நிலாச் சோறு (குழந்தைகள் கவிதை)
முதலில் எழுதிய யானை கவிதையை, எனது எட்டு வயது மகன் பிழையின்றி வாசித்து ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டான். இதிலென்ன ஆச்சரியம் என்று கேட்போருக்கு, புலம் பெயர்ந்த அனேகரின் குழந்தைகள் தமிழில் பேசுவதே இல்லை, அதிலும் வாசிக்கிறார்கள் என்றால் எவ்வளவு ஆனந்தம். அதே நிலை தான் எனக்கும்.
அடுத்த சந்ததியினருக்கு நாம் நமது மொழியைக் கற்றுக் கொடுக்காவிடில், பல்லாயிரம் ஆண்டுப் பாரம்பரியம் மிக்க காப்பியங்கள், அதன் பின் வந்த இலக்கியங்கள், இன்று நாம் விவாதிக்கும் பல நிகழ்வுகள், இதெல்லாம் எதற்காக ?
மொழியும், இயற்கையும், உணவும், பாசமும் எல்லாம் கலந்து, நமது பெற்றோர் நமக்குச் சொல்லியதை, நாம் நமது சந்ததியினருக்குச் சொல்லித்தர வேண்டாமா ?
எனது இரண்டாவது கவிதை (நிலாச் சோறு):
வட்ட நிலா மேலே
தட்டில் சோறு கீழே
நிலா பார்த்து நாமும்
நித்தம் உண்ணலாமா ?!
நெய் சோறு கொஞ்சம்
பருப்பு சோறு கொஞ்சம்
அழகாய் நீயும் சாப்பிடு
அன்னை சொல் கேட்டிடு !
அண்ணாவுக்கு ஒரு வாய்
அப்பாவுக்கு ஒரு வாய்
பகிர்ந்து நீயும் கொடுத்திடு
பாசத்தோடு வளர்ந்திடு.
