாம் இப்ப யோச்சிச்சு என்ன பண்றது !!' என்று சிந்தனைச் சிதறல்கள் அவனுள்.

"ஏலேய். வெல‌கு வெல‌கு. ப‌ண்ணையாரு வாராரு" என்று ஆளாளுக்குச் சொல்லி வ‌ழிவிட்ட‌ன‌ர்.

"அடப் பாவ‌மே ! நான் வ‌ர்ற‌துக்குள்ள‌ இத்த‌ன‌ ப‌ண்ணிட்டீங்க‌ளா ? மொத‌ல்ல‌ க‌ட்ட‌ அவுத்து விடுங்கையா" என்றார் ப‌ண்ணையார்.

வார்த்தைக‌ளில் வ‌ழிந்த‌ க‌னிவு, முத‌ன் முறையாய் அவ‌னுள் குளிர்ச்சியூட்டிய‌து. கூட்டத்திடம் இருந்து மெல்ல‌ ப‌ய‌ம் வில‌கியிருந்த‌து.

"ஏன்டா, கேட்டிருந்தா நம்ம ஊட்டு கோழி ரெண்ட அடிச்சு சாப்பிடச் சொல்லிருப்பேன்ல. என்னத்துக்கு ஊராம்வீட்டுல கைய வைக்கிறே ? சரி, சரி. இன்னும் ப‌தின‌ஞ்சு நாளைக்குள்ள நூத்திஓரு ரூபா அப‌ராத‌ம் க‌ட்டிரு. இல்ல‌ ஊரார் கால்ல அம்பத்தோரு முறை விழுந்து எந்திரி. என்னையா, ச‌ரி தான ?" என்று கூட்ட‌த்தாரைப் பார்த்தார் ப‌ண்ணையார்.

ஒருவ‌ரும் எதிர்த்துப் பேச‌வில்லை.

'திருட்டுக் கோழியத் தெரக்கித் தின்னா ... ஆயுசு கெட்டியாகும், ஆன்ம பலம் பெருகும், வீடு வாசல் விருத்தி அடையும் !' என்ற ஜோசியக்காரனுக்கும், மாயாண்டிக்கும் மட்டுமே தெரியும் யார் உண்மையான திருடன் என்று !!!

ஜூன் 13, 2009 யூத்ஃபுல் விகடனில்

Friday, June 5, 2009

பழமொழி வலைமொழி

எவ்வளவோ மாற்றங்கள் உலகில் ஏற்பட்டாலும், இன்னும் நமக்கெல்லாம் 'பாட்டி வடை சுட்ட கதை' ஞாபகம் இருக்கிறதல்லவா !!! எல்லாம் செவி வழி, அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, அக்கா, மாமா, இப்படி மக்களோடு நெருங்கிப் பழகியதால் சட்டென்று நம்மனதில் ஒட்டிக் கொண்டவை.

இன்று நிலைமை அப்படியா ? ஊருக்கு ஓர் மூலையில், அல்லது பல நாடுகளில், என குடும்பக் கட்டமைப்பே பிளவுண்டு வாழ்கிறோம். "கூகளே கடவுள் தேடலே வாழ்க்கை" என்றும் மனிதருடன் சகவாசத்தைக் குறைத்துக் கொண்டோம்.

ஆங்க் ... மேலே குறிப்பிட்ட பாட்டி கதை மாதிரி, பழமொழிகளும் இன்று வரை ஜீவனோடு நம்முடன் பயணிக்கிறது. இவையும் செவிவழிப் பரவிய ஜீவன்களே. "சுறுங்கக் கூறின் விளங்கப் பெறும்" என்பது பழமொழிகளுக்கே பொருந்தும் பழமொழி. குட்டிக் குட்டியா ஒற்றை வரிகளில், அப்படியே இலகுவாக நம் மனதில் ஏறி அமர்ந்து கொள்ளும் அவை.

சரி, அப்படிப் பட்ட பழமொழிகளை, நம் வலைப்பூவோடு, பதிவரோடு, பதிவுகளோடு, பின்னூட்டங்களோடு பொறுத்திப் பார்ப்போமே ! என் மனதில் தோன்றிய சில வலைமொழிகள்.

போட்டா மொக்கை, இலேன்னா பின்னூட்டம்.
வரும் சிறு பின்னூட்டமும், அடுத்த பதிவிற்கு உதவும்.
போட்டால் (தான்) கிடைக்கும் பின்னூட்ட‌ம்.

பதியாட்டி கும்மி பதிஞ்சா மொக்கை.
மொக்கை பதிவு போட்டாலும் தனித் தளம் வேண்டும்.
பதிவு சிறுத்தாலும் மொக்கை குறையாது.

பதிவருக்குத் தன் பதிவு பொன் பதிவு.
கருத்துள்ள போதே இடுகை இடு.
மக்கா, நமக்கு மொக்கையும் ஆயுத‌ம் !


எனக்குத் தெரிஞ்ச அளவிற்கு சுமாரா எழுதியிருக்கிறேன். நம் வலைப்பதிவர்களின் திறமையை நான் சொல்லித் தெரிய வேண்டுமா ? எவ்வளவோ க்ரியேடிவிட்டி அவங்க மனசுக்குள்ள, அத்தனையும் பதிவுகளாய், பின்னூட்டங்களாய் பார்த்து, படித்து ரசிக்கிறோமே ! அதனால, இதை ஒரு தொடராத் தொடரலாம் என்று தோன்ற, எனக்குத் தெரிந்த ஒரு நாலு பேரை அழைக்கிறேன்.

அவர்கள் நால்வரையும் ஒரு பதிவு போட்டு, அவங்க ஒரு நாலு பேரை அழைத்து, தொடரைத் தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன். நல்லது கெட்டதுக்கு, நாலு பேர சேத்துக்குங்கனு சும்மாவா சொன்னாங்க !!!

நான் அழைக்கும் நால்வர்:

செல்வி ஷங்கர் / சீனா
ராமலக்ஷ்மி
மின்னல்
நாகு

உங்களால் எத்தனை வலைமொழி எழுதமுடியுமோ எழுதுங்கள். தலைப்பில் 'பழமொழி வலைமொழி' வருமாறு பார்த்துக் கொண்டால் சிறப்பு.

அனைவரின் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

Tuesday, June 2, 2009

சப்தம் வரும் நேரம் (அரைப் ப‌க்க‌க் க‌தை)

வழக்கத்தை விட நரேன் அன்று பரபரப்பாக இருந்தான்.

இரண்டு நாட்களாக கேட்காமல் இருந்த சப்தம் மீண்டும் இன்று. நேரம் நடுநிசியைத் தாண்டிவிட்டிருந்தது. ச‌மைய‌ல‌றையின் பின்ப‌க்கம் இருந்த அறையில் ட‌க், ட‌க் என்று அந்த ச‌ப்த‌ம். ரொம்ப‌ நாட்க‌ளாக‌வே அந்த‌ அறையைப் ப‌ய‌ண்ப‌டுத்துவ‌தில்லை. ச‌மீப‌ கால‌மாக‌, அந்த‌ அறையில் ஆள்ந‌ட‌மாட்ட‌ம் இருப்ப‌து கேட்டு அதிர்ச்சியுற்றான்.

"ஏங்க, ஏதாவ‌து காத்து க‌ருப்பா இருக்குமோ ?" என்று ப‌ய‌ந்த‌ ம‌னைவியை, "எதுக்கும் கொஞ்ச‌ நாளைக்கு உங்க‌ அம்மா வீட்டில் இரு" என்று அனுப்பினான்.

'எப்படியும் இந்த முறை மிஸ் பண்ணிடக்கூடாது. இருக்கும் நேரமும் மிகக் குறைவே. ஒரே அடி, அடி துல்லியமா தலையில் விழணும்... காத்தாவது கருப்பாவது ...' மனதைத் தயார் படுத்திக் கொண்டான் ந‌ரேன்.

பக்கத்து அறைக்குச் சென்று, சமயலறைக் கதவை மெல்ல சாத்தினான். இரண்டு வழிகள் இந்த அறைக்கு. ஒரு வழியை அடைத்தாயிற்று, மற்றொன்று அந்த அறையில் மற்றொரு புற‌ம் இருந்தது. அங்கு கதவு காற்றில் மெல்ல ஆடிக் கொண்டிருந்தது. கீற்று போன்ற‌ வெளிச்ச‌ம் க‌த‌விடுக்கில் தெரிந்த‌து.

'காத்தாவ‌து க‌ருப்பாவ‌து என்று சொல்லிகிட்டாலும், நெஞ்சுக்குழி அடைத்துக் கொண்ட‌து' ந‌ரேனுக்கு. டொக் டொக் என்ற‌ சப்த‌ம் மேலும் அதிக‌ரித்த‌து. மிக‌வும் க‌வ‌ன்த்துட‌ன், சிறிய‌ சப்த‌ம் கூட தான் எழுப்பாம‌ல், ச‌ப்த‌ம் வ‌ந்த‌ திசையை நோக்கி முன்னேறினான்.

கிட்டே நெருங்கி, ஒரே போடு ... சில நொடிகளில் ச‌ப்த‌ம் அட‌ங்கி விட்டிருந்த‌து.

"ரொம்ப‌ நாளா டார்ச்ச‌ர் ப‌ண்ணுச்சே அந்த‌ எலி, அது காலி. நீ தைரியமா புற‌ப்ப‌ட்டு வ‌ர‌லாம்" என்று ம‌னைவிக்கு ஃபோன் செய்தான் நரேன்.

ஜூன் 3, 2009 யூத்ஃபுல் விகடனில்

Friday, May 22, 2009

செவிச் செல்வம்.

சிங்கப்பூர் முஸ்தாஃபாவிற்குள் நுழைகையில், ஏதோ ஃப்ரீசருக்குள் நுழைந்தது போலிருந்தது. அந்த அளவிற்கு வெய்யிலின் உக்கிரம் வெளியே. முதுகுத் தண்டில், ஒற்றை நீர்வீழ்ச்சியாய் வழிந்தோடிய வியர்வையில், மேனி சிலிர்த்தது.

வேலை நாட்களில் போனால் சற்று கூட்டம் குறைவாய் இருக்கும் என்று எண்ணியது, மாபெரும் குற்றமாகப் பட்டது. ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு, குறுகலான பாதைகளில் முன்னேறி செல்வது, சற்று தள்ளி நின்று வேடிக்கை பார்த்தால் ரம்மியமாக இருக்குமோ ? என்னவோ !! ஆனால், நாமும் அதற்கும் ஐக்கியமாகி செல்லும்போது தான் தெரிந்தது வலி.

"வேர் கேன் ஐ கெட் ஹியரிங் எய்ட் ?" என்று தேடிய என்னை, "செவிட்டு மெஷினத் தான தேடுற, அதுக்குக் கூட அலப்பரை தாங்கலேயேடா ராசா" என்று தோள்களில் தட்டினான் நண்பன் ஸ்ரீதர்.

ஐபாட் மாதிரி இருக்கும் சிலவற்றை எடுத்து மேசையில் வைத்தார், சிரிப்பென்றால் என்னவென்று கேட்கும், சிரிப்பை மறந்த இந்திய ஊழியர்.

'டேய் நந்து, எனக்கு இந்தப் பெரிசு பெரிசா இருக்க மெஷினெல்லாம் வேண்டான்டா. வெளிய‌ எடுப்பாத் தெரியும் வேற‌ ! இப்ப‌ல்லாம் ப‌ட்ட‌ன் சைஸ்ல‌ வ‌ருதாமே. அதைவிட‌க் குட்டியா இருந்தா வாங்கிட்டு வாடா' என்ற‌ தாத்தாவின் குர‌ல் மாட‌ர்னாய் ஒலித்த‌து.

"அதெல்லாம் எக்ஸ்பென்சிவா இருக்கும் !" என்றார் ஊழிய‌ர். ப‌ர‌வாயில்லை எடுங்க‌ என்ற‌த‌ற்கு, வேண்டா வெறுப்பாய் எடுத்துக் காண்பித்தார்.

'ரெண்டு ட‌மார‌மும் அவுட்டு. ஒன்னு வ‌ச்சாக் கூட‌ ச‌ரியா வ‌ராது. அத‌னால‌ ரெண்டா வாங்கிட்டு வ‌ந்திருப்பா' என்றிருந்தார் அம்மா.

நானூறு வெள்ளி * 2 க்கு பிங்க் பில் கொடுத்தார். ஏனைய சாமான்க‌ளும், வ‌ழ‌க்க‌ம் போல‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு பாடி ஸ்ப்ரே, வீட்டுக்கு த‌லைவ‌லித் தைல‌ பாட்டில்க‌ள், டைக‌ர் பாம், சில டி.ஷ‌ர்ட்க‌ள், சாக்லேட் வ‌கைய‌றாக்க‌ள். அப்பாடா ஷாப்பிங் முடிச்சாச்சு என்று நிம்ம‌திப் பெருமூச்சு விட்டேன்.

அன்றிர‌வே சென்னை வ‌ந்த‌டைந்து, நேரே ம‌ருத்துவ‌ம‌னைக்குச் சென்று தாத்தாவைப் பார்த்தேன். 'விவேகானந்தன்' என்றவுடன், வேறு கேள்வி கேட்காமல் அவரது அறையில் விட்டனர் என்னை. அவ‌ரை அந்த‌ நிலையில் பார்க்க‌வே பாவ‌மாய் இருந்த‌து. எழுபதுகளின் மத்தியில் இருந்தாலும், சில‌ நாட்க‌ள் வ‌ரை திட‌மாக‌ இருந்த‌வ‌ர். சமீபத்தில் சாலையில் ந‌ட‌ந்து செல்கையில், பின்னால் மிதிவ‌ண்டியில் வ‌ந்த‌ சிறுவ‌ன் மோத‌, கீழே விழுந்து, விலா எலும்பு முறிந்துவிட்ட‌து. மிதிவ‌ண்டியின் ம‌ணியை அடித்துக் கொண்டே வ‌ந்த‌ அவ‌ன், எப்ப‌டியாவ‌து இவ‌ர் வில‌கிக் கொள்வார் என‌ நினைத்து, அவ‌ர் ப‌க்க‌ம் வ‌ரை வ‌ந்து, மோதிவிட்டான்.

ரொம்ப‌ வ‌ருட‌ங்க‌ள் முன்னாலேயே தாத்தாவுக்கு காது கேட்ப‌து நின்றுவிட்டிருந்த‌து. வீட்டில் எல்லோரும் ஹியரிங் எய்ட் வைக்க சொல்லியும், இன்று வ‌ரை அது எதுக்கு, வேண்டாம் என்று ம‌றுத்து வ‌ந்தார். விபத்துக் கார‌ண‌த்தைக் கூறி தாத்தாவை மெஷின் வைக்கச் சொல்லி வற்புறுத்த, ஒரு வ‌ழியாய் ச‌ம்ம‌தித்திருக்கிறார்.

த‌லையில் லேசாய்க் கீர‌லுக்கு ம‌ருந்திட்டு, சிறாய்புக்களுக்கு க‌ட்டுபோட்டு நீட்டிய‌ கால்க‌ளுட‌னும், பெட்டில் புத்த‌க‌ம் வாசித்துக் கொண்டிருந்தார்.

அவ‌ர்முன் நிற்க‌, பொக்கை வாய் திற‌ந்து (ப‌ல் செட் அத‌ற்கான‌ அழ‌கிய‌ ப்ளாஸ்டிக் ட‌ப்பாவில் நீந்திக் கொண்டிருந்த‌து), என்னை கிட்டே வ‌ர‌ச் சொல்லி, ஆர‌த் த‌ழுவிக் கொண்டார். எங்கே அழுதுவிடுவாரோ என்று ச‌ற்று வில‌கி த‌ள்ளி நின்று கொண்டேன்.

ச‌த்த‌மாக‌ப் பேசினால் கூட அவருக்கு கேட்கவில்லை. சைகையில் நான் பேச‌, வாய் திற‌ந்து தாத்தா ப‌தில‌ளித்தார். காற்றில் க‌ல‌ந்த‌ க‌ல‌வையாய் வார்த்தைக‌ள் தெறித்த‌து.

பையைப் பிரித்து, அழகாக‌ ஜொலித்த‌ ஹிய‌ரிங் எய்ட் பேக்கிங்கை தாத்தாவிட‌ன் நீட்டினேன். இந்த‌ முறை அழுதே விட்டார்.

ஒன்றைப் பிரித்து, எப்ப‌டி ஆப்ப‌ரேட் செய்ய‌ வேண்டும் என‌ விள‌க்கினேன். ஆசையாய் அதை வாங்கி உள்ளங்கையில் வைத்துப் பார்த்தார். சட்டைப் பொத்தானை விட சிரியதாக இருந்தது. அவ‌ர‌து இட‌து காதில் பொறுத்தினேன்.

"சுத்தமா வெளியில தெரியலைல ..." என்று குஷியானார்.

ப‌ட‌ப‌ட‌வென‌ ப‌ட்டாசு வெடிப்ப‌தாய் உண‌ர்ந்திருப்பார் போல‌. ரொம்ப நாட்கள் கேட்காமல் இருந்த காது, அவருடைய மெல்லிய சத்தத்தையும் பெரிதுபடுத்தி வாங்கியிருக்குமோ, என்னவோ ... லேசாக‌ சிலிர்த்துக் கொண்டார்.

"தாத்தா, எப்படி இருக்கீங்க. இப்ப கேட்குதா ?" என்றேன்.

"நல்லா இருக்கேன்ட நந்து. நல்லா கேட்குது என்று ப‌தில் அளித்தார்". பெருமித‌ம் தாங்க‌வில்லை அவ‌ருக்கு. விட்டால் எழுந்து ஓடி விடும் அள‌விற்கு முக‌த்தில் ஆன‌ந்த‌ம்.

"தனியாவா இங்க வந்தே. வேற யாரும் கூட வரலை ?!" என்று கேட்டார் தாத்தா.

"ஃப்ரெண்டோட வந்தேன் தாத்தா. அவன் இங்க பக்கத்தில ஏதோ வேலை இருக்குனு போயிருக்கான். அநேகமா இப்ப கீழே காத்திருப்பான். சரி உடம்பப் பார்த்துக்கங்க. அம்மா இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திருவாங்க. நான் காலையில் வர்றேன்." என்று அங்கிருந்து நகர்ந்தேன்.

மறுநாள் நான் மருத்துவமணை செல்ல மதியம் ஆகிவிட்டது. சோகமாக இருந்த தாத்தாவை ஏறிட்டு நோக்கினேன். 'நேற்றிரவு குழந்தை போல இருந்தாரே...' "தாத்தா, என்னாச்சு உங்களுக்கு ?" என்று கேட்ட கேள்விக்கு பதிலில்லை. பக்கத்தில் சென்று படுக்கையில் அமர்ந்த என்னைக் கூர்ந்து கவனித்தார். அதே கேள்வியை மீண்டும் கேட்க ...

"இந்தக் கிழம் விடுற அட்டகாசம் தாங்கலை. என்றும் இளமைனு நெனைப்பு போல. ஆனா என்ன, காசு பார்ட்டி. முழிக்கிற முழியப் பாரு" என்றார் நர்ஸ். "பாத்து பேசுங்கம்மா, அவர் காதுல விழுந்திரப் போகுது" என்ற ஆயாவிற்கு, "இந்த டமாரத்துக்கா ..." என்ற எகத்தாளமான நர்ஸின் பேச்சில், 'அட ஈஸ்வரா !!!' எனக் கூசிப் போனார் விவேகான‌ந்த‌ன்.

"ஏங்க, வந்த உடனே கெளம்பணும்னு சொல்றீங்க. அப்படி இப்படி கொஞ்ச நேரம் இருக்க மாதிரி பாவ்லா காட்டுங்க‌. கைய கால புடிச்சு விடுங்க. நடிக்கவாவது தெரியுதா. உங்க அப்பாவுக்கும், சரி, பையன் தான் நம்ம மேல பாசமா இருக்கானு தோணும். கொட்டிக் குமிச்சு வச்சிருக்கதெல்லாம், அப்புறம் உங்க தங்கச்சி தட்டிகிட்டுல போயிடுவா... விட்டுருவேனா ..." என்று முழக்கிய மருமகளை ஏறிட்டார். வ‌ழிச‌லாய் ஒரு சிரிப்பை காட்டினாள். 'ஐயோ ராமா ... எவ்வ‌ள‌வு ந‌ல்ல‌வ‌னு நெனைச்சிக்கிட்டு இருந்தேன். இத்தனை நாள் சிரித்த இந்த‌ சிரிப்புக்கு இதுதான் அர்த்த‌மா ?!' என‌ நொந்து போனார்.

வ‌ந்த‌வ‌ரும், போன‌வ‌ரும் ... 'கெழ‌ம் எப்ப‌ போகும், எட‌ம் எப்ப‌ காலியாகும்' என்ற‌ நிலையிலேயே பேசிச் செல்ல, கவுண்டமணி ஒரு படத்தில் செய்வது போல 'என்ன‌ க‌ரும‌த்துக்கு இந்த‌ மெஷின் ந‌ம‌க்கு இனி, பேசாம காது கேட்காம இருக்கதே நல்லதுடாப்பா !!!' என ஹியரிங் எய்டை க‌ழ‌ட்டி குப்பையில் விசிறி அடித்த‌தை தாத்தா சொல்ல‌, வாய் பேசாது மௌனியாய் கேட்டுக் கொண்டிருந்தேன்.

மே 26, 2009 விகடன் முகப்பில்