Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Friday, July 31, 2009

எனது முதல் புத்தக வெளியீட்டு விழா !

அரும்பாடு பட்டு, காலம் காலமாய் காத்திருத்தலுக்குப் பின் ஏற்பாடான நிகழ்ச்சி தான் இவ்விழா. தேனாம்பேட்டை காமராஜர் நினைவரங்கில் எனது முதல் புத்தக வெளியீட்டு விழா.

மின் பதிப்பு :
null


உங்களுக்கான பிரதிக்கு "sathanga at gmail dot com" க்கு தொடர்பு கொள்ளுங்கள். அல்லது உங்கள் மின்னஞ்சல் முகவரியை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

தலைமை ஏற்று பேச எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள். முதல் பிரதியைப் பெற்றுகொள்ள ஜெயகாந்தன் அவர்கள். ம‌ற்றும் வாழ்த்திப் பேச‌ பிர‌ப‌ல‌ எழுத்தாள‌ர்க‌ள், சில‌ சினிமா வி.ஐ.பிக்க‌ள், சாலமன் பாப்பையாவும் கடைசி நேரத்தில் வருவதற்கு ஒப்புக்கொண்டார். ஸோ ஸ்வீட்டா இவ‌ர்க‌ளோடு நானும் !

அரங்கு நிறைந்த கூட்டம் என்று இல்லை என்றாலும், ஓரளவுக்கு கூட்டம் இருந்தது. பிரபலங்களைப் பார்ப்பதற்கான கூட்டம் தான், இருப்பினும் எனக்குள்ளும் சில பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கத் தான் செய்தன.

எழுத்தைப் போலவே பேச்சிலும் எளிமை காத்தார் ராமகிருஷ்ணன். "வருங்காலத்தில் இளைஞர்கள் நிறைய எழுத வேண்டும். ப்லாகில் எழுதுவது என்று நின்றுவிடாமல் பத்திரிகைகளிலும் கால் பதிக்க வேண்டும். முடிந்தால் திரைத்துறைக‌ளிலும் கூட" என்று அன்பொழுக‌ பேசினார். என‌து க‌தைக‌ளில் சில‌வ‌ற்றிலிருந்து, சில‌ வ‌ரிக‌ள் குறிப்பிட்டு பேசிய‌து மெய்சிலிர்க்க‌ வைத்த‌து என்னை.

எழுத்தைப் போல‌வே பேச்சிலும் வீச்சைக் காண்பித்தார் ஜெய‌காந்த‌ன். "முத‌லில் ஒருவ‌னுக்கு மொழிப் ப‌ற்று இருக்க‌ணும். பதவி, ஆனவம், பரிசுக்காக எல்லாம் எழுதுவதைத் தவிர்க்கணும். அதை விட்டு விட்டு இன்னும் பலரின் பின்னால் ஒளிந்து கொண்டு ஜால்ரா அடித்து எழுதுவ‌தெல்லாம் எழுத்தா ? இளைஞ‌ர்க‌ளின் ச‌க்தி மாபெரும் ச‌க்தி. அவ‌ர்க‌ள் ஓர‌ணியில் திர‌ண்டு த‌மிழை வாழ‌ வைக்க‌ணும்" என்று சுறுக்க‌மாக‌ முடித்துக் கொண்டார்.

ப‌ல‌ரும் அவ‌ர்க‌ள‌து க‌ருத்துக்க‌ளைப் ப‌திய‌, க‌ரகோஷ‌த்தின் எதிரொலி காதுக‌ளில் சுழ‌ன்ற‌து சில பல நிமிட‌ங்க‌ள்.

ப‌திவ‌ர்க‌ள் மீட்டிங்கின் போன்டா ஃபேம‌ஸ் இங்கும் ஏற்பாடு செய்திருந்தோம். காரைக்குடி உண‌வ‌க‌த்தில் இருந்து ம‌திய‌ச் சாப்பாடு. பின் மாலையில் சால‌ம‌ன் பாப்பையாவின் மாறுப‌ட்ட "ப்லாகர் vs எழுத்தாளர்" ப‌ட்டி ம‌ன்ற‌ நிக‌ழ்ச்சி. வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல‌, ந‌ண்ப‌ர்க‌ளின் அன்புத் தொல்லை தாங்காம‌ல் ப‌ட்டிம‌ன்ற‌மும் சேர்க்கும்ப‌டி ஆன‌து.

எல்லாம் முடிந்து, "முத‌ல் பிர‌தியை பெற்றுகொள்ள‌ ஜெய‌காந்த‌ன் அவ‌ர்க‌ளை மேடைக்கு அழைக்கிறோம்" என்று ஒலிபெருக்கியில் என‌து ந‌ண்ப‌ர் தெரிவிக்க‌, ஜெய‌காந்த‌ன் அவ‌ர்க‌ள் த‌யாராய் வ‌ந்து நிற்கிறார். என்னால் எழுந்து செல்ல‌ முடிய‌வில்லை ! காலை ஆட்டிப் பார்க்கிறேன், கைக‌ளால் காலைத் தூக்கிப் பார்க்கிறேன், ம், ஹிம்...

"என‌க்குத் தெரியும் முன்னாலே இப்ப‌டி எல்லாம் ந‌ட‌க்கும் என்று. நீங்க‌ பாட்டுக்கு கால‌ ஆட்ட‌றீங்க‌, கைய‌த் தூக்க‌றீங்க‌, ஏதேதோ புரியாத‌ மொழியில‌ உள‌ர்றீங்க‌. என்ன‌ங்க, 'புத்த‌க‌ வெளியீட்டு விழாவா ?' க‌ன‌வில‌ ஐயோ, ராமா !" என்று என் ம‌னைவி, அர்த்த ராத்திரியில் த‌லையில் அடித்துக் கொள்வ‌தை, க‌ண்க‌ள் க‌சக்கி எழுந்து (தேமே என) பார்த்துக் கொண்டிருந்தேன் !!!!

Monday, July 20, 2009

ஏம்மே அயுதுனுகீற ?!


Photo Thanks: bhopal.net

தொழில்முறை நடிகையாக இருந்து, வீராச்சாமியைக் கல்யாணம் கட்டியவுடன், பிள்ளை குட்டி என ஆனபின் குடும்பத்தைக் கவனிப்பதிலேயே காலத்தை ஓட்டினாள் கௌரி. வ‌ழ‌க்க‌ம் போல‌ அன்றும் வீராச்சாமியுட‌ன் விவாத‌ம்.

"ஏய், இன்னான்றே இப்போ ! சொம்மா தென்துக்கும் கத்தி கூப்பாடு போட்டுனுகீற..." என்று விழி பிதுங்கித் தள்ளாடிய வீராச்சாமி, கௌரி விட்ட அறையில், வாசல் தரையில் பொத்தென்று விழுந்தான்.

"கௌலீ ழீ ழல்லா இலுக்கனு...." என்று கை எடுத்துக் கும்பிட்டவனிடம் இருந்து சற்றைக்கெல்லாம் பேச்சு மூச்சைக் காணோம். பதறி போனாள் கௌரி. கிட்ட‌ நெருங்கி நாசித் துவார‌த்தில் விர‌ல் வைத்துப் பார்த்தாள்.

'நல்ல வேளைக்கு மூச்சிருக்கு !' என்று தெம்பானாள். குமட்டிய சாராய நெடியைத் தாங்கிக் கொண்டாள். வீராச்சாமியின் அவிழ்ந்த வேட்டியை, இறுக்கிக் கட்டி, அவனைத் தரதரவென குடிசையினுள் இழுத்து, தூக்க முடியாது தூக்கி கயிற்று கட்டிலில் போட்டாள்.

குடிசை மூலையில், ஏதோ நிக‌ழ்ச்சி ஓடிக் கொண்டு இருந்த‌ இல‌வ‌ச‌ டி.வி.யை அணைத்தாள்.

ச‌ட்டைப் பொத்தான்க‌ளை அவிழ்த்து விட்டு, அங்கே கிட‌ந்த‌ ஓலை விசிறியில் லேசாக‌ விசிறி விட்டாள்.

"இந்தாம்மே கௌரீ...வூட்டுல தான் கீறியா ?" என்று குடிசைக் கதவை அடித்தாள் கோமளவல்லி.

க‌த‌வைத் திற‌ந்த‌ கௌரி, "யக்கா, இது இம்ச நாளுக்கு நாள் தாங்கலக்கா..." என த‌ன் க‌ண‌வ‌னின் நிலை குறித்துப் புல‌ம்பினாள்.

"இப்ப‌டி வாய் பேசாத‌ இருந்துகினா, அது (வீராச்சாமி) வாய‌டைக்கிற‌து க‌ஷ்ட‌ங்க‌ண்ணு"

"யக்கா, நீ வேற‌, ஏய்யா இப்டி குட்சிட்டு வ‌ந்து க‌லாய்க்கிற. நமக்கும் புள்ள குட்டினு ஆகிபோச்சி. ஆனது ஆச்சி, கடலு பக்கம் எப்பதான் போவேனு கேட்டு தான் உட்டேன் ஒரு உடு, அது தாங்கா‌த‌ சுருண்டுகிச்சி" என்றாள் கௌரி.

"அய்யே அடிச்சியாக்கும்... ம்ம்ம்ம்ம், இப்டி செஞ்சீனாக்கா அது உன் காலாண்ட‌ சுத்தி சுத்தி வ‌ரும் பாரு !" என்று ஒரு யோச‌னையும் சொன்னாள் கோம‌ள‌வ‌ல்லி.

"சொம்மாங்காட்டியும் சொல்லாதக்கா !"

"மெய்யாலுமே தாங் க‌ண்ணு, செஞ்சி தான் பாரேன்."

***

இர‌ண்டொரு வார‌ங்க‌ளில் ந‌ல்ல‌ மாற்ற‌ம் இருந்த‌து வீராச்சாமியிட‌ம். நேர‌த்துக்கு க‌ட‌லுக்குப் போவ‌தும், மீன் அள்ளி வ‌ருவ‌தும், குழ‌ந்தைக‌ளை இஸ்கூலுக்கு அழைத்துச் செல்வ‌தும் என‌ ஆளே மாறிப்போனான்.

"இன்னாம்மே... எப்டிகீற‌ ? அய்யே மூஞ்சீல‌ சிரிப்ப‌ப்பாரு ..." என்றார் திண்ணைப் பேச்சில் ஒரு நாள் கோம‌ள‌வ‌ல்லி.

ஆனந்தத்தில் திக்குமுக்காடிய கௌரியால் அழுகையை அட‌க்க‌ முடிய‌வில்லை.

"ஏம்மே இதுக்குப் போயி அயுதுனுகீற. கவ்லைய உடும்மே. சொம்மாவே கடலு உப்பா கீது, அப்பாலிகா தாங்காது !" என்று ந‌ம‌ட்டுச் சிரிப்புச் சிரித்தார் கோம‌ள‌வ‌ல்லி.

***

வீராச்சாமியைத் தன் வசம் வைத்துக் கொள்ள, கௌரியிடம், கோம‌ள‌வ‌ல்லி அப்ப‌டி என்ன‌ யோசனை சொல்லி இருப்பார் ? உங்க‌ள் எண்ண‌ங்க‌ளைப் பின்னூட்டுங்க‌ள்.

இரண்டொரு நாட்களில் பதில் இங்கு :)))

ஒரு சின்ன க்ளூ : இந்த கதையிலும், இதற்கு முந்தைய சில பதிவுகளிலும் பதில் ஒளிந்திருக்கிறது.

***

ரெண்டு நாளாச்சுபா ... உங்க முயற்சிகளுக்கு நன்றி. எனது பதில் கீழே,

கோமளவல்லியின் ரோசனை:
'எதுனா டி.வி. நிகழ்ச்சிக்கு ஜட்ஜா போயி, நம்ம குப்பத்துல ஒரு ப்ரோக்ராம் வச்சிகினு, வீராச்சாமிய அதுல கலந்துக்க வச்சி, போட்டுத் தாக்கிருவேன்'னு சொல்லிப் பாரு கண்ணு :)))))

ஆகஸ்ட் 19 யூத்ஃபுல் விகடனில்


விகடன் முகப்பில்