கிராமத்துக் குலதெய்வ வழிபாடு

அமெரிக்கால பொறந்தாலும்
ஆப்பிரிக்கால பொறந்தாலும்,
விடுப்பு எடுக்கையில
ஓடிப்போய் கிராமத்தில்,
ஊருசனம் பார்த்துபுட்டு
உறவுகளைச் சேர்த்துக்கிட்டு,
காரு, வேன்எடுத்து
கல்லுமுள்ளுப் பாதைதாண்டி,
சென்று சேருமிடம்
குலதெய்வச் சாமிகோவில்.
மண்குதிரை அணிவகுக்க
மலைக்கும் வரவேற்பு,
மஞ்சள் ஆடைஅணிந்த
மரக்கிளைகள் ஏராளம்.
படர்ந்த மரநிழலில்
உதறிப் பாய்விரித்து,
சின்னஞ்சிறு கதைகள்
சிரிப்புக் கும்மாளங்களில்,
சிலுசிலுக்கும் மரஇலைகள்
படபடக்கும் பட்சினங்கள்.
சண்டைகொண்டு விளையாடும்
சளைக்காத சிறுவர்கூட்டம்.
பொங்கலிட்டுக் குலவையிட
சங்கமிக்கும் பெண்டிர்.
சந்தனம் பொட்டிட்டு
விழிதெரியும் குலதெய்வம்.
உறவுகள் கூடிநிற்க
படபடப்பு ஆரம்பம் ...
மாமன் மடிஅமர்த்தி
மருளும் குழந்தைக்கு,
முடியிறக்கிக் காதுகுத்த
விக்கி விக்கிஅழும்.
தேம்பி அழும்செல்லம்
தேற்றிட திராணியற்று,
பெற்றோர் மருகியதில்
உற்றார் உருகிடுவர்.
இன்றுவரை நடைமுறை,
நாளை எப்படியோ ?
