மின்னல் கவிதைகள்: 2 - மாடு மேய்க்கப் போகையிலே

Photo: wikimedia.org
மாடு மேய்க்கப் போகையில
மந்தகாசக் குரலினிலே
பாட்டெடுத்து நீர்பாட
பாரெலாம் கேக்குதையா !
ஓடோடி வரும் என்னை
உயிராய் எதிர் பார்ப்பீரு
உதட்டோரம் சின்னதாய்
புன்முறுவல் உதிர்ப்பீரு.
கட்டிக்கலாம் என்றீரு
மேற்படிப்ப பார்க்க என்றேன்.
தொட்டுக்கலாம் என்றதற்கோ
தேர்வை முடிக்க சொன்னேன்.
படிப்பும் முடிச்சீரு
பயணம் பறந்தீரு
பட்டிக்காட்டுப் பெண் மனதை
கட்டிப்போட்டுச் சென்றீரு.
காடு மேடெல்லாம்
காவல் காத்து நானிருந்தேன்
கட்டிக்க என்றாவது ...
கறுத்த மச்சான் வருவாருன்னு !!
வருஷம் பல ஆகிப் போச்சு ...
காடும் இல்லை, மேடும் இல்லை
கானகத்தில் மரமும் இல்லை
கானக்குரல் ஒலியும் இல்லை.
எங்கே இருக்கீரு ?
இன்று வரை சேதியில்லை - உமக்கு,
புள்ளை குட்டி இருக்கறதா
புளுகுறாக ஊருக்குள்ளே.
பாதகத்தி நான் இங்கே
பரிதவிச்சு நிக்கறனே !
பாடும் என் பாட்டை
பாரே (தான்) கேட்டிடுமா ?!
