Monday, September 28, 2009

தமிழகத்தில் ஆங்கிலம் vs. தமிழ்

ரொம்ப நாட்கள் கழித்து, விஜய் டி.வி.யின் சுவாரஸ்யமான ஒரு 'நீயா நானா' நிகழ்ச்சி பார்க்க முடிந்தது நேற்று. நிக‌ழ்ச்சி ப‌ற்றி சில‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளும், எனது எண்ண‌ங்க‌ளும் இங்கு ப‌கிர்ந்து கொள்கிறேன்.

"தமிழகத்தில் ஆங்கிலம் vs. தமிழ்"

'ஆங்கிலம் எங்கெல்லாம் பயன்படுகிறது ?' என்று ஆங்கிலம் தரப்பில் பேச வந்தோரை கோபிநாத் கேட்க.

"ஒரு இன்டர்வியூவிற்கோ, பரீட்சையில் நல்ல மார்க் வாங்கவோ, அல்லது ஒரு நாலு பேருக்கு சொல்லிக் கொடுக்கவோ பயன்படுகிறது" என ஸ்மார்டாக ஏதாவது சொல்வார்கள் என எதிர்பார்த்தால். ஜூஸ் கடையிலும், போக்குவரத்துப் போலீஸிடமும், கிராமத்து பஞ்சாயத்து அலுவலகங்களிலும் பயன்படுகிறது என்று சொல்லி, யானை போல தம் தலையில் தாமே மண் அள்ளிப் போட்டுக்கொண்டனர்.

ஒரு ஆன்ட்டி சொன்னார், "இங்க்லீஷ் இஸ் எ வெப்பன். ஒரு போலீஸ்காரர் லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டும் என்னை நிறுத்தினால், வெப்பனைப் பயன்படுத்தி தப்பிப்பேன்" என்றார்.

அதற்கேற்ற ஒரு கேள்வியை அந்த ஆன்ட்டியிடம் கோபிநாத் கேட்க, அவர் முகத்தில் ஆங்கிலம்... மன்னிக்கவும், ஈ ஆடவில்லை :) 'நாங்களும் ரெவுடி தான்' மாதிரி இல்லாமல் ஒரு நிஜ ரவுடி இதே போல போலீஸிடம் மாட்டி, அவர‌து டீஃபால்ட் வெப்ப‌ன் அரிவாளைக் காண்பித்து எஸ் ஆகிறார் என்பது மாதிரி சொல்லி, "அவ‌ரும் நீங்க‌ளும் ஒன்றா ?" என்றார்.

"உங்க‌ளுக்கு என்னென்ன‌ ஆங்கில‌ வார்த்தைக‌ள் க‌டின‌மாக‌ இருந்த‌து ?" என்ற‌ கேள்விக்கு, த‌மிழ் அணியின‌ர் ப‌ல‌ரும் த‌ங்க‌ளுக்கு வ‌ராத‌ வார்த்தைக‌ளைக் கூற‌, எதிர் அணியில் ஆளாளுக்கு ஆங்கில‌ வாத்தியார்க‌ள் ஆகி, வாய்க்கு வ‌ந்த‌ உச்ச‌ரிப்புக‌ளை அள்ளித் தெளிக்க அரங்கமே காமெடி ஸீனாக ஆனது. இங்கு ஒரு கேள்வி நமக்கு எழுகிறது.

நமக்கென்று ஒரு ஆங்கில பாணி இருக்கிறதா ? நார்த் எல்லாம் போனால், ஹிந்தி பேசுகிறார்களா, ஆங்கில‌ம் பேசுகிறார்க‌ளா என்றே புரியாது ப‌ல‌நேர‌ங்க‌ளில்.

ஒரு அம்மணி சொன்னார் "சென்னை அமெரிக்கனைஸ்ட் ஆகிட்டு இருக்கிறது" என்று. ஆனால் உச்சரிப்புகளை சொன்ன வாத்தியார்களிட‌ம் அப்ப‌டி எதுவும் தென்ப‌ட‌வில்லை. இங்கிலாந்து ஆங்கில‌த்தையும், த‌மிழையும் (இவ‌ர்க‌ளின் இன்னொரு கூற்று: எதிர் அணியில், த‌மிழைக் க‌ல‌ந்து ஆங்கில‌த்தை த‌மிழ் போல‌வே பேசுகிறார்க‌ள் என்று), ஹிந்தியையும், இன்ன‌பிற‌ இந்திய‌ மொழிக‌ளையும் கல‌ந்து பேசுவ‌து போல‌வே இருந்த‌து எங்க‌ளுக்கு.

த‌மிழ் அணியில் இருந்து தடால‌டியாக‌ ஒருவ‌ர் புரியாத‌ வார்தை ஒன்றை சொன்னார். இங்கு எழுதலாம் எனப்பார்த்தால், இப்ப‌க்கூட‌ நினைவில் இல்லையே.

வாத்தியார்க‌ள் ஒருவ‌ரை ஒருவ‌ர் பார்த்துக் கொள்ள, 'போலீஸிட‌ம் எஸ்ஸாவேன்' என்று சொன்ன‌ ஆன்ட்டி, "அப்ப‌டி எல்லாம் வார்த்தை இல்லிங்க‌. பைய‌ன் தெரியாம‌ வ‌ந்து உள‌ர்றான்" என்று சொல்லி அர‌ங்க‌த்தையே அதிர‌வைத்தார்.

பைய‌ன் ரூம் போட்டு டிக்ஸ்ன‌ரி புர‌ட்டிருப்பாரு போல‌. உண்மையிலேயே அப்ப‌டி ஒரு வார்த்தை இருக்காம். அத‌ற்கு அர்த்த‌ம் இது தான் என்றெல்லாம் கெஸ்டாக‌ வ‌ந்த‌ ந‌ரசைய்யா சொல்ல‌, ஆங்கில‌ம் த‌டுமாறித் தான் போன‌து.

"ச‌ரி, நம்மூரில் ஆங்கிலத்தில் புக‌ழ்பெற்ற‌ ஐந்து எழுத்தாள‌ர்க‌ளைச் சொல்ல‌ முடியுமா ?" என்ற‌ கேள்விக்கு, இப்ப‌டியா ஃபெவிக்கால் மௌத் ஆவார்க‌ள். ஒருவர் கூட ஒரு எழுத்தாளரைக்கூட சொல்லவில்லை. அப்ப‌ இவ‌ர்க‌ளின் ஆங்கில‌ம் "வீண் ஜ‌ம்ப‌ம்" தானா ?

பிற‌ப்பால் தெலுங்க‌ரான‌ ந‌ர‌சைய்யா, அதிக‌ம் எழுதுவ‌து த‌மிழில். ச‌மீப‌கால‌மாக‌த் தான் சென்னையில் வ‌சிக்கிறாராம். இவரின் இரண்டு வாக்கியங்கள் நினைவில் நிற்பவை.

1. Colonial left over: ரெண்டாயிரம் வருட‌ம் நாம பண்ணாதத முன்னூறு வருடத்தில் பிரிட்டிஷ்காரன் செஞ்சுகொடுத்துட்டுப் போயிட்டான்.
2. Language is a vehicle: பயணிக்க தான் மொழி பயன்படனும். ஒரு இட‌த்திற்கு செல்ல‌ பேருந்தில் ப‌ய‌ணித்து, செல்லும் இட‌ம் வ‌ந்த‌வுட‌ன் இற‌ங்கிக் கொள்ள‌ணும். புடிச்சுத் தொங்காதீங்க‌....னு சொல்லாம‌ச் சொல்லிட்டார் :)

உல‌க‌ம் சுற்றி வ‌ந்த அவர் மேலும் சொன்னது, "ஆங்கில‌ மோக‌ம் அதிக‌ம் இருக்கும் இடங்களில் தமிழகமும் ஒன்று" என்று. அப்ப, த‌மிழை அழிக்கிறோமா நாம் ? தமிழ் அழிந்துவிடுமே என ஆளும் அர‌சு ஆங்கில‌த்திற்கு தான் தார் பூசுமா ?

நாம ஆங்கிலத்தை இந்த அளவிற்கு நேசித்தால், தமிழ் எப்பொழுதோ அழிந்து போயிருக்கணுமே ? வாழும் த‌மிழை வாழ‌ வைப்ப‌வ‌ர் தான் யார் ?

நிக‌ழ்ச்சியின் ம‌ற்றொரு கெஸ்ட், "டால்ட‌ன்" என‌ நினைக்கிறேன். வேற்று மாநில‌த்துக்கார‌ரான‌ இவ‌ர், சென்னை வ‌ந்த‌போது த‌மிழ் க‌ற்றுகொள்ள‌ ரொம்ப‌வே ஆசைப்ப‌ட்டிருக்கிறார். "யூ நோ வேர் த‌ லேங்குவேஜ் லிவ்ஸ் ?" என்று அவ‌ர் விவ‌ரித்த‌ வித‌ம் அருமையாக‌ இருந்த‌து. ஆட்டோ ட்ரைவர்களிடமும், ரிக்ஷாகாரர்களிடமும் தேநீர் கடைகளில், பேப்பர் படிப்பது போல அமர்ந்து, தமிழ் படித்திருக்கிறார். வெவரமான ஆளு தான் :) வீட்டிற்கு வந்து "என்ன மச்சி", "போடீ" என்று தான் கற்றதை தன் மனைவியிடம் பயன்படுத்தியதையும் ரசிக்கும்படி சொன்னார்.

அர‌சிய‌ல் ஆதாய‌த்துக்காக‌ ஹிந்தியை எதிர்த்தோம். த‌மிழக‌த்தைத் த‌விர‌ ம‌ற்ற‌ மாநில‌ங்க‌ளில் ஹிந்தி பேசுகிறார்க‌ள். ஆனாலும் அவ‌ர்க‌ள் இருவ‌ர் ச‌ந்தித்துக் கொண்டால் த‌ங்க‌ள் தாய்மொழியில் தான் பேசுகிறார்க‌ள். ஹிந்தி வ‌ந்தால் த‌மிழ் அழிந்துவிடும் என்று தார் பூசினோம். ஆனால் இரு த‌மிழ‌ர்க‌ள் பேசுவ‌து ?

Friday, September 25, 2009

இதெல்லாம் ஜூஜூபி மேட்ட‌ர் ...


Photo Credit: wikimedia.org

Blade போடுவ‌த‌ற்கு முன்னால் ஒரு பாட்டோட‌ ஆர‌ம்பிப்போம்.

செக்கச் செவந்த பழம், இது
தேனாட்டம் இனிக்கும் பழம்
எல்லோரும் வாங்கும் பழம், இது
ஏழைக்குனு பொறந்த பழம்

ஒரு புத்துண‌ர்ச்சி வ‌ந்த‌ மாதிரி இருக்குமே ? மேல‌ ப‌டிங்க‌ ப்ளீஸ்.

அநேக வியாழக்கிழமைகளில் சீனக் கடைக்கு செல்வது வழக்கம். அப்படி நேற்று போன‌போது, க‌ண்ணில் ப‌ட்ட‌து அந்த‌ லேபில். 'Jujube lb $1.69'. எத‌ எத‌யோ ச‌ந்தைப்ப‌டுத்திய‌தில், எதற்கோ ஜூஜூபினு (இன்னோவேடிவா) பேரு வைத்து விற்கிறார்கள் போல என்று எண்ணினேன். வேண்டிய பொருட்களை எடுத்துக்கொண்டு பில் போடும் போது பார்த்தால், காஷிய‌ர் அருகில் மீண்டும் அந்த‌ லேபில்.

உடல் சோர்வா ? ஜூஜூபி
தொண்டையில் கிச் கிச் ? ஜூஜூபி
ம‌ன‌துக்குப் பிடித்த‌ ம‌யிலாலைக் க‌வ‌ர‌ணுமா ? ஜூஜூபி

என்றெல்லாம் நம்ம ஊரு விளம்பர பாணியில் சொன்னால், 'இதெல்லாம் அவ்ளோ ஜூஜூபியா ? எவ‌ன் சொன்ன‌து ?' என்று நீங்க‌ள் கேட்க‌லாம், கேப்பீங்க‌.

ப‌தில் திரும்ப‌வும் 'ஜூஜூபி' தான் :)

ந‌ம் திரைத்துறையின‌ரின் (குறிப்பாக‌ சூப்ப‌ர் ஸ்டார் ர‌ஜினி) புண்ணிய‌த்தில் இந்த‌ வார்த்தை ந‌ம‌க்கு பிர‌ப‌லம்.

எப்போதும் எளிதென்று,
த‌ப்பான‌ அர்த்த‌த்துட‌ன்,
இப்போதும் உலா வ‌ரும்,
ஜூஜூபி ... உண்மையில் ஒரு ஹீரோ.

Ziziphus jujube என்ற தாவ‌ர‌விய‌ல் பெய‌ரில் வ‌ழ‌ங்கி வ‌ரும் 'ஜூஜூபி', மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு வ‌கைப் ப‌ழ‌ம்.

மேலை நாடுக‌ளில் 'Apple a day keeps a Doctor away' ப‌ழ‌மொழிக்கு இணையாக‌ ந‌ம்ம 'ஜூஜூபி' ஐயாவுக்கும் மதிப்பு இருக்கிற‌து. மேற் சொன்ன‌ விள‌ம்ப‌ர‌ வ‌ரிகள் ஜூஜூபி புகழின் சிறிய‌ உதார‌ண‌ங்க‌ள்.

ப‌ள‌ப‌ள‌க்கும் ப‌ச்சை இலைக‌ள், அட‌ர்ந்த‌ முட்புதர். அதில், உருண்டு திர‌ண்டு ஆலிவ் ப‌ழ‌ அள‌வில் வ‌டிவ‌ம். க‌ருஞ்சிவப்பு அல்லது க‌ரும்ப‌ழுப்பு நிற‌ம். சிறிது உலர்ந்து சுருங்கிய‌ தோல். மொத்த‌த்தில் ஆசியாவின் பேரீச்ச‌ம்ப‌ழ‌ம் என்றெல்லாம் அறிய‌முடிகிற‌து இணைய‌த்தின் வ‌ழி.

ஆசியா எனும் போது, பட்டியலில் சீனா இல்லை என்றால் தான் ஆச்ச‌ரிய‌ப்ப‌ட‌ணும். ஆனால், இந்தியாவின் பெயரும் பார்த்த போது சிறிது ஆச்சர்யம். இந்தியாவில் கி.மு.9000 லிருந்தே ப‌யிரிட‌ப்ப‌ட்டிருக்கிற‌து ஜூஜூபி.

சீனர்கள் ஜூஜூபி டீ, ஜூஜூபி வைன் என்று தயாரித்தால், நம் நாட்டில் மேற்கு வங்கம் மற்றும் வங்காளதேசத்தில் ஜூஜூபி ஊறுகாய் போட்டிருக்கிறார்கள். கிழ‌க்கே ஐரோப்பாவில் சாக்லெட், கேன்டி போடுகிறார்க‌ள்.

ஆனால், ந‌ம்ம‌ ஊருல‌ பாட்டே போட்டு ப‌ட்டைய‌க் கெள‌ப்பீட்டாங்க‌ள்ல‌ ...

செக்கச் செவந்த பழம், இது
தேனாட்டம் இனிக்கும் பழம்
எல்லோரும் வாங்கும் பழம், இது
ஏழைக்குனு பொறந்த பழம்

ஆமாங்க‌, ஜூஜூபி ந‌ம்ம‌ எல‌ந்தைப்ப‌ழ‌மே !

ரஜினி அவ‌ர்க‌ளுக்கு ஒரு கேள்வி: இப்பேற்ப‌ட்ட‌ ஜூஜூபியை எப்ப‌டிய்யா த‌வ‌றான‌ அர்த்த‌த்தில் த‌ர‌ணியில் விட்டீர்க‌ள் ?

Blade போதும்னு நினைக்கிறேன். இணையத்தில் ஏராளம் செய்திகள் ஜூஜூபி பற்றி குவிந்து கிட‌க்கின்றன. மேல் விப‌ர‌ங்க‌ளுக்கு கூகிளார், அல்ல‌து விக்கி அண்ணாச்சியை அணுக‌வும்.

Thursday, September 24, 2009

நடுச்சாம‌ம் - 2


Photo Credit: allposters.com


To read Part 1 click here.

நெல்குதிருக்குள் விழுந்து, கை கால்கள் குத்துவதெல்லாம் பொருட்படுத்தாது, நாசியில் ஏறிய தூசியின் ஆதிக்கத்தில் விழும் பல தும்மல்கள் போல, அந்த இருள் அறையில் நுழைந்ததிலிருந்து மூச்சடைத்து புழுக்கத்தில் தும்மினான் தமிழவன்.

தரையின் பிசுபிசுப்பு, சுவ‌ற்றிலும், ஜ‌ன்ன‌ல் க‌ம்பிக‌ளிலும், க‌த‌வுக‌ளிலும் ப‌ட‌ர்ந்து கான்க்ரீட் கூரை வ‌ரை அப்பி கறுத்திருந்த‌து. நான்கு மூலைக‌ளிலும் ஆளுய‌ர‌த்துக்கு இருந்த‌ ஐந்து முக‌ விள‌க்குக‌ளில், த‌வ‌ழும் குழ‌ந்தையாய், நெய்யூரிய‌ திரியில் நீந்தி விளையாடியது நெருப்புச் சுட‌ர்.

அறையின் மையத்தில் இணையும் விளக்குகளின் ஒளியில் அமைந்திருந்தது அந்தச் சிறிய மேடை. இடுப்புயர‌ அளவிற்கு இருந்த அம்மேடையின் கிழக்கு முகத்தில் இருந்த‌து நான்கு படிகள். மேடையின் மற்ற மூன்று மதில்க‌ளிலும் எண்ணை அப்பிய‌ ப்ரேமிற்குள், மிர‌ள‌ வைக்கும் ப‌ல்வேறு அம்ம‌ன்க‌ளின் ஆக்ரோஷ‌ காட்சிக‌ள். தெற்கு பார்த்த அறைவாயில், அதன் அருகில் இருந்த சிறிய ஜன்னல் சாத்தியே இருந்த‌து. வெகுநாட்க‌ள் திற‌க்காம‌ல் இருந்த‌த‌ற்கான‌ அடையாள‌மாக‌ சில‌ந்திக‌ளின் வ‌லைப்பின்ன‌ல் சாட்சிய‌ம் கூறிய‌து.

மேடையின் ஒருபுறத்தை ஆக்கிர‌மித்து மேலெழும்பி, நாலைந்து துவாரங்கள் கொண்டு ஆங்காங்கே சிறு குன்றுக‌ளாய் நீண்டிருந்த‌து அந்த‌ப் புற்று. அதைச் சுற்றிலும் ம‌ஞ்ச‌ளும் குங்கும‌மும் தெளித்து, புஷ்பங்கள் தூவி, ருத்ராட்ச‌மாலையும், சில புத்தகங்களும், ஒரு மரப்பலகையும், ஒருசில சிறிய மரப் பெட்டிகளும், சருகாய் சுருண்டு கிடந்த பாம்புச்சட்டைகளும் என பார்ப்பவரை ஒரு கணம் மிரள‌ வைக்கும்ப‌டி இருந்த‌து. அறைக்கதவை ந‌ன்கு திற‌ந்துவிட்டாலும் வெளிச்ச‌ம் ப‌டாவ‌ண்ண‌ம் இருந்த‌து மேடையும் புற்றும். மேடைக்குக் கீழே யாக‌ம் வ‌ள‌ர்க்க சதுரமாக‌ மூன்ற‌டுக்கு உயரத்தில் செங்கல் மதில்.

'குளிக்க‌ப் போன‌ சாமியார் ச‌ற்று நேர‌த்தில் வ‌ந்துவிடுவார், உள்ளே அம‌ர்ந்திருங்கள்' என்றிருந்தாள் வாசலில் கோல‌மிட்ட‌ ப‌ணிப்பெண்.

ஒருசில‌ நிமிட‌ங்க‌ள் கூட‌ உள்ளே இருக்க‌ முடிய‌வில்லை. ப‌ட‌ப‌ட‌க்கும் காகித‌ங்க‌ள் கூட‌ ப‌ய‌த்தை ஏற்ப‌டுத்தின‌. உருளும் மாலையும் ஏனோ பாம்பையே நினைவுப‌டுத்திய‌து. 'உண்மையிலேயே இங்கு பாம்பு இருக்கிற‌தா ? எத்த‌னை இருக்கும் ? திடீர் என்று வெளியில் வ‌ந்துவிட்டால் என்ன‌ செய்வ‌து ?" என‌ அடுக்குக் கேள்விக‌ளில் திகைத்து எவ‌ரும் அறையில் இன்றி த‌னிய‌னாய் காத்திருந்தான் த‌மிழ‌வ‌ன்.

விரிச‌டை முடியும், நீள்சாம்பல் தாடியும், காவிசூழ் உட‌லும், கையில் கைத்தடியுமாக வ‌ருவார் குடுகுடு சாமியார் என்று எதிர்பார்த்த‌ த‌மிழ‌வ‌னுக்கு, கெண்டை வேட்டியும், காவி ஜிப்பாவும், க‌ழுத்தில் சிறு ருத்ராட்ச‌ மாலையும், கரும்பச்சையில் தலைப்பாகையும், நெற்றியில் திருநீறும், பழுத்த வெள்ள‌ரிப் ப‌ட்டையாய் மஞ்சள் கீற்றும், செர்ரிப் ப‌ழ‌மாய் அதில் குங்கும‌ப் பொட்டும் என வ‌ந்த நடுத்தர வயது சாமியாரைக் க‌ண்டு சிறிது அதிச‌யித்தான்.

அறைவாயிலில் குனிந்து, சரிந்த ருத்ராட்ச‌ மாலைக‌ளை மார்போடு அணைத்து உள்ளே நுழைந்தார் புற்று சாமியார். திருநீற்று மனம் காற்றில் மிதந்து அந்த அறையை நிறப்பியது. நேரே மேடையில் ஏறி மரப்பலகையில் அம‌ர்ந்து, சிறிது நேர‌ம் க‌ண்க‌ளை மூடிக் கொண்டார்.

ச‌ள‌ச‌ள‌த்து ஓடும் அருவியாய் வெளியே பேச்சுக் குர‌ல்க‌ள். 'ஆறு அற‌ரைக்கு முன்னாடியே போய்ட்டேன்னா சாமியார‌ப் பாக்க‌ற‌து சுல‌ப‌ம்' என்ற பாலாவின் வார்த்தைக‌ள் அர்த்த‌ம் பொதிந்து காண‌ப்ப‌ட்ட‌து. ஒரு நேர‌த்தில் ஒருவ‌ர் தான். அவ‌ருக்கு எத்த‌னை நேர‌ம் ஆனாலும், அதுவ‌ரை ம‌ற்ற‌வ‌ர் வெளியில் காத்திருக்க‌ வேண்டும். முத‌ல் ஆளாய் வ‌ந்த‌தில் சிறிது கர்வமும் கொண்டான் த‌மிழ‌வ‌ன்.

"சொல்லுங்க‌, என்ன‌ விஷ‌ய‌மா வ‌ந்திருக்கீங்க‌ ?!" என்றார் க‌ண்க‌ளைத் திற‌ந்த‌ சாமியார் த‌மிழ‌வ‌னை நோக்கி.

வடநாட்டு சாமியான அவர் உடைந்த‌ த‌மிழில் பேசுவார் என்று எதிர்பார்த்த‌வ‌னுக்கு, அவ‌ர‌து இய‌ல்பு த‌மிழ் தொடக்கம் புதிதாய் இருந்த‌து. வாளின் கூர்மையில் அறுப‌டும் க‌திராய் உண‌ர்ந்தான் அவ‌ர‌து பார்வையில். தூசி விழாத‌ பாலில் மித‌க்கும் இரு ஒற்றை திராட்சைகளாய் திக‌ழ்ந்த‌து அவ‌ர‌து விழிக‌ள். துவைத்து அணிந்த‌ ஆடைக‌ள். குளித்த‌ தூய‌ மேனி. ஆனால் அறைமட்டும் தூசிபடிந்து தூய்மையின்றி !

"நான் சென்னையில் இருந்து வ‌ருகிறேன். என் பேரு த‌மிழார்வ‌ன். நண்பர்களும் மற்றவர்களும் சொல்லியே கால‌ப்போக்கில் த‌மிழ‌வ‌ன் என்றாகிவிட்ட‌து. சொந்த ஊர் திண்டுக்கல் பக்கத்தில்" என்று த‌மிழ‌வ‌ன் தொட‌ர‌, போக்குவ‌ர‌த்து போலீஸ் போல‌ கைகாட்டி நிறுத்துமாறு கூறிய‌ சாமியார், "ரொம்ப நேரம் எடுத்துக் கொள்ளாதீர்கள், விஷயத்தைச் சுருக்கமாகச் சொல்லுங்க‌" என்றார்.

தமிழார்வ‌ன் சொல்ல‌ச் சொல்ல‌ ...

'அதகள பயங்கரீ, ஆக்ரோஷ பைரவீ, ஆனந்த ரூபஸ்ரீ .... உத்தரவு வாங்கிய‌ பின்னுமா நீ இங்கு இருக்கிறாய் ?' என்று நினைத்து உள்ளுக்குள் அதிர்ந்தார் சாமியார்.

"ஓம் ச‌ர்வேஷீ
ஓம் த‌ர்மேஷீ
ஓம் நாகேஷீ
க்லீம் ஜ்லீம் ந்லீம்
ஓஓஓஓம்ம்ம்ம்ம்ம்ம்
நாகேஷ்வ‌ரீஈஈஈ"

என்று உச்ச‌ரித்த‌ சாமியாரின் மேனி விய‌ர்வையில் வ‌ழிந்த‌து. பேரிறைச்சலோடு அறைக்குள் புகுந்தது சூராவளிக் காற்று. நெருப்பு சுட‌ர்க‌ள் ப‌ட‌ப‌ட‌த்த‌ன‌. புத்த‌க‌த் தாள்க‌ள் ச‌ட‌ச‌ட‌த்தன‌. கையில் ருத்ராட்ச‌ மாலையை விடாது உருட்டினார் சாமியார்.

ச‌ற்றைக்கெல்லாம் ம‌யான‌ அமைதி நில‌விய‌து அறையில்.

ந‌ட‌ப்ப‌து எதுவுமே புரியாம‌ல் அதிர்ச்சியில் உறைந்திருந்தான் த‌மிழார்வ‌ன்.


தொடரும் .....


To read Part 1 click here.

Tuesday, September 22, 2009

(ச‌ரியான‌ லூசுப்) பசங்க ...


Photo credit: comcast.net

"என்ன தான் ஒரே ஊர்ல இருந்து வேலை செய்தாலும் நாமெல்லாம் பார்த்து எவ்ளோ நாளாச்சு ? இந்த வீக்கென்ட் நாம எல்லோரும் மீட் பண்ணலாம்" என்று தொலைபேசி, மின்ன‌ஞ்ச‌ல், டிவிட்ட‌ர் என்று க‌ல‌க்கிக் கொண்டிருந்த‌ன‌ர் க‌ணினியால் இணைந்த‌ ந‌ண்ப‌ர்கள்.

சனிக்கிழமை, மணி மாலை ஐந்தரை. சிறுகுழந்தையின் அழுகையாய் விடாது சிணுங்க‌ ஆர‌ம்பித்த‌ வானோடு, புக‌ழேந்தியின் செல்லும் சேர்ந்து கொண்ட‌து.

"இல்ல‌ மாப்ள, அவ்ளோ தூரம் வ‌ர‌முடியாது சொன்னா கேளுங்க‌டா. வெளியில் ந‌ல்ல‌ ம‌ழை வேற‌. இன்னோரு தரம் பார்த்துக்கலாம். ஆள‌விடுங்க‌ சாமிகளா" என்று க‌ம்ப‌ளிக்குள் சுருண்டு ப‌டுத்துக்கொண்டான். 'இந்த‌ ம‌ழையில‌ எவ‌னாவ‌து வெளிய‌ல‌ சுத்துவானா, ச‌ரியான‌ லூசுப் ப‌ச‌ங்க‌' என்று நினைத்து கோழித் தூக்க‌த்தைத் தொட‌ர்ந்தான்.

அபார்ட்மென்டின் ஒரு பக்கம் முழுக்க வீடுகள், ம‌றுப‌க்க‌ம் பொட்ட‌ல் காடு. பொட்டல் காட்டை ஒட்டி இருந்த அறையில் படுத்திருந்தான் புகழ். சோவென்று இறையும் காற்று, எந்நேரமும் சுவ‌ற்றை உடைத்துக் கொண்டு உள்ளே வ‌ருவ‌து போல‌ இருந்த‌து.

மீண்டும் செல்லோசை. 'லூசுப் பசங்க தொல்லை தாங்கலையே. விடமாட்டானுங்களே' என்று நினைத்தான். ஆனால், சிணுங்கிய‌து ர‌ம்யா.

"ஹாய் ரம்யா. சொல்லு. இன்னிக்கா உன் பர்த்டே. சொல்லவே இல்ல. ஆமா, ஆமா. எனக்கே தெரியும் ப்ராஜ‌க்ட்ல நீ பிஸி. நோ ப்ராப்ளம். செவ‌ன் த‌ர்ட்டி தான கண்டிப்பா வர்றேன். போன வருஷம் உன் பர்த்டேல உன் அப்பார்ட்மென்ட்ல மீட் பண்ணது. ஒரு வருஷம் அதுக்குள்ள ஓடிப் போச்சு" என்று ரம்யாவிடம் சொல்லி பாராசூட்டாய் ப‌ற‌க்க‌ ஆர‌ம்பித்தான்.

ர‌ம்யா எப்ப‌வும் யாருட‌னும் அதிக‌ம் பேச‌ மாட்டாள். அலுவலக மீட்டிங்குகளில் தான் அதிகம் பார்த்திருக்கிறான். வெளியில் எங்கும் எவருடனும் பார்த்ததில்லை. நெருங்கிய நண்பர்கள் பர்த்டே பார்ட்டிகளில் பார்த்திருக்கிறான். நார்மல் ஹோம்லி டைப். அத‌னாலேயே புக‌ழிற்கு ர‌ம்யாவின் மேல் எப்போதும் ஒரு இது இருக்கும். ஆனால் அவ‌ளுக்கு(ம்) இருக்கா இல்லையா என்றெல்லாம் அவன் க‌வ‌லைப்ப‌ட‌வில்லை.

பொட்டுப் பொட்டாய் விழுந்த தூறல், காற்றின் வேகத்தில் பல்லாயிரம் பாம்புக் குட்டிகளாய் காரின் முன் கண்ணாடியில் ஊர்ந்தது. வைப்பரைத் தட்டி குட்டிகளை அழித்தான்.

'என்ன வேகம், சுதாரிச்சு கண்ணாடி ஏத்தறதுக்குள்ளே இப்படி நனைச்சிருச்சே' என்று கைக்குட்டை எடுத்து, இருக்கைக் கதவையும், தன் இடதுபுற உடலையும் துடைத்துக் கொண்டான் நன்றாகவே நனைந்து போன புகழேந்தி.

எட்டு எட்டரைக்கு இருட்டும் வானம், இன்று ஏழு மணிக்கெல்லாம் இருண்டிருந்தது. முன்சென்ற கார்களின் பின்விளக்கு, மழைநீரில் செங்குருதி சிந்தி நிற்க‌, தானும் ப்ரேக் பிடித்து காத்திருந்தான் சாலைவிளக்கின் வண்ண மாற்றதிற்கு.

கருவானில் பழுத்த வெள்ளிக்கம்பியாய் வெண்மின்னல் கோடு கிழிக்க கண்கள் கூசியது. மழையின் அடர்த்தி அதிகரித்ததில் 'சோ'வென்று பேரிறைச்சல். சிறிது நேரத்தில் எதிர்புற அணிவகுப்பு நகர ஆரம்பிக்க, இவன் பக்கம் வாகனங்கள் நிலைகுத்திய தேராய் நின்றுபோனது.

தூரத்தே, சாலை விள‌க்கின் அருகில் சிறுவிபத்து ஏற்பட்டு, இரு வாகன‌ங்கள் மோதி நிற்பது போல், நீரூற்றும் கண்ணாடிவழி மங்கலாகத் தெரிந்தது.

தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு சென்ற மாப்பிள்ளை அங்கிருந்து நகர‌ மறுப்பது போல, இப்போதைக்கு வாகன‌ங்கள் ந‌க‌ருவதாய் தெரிய‌வில்லை.

'இன்னிக்கு என்று பார்த்தா இப்ப‌டி ந‌ட‌க்க‌ணும். அழைக்காத‌வ‌ள் அழைத்திருக்கிறாள். இன்னும் எவ்ளோ நேர‌ம் இங்கேயே நிற்க‌ப்போகிறேனோ ? ச‌ரியா அவ‌ சொன்ன‌ நேர‌த்துக்குப் போக‌முடியுமா ? கொஞ்சம் லேட்டானாக்கூடப் பரவாயில்லை' என்று எண்ணச் சுழற்சிகள், நீர்குமிழிகள் போல்.

யாரோ ஒரு புண்ணிய‌வான் 'ஒன்ப‌து ஒன்று ஒன்று' அழைத்திருக்க‌ வேண்டும். ம‌ழை வெள்ள‌த்தில் ஒளி வெள்ள‌ம் சிந்தி, சீறி வ‌ந்த‌து சீருடைக் காவ‌ல‌ர் வாகன‌ங்க‌ள். சில‌ நிமிட‌ங்க‌ளில் போக்குவ‌ர‌த்து ச‌ரிசெய்ய‌ப்ப‌ட‌ சிட்டாய் ப‌ற‌ந்தான் ர‌ம்யாவின் அப்பார்ட்மென்ட் நோக்கி.

ஏழ‌ரை மணி போல் ர‌ம்யாவின் வீட்டுக் க‌த‌வைத் த‌ட்டினான்.

ஹாப்பி ப‌ர்த்டே அட்டைக‌ள், பல வண்ணப் ப‌லூன்க‌ள், சிலந்தி வலைக் க‌ல‌ர் காகித‌ங்க‌ள், அல‌ங்கார‌ கேக், என்றெல்லாம் எதிர்பார்த்த‌வ‌னுக்கு எதுவுமே இன்றி வெறுமையாய் இருந்த‌ ர‌ம்யாவின் அபார்ட்மென்ட் க‌ண்டு திகைத்தான்.

செல் எடுத்து அவள் எண்ணை அழைத்தான். எதிர்முனையில் ரம்யா.

"ஹாப்பி பர்த்டே ரம்யா. உன் வீட்டு முன்னால தான் நிற்கறேன். வீட்டில் தான இருக்கே ?"

"தேங்ஸ். ஆமா வீட்டில் தான் இருக்கேன். உன‌க்காக‌த் தான் காத்திருக்கிறேன். நீ எங்கே இருக்கே ?"

புக‌ழ் சொல்ல‌ச் சொல்ல‌, "ஹேய், யாரும் சொல்லலியா ? உனக்குத் தெரியும்னு நெனைச்சேன். நான் அப்பார்ட்மென்ட மாறிட்டேன்."

"என்ன சொல்றே ரம்யா ?" என்றான் புகழ் இடிந்து போன குரலில்.

"ஐம் ரிய‌லி சாரி புக‌ழ். ப‌ழைய‌ இட‌த்திலிருந்து ஒரு ப‌தினைந்து நிம‌ட‌ ட்ரைவ் தான்"

"சரி, புது அட்ரஸ் சொல்லு ..."

ம‌ழையிலும் வாடி வ‌த‌ங்கிய‌ செடியாய் ரம்யாவின் அப்பார்ட்மென்ட் விட்டுக் கிளம்பப் போன‌ புக‌ழேந்தி, எதிரே வ‌ரிசையில் த‌ன் ந‌ண்பர்களோடு ரம்யாவும் நிற்பது க‌ண்டு ட‌ன் ட‌ன்னாய் வ‌ழிந்தான் அசடை.

'யாருடா லூசு' என்ப‌து போல‌ இருந்த‌து ஒவ்வொருவ‌ரின் பார்வையும்.

ரம்யா கதவைத் திறக்க, உள்ளே புகழைத் தள்ளினர் நண்பர்கள்.

'மவனே, இந்த மீட்டை எந்த ஜென்மத்துக்கும் மறக்கக் கூடாது நீ' என்று நண்பர்கள் புகழை அடித்த அடியில் சற்றைக்கெல்லாம் வானம் வெளுத்திருந்தது.

Friday, September 18, 2009

சமையல் சமையல் கிச்சன் கில்லாடிகள் vs. அயர்ன் செஃப் அமெரிக்கா



vs.



The Battle begins ...

நீங்க சாப்பாட்டுப் பிரியரா (ராமர் இல்லை) ? 'ஃபுட் நெட்வொர்க்' ரசிகரா ? அப்ப, உங்களுக்கு நிச்சயம் 'அயர்ன் செஃப் அமெரிக்கா' நிகழ்ச்சி பற்றி தெரிந்திருக்கும். அல்லது நண்பர்களோ, உறவினர்களோ இந்நிகழ்ச்சி பற்றி உங்களுக்குச் சொல்லியிருக்கலாம்.

நிகழ்ச்சியின் அந்த ஒரு மணி நேரமும், நம் காலில் சக்கரம் கட்டாத குறை தான். படம் பிடிக்கும் கேமிராக்களுக்கே பசி எடுக்கும் போல ! அப்பப்ப 'க்ளோஸ் அப்'பில் சென்றுவிடும். சமையல் செய்பவர், அவர் தம் கூட்டாளிகள், நடுவர்கள், தள மேலாளர்கள் இப்படி எல்லோரும் சமையல் சார்ந்து இருக்க, நிகழ்ச்சியின் சேர்மன் மட்டும் சற்று வித்தியாசமான களத்தில் இருந்து வந்திருக்கிறார்.

மார்க் டகாஸ்கோஸ் (MARK DACASCOS), பேருக்கேத்த மாதிரி ஏதோ டகால்டி செய்கிற மாதிரி தான் இருக்கு அவரது என்ட்ரி. ஆனா, ஆளு பலே ஆளாம். அதாங்க பலசாலி ! அடிப்படையில் குங்ஃபூ (குஷ்பூனு நீங்க படிச்சா நான் பொறுப்பு கிடையாது :)) மாஸ்டராம்.


Photo Credit: foodnetwork.com

அப்படியே ஒரு பத்தாயிரம் மைல் பயணித்து நம்ம ஊருக்குப் போனால், சட்டு புட்டுனு செட்டுப் போட்டு ஒரு பேரும் வச்சிட்டாங்க 'சமையல் சமையல் கிச்சன் கில்லாடிகள்'னு.

நம்ம ஊருக்கேத்த மாதிரி கொஞ்சம் (நிறையவேயா ? சரி !) மாற்றி, இந்நிகழ்ச்சியை தமிழ்படுத்தித் தருகிறார்கள் விஜய் டி.வி.யில்.

அங்கே மார்க்கஸ் 'சம்மர் சால்ட்' அடித்து நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க, இங்கே 'கேட் வாக்'கில் பிரியதர்ஷினி அக்காவும், தேவதர்ஷினி அக்காவும் ஸ்டைலா நடந்து வந்து கடைய நடத்துறாங்க.

புதிய சமையல்காரர் ஏற்கனவே இருக்கும் 'அயர்ன் செஃப்' நால்வரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க, அவர்கள் இருவரின் அறிமுகத்திற்குப்பின், 'உங்களின் ஒரு மணி நேரம் ஆரம்பிக்கிறது, உங்களுக்கான சீக்ரெட் இன்கிரீடியன்ட் இஸ்'னு குங்ஃபூ ஸ்டைலில் பறந்து வானளவு மூடி திறக்கிறார்.

மட்டை அடித்து முட்டி வலிக்கிற மாதிரி தரையில் அமர்ந்திருக்கும் பிரியதர்ஷினி அக்காவைத் தலையில் தட்டி, 'ஏய் எழுந்திருடி, கமர்ஷியல் முடிஞ்சு காமெரா ஸ்டார்ட் ஆகிடுச்சு பாரு' என்று அதட்டுகிறார் தேவதர்ஷினி. அரக்கபரக்க இருவரும் டீம் ஏ, டீம் பி பற்றி உரையாற்றி விட்டு, 'உங்கள் அரை மணி நேரம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, அஞ்சு நிமிஷம் டைம் தர்றோம், அதுக்கும் முன் உங்க சீக்ரெட் இன்க்ரீடியன்ட் இஸ்'னு இட்லி சட்டி மூடி போல் இருக்கும் ஒன்றைத் திறக்கிறார்கள்.

ஒரு ஊரே சாப்பிடும் அளவிற்கு கோழியோ, பன்றியோ, ச்சீஸோ, மீனோ, ஏதோ ஒன்று குவிந்து கிடக்கிறது. கையில் அகப்பட்டதை அள்ளிக் கொண்டு ஓடத் தொடங்கும் சமையல்காரர்கள்.

'டீம் ஏ'வும் 'பி'யும் திருதிரு என்று விழிக்கிறார்கள் திறந்த மூடி கண்டு. உள்ளே என்ன இருக்கு ? எங்கே இருக்கு ? என்பது போல ஏதோ இருக்க. 'ஹையா சிக்கன்' என்று பள்ளிச்சிறுமிகள் போல பூரிக்கும் அக்காக்கள்.

முட்டை ஒரு பக்கம் உடைத்து, ச்சீஸ் ஒரு பக்கம் துருவி, அவனில் ஒரு பக்கம், ப்லெண்டரில் கொஞ்ச நேரம், கூட்டாளிகளுக்கு அவ்வப்போது கட்டளைகள் என்று செய்தித்தாள் அலுவலகம் போன்றதொரு பரபரப்பில் சமையல் வல்லுநர்கள். தள மேலாளர் கேட்கும் சமையல் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு, சமையலில் பரபரப்பாகவும், மைக்கில் நிதானமாகவும், சுவையாகவும் பேசி சுழலுன்றபடி இருக்கிறார்கள்.

முதல் ஐந்து நிமிடத்தில் ஆர அமர, லிஸ்ட் போட்டு தேவையான சாமான்கள் அள்ளி வந்து, அலுக்காமல் சமைக்கும் செலிபிரிட்டீக்கள் (??) நடிகையாக இருந்தால், முடியை பின் தள்ளி விடுவதும், உடையை சரி செய்வதிலும், அக்காக்கள் கேட்கும் சினிமா கேள்விகளுக்கு அள்ளித் தெளிக்கும் அட்டகாசங்களும். அவர்கள் அம்மாவோ, அக்காவோ, நண்பியோ தேமே என சமைத்துக் கொண்டிருப்பார். செலிபிரிட்டாவாக ('டி' க்கு ஆப்போஸிட் 'டா' தானே ?) இருந்தால், எங்கவீட்டில் சமையல்கட்டு எந்த பக்கம் இருக்குனு கூட தெரியாது என்று சொல்லி வெகு அழகாகக் காய் அறிந்து கொடுப்பார் துணைவிக்கு.

கமர்ஷியல்ஸ் அதிகம் தான். இருப்பினும் சமையலில் யாரும் குறுக்கே புகுந்து எதையும் குதறுவது இல்லை.

நடுவால 'செஃப் ஸ்பெஷல்', 'நொடியில் ரெடி'னு புதுமை(யா ?) பண்ணியிருக்காங்க. 'சிரிப்பு போலீஸ்' மாதிரி ஒரு 'சிரிப்பு செஃப்'. ஏதோ ட்ராமாவில் இருந்து இழுத்து வந்தவர் போலவே இருக்கும் அவர் நடையும் உடையும். அள்ளிப்போட்டு சமைப்பதும், அதற்கோர் பேர் சொல்வதும், ஏதோ சின்னபுள்ளத்தனமா தான் இருக்கும்.

நாலைந்து டிஷ்கள் செய்து, வேர்த்து விறுவிறுத்து, ப்ளேட்டிங்க் செய்து, ஒரு மணி நேரத்திற்குப்பின், பவ்வியமாக பறிமாறும் போது தான் அப்பாடா என்று நிற்கிறார்கள் சமையல்காரர்கள்.

ஓடி ஆடி சமைத்த களைப்பில் தனி அறையில் ஜாலியா உட்கார்ந்திருக்காங்க இங்க. அவர்களை விடாது, 'சொல்லுங்க நீங்க டென்ஷனா தான இருக்கீங்க ?, ப்ளீஸ் சொல்லுங்க, டென்ஷனா இருக்கேன்னாவது சொல்லுங்க ப்ளீஸ்' என்று கெஞ்சும் ப்ரியதர்ஷினி.

சமையல்காரர் ஒவ்வொரு உணவாக சிறு குறிப்பு தந்து பாறிமாற, தாங்கள் ரசித்து ருசிக்கும் அனுபவங்களை, உணவு போலவே புட்டுப் புட்டு வைக்கின்றனர் நடுவர்கள். தலையாட்டிக் கேட்டுக் கொள்கின்றனர் சமையல்காரர்கள்.

தேவதர்ஷினி அக்கா சொல்ல சொல்ல, ஒரு சின்ன ஸ்பூன் எடுத்து, அதிலும் நுனியில், 'டீம் ஏ'யின் உணவு கொஞ்சம் எடுத்து, லைட்டா சரக்கு அடிக்கும்போது ஊறுகாய் தொட்டுக்கற மாதிரி சாப்பிடுகிறார் நம்ம ஊர் (செஃப்) நடுவர். நம்ம ஊரு டச் கொடுக்கலேன்னா எப்படி ? அந்த ஸ்பூனை அங்கிருக்கும் ஒரு கண்ணாடி டம்ளர் நீரில், அப்படி ஒரு சுழற்று சுழற்றி விட்டு, 'டீம் பி' உணவை மேற்சொன்னது போலவே சுவைக்கிறார்.

'அன்ட் த வின்னர் இஸ்'னு மார்க்கஸ் கதற, நெஞ்சை உறையவைக்கும் இசை சில நொடிகள்.

அதே 'அன்ட் த வின்னர் இஸ்'னு தேவதர்ஷினி அக்கா சொல்ல, அதே நெஞ்சை உறையவைக்கும் இசை சில நொடிகள்.

நொடியில் ரெடி மாதிரி இதுல ஏதாவது புதுமை பண்ணியிருக்கலாமே ?!

"நான் நல்லாத் தான் சமைத்தேன். இதுல காரம் இவ்வளவு தான் போடணும். அந்த டிஷ் நார்த்ல இப்படித் தான் பண்ணுவாங்க. குழந்தைகள் உணவுங்கறதால ஸ்பைஸஸ் கம்மியாத் தான் போடணும். தெரியாமச் சொல்றாரு."

இதெல்லாம் நம் நடுவர் குறித்து ரன்னர் அப் டீமின் கருத்துக்கள். சமீபத்தில் ஒரு மாமி, 'எந்த அடிப்படையில் எங்க உணவைத் தேர்ந்தெடுக்கலே'னு கேட்டு ஒரு நிமிடம் நடுவரை கிலிபிடிக்க வைத்துவிட்டார்.

'செய்வன திருந்தச் செய்'னு சொல்லியிருப்பதை சினிமாக்காரர்களும், தொலைக்காட்சிக்காரர்களும் நன்கு புரிந்து வைத்துள்ளனர் :))

---

இப்பதிவு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. முழுக்க நகைச்சுவைக்காவே.

Tuesday, September 15, 2009

ஐ.டி. ப்ரோக்ராமரும் ~ படிக்காசுப் புலவரும் ...



ச‌மீப‌கால‌மாக‌ ஐ.டி.துறை ப‌ற்றி வ‌ருந்த‌த்த‌க்க‌ ப‌திவுக‌ள் வ‌‌ருகின்ற‌ன‌. 'பணம் அதிகமா சம்பாதிக்கிறாங்க' என்று பல வருடங்களாக குற்றசாட்டு. போக, 'ஒரு ப்ராஜ‌க்ட் எடுத்து, எப்ப‌டி எல்லாம் போக்கு காட்டி ஏமாற்றுகிறார்கள்' என்று ஒரு பதிவு ப‌டித்த‌ போது ம‌ன‌ம் வெம்பித் தான் போன‌து. என்ன‌ தான் க‌ட்டுரையாள‌ர் ந‌கைச்சுவை(க்காக) க‌ல‌ந்து எழுதியிருந்தாலும், ம‌றுபுற‌ம் ஐ.டி.ப‌ற்றி அவ‌தூறான‌ எண்ண‌த்தை ம‌க்க‌ளிட‌ம் விதைப்ப‌தாகவே ஆகிற‌து.

எந்த‌த் துறையில் இல்லை கேவ‌ல‌ம் ? ஐ.டி.யிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக‌ இருக்க‌லாம். அதற்காக மொத்தத் துறையையும் எப்ப‌டி குறை சொல்ல‌லாம் ?

சினிமாத் துறையில் ரஜினி கோடிகளில் சம்பாதிக்கிறார் என்பதற்காக, கோடியில் நிற்கும் லைட்மேனைக் குறை சொல்லலாமா ? ஐ.டி.யும் அப்ப‌டித்தானே. எத்த‌னை பேரு ச‌ந்தோஷ‌மா வேலைக்கு போறாங்க தினமும் ? எத்த‌னை பேர் கோடிக‌ளில் புர‌ளுகிறார்க‌ள் ?

அப்ப‌டியே க்ளைய‌ண்ட்டை இழுத்த‌டித்து வேலை வாங்கினாலும், எத்த‌னை கால‌ம் சந்தையில் வியாபார‌ம் ப‌ண்ண‌முடியும் அந்த ஐ.டி. கம்பெனி ? இதென்ன‌ திருவிழா கால‌ங்க‌ளில் போட‌ப்ப‌டும் க‌டையா ? 'வந்தவரைக்கும் லாபம்' என ப‌த்துநாளில் ப‌ண‌த்தை வாரிகிட்டு பொட்டி க‌ட்டி கெள‌ம்ப‌ ?

'ப‌ட்ட‌ர் அடிச்சு ப்ரெட் சாப்பிடும் ஆட்க‌ள்' இருக்க‌த்தான் செய்கிறார்க‌ள். ஆனால், விழுக்காடு என்று எடுத்துக் கொண்டால், ஆணிபுடுங்கி அசந்து கிடக்கும் ப்ரோக்ராமர்கள் தான் எங்கிலும் அதிக‌ம். ஊண் உற‌க்க‌ம் இன்றி வற்றிய க‌ன்ன‌ங்க‌ளுடன், பாவம் ஓயாது உழைக்கும் வ‌ர்க்க‌ம். 'நீங்க என்ன செஞ்சாலும் சரி, நாங்க உழைக்கத் தயார். எங்களை ஆன்ஷோர் அனுப்புங்க' என்று க்யூ கட்டி 'தவமாய் தவமிருக்கும்' செய்திகளும் ந‌ண்ப‌ர்க‌ள் மூல‌ம் தெரிகிறோம்.

"என்ன‌ய்யா தூங்கி மூனு நாள் தானே ஆச்சு. 'மூ....னு நாள்'னு இழுக்கறே. என்ன மசமசனு நின்னுகிட்டு இருக்கே. போ, போ, போயி கோட் அடி" என்று துர‌த்தும் ப்ராஜ‌க்ட் மேனேஜ‌ர் முத‌ல், "டெஸ்ட் கேஸ்ல‌ புள்ளி இருக்கு. ஆனா, டெஸ்ட் ரிச‌ல்ட்ல‌ புள்ளி இல்ல. ப‌ஃக் ஃபிக்ஸ் ப‌ண்ணு ராசா" என 'கோடில் புள்ளி' வைக்கும் டெஸ்ட‌ர் வ‌ரை, அவ‌ர்த‌ம் பாடு அட‌ அடா ....

ந‌ம்ம‌ ஊர்ல‌ சின்ன‌ச்சின்ன‌ அலுவ‌ல‌க‌ங்க‌ளில் பார்த்தால், அக்க‌வுண்ட‌ன்ட் என்று ஒருவ‌ர் இருப்பார், அவ‌ருக்குக் கீழே நாலைந்து பேர் இருப்பர். ஒருவ‌ர் லெட்ஜ‌ர் எழுதுவார், ஒருவ‌ர் பெட்டி கேஷ், ஒருவ‌ர் ஜெர்ன‌ல் என்ட்ரி, ஒருவ‌ர் பி.அன்ட்.எல். இப்ப‌டி ஒவ்வொருவ‌ரும் ஒரு வேலையைச் செய்வார்க‌ள். ஆனால் சின்ன ஐ.டி.க‌ம்பெனியிலோ, அத்த‌னையும் ஒருவ‌ர் தான். UNIX, Windows, Networking, Java, .Net, 4gl, Oracle, Informix, db2 ..... இப்ப‌டி அத்த‌னையும் சும்மாடு வைக்காம‌லேயே ஒருவ‌ர் த‌லையில் ஏறி, அவர் த‌லை கன‌‌க்கும். இதைத்தான் த‌லைக்க‌ன‌ம் என்று த‌வ‌றாக‌ப் புரிந்துகொண்டோமோ ?

ரெண்டு நாள் ட்ரெய்னிங், மூனு வார கோர்ஸ் என்று இப்படி ஆறுமாச‌த்துக்கு ஒரு த‌ர‌ம் அறிவை அப்டேட் ப‌ண்ணியே ஆக‌ணும். இல்லை எனில் 'சர்வைவ‌ல் ஆஃப் த‌ ஃபிட்ட‌ஸ்ட்' கேமில் கால் பதிக்கும் முன்னே க‌ரைந்து போகும் நிலை.

இப்ப‌டி இந்த‌க்கால‌த்தில் ஐ.டி. ப‌டித்துவிட்டு அல்லோலகல்லோலப்படும் ம‌க்க‌ள் போல‌ அந்த‌க்கால‌த்தில் த‌மிழ் ப‌டித்துவிட்டு த‌வித்திருக்கிறார்க‌ள் போல‌. த‌மிழால் பிர‌ப‌ல‌மடைந்தவர்கள் சிலர் தானோ ? (வள்ளுவருக்கே, மதுரை தமிழ் சங்கத்தில் ஔவை சிபாரிசு செய்தார் என்பதாகப் படிக்கின்றோம்). பலரது படைப்புகள் பலரைச் சென்றடையாமலும் போனதுவோ ? அவ‌ர்க‌ளில் சில‌ர் த‌ங்க‌ள‌து ஆற்றாமையை வெளிப்ப‌டுத்தியும் சென்றிருக்கிறார்க‌ள்.

த‌னிப்பாட‌லில் 'ப‌டிக்காசுப் புல‌வ‌ர்' இவ்வாறு புல‌ம்புகிறார்:

அடகெடுவாய் பலதொழிலு மிருக்கக்கல்வி
   அதிகமென்றே கற்றுவிட்டோ மறிவில்லாமல்
திடமுளமோ கனமாடக் கழைக்கூத்தாடச்
   செப்பிடுவித் தைகளாடத் தெரிந்தோமில்லைத்

தடமுலைவே சையராகப் பிறந்தோமில்லைச்
   சனியான தமிழைவிட்டுத் தையலார்தம் !
இடமிருந்து தூதுசென்று பிழைத்தோமில்லை
   என்னசென்ம மெடுத்துலகி லிரக்கின்றோமோ ?


எந்த‌ அள‌விற்கு ப‌டித்துவிட்டோம் என நொந்திருக்கிறார் ம‌னுஷ‌ன். ப்ரோக்ராமர் மாதிரியே புலம்பியிருக்காருல்ல ?

ஏதாவது ஒரு இலக்கண முறைக்குட்பட்டு தான் இப்பாடல் எழுதியிருக்க வேண்டும். எனக்குத் தெரிந்த சில பெயர்களை பயண்படுத்திக்கொள்கிறேன். தமிழார்வலர்கள் மன்னிக்க.

இதே புலவர் (ப்ரோக்ராமர்) 'நிலைமண்டில ஆசிரியப்பா'வில் (கணினி மொழிகள்) பாடல் (சுயபுராணம்) எழுதி மன்னரிடம் (கார்ப்பரேட் நேர்முகம்) பரிசில் (வேலை) பெறச் சென்றால், அங்கே இருக்கும் மந்திரி (ப்ராஜ‌க்ட் மேனேஜ‌ர்) "எண்சீர் விருத்தத்தில் இல்லையா ?" (வேறு கணினி மொழிகள்) என்பார்.

"இது நிலைம‌ண்டில‌ ஆசிரிய‌ப்பானு எப்ப‌டிச் சொல்கிறீர்க‌ள் ?" என்று குறுக்கு விசார‌ணை செய்வார் ந‌க்கீர‌ன் (டெக் லீட்).

"எங்கள் மன்னவரின் ஆட்சி பற்றி (கம்பெனி பற்றி) ஒரு பாடல் பாடுங்கள் (என்ன நினைக்கிறீர்கள் ?)" என்பார் அரசியார் (ஹெச்.ஆர்)

பொருட்குற்றம், சொற்குற்றம் எல்லாம் விளக்கி, நஞ்சு தொஞ்சு (நாலைந்து நேர்முகங்கள்), கடைசியில் அரசி கிட்ட பேரம் பேசி தான் பரிசில் பெறமுடியும்.

இப்படி பீஸ் பீஸா பிஞ்ச பஞ்சுகளை லூஸ்ல விடுங்க பாஸ் :)))

ஹேப்பி டியர்ஸ் - ஹுவான் மார்டின் - யு.எஸ்.ஓபன் 2009 சாம்பியன்


Photo Credit: usopen.org

வழக்கம் போல அலுவலகப் பணிகளின் தீவீரத்தில் மூழ்கியதில் இன்று US Open 2009 Mens Final என்பது மறந்தே போனது. ஞாபகம் வந்து டிவியைத் தட்டினால், நான்கு செட்கள் ஆடி ஐந்தாவது செட்டில் ஹுவான் மார்ட்டின் லீடிங்கில் இருந்தார்.

ஒரு செகண்ட் பெடரர் தோற்கப்போவதை நினைத்து நிலைகுலைந்தாலும், அர்ஜெண்டினாவின் இளம்புயல் (20 வயது) ஹுவானின் விளையாட்டுத் திறன் ஆச்சரியம் தந்தது. போதும் ராஜர், ஐந்து வருடங்களில் நாற்பது தொடர் வெற்றி. புதியவர் வெல்லட்டும் என பிரார்த்தித்துக் கொண்டோம்.

பெடரரின் நிறைய இடர்கள், டபுள் ஃபால்ட், ஏகப்பட்ட டென்ஷனுக்கிடையில் கடைசியில் அவுட்டில் அடிக்க, ஹுவான் ஹேப்பி டியர்ஸில் விழுந்தார். தேம்பி அழுத கன்னங்களில் முகம் பூரிக்க, நேரமிண்மை குறித்து அறிவிப்பாளர் அறிவித்தும், விடாப்பிடியாக ஸ்பானிஷில் நான்கு வார்த்தைகளாவது எனது மக்களுக்கு நான் பேசவேண்டும் என வாங்கிப் பேசி, மீண்டும் தேம்பியது மிக நெகிழ்ச்சியாக இருந்தது.


Photo Credit: usopen.org

இளம் வயதில் கோப்பை வென்று யு.எஸ். ஓபனில் புதிய வரலாறு. அர்ஜெண்டினாவில் இருந்து இரண்டாவது யு.எஸ்.சாம்பியன். உலகின் ஆறாவது நிலை ஆட்டக்காரர். ஆனாலும் புதிய முகம். என்றெல்லாம் அறிவிப்பாளர் அறிவித்து, உங்களது போராட்டதின் வெற்றி ஒரு மில்லியன் அறுநூறாயிரம் டாலர், அது போக மேலும் இருநூறாயிரத்தூ சொச்ச டாலரும் சேர்த்து, ஒரு மில்லியன் என்னூறாயிரத்தி சொச்சம் டாலர் என்றார். இடையில் நிறுத்தி இத்தோடு நின்றுவிடவில்லை, லெக்ஸஸ் கார் கம்பெனி (ஏற்கனவே விலை உயர்ந்தது தான்) விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாகவும் அளிக்க, இவை எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு கண்களில் நீர்வழிய, உள்ளத்தில் வெற்றி கனியைச் சுவைத்து கொண்டிருந்தார் ஹுவான்.

மேலும் தொடர்ந்து பல வெற்றிகள் குவிக்க வாழ்த்துக்கள் ஹுவான் மார்டின்!!!

ஹுவான் மார்டினின் வெற்றி தருணங்கள் கீழே வீடியோவில்:

Thursday, September 10, 2009

நடுச்சாமம் - 1


Photo Credit: i.dailymail.co.uk

"இந்த நேரம் என்று கிடையாது. ராப்பகலா யாருமே அந்தப் பக்கம் போறதே கெடையாது தங்கச்சீ ! செல வருசம் முன்ன, உன்ன மாதிரி வயசுப் பய புள்ளைக நாலஞ்சு, இப்படித்தேன், நாங்க சொல்றதக் கேட்காம, எங்கள ஒரு மாதிரி பாத்துபுட்டு, 'அட போங்கையா'னு ரொம்ப ஆர்வமா போச்சுங்க. போயி அரை நாழி இருக்காது..." என்று சற்று நிறுத்தினார் ராமமூர்த்தி .....

"வந்தது வந்துட்டோம், எனக்கு பேயப் பார்க்கணும் என்று ரொம்ப நாளா ஆசை" என்று தங்குமிடம் திரும்பிய வனிதா சொல்ல, "எனக்கும் தான், எனக்கும் தான் !" என்று அனைவரும் குஷியானார்கள். "இன்னிக்கு நடுச்சாமத்துல போய் அந்தப் பேயப் பார்க்கிறோம்" என்று தோழிகள் அனைவரும் செயலில் இறங்கினர்.

அடர்ந்த இருளில் படர்ந்த கொடிகள் விலக்கி, நிலவில் ஒளியில் மெல்ல அடி எடுத்து நகர்ந்தனர் சிவகாமியும் தோழிகளும். தூரத்தே பள்ளத்தாக்கில் தெரிந்தது பலரைப் பழிவாங்கியதாகச் சொல்லப்பட்ட‌ அந்த பாழடைந்த பங்களா.

கொடிகளோடு விரிசல்கள் பின்னிய‌ நான்கு உயர்ந்த தூண்கள் கொண்ட முகப்பு. தலைக்கு மாட்டிய தொப்பி போல் சரிந்து கிடந்தது மாடியின் முக‌ப்பு அறை. கீரைப் பொட்டலத்தில் ஆங்காங்கே வெளித்தெரியும் தண்டுகள் போல நீட்டி வெளித்தெரியும் உத்திரங்கள். மொட்டை மாடி முழுதும் இடிந்து விழுந்த ஓட்டைத் தாழ்வாரம். அலைகடல் பாசி அப்பியது போன்று தரையில் எங்கும் பசுமை. நெச‌வாளியின் அறையாய் எங்கும் சில‌ந்திக‌ளின் வ‌லைப்பின்ன‌ல்.

பாம்பா ? கொடியா ? எதோ ஒன்று கால்களில் இடற "ஐயோ, அம்மா, என்ன விட்டுருங்க, நான் வர‌ல, ரூமுக்குப் போறேன்" என்று அலறிய வனிதாவை, "ஏய் என்னாச்சு ?" என்று தோழிகளும் சேர்ந்து அலறினர்.

"ரூமில் இருந்த வரைக்கும், 'பயமா ? எனக்கா ? இதுக்கெல்லாம் போயி பயப்படறீங்க ?' என்று நீ தானே முதலில் கிளம்பினே" என்றாள் ஸ்வப்னா.

"அதில்லடி. நான் பேய்க்கெல்லாம் பயப்படல. பாம்பு திரியுது இங்க. சர்ருனு இப்ப தான் என் காலத் தொட்டுப் போகுது !" என்று சிலிரித்தாள்.

"நம்ம வனிதாவைப் பயமுறுத்திய பாம்பப் பாருங்கடி" என்று பக்கத்தில் கிடந்த பழைய சைக்கிள் டயரை எடுத்துக் காண்பித்து, ஸ்வப்னா சிரித்தாள்.

"ஏய், கீழ போடு. எல்லாம் காரியத்துக்கு வாங்க. இன்னும் கொஞ்ச தூரம் தான் பங்களாவை அடைந்து விடுவோம். யார் யாரு என்ன என்ன பண்ணனும்னு ஞாபகம் இருக்கு தானே ?! கெளம்புங்க கெளம்புங்க" என்று துரிதப்படுத்தினாள் சிவகாமி.

பழைய தெம்பு வரப் பெற்ற தோழிகள், பயம் களைந்து தொடர்ந்து பயணித்தனர். பங்களாவின் கிட்டே நெருங்க நெருங்க, ஏனோ ஒரு வித பயம் அனைவருக்கும் தொற்ற ஆரம்பித்தது. சரியாக அப்போது "ஊவ்வ்வ்வ்" என்று எங்கிருந்தோ ஒரு நாய் கத்த, அடைபட்ட கூண்டு திறக்க, விடுபட்டுப் பறந்த குருவிகளாய், எட்டுத் திக்கும் பறந்து மறைந்தனர் தோழிகள்.

சற்றைக்கெல்லாம் மயான அமைதி. சுற்றிலும் பார்த்தாள் சிவகாமி. தன்னைத் தவிர அங்கும் யாரும் இல்லை ! முதன்முறையாய் உதிரம் உதரலெடுக்க ஆரம்பித்தது அவளுள்.

"சரியா ராத்திரி பண்ணெண்டு மணிக்கு தான் அந்தப் பேய் வெளிய வரும் !" என்ற‌ ராமமூர்த்தியின் வாச‌க‌ங்க‌ள், நெஞ்சுக் குழிக்குள் டைப் அடிக்க‌, க‌டிகார‌த்தைப் பார்த்தாள். மணி ப‌தினொன்று ஐம்ப‌த்தி எட்டு. 'அவர் சொன்ன‌ போது, ஏதோ ஸ்கூல் பசங்க அடிக்கும் ஜோக் போல‌ இருந்த‌து. ஆனால் இப்ப‌ நிலைமையே வேறு ! இருந்து பார்த்து விடுவோமா ? அல்ல‌து தோழிக‌ள் போல அடித்துப் பிடித்து ஓடிவிடுவோமா ?' என்று சிந்தித்து மீண்டும் க‌டிகார‌த்தைப் பார்த்தாள். ம‌ணி ப‌தினொன்று ஐம்ப‌த்தி ஒன்ப‌து !

ப‌ங்க‌ளாவின் வெகு அருகாமையில் இருந்தாள் சிவகாமி. ருபெக் ருபெக் என்று த‌வ‌ளைக் க‌த்த‌லும், கீச் கீச் என‌ சில் வ‌ண்டுக‌ளின் ரீங்கார‌மும், மெலிதாய் தீண்டிச் செல்லும் தென்ற‌லும், அடர்ந்த செடிகொடிகளுக்கு மத்தியில் நிலவொளியில் மிளிறும் பழைய வெள்ளைக் கட்டிடமும், ஒரு ர‌ம்மிய‌மான‌ சூழ‌லைத் த‌ந்திருக்க‌, ஏனோ ப‌ய‌மே மேலோங்கிய‌து.

தென்ற‌ல் காற்று மெல்லச் சீற‌ ஆர‌ம்பித்த‌து. ஷ்யூயூயூஊஊஊய்ய்ய்ய் என்று சுழன்ற காற்றின் ச‌த்த‌த்தில், அண்ட‌மே சுழ‌லுவ‌தாய் உண‌ர்ந்தாள் சிவ‌காமி.

ம‌ணி ப‌ண்ணிரெண்டு !

ப‌ங்க‌ளாவின் வாச‌லில் ஆயிர‌ம் வாட்ஸ் ப‌ல்புக‌ள் எறிவ‌து போல‌ அப்ப‌டி ஒரு பிர‌காச‌ம். த‌லையில் முக்காடு போட்ட‌து போன்ற‌ வெள்ளை உடுப்பில் ஓர் உருவ‌ம். மெல்ல‌ சிவ‌காமி இருந்த‌ திசை நோக்கி முன்னேறிய‌து.

சிப்பிக்குள் சுருளும் நத்தை போல புத‌ருக்குள் நன்கு புதைந்து கொண்டாள்.

ஒருவித‌ ம‌ல்லிகை வாச‌னை காற்றில் மித‌ந்த‌து. கால்க‌ள் இருக்கிற‌தா என‌ப் பார்த்தாள், த‌ரை ப‌ட‌ர்ந்து வ‌ந்த‌ சேலையில் ச‌ரியாக‌த் தெரிய‌வில்லை. இர‌ண்டு கைக‌ள் இருப்ப‌தை உறுதிப்ப‌டுத்திக் கொண்டாள். கிட்டே நெருங்க‌ நெருங்க‌, அழ‌கான‌ தேவ‌தை போல‌ காட்சி த‌ந்தது அவ்வுருவ‌ம்.

தோளில் தொங்கிய‌ டிஜிட்ட‌ல் கேமிராவைத் த‌ட்டுத் த‌டுமாறி எடுத்து, க்ளுக்கிய‌ ச‌த்த‌த்தில், திரும்பிப் பார்த்த‌து அவ்வுருவ‌ம். தேவதை முகம் மாறி, குழி விழுந்த‌ க‌ண்க‌ளும், குவியிழ‌ந்த‌ நாசியும், க‌றை ப‌டிந்த‌ ப‌ற்க‌ளும், கூரிய‌ ந‌க‌க் க‌ர‌ங்க‌ளுமாக‌ காட்சி அளித்த‌து உருவ‌ம். 'ச‌ந்தேக‌மே இல்லை, பேய் பேய்ய்ய்ய் பேயே தான் !' என்று மென்று விழுங்கிய‌ எச்சில் தொண்டைக்குழிக்குள் இற‌ங்காம‌ல் ப‌டுத்திய‌து. 'தெரியாம‌த் தான் வ‌ந்துவிட்டோம். ராம‌மூர்த்தி அத்த‌னை சொல்லியும் கேக்காம‌ வ‌ந்து விட்டோமே !' என்று ப‌ட‌ப‌ட‌க்க‌, விய‌ர்த்துக் கொட்டி முதுகுத் த‌ண்டில் வ‌ழிந்தோடிய‌து.

"அதான் பார்த்துவிட்டாய் அல்லவா ? வெளியில் வா !" என்ப‌து போல‌ சிவ‌காமியை நோக்கி த‌ன் உலர்ந்த க‌ர‌ங்க‌ளை நீட்டிய‌து. ம‌ர‌ப்ப‌ட்டை பிரிந்து வ‌ள‌ர்ந்த‌ ம‌ர‌க்கிளை போல‌ இருந்த‌ அத‌ன் கரும்பச்சைக் க‌ர‌ம் மேலும் திகிலூட்டிய‌து.

"வேண்டாம். நான் இனிமே இங்க‌ வ‌ர‌ல‌. என்ன‌ விட்டுடு...." என்று ப‌ய‌த்தில் க‌த்தி பின்னோக்கி த‌வ‌ழ்ந்து, அருகில் இருந்த‌ கிண‌ற்றில் தலை குப்புற விழுந்தாள் சிவ‌காமி.

கிணற்றின் உடைந்த மதிலில் அமர்ந்திருந்த காட்டுப்பூணை ஒன்று மியாவ் என்று கத்தி குதித்தோடியது.

தொடரும் .....

Click here to read part 2

Wednesday, September 9, 2009

சென்னை - 2020ல் ஒரு நாள்


Photo credit: wikimedia.org

"ஊரெல்லாம் ஷோக்கா கீதுபா" என்கிற பாஷையை குப்பத்தில் கூட கேட்கமுடிவதில்லை. அல்ட்ரா மாடர்ன் தமிழுக்கு மாறியிருந்தனர் அனைவரும்.

தன்னைப் போலவே சர்வ சாதரணமாக ஆங்காங்கே அமெரிக்க, ஐரோப்பா, ஆஸ்திரேலியா கண்டம் ரிடர்ன் இந்தியர்கள். கையில் மினரல் வாட்டருடன் உலாவுவதைப் பார்க்கும்போதே தெரிந்தது ச‌ந்தீப்புக்கு.

மனைவியும் பிள்ளைகளும் அவர்கள் அம்மா வீட்டில் திருச்சியில் இருக்க, சென்னை அண்ணா சாலையில் அதுவும் உச்சி வெய்யிலில் கால்கடுக்க நடந்திருந்தான் சந்தீப்.

இருபது வருடங்கள் அயலகத்தில் எல்லாவற்றையும் ஆன்லைனில் பண்ணி அலுத்துப் போனதால், சொந்த ஊரில், நேரில் சென்று ஒவ்வொரு இடமாகப் பார்க்கவும் இன்று எண்ணியிருந்தான். புர‌சைவாக்க‌ம் வீட்டில் இருந்து கிள‌ம்பி, நண்பன் ஸ்ரீராம் அண்ணாசாலையில் சாந்தி தியேட்டர் அருகில் ட்ராப் செய்தான். அங்கு கொஞ்ச நேரம் உலாத்திவிட்டு, மெதுவே நடந்தான். முதலில் விகடன் அலுவலகம். இருபது ஆண்டுகள் முன்னர் எத்தனை முறை சர் சர்ரென்று பைக்கில் இந்த அண்ணா சாலையில் ப‌ய‌ணித்திருப்பான். ஒரு நாள் கூட‌ உள்ளே சென்று பார்க்க‌த் தோன்றிய‌தில்லை. எதிர்பார்ப்பை விட மிக‌ எளிதாக‌வே இருந்த‌து அலுவ‌ல‌க‌ம். இங்கே, இப்ப‌டி, மேலே என‌ ப‌ல‌ர் வ‌ழிகாட்ட‌ ஒவ்வொரு அறையாக‌க் க‌ட‌க்கையில் 'எங்க‌ ம‌த‌ன் உட்கார்ந்திருப்பாரு ? இது ஆசிரிய‌ர் அறையா இருக்குமோ ? யாராவ‌து எழுத்தாள‌ர்க‌ள் பார்க்க‌ முடியுமோ ?' என்றெல்லாம் எண்ணி ந‌ட‌ந்த‌வ‌னுக்கு எதிர்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் எல்லோரும் த‌டித்த புத்தகங்களில் கணக்கெழுதும் பெரிய‌வ‌ர்களோ அல்லது கையில் சில‌ தாள்க‌ளுட‌ன் அங்கும் இங்கும் சுழ‌ன்ற‌ ஆபிஸ் பாய்க‌ளோ தான். "என்ன‌ங்க‌ அமெரிக்கா ரிட்ட‌ர்ன் மாதிரி இருக்கீங்க‌. புத்த‌க‌ம் வாங்க‌ இங்க‌ வ‌ந்தேங்க‌றீங்க‌. இப்ப எல்லாமே ஆன்லைன் தான் சார்" என்றார் ஒரு ஊழிய‌ர்.

அத‌ன் பின் ஹிக்கின்பாத்த‌ம்ஸ். பழைய கட்டடத்தை, சில பல வர்ணங்கள் பூசி புதுப்பித்திருந்தார்கள். 'ஃபிக்ஷன், நான் ஃபிக்ஷன், மிஸ்டரி, ஹாரர்' என்றெல்லாம் ஆங்காங்கே விளம்பர அட்டைகள் வைத்து ஒழுங்குபடுத்தி பயமுறுத்தியிருந்தார்கள். 'கிட்ஸ்' செக்ஷன் சென்று ஏழெட்டு வ‌ய‌துப் பிள்ளைக‌ளுக்கான‌ புத்த‌க‌ங்க‌ள் சில‌வ‌ற்றை அள்ளிக் கொண்டான். "சார், இதெல்லாம் ரெஃப‌ர‌ன்ஸ் ஒன்லி. உங்க‌ளுக்கு வேண்டும் எனில் ஆன்லைனில் ஆர்ட‌ர் ப‌ண்ணுங்க‌ள்" என்றார் ஏர்ஹோஸ்ட‌ஸ் போல‌ இருந்த‌ இளம் காஷிய‌ர்.

அடுத்து 'எல்.ஐ.சி'யா 'ஸ்பென்ஸரா' என யோசித்தான். 'எல்.ஐ.சி. போனாலும் இதே கதை தான் சொல்வார்களோ ? எதுக்கும் போய் பார்ப்போம், அதன்பின் ஸ்பென்ஸர் சென்று மதிய உணவு முடிக்கலாம்' என எண்ணினான். முத‌ல் மாடியிலேயே, "அதான் ஆன்லைனில் எல்லா விப‌ர‌ங்க‌ளும் இருக்கே !" என்று அனுப்புவ‌திலேயே குறியாய் இருந்த‌ன‌ர். சில‌ மாடிக‌ள் சென்று, த‌ன்னுடைய‌ இருப‌த்திஐந்தாண்டு பாலிஸி ப‌ற்றி சில விபரங்கள் கேட்க, "ஏம்பா, இத்த‌னை வ‌ருட‌ங்க‌ளில் ஏக‌ப்ப‌ட்ட‌ பாலிஸி வ‌ந்து போச்சே, நீ எந்த‌ப் பாலிஸி ப‌ற்றி சொல்றே ?!" என்றார் த‌டித்த‌ ப்ரேம் க‌ண்ணாடிக்குள், த‌வ‌ழும் கோலிகுண்டு க‌ண்க‌ள் கொண்ட‌ பெரிய‌வ‌ர். பாலிஸி எண்ணைச் சொன்னான். குனிந்து நிமிர்ந்து, மானிட‌ரையும், விசைப்ப‌ல‌கையையும் பார்த்து ஒற்றை விர‌லில் ஏதோ த‌ட்டினார். "தெரிய‌ல‌ த‌ம்பி, நீங்க‌ எதுக்கும் ஆன‌லைனில் செக் ப‌ண்ணுங்க‌, ட‌புள்யூ, ட‌புள்யூ....னு அடிச்சு, என்கொயரி ப‌ட்டன் அழுத்தி, உங்க‌ கேள்விக‌ளைக் கேளுங்க, பதில் சொல்வாங்க‌" என்று, ஏழாவ‌து மாடியிலிருந்து த‌ள்ளிவிடாத‌ குறையாக‌ ச‌ந்தீப்பை அனுப்பி வைத்தார்.

ஸ்பென்ஸ‌ர் க‌ஃபேயில் எதிர்பார்த்து வ‌ந்த‌ வெஜி ப‌ஃப் இல்லை, மினி இட்லி இல்லை, வெரைட்டி ரைஸ் இல்லை. எங்கு நோக்கினும், பீட்ஸா, ப‌ர்கர். 'இருபது வருடங்களாக சாப்பிட்டு அலுத்துப் போய், திரும்பவும் இவையா ?' என்று ஒதுக்கி, ம‌ன‌ம் தென்னிந்திய‌ உண‌வுக‌ளிலேயே நாட்டம் கொள்ள‌, 'முகுந்தன் இட்லி கடை' ப‌ற்றி ஏற்க‌ன‌வே கேள்விப் ப‌ட்டிருந்தான். அப்போதே நிறைய‌ கிளைக‌ள் தோன்றின‌ சென்னையில்.

ஸ்பென்ஸருக்கு எதிரில் சற்று தள்ளி 'முகுந்தன்' என்று தான் பெயர் பலகை பார்த்தான். உள்ளூர கல்யாண சமையல் ஓட்டமெடுத்தது. சில தூரம் நடந்து, ட்ராஃபிக் லைட்டில் க்ராஸ் பண்ண சாகசம் இன்றி, மேலும் நடந்து, அன்டர்க்ரௌண்ட் கடந்து, ஹோட்டலுக்குள் நுழைந்தான். வெளிச்சத்திலும் இருட்டாகவே இருந்தது. வாரயிறுதியில் எப்படியோ, இப்போது கூட்டம் அதிகம் இல்லை. மேசையில் அமர்ந்து காத்திருந்தான். வழக்கம் போல தண்ணீர் டம்ளர் வைத்து, 'ஆர்டர் என்ன சார் ?' என்றார் சீருடை சர்வர். இருபது வருடத்திற்கு அப்புறமும் அப்படியே இருக்கே இந்த முறை. நல்ல வேளை இங்கேயும் ஆன்லைன் என்று சொல்லி அனுப்பிவிடவில்லை என வியந்து மகிழ்ந்தான்.

"ரெண்டு இட்லி கொடுங்க முதலில்" என்றவனை, எழுதுவதை நிறுத்திவிட்டு ஏற இறங்கப் பார்த்த சர்வர், "அதெல்லாம் இல்லை சார் என்றார்"

"சரி, தோசையாவது இருக்கா ?" என்றவனுக்கு "இல்லை" என்றே பதிலளித்தார்.

'ம‌திய‌ நேர‌த்தில் வ‌ந்து இட்லி, தோசை கேட்டு இம்ஸை பண்றானே' என்ப‌து போல இருந்த‌து ச‌ர்வ‌ரின் பார்வை.

"சரி என்ன தான் இருக்கு ?" என்றான் ச‌ற்று கோப‌மாக‌.

"பீட்ஸா, பர்கர், லசானியா, ஸ்பெகத்தி, பாஸ்டா, பார்மஜானா சிக்கன், சிக்கன் சூப், மஷ்ரூம் சூப், ஸ்வீட் டீ, ஹெர்ப் டீ, கோக், பெப்ஸி, ஸ்ப்ரைட், டாக்ட‌ர் பெப்ப‌ர் ..." என்று சர்வரின் பட்டியலில், கிர் என்று தலைசுற்றி கீழே விழாத குறையில் 'முகுந்தன் பீட்ஸா கடை' மேசையில் சரிந்தான் சந்தீப்.

Thursday, September 3, 2009

அந்த ஃபாரினர் தான் !


Photo Credit: olx.in

"சின்ன பக், யூனிட் டெஸ்ட்டிங்ல‌ எப்படி மிஸ் பண்ணிங்க ? இன்டக்ரேஷன் டெஸ்ட் வரைக்கும் வந்தாச்சு. டெஸ்ட் ரிசல்ட்ஸ் செக் பண்ணனும் எடுத்துகிட்டு வாங்க....." என்று உடுக்கை அடித்தாள் டெக் லீட் வர்ஷினி.

"ஹேய் இந்த சுடிதார் கலர் நல்லா இருக்கு. எப்ப வாங்கின ?" என்று கேட்டுக் கொண்டிருந்த சக டெவலப்பர் யாழினியிடம், "கொஞ்சம் பொறு, அச்சச்சோ குழந்தை அழ ஆரம்பித்துவிட்டது, இரு, அதுக்கு தீனி போட்டுட்டு வர்றேன்" என்று ஓடினாள் அருள்மொழி.

"இன்னும் கொஞ்ச நேரத்தில க்ளையன்ட் ஆன்லைனில் வந்திருவான். அதுக்குள்ள ஃபிக்ஸ் பண்ணுங்க. இந்த நேரத்தில டெஸ்ட் ரிசல்ட் எல்லாம் செக் பண்ணி... என்ன வர்ஷினி, கமான், பீ மோர் ப்ரொடக்டிவ்..." என்று வர்ஷினிக்கு அருள்பாலித்துக்கொண்டிருந்தான் ப்ராஜக்ட் லீட் செழியன்.

ர‌யில் நின்ற‌தொரு நிலைய‌த்தின் ப‌ர‌ப‌ர‌ப்பில் இருந்த‌து அந்த மிகப் பெரிய இந்திய மென்பொருள் நிறுவனத்தின் ஒரு கிளை அலுவ‌ல‌க‌ம். சர் சர்ரென்று கார்களும் வேன்களும் செல்லும் பெரு நகரத்தின் பிரதான தெருவில் இருந்தது. அலுவலகத்தினுள் ஆங்காங்கே இடுப்புய‌ர தடுப்புகளில், ஆறுக்கு ஆறில், ஆளாளுக்கு இட‌ம். எல் வ‌டிவ‌ மேசைக‌ள். வெண்திரைக் க‌ணிணிக‌ள், கிறுக்கிப் ப‌ர‌ப்பிய‌ வெள்ளைத் தாள்க‌ள், சித‌றி கிட‌க்கும் பேனாக்க‌ள், தொலைபேசி, ஆங்காங்கே இருவர் மூவராய் நின்று உரையாடல், தளத்திற்கு ஒரு காஃபி ஏரியா, ரெஸ்ட்ரூம்ஸ் என‌ ச‌ர்வ‌தேச தரத்திற்கு இருந்த‌து.

"இந்தாங்க சார் நீங்க கேட்ட ஃபோட்டோ காப்பி" என்று திலீபன் நீட்டிய காகிதங்களை வாங்கிப் பார்த்தான் செழியன்.

"க்ரேட்... இந்தாங்க கலைச்செல்வி, இவர் இன்னிக்கு இன்டர்வியூவிற்கு வருகிறார். ரெஸ்யூம ஏற்கனவே ஈமெயில் உங்களுக்கு ஃபார்வேர்ட் பண்ணியிருக்கிறேன். எதுக்கும் கையில் காப்பி வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எப்ப நேரம் இருக்கோ, அவருக்கு கால் பண்ணி அப்ப வரச் சொல்லுங்க. இஃப் ஹி இஸ் டெக்னிக்க‌லி ஸ்கில்ட், லெட் மீ நோ" என்றுவிட்டு அடுத்த‌ ப்ராஜ‌க்ட் டீமுட‌ன் ஐக்கிய‌மானான் செழிய‌ன்.

"எப்ப‌வும் செழிய‌ன் தானே இன்ட‌ர்வியூ ப‌ண்ணுவார். இன்னிக்கு என்ன‌ க‌லைச்செல்வி ?!" என்று கேள்விக‌ள் சில‌ர் ம‌ன‌ங்க‌ளில் ப‌ற‌க்க‌ ஆர‌ம்பித்த‌து.

ப்ராஜ‌க்ட் ஸ்டேட்ட‌ஸ், டெய்லி மீட்டிங், வீக்லி மீட்டிங், ரிசோர்ஸ் அஸைன்மென்ட், க்ளைய‌ன்ட் மீட்டிங், மேனேஜ்மென்ட் அப்டேட்ஸ் என்று ச‌தா சுழ‌லும் செழிய‌ன், அந்த‌ கார்ப்ப‌ரேட் அலுவ‌ல‌க‌த்தின் ஒரு உய‌ர் ப‌த‌வியில் இருந்தான்.

இந்த‌ நேர‌த்தில் செழிய‌னுக்கு இணையாக‌ வேறு ஒருவ‌ர் இன்ட‌ர்வியூவிற்கு வ‌ரும் செய்தி, அதுவும் ஒரு வெள்ளைக்கார‌ர் வ‌ருகிறார் என்ற செய்தி, ஏஸி குளிராய் அலுவ‌ல‌க‌த்திற்குள் ப‌ர‌விய‌து.

சாம்பார் சாதம், ரசம், ஃப்ரைட் ரைஸ், லெமன் ரைஸ் என்று கதம்ப மனம் கூடத்தில் மிதக்க, கூட்டாஞ்சோற்றை நினைவூட்டும் ம‌திய‌ உண‌வில், ஆளாளுக்கு இதே அர‌ட்டைக் க‌ச்சேரி தான்.

"மாப்ள, செழியன வேற இடத்துக்கு மாற்றபோறாங்களாம். அதுல கொஞ்சம் அப்செட் ஆகி, 'க‌டுமையா உழைச்சதுக்கு இந்த பலன் போதும், கொஞ்ச‌ நாள் ரெஸ்ட் எடுக்க‌ப் போறன்'னு க்ளோஸா இருக்கவங்க கிட்ட சொல்றாராம்." என்றான் ர‌வி.

"அதெல்லாம் இருக்காதுடா, ஏதாவது மேனேஜ்மென்ட் ப்ராப்ளம் இருக்கும்." என்றாள் த‌மிழ‌ர‌சி.

"வர்றவன் எப்படிப்பட்டவனோ ?" என்று க‌வ‌லை கொண்டாள் ச‌ங்கீதா.

"யாரு வ‌ந்தா என்னா. நாம‌ வேலைய‌ செய்ய‌ப் போறோம், ச‌ம்ப‌ள‌த்த‌ வாங்க‌ப் போறோம். எதுக்கு க‌வ‌லைப்ப‌ட்டுகிட்டு" என்று வாயில் வ‌ழிந்த‌ ர‌ச‌த்தை உறிஞ்சிக் கொண்டே சொன்னான் ஆறுமுக‌ம்.

"என்னது செழியன் வேலைய விடப்போறாரா ? அவர் அளவிற்கு அடுத்து யாரு தான் இங்க இருக்கா ?" என்றான் வழக்கம் போல லேட்டா அலுவலகம் வந்து அரட்டையில் கலந்து கொண்ட ப‌ழ‌னி.

"அதான் இன்னிக்கு ஒருத்தர காலையில இன்டர்வியூ பண்ணாங்களே, ந் ஃபாரிர் தான் !" என்றாள் ம‌னோன்ம‌ணி சற்றும் யோசிக்காமல்.

நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் இருந்த அந்த அலுவலகத்தில் ஒருவ‌ர் முக‌த்தை ஒருவ‌ர் பார்த்துக் கொண்ட‌ன‌ர். ச‌ற்றைக்கெல்லாம் நிலைமை உண‌ர்ந்து, அனைவரும் சிரித்த‌ சிரிப்பொலி அத்த‌ள‌த்தையே உலுக்கிய‌து.